“கண்ணா, என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. அவளை கட்டிக்கிட்ட. அத்தோட நிப்பாட்டிக்கனும். எதுக்கு நம்ம தொழிலுக்கு கொண்டு வர நீ?…” என்ற பேச்சில் அனல் தெறித்தது.
சுத்தமாய் அண்ணாமலைக்கு விருப்பமில்லை மகனின் இந்த செயல். திருமணம் செய்துவிட்டான்.
போய் தொலையட்டும் என்று நினைத்திருக்க இப்போது வியாபாரம் செய்யும் இடத்திற்கும் நுழைத்தால்?
தமயந்தியின் மீதிருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை இன்னும். தன்னுடைய பேச்சை எதை கேட்டாள்?
அதனால் நிர்கதியாய் ஒரு நிலை. எதிர்பாராத மரணம் என்று வாழ்க்கையை இழந்திருக்க அதற்கடுத்த நிகழ்வு இன்னும் அண்ணாமலையின் கோபத்திற்கு தீ வார்த்தது.
அதில் மொத்தமாய் வெறுத்துவிட்டார். ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்று.
தங்கை மகள் மீதும் அந்த உணர்வு துளியும் எழாமல் துடைத்துவிட்டு தலைமுழுக மகன் அதை தொடர்ந்ததில் அவமானம், ஆத்திரம் என குமுறி கிடந்தவருக்கு மேலும் இந்த விஷயம் ஆக்ரோஷத்தை உண்டுபண்ணியது.
மகனிடம் பேச்சுக்கள் ஒருகட்டத்தில் சுத்தமாய் குறைந்திருக்க பலமாதங்களுக்கு பின் இப்படி தொடர்புகொண்டு பேசுகிறார் இப்போது.
பேசிய விஷயமும் உவப்பானதாக இல்லை. அத்தனை எரிச்சல் இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டாளே என ரிதுபர்ணாவை தான் மனதிற்குள் வறுத்துக்கொண்டு இருந்தார்.
இப்போது இப்படி வந்திருக்கும் விஷயம் தெரிந்த பின்னும் பேசாமல் இருக்க முடியாமல் அழைத்து பொங்க,
“எதுக்கு இவ்வளோ டென்ஷன்? என்னவோ அங்க கம்பெனிக்கு கூட்டிட்டு வந்த மாதிரி?…” ஆத்மா வெகுவாய் தன்னை நிதானத்தில் வைத்துக்கொண்டு பேச முயன்றான்.
“ஆமா, எனக்கு அந்த ரைட்ஸ் இருக்கு கம்பெனில. அதுவும் நடக்கும்…”
“நான் இருக்கற வரைக்கும் அதுக்கு நான் அனுமதிக்கமாட்டேன்…” என்ற அண்ணாமலை,
“முதல்ல அவளை அங்க இருந்து கிளம்ப சொல்லு….” என்றார் அதிகாரமாய்.
“அதை நீங்க ஏன் சொல்றீங்க? இது ஒன்னும் உங்க கம்பெனி இல்லை…” என்றான் அலட்டிக்கொள்ளாமல் இவன்.
“என்ன? என் கம்பெனி இல்லையா?…” அதிர்ந்து போனார்.
“ஆமா, இது என்னோட ஷோரூம். எனக்கு மட்டுமேயான ஷோரூம். இங்க யாரும் பாட்னர்ஸ் கூட கிடையாது…” என சொல்ல ரத்தகொதிப்பு தான் அண்ணாமலைக்கு.
“என்ன பேசறோம்ன்னு யோசிச்சு தான் பேசறியா கண்ணா?…”
“தெளிவா யோசிச்சு தான் பேசறேன். நான் ஒன்னும் அங்க நம்ம கம்பெனி புராடேக்ஸ்ட் எல்லாம் அப்படியே இங்க எடுத்துட்டு வந்து சேல் பண்ணலை, மறந்துட்டீங்களா?…” என்றதும் சுருக்கென்றது.
ஆத்மா அந்த ஷோரூம் ஆரம்பிக்கும் பொழுதே எழில் குழுமத்தோடு காண்ட்ராக்ட் போட்டு அங்கிருந்து எடுத்து தான் இங்கே அதனை நிர்வகிக்க அதற்கான முறையான ஆவணங்களையும் வைத்திருந்தான்.
“என்னோடது என்னோடது மட்டும் தான். லீகலா இது என்னோட ஓன் ப்ராப்பர்ட்டி. நான் நம்ம கம்பெனில இருந்து பணம் குடுத்து தான் சரக்கை எடுத்து வியாபாரம் செய்யறேன். மறந்துட்டீங்களா?…” என கேட்க அண்ணாமலைக்கு தலையில் அடித்ததை போலிருந்தது அவனின் பேச்சு.
இளவரசுவின் மீது அத்தனை கோபமாய் வந்தது. அவனுக்காக இதனை பேசி முடித்திருந்தது இளவரசுவே. அன்றே அத்தனை சொன்னார்,
“அதெப்படி அவன் இந்த கம்பெனி முதலாளியா இருந்துட்டு காசு குடுத்து பொருளை எடுக்கேன்னு நிப்பான், நீ சரின்னு சொல்லுவ? இந்த கம்பெனியை அவன் பார்க்க வேண்டாமா?…” என கேட்டிருந்தார் இளவரசுவிடம்.
“தனியா ஒரு தொழில் அவனே செய்யனும்னு நினைக்கான். சும்மா இங்கயே இருந்து பன்றதுக்கு அவன் பாணில அவன் செஞ்சு தான் பார்க்கட்டுமே? அதுவும் நம்ம தொழில் தானே? நமக்கப்பறம் அவன் தானே இதையும் பார்க்க போறான்…” என சொல்லி சமாதானம் செய்தவர்,
“இப்ப வெளிநாடுகளுக்கும் நம்ம கம்பெனி பேர் இன்னும் பரவும். நமக்கு வருமானத்துக்கும் வருமானம். பேருக்கும் பேர். அடுத்தகட்டத்துக்கு அடுத்த தலைமுறை போகும் போது பாராட்டனும்ண்ணே…” என மண்டையை கழுவிவிட்டார் இளவரசு.
“அதுக்கு இதென்ன காசு குடுத்து வாங்கற மாதிரி பேப்பர்ஸ்? நல்லாயில்ல சொல்லிட்டேன்…” என்றும் சொல்லியிருக்க,
“டேக்ஸ் ப்ராப்ளம் எல்லாம் இருக்கும்ல ண்ணே. அவன் என்னவோ பன்றான் புதுசா. நீங்க சும்மா இருங்க…” என்று சொல்லியிருக்க இப்போது தலையிலடித்துக்கொண்டார்.
கொஞ்சமும் சம்பந்தமே இல்லாததை போல மகன் பேச பேச கோபத்தில் செய்வதறியாமல் அவர் இருக்க,
“இதெல்லாம் நல்லதுக்கே இல்லை. என்னவோ எங்களுக்கும் அந்த ஷோரூம்க்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நீ பேசறது…”
“அப்படி நான் சொல்லவே இல்லையே?…” என்ற ஆத்மா நொடி பொழுதில் அவர் வயிற்றில் பால்வார்த்தவன்,
“நமக்குள்ள தான் இத்தனை வருஷம் காண்ட்ராக்ட்ன்னு டீலர்ஷிப் இருக்கே. சம்பந்தம் இல்லைன்னு நான் சொல்லமாட்டேன். உங்ககிட்ட சரக்கு எடுக்கற நான் எப்படி இல்லைன்னு சொல்ல முடியும்?…” என்றதும் பல்லை கடித்தார்.
“சுருக்குன்னு பேசற நீ? இதையே கம்பெனில உனக்கு சம்பந்தமில்லைன்னு, வெறும் டீலர்ன்னு மட்டும் நான் சொன்னா?…” அண்ணாமலை மகனை திருப்பி தாக்குவதாக நினைத்து சொல்ல,
“அதெப்படி முடியும்? சட்டப்படி நான் அந்த கம்பெனியோட ஒன் ஆஃப் தி ஷேர் பெர்சன். சொல்லமுடியாதே? இது தாத்தா வழி சொத்து…” என்று சொல்ல இன்னும் பேச்சற்று போனார் அண்ணாமலை.
“கண்ணா, என் பொறுமையை நீ சோதிக்கிற…”
“நோ வே. இப்பவும் சொல்றேன், நான் இங்க என் ஷோரூம்க்கு என் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்திருக்கேன். எனக்கான எல்லா உரிமையும் அவளுக்கும் இங்க இருக்கு….” என்றவன்,
“இங்க நான் எடுக்கிற முடிவு எப்படியோ அதே மரியாதை தான் அவ முடிவுக்கும்…”
“தப்பு பன்ற கண்ணா…”
“ப்ச், நான் யாரையும் யார் பேசறதையும் ஜட்ஜ் பன்றதில்லை. பண்ணவும் போறதில்லை. என்னையும் சொல்லாதீங்க. உங்க கோவத்தை உங்களோட வச்சுக்கோங்க…” என்றவன்,
“வேற எதுவும் பேசனுமா?…” என கேட்டான்.
அவன் கேட்டு முடிக்க அண்ணாமலை அழைப்பை துண்டித்திருந்தார். அடுத்து வீட்டில் இந்த விஷயத்தின் பிரதிபலிப்பு தொடரும் என தெரிந்தது.
யோசனையுடன் அங்கேயே நின்றவன் கண்ணாடிவழியே ரிதுபர்ணாவை திரும்பி பார்த்தான்.
போனில் பேசிக்கொண்டிருந்தாள் இப்போது. மிதமான புன்னகையும் முகத்தில் மெல்லிய மலர்ச்சியும் என ஓவியமாய் இருந்தது.
பல்வரிசைகள் தெரிய ஒரு விரிந்த புன்னகையை அவளிடம் கண்டதில்லை இத்தனை நாட்களில்.
அமரிக்கையான அமைதியாகவே வலம் வருபவள் கூடுதலாய் எப்போதாவது சிரிப்பதென்றால் இப்படி போனில் வித்யாவோ, விசாலாட்சியோ பேசும் பொழுதில் தான்.
பார்த்தவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பேசி முடிக்கட்டும் என நிற்பதாக அவன் நினைக்க அதையும்விட அடிமனது அவளின் பாவனைகளை உள்வாங்கிக்கொண்டிருந்தது.
தான் சென்றால் பேச்சை நிறுத்தி போனை வைத்துவிடுவாள். இல்லையே மெல்லிய குரலில் தன் காதிற்கே விழாதவாறு பேசுவாள்.
தானில்லை என்றால் அவ்விடத்தில் இவள் இத்தனை இலகுவாக, இயல்பாக இருப்பாளா என்று நினைக்கையில் ஆத்மாவின் முகத்தில் ரகசிய புன்னகை.
‘அவளை எங்கடா நீ விட்ட? சும்மா குறுகுறுன்னு பார்த்துட்டு அவ எப்படி இயல்பாயிருப்பா?’ என மனசாட்சியே எக்களிக்க ஆத்மாவின் புன்னகை கூடியது.
“ரொம்பவே இம்ப்ரெஸ் பன்றா…” என மனைவியை பார்த்தபடி மொழிந்தவன் கைபேசி மீண்டும் சிணுங்க இளவரசு.
“விஷயம் போயிருச்சு போலவே?…” என்று அட்டன் செய்தான்.
“என்ன சித்தப்பா?…” என கேட்க,
“என்னடா கண்ணா? என்ன சண்டை?…” என கேட்டவர் குரலே ஒடுங்கி போய் இருந்தது.
“கம்பெனிலையா இருக்கீங்க?…” என்றான் ஆத்மா.
“ஆமா…” என்றவர்,
“என்ன சண்டைன்னு கேட்டேனே?…” என்றார் இளவரசு.
“அதை உங்க அண்ணன் சொல்லலையா?…” இவன் எதிர்கேள்வி கேட்க ஐயோ என்றானது அவருக்கு.
“ரொம்ப மாசம் கழிச்சு அப்பாவும் பிள்ளையும் நல்லவிதமா பேசுவீங்கன்னா இப்படியா சண்டை போடறது?…”
“நான் ஒன்னும் சண்டை போடலை சித்தப்பா. அவர் தான் பேசினார். நான் பதில் சொன்னேன்…”