“என்னவோ போ. மனசே சரியில்லை. இப்படி பேசிட்டான், பேசிட்டான்னு புலம்பிட்டே இருக்கார். எல்லாத்துக்கும் காரணம் நான்னு இன்னும் பேச்சு….” என இளவரசு சொல்ல ஆத்மாவிடம் அமைதி.
“எப்பவும் நான் தான் ரவிட்ட பேக்கிங் வரதை பத்தி பேசுவேன். இன்னைக்கு என்னவோ அண்ணா பரத்தை வச்சு பேசிட்டார் நான் வரதுக்குள்ள. அவன் அப்படியே சொல்லிட்டான் அண்ணன்கிட்ட…” என்று சொல்ல,
“ஓஹ், அதான் விஷயமா? நான் கூட இங்க யாரையும் செட் பண்ணிருக்காரோன்னு நினைச்சேன்…”
“பண்ணியிருந்தா?…”
“பண்ணிட்டு போகட்டும்…” என்றான் அசால்ட்டாக.
“கண்ணா?…”
“வேற என்ன பன்றதாம் சித்தப்பா?…” என்றவன்,
“இங்க என்ன ரகசியமா இருக்கு? ஆள் செட் பண்ணி வாட்ச் பன்றதுக்கு? அப்படியே பண்ணினாலும் எனக்கொண்ணும் பயமில்லை…” என்று சொல்ல இளவரசுவிற்கு வேறு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“ஓகே, நான் வைக்கறேன். கிளம்பனும்…” என்று சொல்ல,
“சரிப்பா, ரிதுவை பார்த்துக்கோ…”
“ஹ்ம்ம்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
பின் யோசனையுடன் அவனே மீண்டும் அழைக்க அதற்குள் என்னவோ என்று தான் தோன்றியது இளவரசுவிற்கு.
“என்ன கண்ணா? என்னாச்சு?…”
“ஒண்ணுமில்லை, எதுக்கு பதட்டம்?…” என்றவன்,
“ஒரு விஷயம் கேட்க தான் கூப்பிட்டேன்…”
“சொல்லுப்பா…”
“நம்ம ஊர்ல நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் சொந்தமானாலும் சரி, தெரிஞ்சவரா இருந்தாலும் சரி நம்பிக்கையானவரா வேணும் சித்தப்பா…” என்றான்.
“எதுக்குப்பா, என்ன திடீர்ன்னு?…” என்றதும் ரிதுபர்ணாவின் கடை வசூல் பற்றி சொல்லியவன்,
“இதுக்குன்னு அவ ஒவ்வொரு மாசமும் வரது சரியாப்படலை. அதுவும் ரிதுவே நேரடியா போய் வாங்கறது இனி வேண்டாம். அதான் கேட்கறேன்….”
“கண்ணா, ரிதுவே ஒத்துக்கமாட்டாளே?…”
“இப்ப ஒத்துப்பா சித்தப்பா. எல்லாமே சூழ்நிலை தானே? இப்ப அந்த சூழ்நிலை அவளுக்கு இல்லை. நான் இருக்கேன் இல்லையா?…” என்றதும் இளவரசுவிற்கு என்னவோ போலானது.
“நான் கூட சொன்னேன் கண்ணா. ரிது தான் வேண்டாம்ன்னு…”
“ஏன்ப்பா நானே பார்த்துக்கறேன்…” அவர் முன்வந்து சொல்ல,
“வேண்டாம் சித்தப்பா, சில விஷயங்கள் ஒத்துவராதுன்னா செய்ய வேண்டாமே?…” என்றதுமே புரிந்துபோனது செண்பகத்தை வைத்து சொல்கிறான் என.
“சித்திக்காக யோசிக்கிறியா கண்ணா?…” தயக்கமாய் அவர் கேட்க,
“ச்சே ச்சே, இதுல சித்தியை ஏன் யோசிக்கனும்? எல்லாருக்குமே அவங்கவங்க பாயின்ட் ஆஃப் வ்யூன்னு ஒன்னு இருக்கே. நான் அவங்களை எதுவும் நினைக்கலை சித்தப்பா. ஏன் நினைக்கனும்? சரி இது மட்டும் ஏற்பாடு பண்ண முடியுமா?…”
“டேய் என்னடா இது முடியுமான்னு கேட்டு சங்கடப்படுத்தற? நான் ஏற்பாடு பன்றேன்…” என்று சொல்லி வைத்துவிட்டவருக்கு வருத்தமாகி போனது.
திருமணத்தன்று பேசியதை போல பளிச்சென இதுதான் நீங்கள் பார்த்துக்கிட்டதா என கேட்டிருந்தால் கூட மனது ஆறியிருக்குமோ என்னவோ?
கொஞ்சம் கூட அதை பற்றி ஒருவார்த்தை பேசாமல் இதை செய்யமுடியுமா என கேட்டுவிட அதுவே மனதை அறுக்க அங்கேயே அமர்ந்துவிட்டார்.
போனை பேசி முடித்து பாக்கெட்டில் போட்டவன் திரும்பி பாக்க ரிது கொட்டாவி விட்டபடி மீண்டும் புக்லெட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒரு சிரிப்புடன் அவளை பார்த்து நடந்து வந்தவன் கதவை திறக்கவும் வேகமாய் திரும்பியவள் புருவம் உயர்த்த,
“போகலாம்…” என்று சொல்லிவிட்டு இருக்கையில் வந்தமர்ந்தான்.
‘இவன் என்ன லூஸா?’ என்னும் பார்வையுடன் அவனை பார்த்தவள் முகத்தை படித்துவிட்டதை போலொரு சிரிப்பு ஆத்மாவிடம்.
“ஹ்ம்ம்…” என்று சொல்லியவள் மறுக்கமுடியாமல் அமர்ந்துகொண்டாள்.
“போரடிச்சா திரும்ப ஒரு ரவுன்ட் சுத்திட்டு வா ரிது. புது சரக்கு வருது. அதை பத்தி பேசனும். வெய்ட் பண்ணு. லன்ச் டைம் கிளம்புவோம்…” என்றவன் வேலையில் திரும்ப அவன் என்ன செய்கிறான் என்ற ஆர்வத்தில் ரிதுவும் கவனம் திரும்பினாள்.
மதிய உணவை வீட்டில் வேண்டாம் என சொல்லிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றவன் மதிய உணவையும் முடித்துவிட்டு தான் வீடு திரும்பினான்.
அண்ணாமலை அழைத்ததோ, இளவரசு பேசியதோ என்று எதையும் அவளிடம் தெரிவிக்கவில்லை ஆத்மா.
இப்போதைக்கு சொல்லி இருக்கும் மோனநிலையை கலைக்க மனம் விரும்பவில்லை.
இன்னும் நான்கு நாட்களில் ஊருக்கு செல்ல வேண்டும். அதனைப்பற்றி விசாலாட்சியிடமும், இளவரசுவிடமும் பேசிவிட்டான் ஆத்மா.
அங்கேயே இருந்து வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டியது தானே என இளவரசு சொல்ல விசாலாட்சி ஆத்மாவும், ரிதுவும் வரட்டும் என்று சொல்லியிருந்தார்.
ஆத்மாவும் வருவதாக இருந்து கடைசியில் மும்பை ஹார்பரில் நிற்கும் தங்களின் சரக்கு கண்டெய்னர் விஷயமாக அங்கே செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதுவரை உடன் அவனும் வருகிறான் என்பதில் பெரிதாய் எதையும் நினையாமல் சாதாரணமாக இருந்தவளுக்கு முதன் முதலாய் என்னவோ உள்ளுக்குள் ஒரு குடைச்சல்.
முகத்தில் சுரத்தே இல்லை அவன் ஊருக்கு அவளுடன் வரவில்லை என்று சொல்லியதிலிருந்தே.
ஒருவிதமாய் மலர்ச்சி இன்றி வளைய வந்தவளை அன்றிரவு வளைத்துக்கொண்டவன் கைகளுக்குள் முணங்கினாள்.
“நீ தானே போகனும்னு சொன்ன? இப்ப ஏன் முகத்தை தூக்கி வச்சிட்டிருக்க?…” என்று கேட்க,
“அதனால என்ன? நீ போய்ட்டு வா. ஒரு மூணு நாள். அவ்வளோ தானே? திரும்ப வந்திட போற?…” என சொல்லி சிரித்தான்.
விட்டுவிட்டு செல்லவேண்டுமே என அவளுக்கு தோன்றிய உணர்வுகள் அவனுக்கு எழும்பவில்லை என்பது அவன் இலகு தன்மையில் புரிந்தது.
‘இதென்ன மடத்தனம்? சொல்லியதை போல மூன்று நாட்கள் தானே?’ என்று மனதை அதட்டினாலும் அதற்கு மேலும் என்னவோ அவள் யோசித்தாள்.
“என்ன ரிது?…” என்றான் ஆத்மா.
அவனின் செய்கைகளில் எப்போதும் அவளிடம் தென்படும் சின்ன சின்ன பிரதிபலிப்புகள் கூட இன்றி அவள் அமைதியாக இருந்ததில் கேட்டுவிட்டான்.
“என்ன? ஒன்னுமில்லையே?…” என்று பதில் சொல்ல,
“அதே தான். ஒன்னுமில்லையே. அதான் ஏன்னு கேட்டேன்?…”
“ஒன்னு கேட்கனும்…”
“கேளேன்…” என்றான் தன் மேல் சாய்த்துக்கொண்டு.
“இல்லை நான் கிளம்பிடுவேன். நீங்க மும்பைக்கு நாளைக்கே போகலை தானே?…”
“நாளை மறுநாள் ப்ளைட்…”
“அப்போ அதுவரை இங்க நீங்க தனியா இருக்கனுமே?…” என்று சொல்ல,
“வாட்?…” என கேட்டவன் சிரித்துவிட்டான் சத்தமாய்.
“தனியாவா?…” என்று கேட்டு இன்னும் சிரிக்க அப்படி என்ன கேட்டுவிட்டோம் என்று தான் பார்த்தாள்.
“இல்ல தனியா இருக்கனுமே? இருந்திருவீங்களா?…” என மீண்டும் அழுத்தி கேட்க,
“இத்தனை வருஷம் மட்டும் என்ன இங்க கும்பலாவா இருந்தேன்? நான் எப்பவுமே தனியா தான் இருக்கேன். இப்பன்னு இல்லை…”
“ஓஹ்…” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
அந்த நொடி அவள் எதிர்பார்ப்பு என்ன என்பது தெளிவாய் அவள் மனதிற்குள் விளங்கியது
தேடல். இவனிடத்தில் தன் இன்மை தேடலை தராதபட்சத்தில் அந்த உணர்வு மனதை உலுக்கியது.
‘நான் இல்லைன்னாலும் இவனால் இருக்க முடியும் என்பது தான் இவன் சிரிப்பிற்கு அர்த்தம்?’ என மனது முரண்டியது.
‘நீ மட்டும் என்னவாம்? அவனை தேடுடுவியா?’ என எக்களிக்க உள்ளத்தின் சஞ்சலம் முகத்திற்கு வந்துவிட்டது.
‘ஏன்? இவனை தேடமாட்டேனா? தனியாய் இருப்பானேன்ற அக்கறையில் தானே கேட்டேன்?’ என்று சமாதானமும் செய்துகொண்டாள்.
மனதோடு அவள் உரையாடிக்கொண்டிருக்க அதன் எதிரொலியாய் தலையை லேசாய் அசைத்து, திருப்பி, கண்ணை சுருக்கி என்று கொட்டிய மொத்த பாவனைகளையும் அவள் உறவானவன் கவனித்தபடி இருந்தான்.
“ப்ச், என்னவோ இருக்கட்டும்…” என மனதிற்குள் சொல்வதாக வெளியே சத்தமாய் சொல்ல,