மனம் முழுவதும் ‘இவனுக்கு நானில்லாமலும் இருக்க முடியும் தானே? இப்படித்தான், இவ்வளவு தான் கணவன் மனைவி பந்தமா?’ என்ற எண்ணமே ஆக்கிரமித்திருக்க மீண்டும் அவன் முகத்தை பார்வையிட ஆரம்பித்தாள்.
“என்ன பன்றீங்க? கண்ணு கூசுது. லைட் ஆஃப் பண்ணுங்க…” என்று சத்தமாய் சொல்ல,
“என்னை சரியா பார்க்கமுடியாம கஷ்டப்பட்ட தானே? அதான். இப்ப நல்லா பாரு…” என்று சொல்லி வம்பு செய்ய,
“மாட்டேன். ஆஃப் பண்ணுங்க. இல்லைன்னா லைட்டை உடைச்சிருவேன்…” என்றாள் வேகமாய்.
‘இவன் என்னை தேடமாட்டானா?’ என்ற கோபத்தில் ரிது பேசிவிட ஆத்மாவிற்கு இன்னும் ஆச்சர்யம்.
“பார்ரா, சவுண்டை?…” என்று கிண்டல் பேசியவன் விளக்கை அணைத்துவிட்டு அவளையும் அணைத்துக்கொண்டான்.
“ஓகே ஓகே, ரிலாக்ஸ். ரிது…” என அவள் முகத்தை நிமிர்த்த நிமிரவே இல்லை.
என்ன ஏதென்ற காரணமின்றி நிமிடத்தில் கண்ணீர் இறங்கிவிட்டது அவள் முகத்திலிருந்து.
“ஹேய் ரிது?…” என்றவனின் அழைப்பில் அவன் மார்பில் அழுத்தமாய் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“ஓகே, இனி இப்படி விளையாடலை. சரியா? அழாத…” என்று சொல்ல எந்த சமாதானமும் எடுபடவில்லை.
அதன் பின் ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை ரிதுபர்ணா. அப்படியே உறங்கிவிட தூங்கட்டும் என்று விட்டுவிட்டான்.
காலை விரைவில் எழுந்து மௌனமாய் குளித்து கிளம்பி பேக்குடன் தயாராக நிற்க ஆத்மாவும் கிளம்பி வந்தான்.
“என்ன நீ? சாப்பிடாம ஹால்ல வந்து உக்கார்ந்துட்ட?…” என்று ஆத்மா கேட்க,
“இல்லை, பசியில்லை. அதான்….” என்றாள்.
“லன்ச் உனக்கு பேக் பண்ண சொல்லிட்டேன். போற வழில சாப்பிட்டுக்கோ. என்ன வேணும்னாலும் ட்ரைவர்ட்ட சொல்லு. அவர் வாங்கி தருவார்…” என்றவன் தனது பர்ஸை எடுதத்தவன் மீண்டும் உள்ளே வைத்துவிட்டு,
“ரூம்க்கு வா ரிது…” என்றான்.
“என்கிட்டே பணம் இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்லை…”
“ரிது…” என தன் நெற்றியில் கை வைக்க,
“நீங்க சாப்பிடலையா?…” என என்றாள்.
“பசிக்கலை…” என்றான் அவளை போலவே.
“சேர்ந்து சாப்பிடுவோமா?…” என்று அவள் கேட்க மெல்லிய சிரிப்பு ஆத்மாவின் முகத்தில்.
“வா…” என தலையசைத்து அவளுடன் சென்றான்.
இருவருக்கும் ரிதுவே உணவை பரிமாறிவிட்டு அவனருகே அமர்ந்து உண்ண எல்லாமே வித்தியாசமாய் இருந்தது ஆத்மாவிற்கு.
“எப்பவும் எனக்கு எதிர்ல தானே உட்காருவ நீ?…” என்று சாப்பிட்டபடி கேட்க,
“இங்க உட்கார கூடாதுன்னு இந்த வீட்டு ரூல்ஸா?…” என்று எதிர்கேள்வி கேட்டாள்.
“அடேங்கப்பா…” என தலையசைத்து சிரித்தவன்,
“ஒரு மார்க்கமா தான் இருக்க…” என்றான் ரசனையுடன்.
“உங்களுக்கு பரிமாறிட்டு அப்படியே நானும் பக்கத்துல உக்கார்ந்துட்டேன். அவ்வளோ தான்…” என சொல்ல,
“அப்படியா? குட்…” என்று சொல்லியவன் முகத்தில் புன்னகை.
“லன்ச் இப்பவே உங்களுக்கு வந்திருமா?…” என்று ரிது கேட்க,
“அதை ரத்னாவை தான் கேட்கனும். உனக்கு டிராவல்க்கு செய்ய சொன்னேன். என்ன செஞ்சிருக்காங்கன்னு தெரியலை…” என்றான் விட்டேற்றியாக.
“ஓஹ்…” என்றவள்,
“நைட் இன்னைக்கும் எப்பவும் வர டைம் வருவீங்களா?…” என்றாள்.
“இன்னைக்கு உனக்கு என்னாச்சு ரிது?…” என கேட்டவன்,
“எப்பவும் ஒரே டைம் தான். உனக்கு தெரியுமே?…” என.
“ஓஹ், சரி…”
“வேற கேட்கனுமா?…”
“ம்ஹூம்…”
“ப்ச், என்ன உனக்கு தெரிஞ்சுக்கனும்? இங்க நீ வந்து பத்துநாள் இருக்குமா? நான் பலவருஷமா இருக்கேன். எனக்கு இந்த வீடு தனியா இருக்கறது எல்லாம் புதுசில்லை. என்னவோ சின்ன பிள்ளையை தனியா விட்டுட்டு போற மாதிரி இத்தனை கொஷின் பன்ற?…”
அவன் கிண்டலாய் அவளிடத்தில் சொன்னாலும் அவள் தனக்காய் பார்த்து யோசிப்பது பிடித்திருந்தது.
“சும்மா தான் கேட்டேன். நீங்க இருங்க…” என்றதும் யோசனையாய் அவளை பார்த்தவன்,
“உனக்கு போக மனசில்லைன்னா இங்கயே இரேன்….” என்று சொல்ல சுள்ளென்று வந்தது அவளுக்கு,
“நீங்க மும்பை போய்டுவீங்க. எனக்கு தனியா இருந்து பழக்கமில்லை. நான் ஊருக்கே போறேன்…” என்றாள் வேகமாய் உண்டு முடித்துவிட்டு.
“நீ ஏன் இங்க தனியா இருக்கனும்? என்னோட மும்பை வா. ஆனா நீ ஹோட்டல் ரூம்ல தான் இருக்கற மாதிரி இருக்கும்…” என்று சொல்ல,
“அதுவும் தனியா தானே? நான் முடிச்சுட்டேன்…” என்று பேச்சையும் முடித்தாள்.
எதற்கென்றே தெரியாமல் ஒரு கோபம் அவன் மீதும், இத்தனை பேசும் தன் மீதும். இப்படியே இருக்கட்டும் என்று மனதை சமன் படுத்தினாள்.
‘இதென்ன புதிதாய் ஒரு எதிர்பார்ப்பு? அடங்கி இரு’ என தன்னையே நிந்தித்தபடி இருக்க வாசலுக்கு வந்தான் ஆத்மா அவளுடன்.
ஊரிலிருந்து காரை அனுப்பிவிட சொல்லியிருந்தான் ரிதுபர்ணாவை அழைத்து செல்வதற்கென.
முதலில் கார் வேண்டாம், பஸ்ஸில் போகிறேன் என்று அடம்பிடிக்க ஆத்மா ஒப்புக்கொள்ளவே இல்லை.
தனியாய் அனுப்பிவிட்டு தன்னால் அதையே நினைத்துக்கொண்டு இருக்க முடியாதென மறுத்துவிட்டான்.
அதை போல ஊரில் மாதாமாதம் வாடகை வருமானத்தை வசூலிக்கவும் நம்பிக்கையான ஆள் ஒருவரை ஏற்பாடு செய்ய அதற்கும் ரிதுவால் மறுக்கமுடியவில்லை.
இளவரசுவும், விசாலாட்சியும் கூட கிண்டல் செய்தனர், தாங்கள் சொல்லும் பொழுது கேட்டாளா, இபொழுது மட்டும் உடனே சரி சொல்லியாகிற்று என்று கேலி பேச ஐயோ என்றானது ரிதுவிற்கு.
ஒவ்வொன்றிலும் அவனின் தலையீடுகள் மிக அதிகமாகவே இருக்க அதனை பிடித்தும் முழுதாய் ஏற்க ஒரு தயக்கம்.
தாய் தந்தைக்கு பின் முருகேஸ்வரி பார்த்துக்கொண்டாலும் முடிவுகள் எல்லாம் அவளிடத்தில் தான் இருந்துவந்தது.
தன்னை பார்த்துக்கொள்வதென்பது தாய் இருந்தவரை அவரின் கையில். விவரம் தெரியும் வரை முருகேஸ்வரியிடம்.
அதன் பின்னர் எல்லாம் அவளே அவளின் முடிவுகள் எல்லாம். இதில் வித்யா வளர வளர தன்னை குடும்பத்தின் ஆணிவேராக மாற்றிக்கொண்டாள்.
எத்தனை தான் விசாலாட்சி, இளவரசு என்று கவனித்துக்கொண்டாலும் அவர்களிடம் சலுகையாய் சாய்ந்ததில்லை.
அவர்களும் பக்குவப்பட்ட பெரியமனுஷியை போல தான் அவளை கையாள அதுவே பழக்கமாகி போனது.
விசாலாட்சி அதட்டி, பேசி பார்த்தாலும் அதில் இறுதி முடிவு தன்னுடையதாகவே இருக்க இந்த சலுகைகளை உணர்ந்ததில்லை.
பிடிவாதமாய் தன்னதை தானே பார்த்துக்கொள்கிறேன் என்ற பின்னர் பாதுகாப்பாய் உடன் இருந்தார்கள்.
இப்போது எல்லாவற்றிலும் ஒரு மாற்றம். அந்த மாற்றத்தையும் மனது ஏற்க துவங்கி அதில் லயிக்கவும் துவங்கிவிட்டது.
எங்கே வளைந்துகொடுக்கவேண்டுமோ அங்கே வளைந்தான். எங்கே நிமிர்த்தி பிடிக்கவேண்டுமோ அங்கே நிமிர்ந்தான்.
மொத்தமாய் அவன் வாழ்க்கைக்குள் அவளை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்க அதன் வழியில் அவளின் பாதங்கள் பயணமாகியது.
இப்போது இப்படி கிளம்பியதிலும் கூட அவனின் முடிவே. மறுக்கமுடியாத அளவிற்கு இருந்தது அவனின் பேச்சுக்கள்.
யோசித்தபடி ரிதுபர்ணா இருக்க அவளின் பார்வையில் ஆத்மாவின் புருவங்கள் உயர்ந்து புன்னகை விரிந்தது.
“மொபைலை கைலயே வச்சுக்கோ. அப்பப்ப கால் பண்ணுவேன். நீயும் கால் பண்ணு…” என்று சொல்லி காரில் ஏறவும் ட்ரைவரிடமும் சொல்லியே அனுப்பினான்.
“பை ரிது. சேஃப் ஜர்னி….” என்று சிரித்தபடி கையசைக்க அவனை பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் கையை கூட அசைக்க தோன்றாமல்.
“கிளம்பும் போதும் இப்படித்தான் பார்ப்பியா நீ?…” என கிண்டலாய் கேட்டவன்,
“கால் பண்ணு. பை…” என்று சொல்ல கார் நகர்ந்தது.
கார் செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு தானும் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் ஷோரூமிற்கு.
மனதிற்குள் மனைவியை நினைத்து, அவளின் கோபம், பேச்சுக்கள் என ஒவ்வொன்றையும் நினைத்து அத்தனை சிரிப்பு.
“எவ்வளோ பேச்சு? போய்ட்டு வரட்டும்…” என நினைத்துக்கொண்டான்.
மூன்று நாள் தானே? வந்துவிடுவாள் என்று அவன் நினைத்திருக்க அவளன்றிய நிமிடங்கள் எப்படி இருக்குமென்று உணராது போனான்.
இங்கேயே வாழ்ந்த வீடு தனக்கு அந்நியமாகிவிடுமா என்றிருந்தவன் இறுமாப்பு உடைய வேண்டாமா?