காரில் ஏறி அமர்ந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர கண்ணீரை கட்டுப்படுத்தியபடி இதழ்களை மடக்கிக்கொண்டாள்.
தலையை லேசாய் தாழ்த்தியபடி அமர்ந்திருந்தவளுக்கு தன் கைவிரல்களின் மேல் தான் பார்வை. வெளியே வேடிக்கையும் பார்க்கவில்லை.
போனை மடியில் வைத்திருந்தவளுக்கு ஊருக்கு செல்லும் மொத்த ஆசையும் வற்றிவிட்டிருந்தது.
அவனுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க இங்கே வந்ததிலிருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் முரண்பட்டு நின்றாள்.
‘ஒன்னும் நினைக்காத, உன்னையே அவங்க எதுவும் நினைக்கலை. பேசாம அவங்களை மாதிரியே நீயும் இருந்துக்கோ’ என்று மனது எடுத்து கொடுக்க அப்படித்தான் என ஒப்புக்கொண்டாள்.
ஆனாலும் என்னவோ அதனை அடிமனது முழுதாய் நம்பவும், ஏற்கவும் தயாராக இல்லை.
இந்தளவுக்கு மாறும் தன்னை குறித்து சிந்தனை ஒருபக்கம், மூன்று நாட்கள் இங்கே அவன் நாட்கள் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் ஒருபக்கம்.
“ஹ்ம்ம், தெரியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. வேற வழியில்லை உனக்கு…”
“என்ன?…”
“என்ன என்ன? என்னவோ இன்னைக்கு தான் தெரிஞ்ச மாதிரி. கல்யாணத்தன்னிக்கே தெரியும் தானே?…” என்றதும் ஒரு நொடி மௌனமாயிருக்க,
“என்ன திரும்ப நெட்வொர்க்…”
“அச்சோ, அதெல்லாம் ஒண்ணுமில்லை. இதுக்கு தான் சொன்னேன் பொறுமை இல்லைன்னு…” என்றாள் அவசரமாய்.
“என்னை அதட்டி சொல்ற நீ. ட்ரைவர் இருக்கார்…” அவளுக்கு அவன் ஞாபகப்படுத்த,
“அப்ப கால் கட் பன்றேன்…”
“ம்ஹூம், இருக்கட்டும்…” என்றான் அவளை அழைப்பை துண்டிக்க விடாமல்.
“பேசவும் கூடாது, கால் கட் பண்ணவும் கூடாதுன்னா. ஏன் இப்படி?…” என்றவளின் கேள்விக்கு அவனுக்கே பதில் தெரியவில்லை.
மனது உணர்ந்தது இங்கே தன்னருகில் தான் நினைத்ததும் சென்று பார்க்கும் தூரத்தில் அவள் இல்லை என்று.
அவள் செல்ல செல்ல மனது அவளுடன் செல்ல பேச்சை தொடர்ந்தான் அவளிடத்தில்.
“இதுக்கு நீங்க என்னோட வந்திருக்கனும், இல்லைன்னா…” என்றவள் துடுக்காய் வந்துவிட்ட வார்த்தைகளின் பின் பாதியை விழுங்கிக்கொள்ள ஆத்மா இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
“என்னவாம் லெக்சருக்கு பாடம் நடத்த நான் வேணுமா? சொல்ல வந்ததை அப்படியே பேக் எடுத்துக்கிட்ட?…” என்றான் கிண்டலாய்.
“அதெல்லாம் இல்லை…” என்றவள் பேச்சை மாற்றும் விதமாய்,
“இதென்ன இவ்வளோ பணம்? நான் தான் மூணு நாள்ல வந்திருவேனே? இதை வச்சு இங்க என்ன பண்ண போறேன்?…” என்றாள்.
“இருக்கட்டும். எனக்கு எப்பவாச்சும் தேவைன்னா உன் அக்கவுண்ட்ல இருந்து எனக்கு தரமாட்டியா என்ன?…” என்று அவள் மறுக்கமுடியாத கேள்வியை கேட்க பதிலின்றி இருந்தாள்.
“ரிது, சிக்னல்…”
“கட் பண்ணிடாதீங்க. நான் லைன்ல தான் இருக்கேன். இதென்ன இவ்வளோ அவசரம் நான் பதில் சொல்றதுக்குள்ள?…” என்றவள் குரல் லேசாய் அதட்டி வர ஆத்மா தன் கையால் தலையை தாங்கிக்கொண்டான்.
“என்னங்க, என்னாச்சு?…” ரிது அவன் அமைதியில் கேட்க,
“ஹ்ம்ம், நத்திங்…” என்றான்.
மறுமுனைக்கு வெறும் மூச்சுக்காற்று மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க அவனின் அமைதி என்னவோ செய்தது.
“வேலை இல்லையா? என் கூட இவ்வளோ நேரம் பேசிட்டீங்க?…”
“உனக்கு வேற வேலை இல்லையான்னு கேட்கறியா நீ?…” என சிரித்ததும் தான் நிம்மதியானது.
ஆதர்ஷ தம்பதிகளாய் இல்லை என்றாலும் ஓரளவு புரிந்துகொண்டு வாழ துவங்கியிருக்க சிறு அமைதியும், விலகலும் கூட இருவரையும் பாதிக்க ஆரம்பித்தது.
அதன் ஆரம்பத்தின் முதல் படியில் இருந்தனர் இருவருமே. அவனை அழைத்துக்கொண்டு அடுத்த படிக்கு ரிதுபர்ணா வந்திருக்க ஆத்மா அவளின் பாதச்சுவட்டின் வழியில் தன் காலடியை பதித்திருந்தான்.
அதன் வேகம் அவனை சுருட்ட ஆரம்பிக்க மௌனமாய் அந்த கனத்தை விழுங்கியவன் அவளிடம் பேச்சு வளர்த்தான்.
“இன்னைக்கே எங்கயும் போக வேண்டாம். ரெஸ்ட் எடு. நாளைக்கு மார்னிங் நான் சொன்னவர் வருவார். கூட மட்டும் நீ போய்ட்டு காமிச்சுட்டு வா. நெக்ஸ்ட் மந்த்ல இருந்து அவர் வசூல் பண்ணி பேங்க்ல போட்டுடுவார்….” அவன் சொல்ல,
“அதான் நிறையதடவை சொல்லிட்டீங்களே? திரும்பவுமா?…”
“ஹ்ம்ம், ஓகே…” என்றவன் வேறு என்ன பேச என யோசிக்க,
“வச்சிடட்டுமா?…” என்றாள் ரிது.
வேண்டாம் என சொல்லவும் மனதில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க அவனுக்கு காத்திருக்கும் வேலையும் தடுத்தது.
“ஓகே, டேக் கேர். அப்பறமா கூப்பிடறேன்…” என்று வைத்துவிட்டான்.
அவன் அனுப்பிய தொகையை பார்த்தவள் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்க அதற்குள் அடுத்தடுத்து ஊரிலிருந்து அழைப்பு.
அவ்வப்போது வந்துகொண்டிருக்கும் இடத்தையும் சொல்லிக்கொண்டே வர மாற்றி மாற்றி ஊர் வந்து சேரும் வரை போன் வந்துகொண்டே தான் இருந்தது.
மீண்டும் அழைப்பானோ என நினைத்த ஆத்மா தான் அழைக்கவே இல்லை அதன் பின்னர்.
கேட்டிற்குள் நுழையும் முன் அத்தனை பரபரப்பு ரிதுபர்ணாவிடம். பத்துநாட்கள் கழித்தாக இருந்தாலும் என்னவோ பலமாதங்கள் பிரிந்திருந்ததை போல கண்கள் அந்த உயரமான சுவற்றிற்குள்ளிருக்கும் தன் வீட்டை தேடியது.
முன் சென்ற கார் பின்னே நகர என்னவென எட்டி பார்க்க அங்கே அண்ணாமலை தான் அவரின் காரில் வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்.
அப்படி ஒரு அனல் கக்கும் பார்வை பார்த்தவரை நொடி பொழுதேனும் முகம் பார்த்து சந்தித்தவள் தனது தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.
கிளம்பும் நேரம் அவளை கண்டுகொண்டவரின் முகம் கடுகடுத்தது. அந்த கோபத்தை ட்ரைவரிடம் காட்டினார்.
“கூமுட்ட பயலே, நீ இன்னைக்கு தான் கார் ஓட்டுறியா? கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க? ஹாரன் சத்தம் கேட்காம என்னவோ நுழையிற மாதிரி நுழையிற. இரு உன் காது ரெண்டுலயும் எண்ணையை காய்ச்சி ஊத்தறேன் பாரு…” என்று ட்ரைவரை திட்ட அவர் இறங்கி சென்று மன்னிப்பை கேட்டார்.
“போயிரு பார்த்துக்க…” என கையை வீசி அறைந்துவிடுவதை போல அரட்டியவர்,
“அவனவன் வைக்க வேண்டியத வைக்கிற இடத்துல வச்சா நீ ஏன் கொழுப்பெடுத்து ஆட போற?…” என்றவர் தன் ட்ரைவரை பார்த்து,
அதுவரை மலர்ந்திருந்த முகம் தீயிலிட்டதை போல் சறுகாகிவிட சிவந்துவிட்ட விழிகளை இறுக்கிக்கொண்டாள்.
இந்த கோபமும், பேச்சும் தனக்கானது என்று தெளிவாய் தெரிந்திருக்க ஒருவிதமாய் குன்றி போயிருந்தாள்.
கார் மீண்டும் வீட்டிற்குள் செல்வதை உணர்ந்தவள் முயன்று தன்னை இயல்பாக இருக்க காட்டிக்கொண்டாலும் ட்ரைவருக்கு மட்டுமல்ல அங்கே அனைவருக்குமே அண்ணாமலை பேசியது தன்னை என்று தெரியுமே.
அவமானமாய் இருந்தது. இதற்கு தான் கார் வேண்டாம் என நினைத்தது என்று உள்ளுக்குள் வெதும்பியவள் தனக்காக காத்திருக்கும் சொந்தங்களை பார்க்க திரும்பினாள்.
ட்ரைவர் அண்ணாமலையின் வீட்டு வாசலில் காரை நிறுத்த அதனை வெறித்து பார்த்தவள்,
“என் வீட்டுல இறங்கிக்கறேன் ண்ணா. எடுங்க. இல்லன்னா நடந்து போறேன்…” என்றாள் அவள்.
“சரிங்கம்மா, இருங்க…” என காரை திருப்பிவிட்டார்.
கார் திரும்பி அந்த வாசலுக்கு வர விசாலாட்சியும், செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முருகேஸ்வரிக்கு திக்கென்றானது.
அண்ணாமலையின் சத்தம் தான் உள்ளே வரை கேட்டதே? ஆனாலும் ஆத்மாவிற்காக அவள் அங்கே சென்று இறங்கட்டும் என நினைக்க,
“இவ செய்யமாட்டா. பாரு இறங்கி விறுவிறுன்னு இங்க தான் வருவா…” என அப்போதுதான் சொல்லியிருந்தார் விசாலாட்சி.
“என்னக்கா நீங்களும்?…” முருகேஸ்வரி சொல்ல,
“அவ அங்கயே இறங்கி வராம காரை திருப்ப சொல்லிருப்பா போல?…” என்று விசாலாட்சி வியப்புடன் பார்க்க ரிதுபர்ணா இறங்கிவிட்டாள்.
“வாடிம்மா…” என விசாலாட்சி ரிதுவின் கன்னம் வழித்து திருஷ்டி எடுக்க மற்றவற்றை மறந்து முறுவலித்தாள்.
“முருகேஸு, ஆராத்திய கொண்டா…” என விசாலாட்சியின் சத்தத்தில் அவர் எடுத்து வந்ததை கொண்டுவந்து தர விசாலாட்சியின் பார்வை ஆத்மாவின் வீட்டை பார்த்தது.
ஆனந்தியும், மனோவும் இப்போது அங்கே இல்லை. அதுவரை வாசலருகே எட்டி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இல்லை.