“ஆரத்தி எடுக்க முறையா தான் இருக்கனும்னு இல்ல. மனசு இருந்தா போதும். அதுவும் இங்க அவ வீட்டுக்கு தாய் வீட்டுக்கு வரப்ப வித்யா தான எடுக்கனும். கூப்பிடு…” என்று முருகேஸ்வரியிடம் விசாலாட்சி சொல்ல செண்பகத்தை பார்த்து தயங்கினார் முருகேஸ்வரி.
“என்ன? நான் சொன்னா கேட்கமாட்டியா?…” என்ற விசாலாட்சி,
“வித்யா…” என்றார் சத்தமாக.
செண்பகம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இரண்டடி தள்ளி நின்றுகொண்டார் அங்கிருந்து.
அதே நேரம் பைக் சத்தம் கேட்க திரும்பி பார்க்க இளவரசு தான் வந்துகொண்டிருந்தார் வேகமாக.
“கிளம்பினதும் தான் வேலைன்னு நிக்கவேண்டியதாருக்கு. இப்பத்தான் வந்தியா ரிது?…” என்று சொல்ல,
“ஆமா மாமா…” என்றாள்.
வித்யாவும் வந்துவிட அதற்குள் அவசரமாய் அங்கே ஒரு நலம் விசாரிப்பு அனைவருமே.
ஆலம் சுற்றி முடித்ததும் ரிது வீட்டிற்குள் செல்ல இளவரசு மனைவியை திரும்பி பார்த்து என்னவென்றார்.
“என்கிட்டே கேட்டா?…” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு செண்பகம் தன் வீடு நோக்கி செல்ல இதனை பார்த்திருந்த ரிதுபர்ணா,
“மாமா…” என்று பேசும் முன்,
“சரிம்மா, அப்பறம் பேசிக்கலாம். நீ உள்ள போ. வந்த பிள்ளை வாசல்லையே நிக்கிற?…” என்று செல்ல சொல்லிவிட்டு விசாலாட்சியை பார்த்தார்.
முருகேஸ்வரி வித்யாவுடன் ரிது வீட்டிற்குள் செல்ல அவளின் பயண பை இறக்கப்பட்டு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் உள்ளே சென்று மறைந்ததும் தான் விசாலாட்சி வீடு நோக்கி சென்றவரை பின் தொடர்ந்தார் விசாலாட்சி.
“என்ன விசாலம்? என்னாச்சு? முகமே சரியில்லை. செண்பகம் வேற முறுக்கிட்டு போறா?…” என்றார்.
“என்னத்த சொல்ல? வடக்க கால புடிச்சு இழுத்தா கிழக்க கைய புடிச்சு இழுக்குதாங்க. இவங்களை வச்சுக்கிட்டு ஒரு விசேசம், விழான்னு எடுக்க முடியுதா?…” என பெருமூச்சுடன் முன் திண்ணையில் அமர இளவரசுவும் அமர்ந்துகொண்டார்.
“ரிது வரான்னு காலையிலையே ஆனந்தி மதினிட்ட சொல்லிட்டேன். போதாததுக்கு மனோ தான் ஆரத்தி சுத்தனும்னு சொன்னேன். இதுக்கு மேல என்ன செய்ய முடியும்?…”
“என்னவாம்? அண்ணன் கிளம்பிட்டாரே? அப்பறம் என்ன?…”
“என்னவா? எல்லாம் கால நேரம் தான். ரெண்டுவண்டியும் கேட்டுகிட்டே முட்டிக்கிட்டு நிக்குது. இதுல அண்ணே வேற வாய் வச்சுக்கிட்டு சும்மா நிப்பரா? என்ன பேச்சு தெரியுமா?…” என்று அண்ணாமலை பேசியதை சொல்லிவிட்டு,
“புள்ளை மூஞ்சியே வெந்துபோய் இருந்துச்சு. என்ன மனுஷங்களோன்னு போயிருச்சுண்ணே. வந்த பிள்ளையை வான்னு கேட்க வேணா. இப்படியா மூஞ்சில வென்னிய ஊத்தினதாட்டம் பேசறது?…” என பொறுமினார்.
“ம்க்கும், அப்படி ஒன்னு நடக்கட்டும், இப்படி பேசற வாயில நாலு போட சொல்லனும் பேரப்பிள்ளையை வச்சே…” என்றவருக்கு அந்த நினைவே இனித்தது.
“சரி, மனோவை ஆரத்தி எடுக்க சொல்லி இங்க சுத்திட்டிருக்க? ஏன் மனோ வரலையா?…”
“எங்க? வர கூடாதுன்னு எதுவும் சொல்லிட்டு போனாரான்னு தெரியலை. வாசல்லையே நின்னவங்க ரிது வரவும் தலையே காட்டலை. ரிதுவும் அங்க இறங்காம அவ வீட்டுல இறங்கிட்டா. அதான் வித்யாவை எடுக்க சொன்னேன்…”
“அதுக்குத்தான் செண்பகம் மூஞ்சிய தூக்கி முகவாக்கட்டையில வச்சிக்கிட்டாளாக்கும்?…” என்று சிரித்தார் இளவரசு.
“வச்சா வைக்கட்டுமே? எங்க என்கிட்டே கோவிக்க சொல்லுங்க. பேசிக்கறேன்…” விசாலாட்சி சிரித்தபடி சொல்ல அதற்குள் இருவருக்கும் டீயுடன் ரிதுபர்ணா வந்துவிட்டாள்.
“நல்லவேளை, ஆளில்லாத வீட்டுல என்னத்த அடுப்ப மூட்டன்னு நினச்சேன். தொண்டைக்கு இதமா நீயே கொண்டு வந்துட்ட…” என்று அவளிடமிருந்து ஒன்றை எடுத்துக்கொண்ட விசாலாட்சி சூடுபறந்த டீயை ஊதி ஊதி குடித்தார்.
“ஹப்பா பத்துநாளா நான் போடற டீ கூட பால்டாயில் மாதிரி இருக்குன்னு உன் பெரியப்பா என்னை வம்பு பண்ணிட்டிருந்தார், நிசந்தேன் போல…” என்றுவேறு சொல்ல ரிது அங்கேயே அமர்ந்துகொண்டாள்.
“குடிண்ணே, பாத்துக்கிட்டே இருக்க?…” என இளவரசுவை கிண்டலாய் பார்க்க,
“இதுக்கெல்லாம் அவ கோவிக்கமாட்டா…” இளவரசு தங்கையின் பார்வைக்கு சிரித்தபடி பதில் கூற,
நால்வருமாக டீயை பருகியபடி பேசிக்கொண்டிருக்க முருகேஸ்வரி ரிதுவின் வீட்டு திண்ணையில் இருந்தே இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
“சரி, இந்த டீயெல்லாம் உன் புருஷனுக்கு போட்டு குடுப்பியா? என்ன சொன்னான் நீ கிளம்பவும்?…” ரிதுவிடம் பேச்சை திருப்ப,
“அவங்க காபி தான் குடிப்பாங்க. அதுவும் ரத்னா காபி…” ராகமாய் ரிதுபர்ணா சொல்ல,
“இதை அவன்கிட்ட சொல்லியிருக்கியா? இங்க மட்டும் பேச்சு நீளும்….” என்றார் விசாலாட்சி.
அங்கே சில மணித்துளிகள் கலகலப்பாக செல்ல நேரம் செல்வதே தெரியவில்லை.
நன்றாக இருள் கவிழ்ந்திருக்க இளவரசு கிளம்பிவிட்டார். வித்யாவும் படிக்கவேண்டும் என்று உள்ளே சென்றுவிட விசாலாட்சியும், முருகேஸ்வரியும் ரிதுவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
“அங்க எப்ப போற கண்ணு?…” என முருகேஸ்வரி கேட்க,
“எங்க சித்தி?…” என்று எதிர்கேள்வி எழுப்பினாள் தெரிந்துகொண்டே.
மனோவும் அவர்கள் வீட்டு வாசலில் தூணில் சாய்ந்துகொண்டு இங்கே பார்ப்பதும், கையில் புத்தகத்தை பார்ப்பதுமாக இருந்தாள்.
“எங்கையா? அதான் உன் புகுந்த வீட்டுக்கு? கேட்கா பாரு கேள்விய?…” விசாலாட்சி சொல்ல,
“பெரிம்மா…” என்றாள் முறைப்பாய்.
“உண்மையை தானடி சொன்னேன். அது தான உன் மாமியார் வீடு. போய் சட்டமா உக்காருவியா? பம்மிட்டு இங்க வந்திருக்க?…”
“என்ன கொம்பு சீவறீங்களா? ஒன்னும் தேவை இல்லை….” ரிதுபர்ணா விட்டேற்றியாக சொல்ல,
“இங்க பாரு, சும்மா ஒதுங்கியே போகாத. பெரியண்ணனுக்கு எகனைக்கு மொகனையா இருந்தா தான் சரிவரும். பழகிக்கடி. அங்க போய் உன் புருஷனோட ரூம்ல இரு. உன்னை யார் கேட்பா?…”
“என்னை கழுத்தை பிடிச்சு தள்ள கூட யோசிக்கமாட்டார் உங்கண்ணன்…” ரிதுபர்ணா கசப்புடன் சொல்ல,
“இப்படியே இரு. பெரிசா குரலை உசத்தி பேசறவங்க எல்லாம் பேசற மாதிரி இருக்கமாட்டாங்க. வாய் தான் விஷம் மாதிரி. அதை அடக்க வேண்டாமா? என்ன நீ?…” என்று சொல்ல வித்யா போனுடன் வந்தாள்.
ஆத்மா தான் அழைத்திருந்தான் ரிதுவிற்கு. போனை வாங்கி பேசும் முன் விசாலாட்சி பிடுங்கியிருந்தார்.
“என்ன?…” என விசாலாட்சி காற்று போன பலூன் போல முகத்தை வைத்துக்கொள்ள அதில் ரிதுபர்ணாவிற்கு அத்தனை சிரிப்பு.
“ரிதுக்கிட்ட போனை குடுங்க…” என்றதும் முறைப்புடன் அவர் நீட்ட வாங்கிக்கொண்டவள்,
“சொல்லுங்க…” என்றாள்.
“இதுதான் நீ ஊருக்கு போனதும் எனக்கு கால் பன்றதா?…” என கேட்க,
“இல்ல நான்…”
“நான் தான் வேலையா இருந்தேன். நீ கூப்பிட மாட்டியா?…” என சொல்ல,
“இல்ல இங்க வந்ததும்…”
“வந்ததும் என்னை மறந்தாச்சு. எல்லாம் மறந்தாச்சு. இன்னும் வேற என்ன இருக்கு மறக்க?…” என்றான் சுள்ளென்று.
“நீங்க கால் பண்ணலை, வேலையா இருக்கீங்கன்னு நினைச்சேன்…” கம்மிவிட்ட குரலில் அவள் சொல்ல,
“ஓகே, இப்ப சண்டை வேண்டாம். எல்லாரும் பக்கத்துல இருக்காங்களா?…”
“ஹ்ம்ம்…”
“ஹ்ம்ம், அப்பா பேசினதுல ரொம்ப கஷ்டமாகிடுச்சா?…”
“ஹ்ம்ம்…”
“நீ என்ன பண்ணிட்டிருந்த?…” என கேட்கவும் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து தள்ளி வந்தாள்.
“ஒன்னும் பண்ணலை, ஜன்னல் வழியா எட்டி பார்த்தேன். அதுக்குள்ளே திட்டி ஆரம்பிக்கவும் திரும்ப உள்ள தலையை இழுத்துக்கிட்டேன்…”
“ஏன், உனக்கு வாயில்லையா?…” என கேட்க என்ன சொல்கிறான் என புரியவில்லை.
“உனக்கு வாயில்லையான்னு கேட்டா பதில் சொல்லமாட்டியா?…” அப்படி ஒரு அதட்டல்.
“நான் என்ன பேசட்டும்?…”
“பேசனும். பேசறதுக்கு தான வாயை குடுத்திருக்கார் கடவுள். பேசிருக்கனும் பதிலுக்கு. நீ சைலண்டா இருக்க இருக்க இன்னும் பேசுவார்….”
“எனக்கு அதெல்லாம் வராது…”
“சரி, விடு…” என்றவன் மூச்சை இழுத்துவிட அவன் கோபத்தை குறைக்க முயல்கிறான் என புரிந்தது.
“ஏன் இத்தனை டென்ஷன்?…” என்றவள்,
“வீட்டுக்கு வந்துட்டீங்களா?…” என்றாள்.
“ஹ்ம்ம். கொஞ்சம் முன்னாடி…” என்றவன்,
“ஓகே, நீ அங்கயே இரு. சித்தப்பாவோ, அத்தையோ சொன்னா நான் சொன்னேன்னே சொல்லிடு…” என்றான்.
“ஓகே, சாப்பிட்டாச்சா? அதை சொல்லலை…”
“ஹ்ம்ம், முடிச்சுட்டேன்…”
“ஓகே குட்நைட், நாளைக்கு ப்ளைட்க்கு கிளம்பனுமே? வச்சிடட்டுமா?…” என கேட்க கோபமாய் அழைப்பை துண்டித்துவிட்டு மொபைலை தூக்கி படுக்கையில் வீசி எறிந்தான் ஆத்மா.
அவனறை, அவன் வாழ்ந்த இடம். அந்த நொடி அந்நியமாய் அத்தனையும் அவனை விட்டு தள்ளி நின்று எக்களித்தது.
கண்ணுக்கு தெரியாத ஒரு உணர்வு அவனை சுழற்ற பொடிப்பொடியாய் எதுவோ தகர்ந்துகொண்டிருக்க அறைக்குள் இருக்க முடியாமல் மொட்டை மாடிக்கு வந்துவிட்டான் ஆத்மா.
அன்று காற்று கூட அனலை கூட்டியபடி வீசுவதை போலிருந்தது அந்த இரவு நேரத்திலும்.
வந்தவனின் பார்வை மயில்மாணிக்கக்கொடி படர்ந்திருந்த அந்த படிக்கட்டை பார்க்க வரிவடிவமாய் அவள் இருப்பதை போல ஒரு பிரம்மை.
விந்தையிலும் விந்தை அவளை அத்தனை தேடியது அவன் மனது. அவன் மனைவியின் அருகாமையின் அருமையை ஆண்மகன் உணர துவங்கினான்.
“ப்ச், இதென்ன இப்படி ஒரு இரிட்டேட்டிங் பீலிங்க்ஸ்…” என்று தலையை கோதிக்கொண்டு அந்த படிக்கட்டில் அமர்ந்தவன் கைகளை பின்னந்தலையில் கொடுத்து பின்னால் சாய்ந்து படுத்தான்.
இங்கே ஒன்றும் சொல்லாமல் போனை துண்டித்துவிட்டவனின் செய்கையில் ரிது திகைத்து போய் தூணில் சாய்ந்து நின்றவள் மீண்டும் அவனுக்கு அழைக்க அழைப்பு சென்றுகொண்டே இருந்தது.
மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு மாடிக்கு சென்றிருக்க இங்கே ரிதுவிற்கு என்னவோ என்றானது.
இத்தனை முறை அழைக்க அவன் எடுக்கவே இல்லை. என்ன கோபம் என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டிருக்க கேட் திறக்கும் சத்தம்.
போனுடன் நிமிர்ந்து பார்க்க அண்ணாமலை தான் வந்திருந்தார். வந்தவரின் பார்வை தீயாய் மருமகளை சுட்டு பொசுக்க இப்போது பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை ரிதுபர்ணா.
அவளும் பார்க்க பார்த்ததோடு கணவனுக்கும் அழைக்க என்று அவளின் பார்வையின் தொனி அண்ணாமலைக்கு ஆத்திரத்தை கிளப்பியது.
‘எவ்வளவு திமிர்? என்னையே நிமிர்ந்து பார்க்கறா இவ?’ என கொந்தளிப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டவர் வீட்டிற்குள் நுழைந்துகொள்ள அதுவரை ரிதுவின் பார்வை அங்கே தான்.