நள்ளிரவு வரை அங்கே மொட்டைமாடியில் தான் அமர்ந்திருந்தான் ஆத்மா.
மீண்டும் அவன் உள்ளே வந்து கண்ணாடி கதவை பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவன் கதவை சாற்றாமலே படுக்கையில் விழ கீழே தொலைபேசி அடிக்கும் சத்தம்.
மூடிய விழிகளை திறக்கமுடியவில்லை. அப்போது தான் உறங்க முயல அழைப்பு மீண்டும் அடித்து ஓய்ந்தது.
இந்த நேரத்தில் யாராக இருக்கும்? அதுவும் வீட்டு லேண்ட் லைனிற்கு என்ற யோசனையுடன் கண்ணை மூடினான்.
திரும்பவும் தன் அறையில் உள்ள தொலைபேசி அடித்தது. படக்கென்று கண்ணை திறந்தவனுக்கு என்னவோ பதட்டம்.
அப்போதுதான் ஒன்று ஞாபகமே வந்தது, இத்தனை நேரம் தன்னுடைய மொபைலையும் உடன் வைத்திருக்கவில்லை.
ஊரில் யாருக்கும் என்னவோ என யோசனையுடன் அதனை எடுத்தவன் தனது மொபைலையும் இன்னொரு கையில் எடுத்து பார்க்க மொத்தமாய் உயிரை விட்டிருந்தது.
“சுவிட்ச் ஆஃப் ஆகிருக்கே?…” என்றபடி ரிசீவரை காதில் வைக்க,
“ஹலோ ஹலோ என்னங்க? என்னாச்சு? ஏன் போனை அட்டன் பண்ணலை? எங்க போனீங்க?…” என்றவளின் பதட்டமும், அழுகையுமான குரல் தான் அவனை அடைந்தது.
“ஹேய் ரிது?…” என திகைத்தவன் நேரத்தை பார்க்க ஒன்றரையை காண்பித்தது.
“ஷிட்…” என்றவன்,
“எனக்கு ஒண்ணுமில்லை ரிது. எதுக்கு அழற? வெய்ட், நான் மொபைல்ல வரேன்…” என்று சொல்லிவிட்டு போனை வைக்க போனவன்,
“இல்லை லைன்ல இரு. மொபைலை ஆன் பன்றேன். சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு…” என்றான்.
இன்னும் விசும்பல் தொடர ஆத்மாவின் மனது கலங்கிவிட்டது. தனக்கு என்னவோ என பயந்துவிட்டாள் என்று புரிந்தது.
மொபைலை ஓபன் செய்ய அத்தனை அழைப்புகள் வந்து நின்றிருந்தது. ஒவ்வொன்றும் இப்போது குறுஞ்செய்தியாய் வந்து விழ ரிசீவரால் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“கால் கட் பண்ணு ரிது. நான் மொபைல்ல வரேன்…” என்று வைத்துவிட்டு போனை சார்ஜில் போட்டவன் அப்படியே வீடியோ காலில் வந்தான்.
திரையில் அவள் அப்படி முகம் சிவந்துவிட்டிருந்தது. திருமணத்தன்று கூட அவள் விழிகளில் கண்ணீர் தேங்கி நின்றதை தான் பார்த்திருந்தான்.
அதன் பின் அனைத்திலும் இறுகிய தோற்றம் தான். இப்படி அழுது கரையவில்லை அவள்.
ஆனால் இன்று இந்த முகம் அவனை இன்னுமே பாதித்தது. அருகில் இருந்திருக்க வேண்டும் என உடலும் மனமும் பரபரக்க முகத்தை திருப்பினான் அவளை பார்க்க முடியாமல்.
“என்னவோன்னு பயந்துட்டேன். கால் எடுக்கலை. வாட்ச்மேன் நம்பர் ரீச்சாகலை. என்னால வேற எப்படி காண்டேக்ட் பண்ண?…” என்றவள்,
“ஒன்னும் இல்லை தானே?…” என்றாள்.
அவளின் பதட்டம், தேடல், தவிப்பு என அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை விதைக்க இந்த நொடி அவளின் இன்மையை பெரிதாய் வெறுத்தான்.
“எதுக்குடி இன்னும் அழற நீ? ஒன்னுமாகலை. என்னவோ ஞாபகத்துல போனை எடுக்கலை. அதுக்கு அங்க வச்சு இப்படித்தான் அழறதா?…” என்றான் தன் மனதின் ஆவலை தவிர்க்க முடியாமல் அவள் மேல் கோபமாய் திருப்பி.
இந்தளவு எதற்கும் கட்டுப்பட்டு, செயலற்று இருந்ததில்லை. இத்தனை மணி நேரம் அவளின் நினைப்பில் தன்னை மறந்த நிலையில் இருந்திருக்க அதுவே அவனை புரட்டியது.
“போய் முகத்தை கழுவிட்டு வா ரிது. யாராவது பார்த்தா?…” என்றவன்,
“ஹேய் யாருக்கும் சொல்லிட்டியா இப்படி கால் அட்டன் பண்ணலைன்னு?…” என்றான் உடனே.
“ம்ஹூம், நான் ரூம்க்கு வரவும் தான் கால் பண்ணேன். இன்னும் சொல்லலை?…”
“அதெப்படி இவ்வளோ நேரம் கால் எடுக்கலை. ஆனா சொல்லலை? நிஜமாவே எதாச்சும் எனக்கு நடந்திருந்தா?…” வேண்டுமென்றே அவளை சீண்ட அதுவரை கண்ணீரில் கரைந்தவள் அவனின் கேள்வியில் அதிர்ந்தாள்.
“என்ன பார்க்கற? அவ்வளோ அசால்ட்டா?…” என்று கிண்டலாய் கேட்டான்.
“உங்களுக்கு ஒண்ணுமில்லை. நல்லா தான் இருக்கீங்க….”
“அதனால?…” என்றதும் படக்கென்று காலை கட் செய்துவிட்டாள்.
அவளின் கோபத்தில் சிரிப்பு வந்தாலும் மனதிற்குள் சொல்லொண்ணா உணர்வு ஆர்ப்பரித்தது.
உடனே அவளுக்கு மீண்டும் அழைத்துவிட்டான் ஆத்மா. எடுக்கும் வரை விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க சளைக்கவில்லை.
“போனை வச்சிட்டு போய் தூங்குங்க. மார்னிங் ப்ளைட்…” என மெசேஜ் அனுப்பி வைத்தாள் அவன் மனைவி.
“ஏன் எனக்கு தெரியாதா?…” என பதிலளிக்காமல் சத்தமாய் சொல்லிக்கொண்டான் அவளுக்கு அழைத்துக்கொண்டே.
விடமாட்டான் என்று தெரிந்ததும் தான் போனை எடுத்தாள் ரிதுபர்ணா. எடுத்தவள் ஒன்றும் சொல்லாமல் பார்க்க,
“பேஸ் வாஷ் பண்ணியாச்சா?…” என்றான்.
முகத்தை கழுவிவிட்டு வந்திருக்க இன்னும் துடைக்க கூட இல்லை. நீர் துளிகள் தாடைக்கு வந்து அங்கிருந்து வழிந்து சிந்திக்கொண்டிருந்தது.
“போய் தூங்குங்க….” என்றாள் அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல்.
“இல்லை நீ சொல்லு…”
“என்ன சொல்லனும்?…”
“எனக்கு ஏன் கால் பண்ணின?…”
“தூங்கிட்டீங்களான்னு கேட்க தான். நீங்க எடுக்கவே இல்ல. அதான் பயந்துட்டேன். இப்ப தோணுது யாருக்கும் சொல்லாதது நல்லதுன்னு…” உர்ரென்று அவள் சொல்ல அதனை ரசித்து பார்த்தான்.
“புடவை மாத்தலையா நீ? இன்னும் சேரியோடவே இருக்க?…” என்றவன் பார்வை அவளில் அங்குமிங்குமாய் ஊர்ந்து செல்ல மொபைலை முகத்துக்கு நேராய் தூக்கி பிடித்தாள்.
“மூணு நாள், இங்க வந்திடுவ…” இதழ் ஓரத்தில் ஒரு புன்னகை ஆத்மாவிடம்.
“ஆமா, இப்ப வைக்கட்டுமா?…” போனை துண்டிப்பதிலேயே தான் குறியாய் இருந்தாள்.
அவன் பேசியது ஒருபுறம் கோபம் என்றாலும், மறுநாள் வேலை இருக்கிறதே? அதையும் யோசித்து சொல்ல,
“இப்ப எதுக்கு கால் கட் பன்றேன்னு சொல்ற? அத்தனை மிஸ்ட் கால்ஸ். ஒன்னொண்ணுக்கும் ஒரு நிமிஷம் பேசினாலும் விடியற வரை கூட பேசலாம்…” என்று சொல்ல விழிகள் விரிந்தது ரிதுபர்ணாவிற்கு.
“இதுல நீ லேண்ட் லைன்க்கு எத்தனைதடவை கூப்பிட்டன்னு ட்ரூகாலரை செக் பண்ணா தெரியும். அத்தனைக்கும் திரும்ப நான் கூப்பிட வேண்டாமா?…” என்று சொல்ல,
“போதும். நீங்க தூங்குங்க. வைக்கட்டுமா?…”
“கால் கட் பண்ண போறியா?…”
“ஆமா…”
“ஓகே, நான் சித்தப்பா நம்பருக்கு கூப்பிட்டு உனக்கு தர சொல்றேன். இல்லை முரளிக்கு கூப்பிடறேன்…” என்று சொல்ல தலை சுற்றியது அவனின் அலும்பில்.
“என்ன இது பிடிவாதம்?…” என்றாள் ரிது.
“ப்ச், தெரியலை…” என்று படுக்கையில் சாய்ந்தவன்,
“ரிது, தூங்க போறியா?…” என்ற கேள்வியில் அவனை பார்த்தாள்.
வாயை திறந்து சொல்லவில்லை. ஆனால் முகத்தில் ஒரு சோர்வு. தானிருந்தவரை இப்படி அவனை பார்த்ததில்லை.
“என்னாச்சு? தனியா இருக்க கஷ்டமா இருக்கா?…” கேட்கவே கூடாதென்று இருந்ததை அடக்கமாட்டாமல் கேட்டுவிட்டாள்.
புத்தி தடுக்க தடுக்க மனது முந்திக்கொண்டு இதழ்களின் மொழி வழியாய் வார்த்தை முத்துக்களை கொத்து சரமாய் கோர்த்து அவனிடம் மாலையாய் அணிவித்துவிட்டது.
“ஹ்ம்ம், ரிது…” என்றவன் குரல் அழுத்தமாய் அவளை தொட இருவரிடத்திலும் அசாத்திய மௌனம்.
கண்ணை மூடி அவனும், அவனை பார்த்தபடி அவளும் என்று சில நிமிடங்களை கடத்தினார்கள்.
உறக்கம் தொலைந்து போக உள்ளம் தொலைந்த உலகத்தில் இருவரும் மட்டும் தனியாய் ஒரு ஊர்வலம்.
இதயத்தால் கை கோர்த்து, மனக்கண்ணில் விம்பங்கள் உலா வர அவரவர் அருகாமையில் இணையின் கையில் இணைந்ததை போலொரு பிரம்மை.
ரசித்து சிரித்தாலும் மனது நிழலாய் ருசித்ததை நினைவுகள் நிஜமாய் அரங்கேற்ற ஏக்கம் கொண்டனர்.
தனியாய் இருக்க கஷ்டமாய் இருக்கிறதா என கேட்டவளுக்கு நானில்லாது தான் அந்த கஷ்டமா என கேட்க வந்ததை முன்னெச்சரிக்கையாய் முற்றுபெற விடாமல் சுதாரித்துவிட்டாள்.
நாணம் தடுக்க, வார்த்தைகள் தயங்க அவனை பார்த்திருந்த விழிகள் இப்போது வேறு திசைக்கு திரும்ப அவன் அவளை பார்த்தான்.
“குட்மார்னிங் ரிது…” என சிரித்துக்கொண்டே சொல்ல,
“ஹாங், இப்பவா?…” என்று அவனிடம் கவனத்தை திருப்பினாள்.
“ஹ்ம்ம், இப்ப டைம் என்னன்னு பாரு. ரெண்டு மணியை க்ராஸ் பண்ணிருச்சு…” என்றான்.