“தூக்கம் வரலை சித்தி, இருக்கட்டும். காலையில அவர் சொன்னவர் வந்திடுவாராம் சித்தி…”
“துணைக்கு நானும் வரட்டுமா கண்ணு?…” என்றவர்,
“ஆனா இத முன்னகூடியே நீ செஞ்சிருக்கலாம். உன் மாமாவுக்கு எம்புட்டு சங்கடமா இருக்கும். நாம சொன்னப்ப கேட்டுச்சா இந்த புள்ளைன்னு…”
“இப்பவும் நான் வேண்டாம்ன்னு தான் சொன்னேன் சித்தி. ஆனா அவங்க கேட்கலை…”
“அதெப்படி கேட்பாங்க? அங்கருந்து நீ மாசாமாசம் வரமுடியுமா? இல்லை வந்து வாடகை வசூல் பண்ண கடை கடையா ஏறி இறங்கினா நல்லா தான் இருக்குமா? யோசித்தா…”
“இதை தான் இத்தனை வருஷம் பண்ணேன்? என்னவோ புதுசா பன்ற மாதிரி…” என்று சொல்ல முருகேஸ்வரி கவனம் இங்கே இல்லை.
“என்ன சித்தி?…” என்று அவள் அவரின் தொடையில் தட்ட,
“உன் மாமியார் இங்க உன்னையே பார்க்குறாங்க கண்ணு…” என்றார்.
சட்டென ரிதுபர்ணா திரும்பி பார்க்கவும் வேகமாய் முகத்தை திருப்பிக்கொண்டவர் நடந்துகொண்டிருந்தார்.
காலையிலேயே ஆனந்தி நடை பயிற்சியில் இருக்க வீட்டு வாசலில் ராணி கோலமிட்டுக்கொண்டிருக்க இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தவரின் பார்வை மொத்தமும் ரிதுவிடம் தான்.
“போய் என்னன்னு ஒரு வார்த்தை பேசேன். அவங்க நீ வந்து பேசனும்னு நினைக்காங்களோ என்னமோ?…” முருகேஸ்வரி சொல்ல,
“நான் பேசி அவங்க பேச வேண்டாம் சித்தி. இருக்கட்டும்…” மறுத்துவிட்டாள் ரிதுபர்ணா.
“யாராச்சும் ஒருத்தர் இறங்கி தான் போகனும் கண்ணு. இது குடும்பம். ஆளுக்கொரு திசையில திரும்பிட்டு நின்னா குடும்பமாவா இருக்கும். அதுவும் உன் வீட்டுக்காரர் தான் ஒட்டுதலே இல்லாம இருந்துட்டார். நீ தான இழுத்து பிடிக்கனும். நீ அதுக்கு மேல தள்ளி நிக்கிற?…”
முருகேஸ்வரி இப்படியாவது ஆனந்தியிடம் ஒரு வார்த்தை பேசிவிடமாட்டாளா என்று பேச,
“தள்ளி நின்னா தான் இந்த நிம்மதி சித்தி. வேண்டாம். நான் இருக்கற இடத்துல இருந்துக்கறேன்…” என்றதும் அண்ணாமலையின் பேச்சை வைத்து சொல்வது புரிந்தது.
“அவரை பார்ப்பேனே?…” என சிரிப்போடு பேச்சை திசை மாற்ற,
“என்ன கண்ணு?…” என்றார் பரிதாபமாய்.
“நீங்க சொல்லவும் தான் ஞாபகமே வருது சித்தி. போன் பண்ணினாங்களான்னு பார்க்கனும். உள்ள வாங்க…” என்று எழுந்து உள்ளே சென்றுவிட முருகேஸ்வரி ஆனந்தியை பார்த்தார்.
லேசாய் விடிய துவங்கியிருக்க அதுவரை மருமகளை பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்த ஆனந்தி முருகேஸ்வரியை பார்த்ததுமே வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்.
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் முருகேஸ்வரியும் வீட்டிற்குள் எழுந்து சென்றுவிட்டார்.
“அங்க போட்டோ எடுத்தாங்களா?…” என்று கேட்க முருகேஸ்வரி அவளை விநோதமாய் பார்த்தார்.
“சண்டைய யாராச்சும் போட்டோ புடிப்பாங்களா கண்ணு?…” என்று சிரிக்க,
“சித்தி, நான் அதை கேட்கலை. அவங்களுக்கு எல்லாம் பணத்தை குடுத்தோம் தானே? எடுத்த வரைக்கும் போட்டோவை குடுத்தாங்களா?….” என்று கேட்க,
“இல்லையே கண்ணு. அவனுக்கு காச செட்டில் பண்ணினது உன் சின்ன மாமா தான். ஆனா ஆல்பத்தை கேட்க தோணவே இல்லை பாரேன்…” என சொல்லும் பொழுதே விசாலாட்சி வந்துவிட்டார்.
“என்ன சமையல் நடக்குது?…” என்று கேட்டுக்கொண்டே கையில் பாத்திரத்துடன் வந்தார்.
“இத புடி, கையெல்லாம் கொதிக்கிது…” என ரிதுவிடம் தர வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்தாள்.
“எல்லாம் இவ கல்யாணத்துல எடுத்த போட்டோக்காரன பத்திதான் பேசிட்டிருந்தோம் க்கா. இவ சொல்லலைன்னா எனக்கும் தோணிருக்கவே செய்யாது…” என முருகேஸ்வரி அவரிடம் விஷயத்தை சொல்ல,
“ரொம்ப நல்லா இருக்கு. காசு குடுத்த நமக்கு தான் நம்ம பொருளை வாங்கனும்னு நினைப்பு இருக்கனும். நமக்கு இங்க பல வேலை மாதிரி அவனும் மறந்திருக்கலாம்ல. இப்படியா ரெண்டுபேரும் சண்டைக்கு கிளம்புவீங்க?…” என்றாள் ரிது.
“அதை நாங்க பார்த்துக்கறோம். இந்த பாத்திரத்துல இடியாப்பமும், தேங்காய் பாலும் இருக்கு. நீயும் வித்யாவும் வச்சு சாப்பிடுங்க…” என்றார் அவர்.
“ஹை இடியாப்பமா?…” என ரிது அதனை திறக்க வித்யாவும் வந்துவிட்டாள்.
“போதுமே, இடியாப்பம்ன்னா இவளுக்கு ரெண்டு வயிறு இருக்கும்…” முருகேஸ்வரி மகளின் தலையில் இரண்டு கொட்டு கொட்ட,
“வளர்ற பிள்ளையை தலையில அடிக்காதன்னு எத்தனைவாட்டி சொல்ல?…” என்று அவரை அதட்டினார் விசாலாட்சி.
ரிதுவும், வித்யாவும் அதனை கண்டுகொள்ளவே இல்லை. இருவருக்கும் இரண்டு பிளேட்டை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்துவிட்டனர்.
“கம்மியா ஊத்து முருகேஸு. உனக்கும் சேர்த்து தான் கொண்டுவந்திருக்கேன்…” என்ற விசாலாட்சி,
“இன்னைக்கு குடோன்ல சரக்கு வந்து இறங்குதுன்னு பெரியண்ணன் ராத்திரியே சொல்லிட்டார். அதுக்கு போகனுமின்னு அவரு வெள்ளனவே கிளம்பிட்டார். அதான் புள்ளைங்களுக்கு புடிக்குமேன்னு இடியாப்பத்தை செய்ய சொல்லி அவரும் நேரமே சாப்பிட்டு கொஞ்சம் கொண்டுட்டும் போய்ட்டார்…”
“பரத் கிளம்பிட்டானா?…”
“எங்க? இன்னும் எழுந்துக்கலை. அவனுக்கு பிழிஞ்சு எடுத்து வச்சிட்டேன்….” என்று அங்கே அமர்ந்துகொண்டார்.
சற்று நேரத்தில் வித்யா கல்லூரிக்கு கிளம்பிவிட ரிதுபர்ணாவை தேடி இளவரசுவுடன் நடுத்தர வயதிருக்கும் ஒருவர் வந்தார்.
“கிளம்புவோமா ரிது?…” என்று இளவரசு கேட்க,
“மாமா நீங்களுமா?…” என தயங்கினாள்.
அவளின் பார்வை தன்னை போல இளவரசு வீட்டை பார்த்துவிட்டு அவரை பார்க்க,
“நானே அழைச்சிட்டு போய் சொல்லிடுவேன். ஆனா நீ அறிமுகப்படுத்தறது தான் சரியா இருக்கும்…” என்றார்.
மறுக்கமுடியவில்லை அவளால். ‘இதை என்னை செய்யவிட்டுத்தான் ஆகவேண்டும்’ என்று இளவரசு பிடிவாதமாய் நின்றுகொண்டார்.
அதன் பின்னர் மூவருமாய் வாடகைக்கு விட்டிருந்த காம்ப்ளெக்ஸ், மற்ற கடைகள் என்று ஒவ்வொன்றிற்கும் சென்று புதிய நபரை அறிமுகப்படுத்திவிட்டு பேசிவிட்டு வீடு வந்து சேர மூன்று மணியாகியிருந்தது.
இடையில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று ரிது அழைக்க ஒரேதாக முடித்துவிட்டே செல்வோம் என்றுவிட்டார் இளவரசு.
மூன்று மணி வரை ஆத்மாவிடமும் அழைப்பில்லை. ஹார்பர் வந்துவிட்டேன் என ஒரு செய்தி.
ஆனால் ரிது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை அவனுக்கு செய்தி அனுப்பியிருக்க அவ்வப்போது பார்த்தவன் சரி என்னும் விதமாய் கையின் குறியீட்டை மட்டும் அனுப்பியிருந்தான்.
அவளின் செய்திகளுக்கு அவனிடமிருந்து பதில் வர வர அதுவே நிம்மதியாக இருந்தது.
என்னவோ மனதிற்குள் ஒரு அலைகழிப்பு முதல்நாள் இரவு அவனை தொடர்புகொள்ள முடியாததிலிருந்து.
அழைத்து பேசிவிட்டாலும், இப்போது பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளுணர்வில் ஒரு எச்சரிக்கை.
மனதை முயன்று திசை திருப்பினாள். வித்யாவுடன் நேரங்கள் இனிமையாய் கழிந்தது.
செண்பகம் வீட்டிற்கு அழைத்து எப்போதும் போலவே அவளை நல்லவிதமாய் உபசரித்தார்.
முரளி வந்துவிட்டால் அவனுடன் பேச்சுக்கள், இளவரசுவுடன் நேரம் சென்றது என அன்றைய நாள் முழுதாய் கடந்தேவிட்டது.
இரவு நேரம் ஆத்மாவிற்கு அழைக்க அவனால் பேசமுடியவில்லை. உடலில் ஒரு அசதி உறக்கமின்மையால்.
அன்று முழுவதும் ஹார்பரில் கஸ்டம்ஸில் தேங்கி நின்ற தங்கள் சரக்கு கண்டெயினர் பற்றிய விவாதங்களும், அதன் கிளியரன்ஸ் சம்பந்தமான பேச்சுக்களும் என்று அத்தனை டென்ஷன்.
அவ்வப்போது நிகழ்வது தான். இந்த முறை இன்னுமே கூடுதல் எரிச்சலை தந்தது.
அங்கேயே அறை எடுத்து தங்கியிருந்தவன் மறுநாள் தான் கிளம்புவதாக இருந்தது.
“நாளைக்கு கிளம்பிட்டு பேசறேன் ரிது. இப்ப எனக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்…” என்று சொல்லியிருந்தான்.
மறுநாள் அவன் வந்த பிறகு கிளம்பிவிடலாம் என்றிருக்க விசாலாட்சியின் மகள் சுந்தரி வருவதாய் சொல்லி பயணத்தை அடுத்த நாள் ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ள ஒன்றும் செய்யமுடியவில்லை.
இதில் ஆனந்தி அடுத்ததை துவங்கி வைத்தார். அவரின் பேச்சில் விசாலாட்சியும் சரி என்று சொல்லிவிட்டார்.
ரிதுவின் பயணம் மேலும் ஓரிருநாள் தள்ளி வைக்கப்பட ஆத்மாவே வந்துவிட்டான் மனைவியை தேடி.