நிஜம் – 1
இரவு பத்துமணி. வெளியே மழை அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்தது. இன்னும் வலுக்காமல் மெல்லிய தூறலாய் பூமியை குளிர்வித்துக்கொண்டிருந்தது.
அந்த காவல் நிலையத்தில் இரவு பணிக்கான காவலர்கள் மட்டும் இருக்க கம்பிகளுக்கு உள்ளே ஒரு அலறல் குரல்.
“இன்பமாய் இருக்கிறதைய்யா…” என அழுக்கு உடையில் அழுதுகொண்டே அவன் சொல்ல,
“சொல்லு இன்னும் சத்தமா. சொல்லுடா…” என கவிழ்ந்து படுத்திருந்த அவனின் புறங்ககைகளில் லத்தியால் அடிக்க அடிக்க வலியில் துடித்தான்.
“என்னடா கேப் விட்டுட்ட? சொல்லு…” என காவல் துறை அதிகாரி உறும,
“இன்பமாய் இருக்கிறதைய்யா…” என்று கண்ணீருடன் சத்தமாய் அவன் சொல்ல அதை ஒரு ஏளனமான புன்னகையுடன் பார்த்தவன்,
“இருக்கும்டா இருக்கும். ஏன் இருக்காது? இருக்க வீடு இல்லாதவங்க ஏதோ ரோட்ல கடையை போட்டு அந்த வருமானத்தில வயித்தை நிரப்பிட்டு பொழைப்பை ஓட்டிட்டு இருந்தாங்கன்னா நீ அவங்க அடி மடியிலையே கையை வைக்கறையா? இனி இந்த கை யார்ட்டையாச்சும் திருடுமா? யாரையாச்சும் தொடுமா?…” என சொல்லி சொல்லி அவனை லாடம் கட்டி தொங்கவிட்டான். அவனின் மொபைலுக்கு கால்.
“ஸார் போன் உங்களுக்குத்தான்…” என கான்ஸ்டபிள் வந்து மொபலை எடுத்து நீட்ட,
“அங்கயே வைங்க. வந்து பேசறேன்…” என சொல்லியவன் மீண்டும் அந்த திருடனை பார்த்து,
“ராத்திரி முழுக்க நீ தூங்கவே கூடாது. மவனே கண்ணை லேசா மூடு, மொத்தமா உன்னை மூடிடறேன்…” என்று நாக்கை மடித்து ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவன் தனது கையை தேய்த்துவிட்டபடி வெளியே வந்தான்.
“சாமிப்புள்ள, அவனை போய் கவனிங்க. இப்ப கையை விடுங்க. கால்ல போடுங்க…” என்று உத்தரவிட்டுவிட்டு வெளியே வந்து தனது மொபைலை எடுத்தான். அவனின் தாய் தான் அழைத்திருந்தார். இவன் வருவதற்குள் அழைப்பு நின்றிருந்தது.
அன்புக்கரசி. வீட்டை, மொத்த குடும்பத்தை, உறவுகளை அன்பால் கட்டி அரசாலும் அன்புக்கரசி கணவர் முத்துவேல் மட்டும் அதில் விதிவிலக்கு.
எதற்கு அழைத்திருப்பார் என்று தெள்ளதெளிவாக தெரிந்தாலும் வார்த்தையால் அறிந்துகொள்ள அவனே மீண்டும் அழைத்தான். அவர் அந்த பக்கம் எடுத்ததும்,
“சொல்லுங்கம்மா…” என கேட்டவனின் குரலே அவருக்கு சற்று தயக்கத்தை கொடுத்தது.
“அப்பாக்கிட்ட கேட்டேன் தம்பி, உன்னை வரவேண்டாம்னு சொல்லிட்டார்…” என மெதுவாய் சொல்ல,
“இது நான் எதிர் பார்த்தது தான். வேணும்னே செய்வார்…” என்று கோபமாய் அவன் சொல்ல அதற்கே பயந்து போனார் அன்பு.
“இல்ல தம்பி. நம்மள்ள மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க கூட்டிட்டு போறது வழமை இல்லைன்னு…”
“பின்ன உங்களை பார்க்க மட்டும் அவர் வந்தாராமா? அப்ப இருந்த வழமை இப்ப இல்லையோ?…” என்று நக்கலாய் அவன் பேச மௌனமாக இருந்தவர்,
“இதை சொல்லத்தான் இந்நேரம் தூங்காம கால் பண்ணுனீங்களாக்கும்?…”
“ப்ச், நீதான சொல்ல சொன்ன? இப்ப ஏன் கால் பண்ணுனன்னு கேட்கற. அப்பாக்கிட்ட சொல்லி பார்த்துட்டேன். கல்யாணத்துல பார்த்துக்கலாம்னு சொல்லிட்டார். நான் என்ன பண்ண?…” என அவருக்கும் கோவம் வந்தது.
[the_ad id=”6605″]
தந்தை மகன் இருவரும் ஒரு குணம். போட்டு படுத்துவது மற்றவர்களை. அதில் அதிகமாய் காயப்படுவது அன்புக்கரசி தான். மகனிடம் கூட இரண்டொரு வார்த்தை கூட பேசிவிட முடியும். கணவரிடம் சுத்தம்.
“ஏன்மா கல்யாணம் எனக்கு தான? வேண்டாம்னு சொன்னாலும் கட்டி வைப்பேன்னு ஒத்தை கால்ல நிக்கறாரு. நீங்களும் சேர்ந்து தான். சரி போய் தொலையுதுன்னு கட்டிக்கறேன்னு சொன்னா நான் பார்க்க கூடாதுன்னு சொல்றீங்க. என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பன்றீங்க?…” என்று கோபத்தில் கத்த,
“நான் என்ன பண்ண?…”
“நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். எப்ப பார்த்தாலும் ஒரே டயலாக்கை சொல்லிட்டு. கல்யாணத்தன்னைக்கு பொண்ணு யாருன்னு தெரியாம மூஞ்சியை பார்க்காம வேற எவ கழுத்திலையாச்சும் தாலியை கட்டிடறேன். அப்ப தெரியும்…”
“வாசு…” அன்புக்கரசி அலற அவன் இன்னும் கோபத்தை விடாமல் இழுத்துப்பிடித்துக்கொண்டிருந்தான்.
அவன் வாசுதேவகிருஷ்ணன். சென்னை மாநகரத்தின் காவல்த்துறை உதவி கண்காணிப்பாளர். ASP லா அன்ட் ஆடர். மிகவும் கடினமானவன். முரட்டுத்தனமும் கோபமும் அவனின் தந்தையை விட அதிகமாய் வரும்.
“யார் கண்டா வேண்டா வெறுப்பா கட்டி வச்சுட்டு பொண்டாட்டியை கூட அவர் மேல இருக்க கோபத்துல கடிச்சுடுவேன்னு என்னோட அனுப்பாம உங்க கண்ணு முன்னாடி வச்சுக்கிட்டாலும் வச்சுப்பார் உங்க புருஷன்…” என்று வேறு கிண்டலாய் சொல்ல,
“நான் என்னப்பா…”
“ப்ச், சும்மா இருங்கம்மா. இதை கேட்டு கேட்டு கடுப்பாகுது எனக்கு. ஜாதகம்ன்ற ஒன்னை கட்டிட்டு என்னை இப்படி படுத்தாம இருக்கலாம். அதை பண்ண முடியுமா உங்களால?…” என்று எரிந்து விழுந்தவனின் ஆற்றாமை தாய்க்கு புரியாமல் இல்லை.
“நினைச்சு நினைச்சு என் வாழ்க்கையில் விளையாடறீங்க. மொத்தமா சேர்த்து வச்சுக்கறேன் உங்களுக்கு. ஊரே என்னை பார்த்த பயப்படுது. உங்க புருஷன் வந்து பாருன்னு நிக்கறாரு. லா அன்ட் ஆடர் எல்லாருக்கும் செல்லும்மா…” என்று சொல்லியவனின் பேச்சை தாயாய் அவர் ரசிக்கவில்லை.
“உன்னோட கோபம் புரியுது தான். அதுக்காக இப்படி பேசறது எல்லாம் ரொம்ப தப்பு வாசு. நல்லா இல்லை…” என முறுக்கிக்கொண்டு அவர் சொல்லவும் அவனின் இதழ்களில் சின்னஞ்சிறு புன்னகை.
“நான் போனை வைக்கறேன்…” என சொல்ல,
“தட்டை மாத்திட்டு ஒரு மாசத்துல கல்யாணம். நான் வேணும்னா பவியை போட்டோ எடுத்து உனக்கு அனுப்ப சொல்றேன்…” என்றதும் அந்த பெயரிலேயே எரிமலையாய் கொந்தளித்தவன்,
“வாயை மூடுங்க. அவ எதுக்கு அங்க வரா? அவ அங்க போக கூடாது. சொல்லிட்டேன்…” என ஆக்ரோஷமாய் பேச,
“வாசு, தம்பி… அம்மா சொல்றதை…”
“போக கூடாது. அவ்வளோ தான். புரியுதா? நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. அவ அங்க போகவே கூடாது. அவ எதுக்கு வரனும்?…” என கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தவன்,
“அம்மா…” என இளகிய குரலில் வருத்தமாய் அழைக்க,
“நீ கோச்சுக்கிட்டாலும் இதுதான் வாசு. நான் என்ன செய்ய முடியும்? பார்க்கறேன். உனக்காக இதையாச்சும் செய்ய பார்க்கறேன். ஆனா இதை பத்தி அந்த மனுசனுக்கு தெரியாமத்தான் செய்யனும்…” என்று சொல்லியவர் மனதில் அழுத்திய பாரத்துடன் போனை வைத்துவிட தாயின் கவலையும் சேர்ந்து இன்னும் அவனை கோபமாக்கியது.
மொபைலை வைத்துவிட்டு மீண்டும் லாக்கபினுள் நுழைந்தவனை பார்த்த அந்த கைதி,
“இன்பமாய் இருக்கிறதைய்யா…” என்று இவன் சொல்லிக்கொடுத்த டயலாக்கை வாசுவை பார்த்ததும் இன்னும் வேகமாய் அடித்துவிடுவானோ என்று சொல்ல,
[the_ad id=”6605″]
“என்னை பார்த்தா எப்படிடா இருக்கு உனக்கு? இத்தனை அடிச்சுருக்கேன். இன்பமாய் இருக்குன்னு என்கிட்டயே சொல்றன்னா என்ன தைரியம் உனக்கு?…” என்று அவனின் கன்னத்தில் பளார் பளார் என அடித்தவன்,
“சாமி, இவனை அடிச்ச இடத்துல மிளகாய் சாந்தை அள்ளி பூசிவிடுங்க. இன்பம் இன்னும் பெருகட்டும் அய்யாவுக்கு…” என சொல்லி வெளியே வந்தவனின் உஷ்ணம் மட்டும் இன்னும் குறையவே இல்லை.
தந்தையை எண்ணி அவரின் திருவிளையாடலை எண்ணி கை முஷ்டிகள் இருக்க காற்றில் ஓங்கி குத்தியவன் மழை என்றும் பாராமல் வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
“இவர்கள் ஆட்டிப்படைக்கும் பொம்மையா நான்?” என கொதித்தவன் மனது வெடித்து சிதற காத்திருந்தது.
“ஸார் இவரு ஏன் இங்க வந்தாரு?…” என அந்த திருடன் கேட்க,
“எனக்கே தெரியாதுய்யா, திடீர்ன்னு இன்னைக்கு வீட்டுக்கு போகாம ரவுண்ட்ஸ்ன்னு கிளம்பி இங்க வந்துட்டாரு. நீ சிக்கிட்ட. தேவையா உனக்கு. உழைச்சு பொழைக்கிறத விட்டுட்டு அடிச்சு பொழைச்சுட்டு…”
“என்ன சாரே என்னமோ இங்க ஒண்ணுமே நான் குடுக்காத மாதிரித்தேன் பேசுவீங்க…” என்று அந்த திருடன் சொல்ல,
“அடேய் நீ கிழிஞ்சி கந்தலா தொங்கறது பத்தாதா? நாங்களுமா? உரிச்சுடுவாரு. கம்முன்னு இருப்பா. இல்ல நானே உன் வாயில அந்த மிளகாயை பூசிருவேன் பார்த்துக்க…” என மிரட்டிவிட்டு செல்ல அமைதியாக இருந்தான் அந்த திருடன்.
வாசுதேவகிருஷ்ணனை தேடி வெளியே வந்த சாமி அவன் நடந்துகொண்டிருந்ததை கண்டு குடையுடன் அவனிடம் விரைந்தான்.
“ஸார் நனையுறீங்களே?…” என்று பவ்யமாய் சொல்ல,
“நான் கேட்டேனா? போயா வேலையை பார்த்துட்டு…” என தந்தை மேல் இருந்த கோபத்தை சாமியிடம் காண்பிக்க,
“ஸார்…” என தயங்கினார். பின் அவரை பார்த்துவிட்டு,
“ப்ச், போய் ஜீப் எடுத்துட்டு வர சொல்லுங்க. வீட்டுக்கு போகனும்…” என சொல்ல உடனே ஜீப் வந்துவிட ஏறி சென்றுவிட்டான்.
அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. இவன் மட்டுமே தனக்கென ஒரு சிங்கிள் பெட்ரூம் ப்ளாட்டை வாங்கி அதில் தங்கியிருக்கிறான்.
அன்பரசி கூட எத்தனையோ முறை சொல்லிப்பார்த்துவிட்டார். கவர்மெண்டில் குடுக்கும் வீட்டில் சென்று இரு என்று. கேட்கவில்லை.
“ப்ச், வேலையும் அங்கயே பார்த்துட்டு அங்கயே பொங்கி சாப்பிட சொல்றீங்களா? என்னால முடியாது. வேலையை விட்டு வீட்டுக்கு வந்தா புதுசா வேற வேற ஆட்களை பார்க்கனும். பார்த்த மூஞ்சி, அதே காக்கி யூனிபார்ம், சைரன், இதெல்லாம இல்லாம ரிலாக்ஸா இருக்கனும்…”
இப்படி ஒவ்வொன்றிற்கும் அவன் புதுப்புதிதாய் காரணத்தை சொல்ல முத்துவேல் தான் மனைவியிடம் எகிறினார்.
“அடங்கவேமாட்டானா உன் மகன்…” என்று.
“எதுவானலும் அவன்கிட்ட பேசிக்கோங்க…” என நழுவிவிடுவார் பல சமயங்களில். சில நேரம் முத்துவேல் தளர்ந்து போவார், அத்திபூத்தார் போல வாசுதேவகிருஷ்ணன் தளர்ந்து போவான்.
ஆனால் இருவருமே அப்படி அனுசரித்து போவது அன்புக்கரசி என்னும் ஒருவருக்காக மட்டுமே.
லிப்டில் ஐந்தாம் தளத்திற்கு வந்தவன் கதவை திறந்துகொண்டு வீட்டிற்கு உள்ளே வந்தவன் ஷூவை கழட்டி கதவிற்கு பின்னால் இருந்த ஷூ ரேக்கில் வைத்துவிட்டு காக்கி உடையை கழற்றிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான்.
ஒரு ஹால், அதில் மூங்கிலினால் ஆனா சோபா. ஒரு படுக்கை அறை. ஒரு கிட்சன், அதனை ஒட்டி டைனிங் ஏரியா. அங்கே ஒரு பிரெஞ்ச் விண்டோ சற்று பெரிதான பால்கனியுடன். சின்ன ஊஞ்சல். மழை பெய்தால் நிற்கவே முடியாது.
ஹாலின் மூலையில் பூஜைக்கென சின்னதாய் ஒரு கப்போர்ட். அன்பரசி வந்தால் மட்டுமே விளக்கேற்றுவார். மற்றபடி அவர் வரும் வரை அப்படியே தான் இருக்கும்.
குளித்து முடித்து அந்த உடையை மிஷினில் போட்டவன் இரவு உடைக்கு மாறி கிட்சனிற்குள் நுழைந்தான்.
பாத்திரத்தில் நீர் வைத்து காயவிட்டவன் கொதித்ததும் அதில் சிறிது டீத்தூளை போட்டு அன்புக்கரசி அரைத்து கொடுத்திருந்த மல்லி, மிளகு, திப்பிலி, அரத்தை, சுக்கு கலவை போட்டியில் ஒரு கால் ஸ்பூன் சேர்த்து தேவைக்கு சிறிது கருப்பட்டியும் போட்டு வடித்து கப்பில் எடுத்துக்கொண்டு வந்து பால்கனிக்கு வந்தான்.
மழை இன்னும் அடித்து பெய்துகொண்டு இருந்தது. அதனை பார்த்துக்கொண்டே தனது மொபைலில் அந்த பாட்டை ஒலிக்கவிட்டவன் ஒரு சேரை இழுத்துபோட்டு டீயை குடித்தபடி மழையை வேடிக்கை பார்த்தான்.
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
எப்போதும் அவனை கவரும் அந்த வரிகள். விழிகளுக்குள் புலப்படாத ஒரு புள்ளியை அந்த வானத்தில் இலக்கில்லாமல் தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கே தெரியாத ஒரு தேடல் இந்த வரிகளின் தாக்கம் என்றும் போல அவனை அலை சிறையில் அடித்துக்கொண்டு சென்றது.
[the_ad id=”6605″]
விழுப்புரம்….
அப்பொழுதுதான் சூரியதேவன் தன்னை மேகத்தின் போர்வையில் இருந்து மெதுமெதுவாய் சோம்பலுடன் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான்.
வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் பெண். வீட்டிற்குள்ளே ஏதோ சலசலப்பு கேட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் இவள் அமைதியாக கோலமிட,
“விடிஞ்சாலே ஒரே சண்டை. ச்சை, தனியா போங்கன்னு சொன்னலும் கேட்டு தொலைக்கமாட்டேன்னு நிக்கறான். என் தலையெழுத்து…” என எரிச்சலுடன் முணுமுணுத்துக்கொண்டே கையில் வயர்கூடையுடன் வெளியே வந்தார் பூங்கோதை.
மகள் கோலம் போடுவதை பார்த்ததும் அதுவரை இருந்த மனகிலேசம் மறைந்தவராய் புன்னகையுடன் அவளை நெருங்கினார்.
“தலைய ஒனத்திட்டு கோலத்தை போடத்தான லட்சுமி?…” என கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள்,
“இதோ முடிஞ்சதும்மா. நீ எங்க கிளம்பிட்ட? கையில கூடை வேற?…” என்று கேட்டு கோலத்தை முடித்தவள்,
“அண்ணி தான் மாப்பிள்ளை வீட்டுல இருந்து வராங்க. ரங்கோலி போடுன்னு சொன்னாங்க. அதான் போட்டுட்டு இருக்கேன். நல்லா இருக்கா?…” என கேட்டு கோலத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க அவளை தன் பக்கம் திருப்பி கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்,
“அம்சமா இருக்குடி அம்மா. இந்த ஊருல எம்பொண்ண மிஞ்சி எவ இப்படி ஒரு கோலத்தை போடுவாளாம்?…” என்று பெருமையாய் சொல்லியவர்,
“லட்சுமி வடைக்கு உளுந்து ஊற வச்சிருக்கேன். போயி அதை அரைச்சு வைய்யித்தா. ரவை பாக்கெட் கால் கிலோதான் இருக்கு. அதுவும் மொக்கை மொக்கையா வாங்கிட்டு வந்திருக்காரு உங்க ஐயா. நான் போயி மூக்கன் கடையில நைஸ் ரவை வாங்கிட்டு வரேன்…”