நிஜம் – 10
முத்துவேல் இல்லமே பெருந்திரளுடன் இவர்களுக்காக காத்திருந்தது. இருபக்க சொந்தங்களும், சுற்றங்களும், நண்பர்களும் என காத்திருக்க வீட்டிற்கு சென்றதும் முதலில் ஆரத்தி சுற்றி வரவேற்று மருமகளை விளக்கேற்ற வைத்த பின்பு தான் நிம்மதியானார் அன்புக்கரசி.
ஏற்கனவே மணமக்கள் வருவதற்கு தாமதமானதால் முத்துவேல் கோபத்துடன் இருந்தார். “அடிக்கடி எங்கே வருகிறாய்?” என்று நொடிக்கொருதரம் கால் செய்ததற்கு மொத்தமாக மொபைலை அணைத்து விட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
வீட்டிற்கு வந்ததும் கூட்டத்தினரின் முன்பு எந்த பேச்சும் பேசிவிடாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டு நின்றார் முத்துவேல்.
“ஏன்டா போனை ஆஃப் பண்ணின?…” என மருதவேல் கேட்க,
“உனக்கு நான் பதில் சொல்லவா? இல்லை ரோட்டை பார்த்து வண்டி ஓட்டவா? நீங்க கூப்பிட்டதுக்கெல்லாம் பதில் சொல்லியிருந்தா நாளைக்கு தான் வந்து சேர்ந்திருப்பேன். பரவாயில்லையா?…” என கேட்க,
“நீ செஞ்சாலும் செய்வடா. போ போயி எல்லாரையும் பாரு…” என்று வந்தவர்களை கவனிக்க நகர்ந்துவிட்டான் மருதவேல்.
வாசுதேவகிருஷ்ணன் எங்கே நின்றாலும் அவனை முத்துவேல் முறைப்புடன் பார்த்துக்கொண்டே இருக்க அவரை பார்த்தும் பாராதது போல வந்திருந்தவர்களிடம் மகன் அளவளாவ, அபூர்வா தன் குடும்பத்தினரிடம் ஐக்கியமாகிப்போனாள் அறிமுகப்படலத்திற்கு பின். தாமோதரன் இன்னும் வராமல் இருக்க அவருக்காக காத்திருந்தனர்.
அன்புக்கரசி விமலாவிற்கு கண்ணை காட்ட அபூர்வாவை தனியே அழைத்து சென்றவள் மகிழையும் கூட்டிக்கொண்டாள்.
“லட்சுமி எல்லாம் ஓகே தானே?…” என கேட்டதற்கு ஒரு சிரிப்புடன் அபூர்வா பதில் பேசாமல் அமைதியாக நிற்க,
“அதான் சொல்லாம சொல்லிட்டாளே. இனி நமக்கு வேலை இல்லை. நாமதான் ரொம்ப நடுங்கி போய்ட்டாளேன்னு பயந்துட்டு இருந்தோம்…” என்று விமலா சொல்ல,
“ஆமாமா, இனி நம்மளை ஏன் தேட போறா?…” என்ற மகிழ்,
“ஏன் லட்சுமி, இன்னைக்கு வேணும்னா எங்களோட விழுப்புரம் வாயேன். மறுவிருந்துக்கு அண்ணன் வரப்போ உன்னை கூட்டிட்டு போகட்டும்…” என்று கேலி பேச அந்நேரம் அங்கே வந்த பூங்கோதை,
“ஏட்டி இவளே, கொஞ்சமாச்சும் அறிவிருக்கா, அச்சாணியமா பேசுற. வாழ ஆரம்பிச்சு ஒத்த நாளுல கூட்டிட்டு போறேன்னு. உன்னைய எல்லாம் என் பையன் வச்சிக்கிட்டு என்னத்த காலத்த தள்ள போறானோ? ஓர் போயி சேரவும் மொத நீயும் என் புள்ளையும் தனியா போயிருங்க ஆமா…” என்று எகிறிவிட்டு,
“லட்சுமி, உன் மாமியார் கூப்பிடுறாங்க…” என்று மகளை அழைத்துக்கொண்டு சென்றார். அவருக்கு பயம் திருமணம் முடிந்ததில் இருந்து நடந்த நிகழ்வுகளால்.
“எம்புட்டு கோவம் இருக்கட்டும் என் மாமியாருக்கு அவங்க புள்ளையை என் புருஷன்னு சொல்ல வாய் வராது. ஒரு நாளாச்சும் உன் புருஷன் அப்படின்னு மறந்தும் சொல்லிட மாட்டாங்க. வார்த்தைக்கு வார்த்தை என் புள்ளை என் புள்ளைன்னு தாங்கி தடுக்குவாங்க…” என்று சொல்லி கேலி பேச,
“பெத்தவ நானு. அப்புறம் சொல்லமாட்டேன். வீட்டுக்கு வா குமட்டுல நாலு இடிக்கிறேன்…” என்று மீண்டும் அவர் வந்து நிற்க,
“இப்ப என்னத்துக்கு என்னையே சுத்தி சுத்தி வரீங்க?…” என்று கேட்டுவிட்டாள் மகிழ்.
“நேரம்டி. எங்கிட்டு போனாலும் அந்த மனுஷன் வந்து நிக்கறாரு. நானும் அடுப்படில போயி நின்னா அவுங்க அம்மாக்கிட்ட பேச வராரு. சரின்னு வெளில போயி நின்னா போனு பேசிக்கிட்டு வராரு. ஹால்ல நின்னா அங்கயும் வந்து நிக்கறாரு. அதான் அங்கிட்டும் இங்கிட்டும் அல்லாட்டிட்டு இருக்கேன்…”
பூங்கோதை கையை ஆட்டி ஆட்டி சொல்லிய விதத்தில் விமலாவும், மகிழ்தினியும் சிரிக்க,
“என் பொழப்பு நீ சிரிக்கமட்டும் இருக்கு பாரேன். என் கிரகம்…” என்று அதற்கும் நொந்துகொள்ள,
“எதுக்கு அங்கயும் இங்கயும் சுத்திக்கிட்டு. பேசாம இங்கயே இருங்கம்மா…” என விமலா சொல்ல,
“அதெதுக்கு அம்மாடி, சனங்க வாரவுகள வாங்கன்னு கேட்கனுமில்ல. இல்லைன்னா மரியாத கொறவா போயிடும். அதை வேற என் காலம் கழியற வரைக்கும் பாடி தீர்ப்பாளுங்க. அதுக்குத்தான். நீங்க குமரிக. உங்களுக்கு நான் சரிக்கு சரி பேச ஆவுமா?…” என்று பெருமூச்சு விட,
“ம்க்கும், பேச தெரியாமத்தான். ஊருப்பட்ட பிள்ளைகளுக்கு பாடம் நடத்தற அளவுக்கு உங்களுக்கு தெரியும்னு எங்களுக்கு தெரியும்…” என்று மகிழ் இடக்காய் பேசவும் நியாபகம் வந்தவராக,
“இந்த இவளே இங்க வா…” என்று அவளின் காதில் எதையோ கேட்க மகிழ்தினிக்கும் அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக யோசனையானாள்.
“ஆத்தே இதை நான் மறந்தே போய்ட்டேன்…” என பூங்கோதை நெஞ்சில் கை வைத்து சொல்ல,
“இது எப்படி? நிசமா இருக்குமா?…” என லேசாய் உணர்ச்சிவயப்பட்ட குரலில் கேட்க,
“அட இருக்கும்த்தா. நீ செத்த ஆடாம ஓடாம இங்கயே இரு. நான் என் மகனை அனுப்பறேன். என்ன செய்யனுமின்னு யோசிங்க…” என்றவரின் முகமே அத்தனை பிரகாசமாய் ஒளிர்ந்தது.
“ஆமா, நீங்க ரெண்டு பேரும் இப்ப தமிழ் தான பேசினீங்க?…” என்று விமலா கேட்க அவளின் கேள்வியில் சிரித்தபடி,
“நாள் தள்ளி போயிருக்கு விமலாக்கா. அதான் அத்தைக்கு தலைகால் புரியலை…” என்று சிரிக்க,
“ஏன் இப்பதான் தெரியுமா?…”
“ஹ்ம்ம்ம், ஆமா கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா எதிர்பார்த்து இப்ப சில மாசமா நினைக்கறதே இல்லை. பதினைஞ்சு நாள் ஆகி போச்சு. லட்சுமி கல்யாணம்ன்றதால சுத்தமா மறந்துட்டோம்….” என்றவள்,
“ஒரு தடவை கூட என் மாமியார் சொல்லி காண்பிச்சதில்லை தெரியுமா? எங்களை தனியா போக சொல்றது கூட எங்களுக்கா தான். இடம் மாறினா ஏதாவது நல்லது நடக்கும்னு. இவங்களை விட்டுட்டு போனா எப்படி நல்லது நடக்கும்?…” என்று நெகிழ்ச்சியுடன் சொல்ல,
“கங்க்ராட்ஸ் மகிழ். ரொம்ப ரொம்ப சந்தோஷம்….” என அவளை கட்டிக்கொள்ள,
“விமலாக்கா, கன்பார்ம் ஆகட்டும். இல்லைன்னா ரொம்ப கஷ்டமா போய்டும்…” என மகிழ் சொல்ல பூங்கோதையுடன் அன்புக்கரசியும் வந்துவிட்டார்.
அவரின் பின்னே தினேஷும், அபூர்வாவும் கூட. வரும் பொழுது முகத்தில் எதிர்பார்ப்புடன் தன்னையே பார்த்த தினேஷை பார்த்தவளுக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ஒருமாதியான மனநிலை அவளை ஆட்டுவித்தது.
குழந்தையாக இருக்கவேண்டும் என்றும், இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவளை அலைப்புற செய்ய,
“ஒன்னும் பயப்படாத மகிழ். இங்க பக்கத்துல ஒரு லேடி டாக்டர் இருக்காங்க. சும்மா போய் பார்த்துட்டு மட்டும் வா…” என அன்புக்கரசி சொல்ல,
“விமலாக்கா நீங்களும் வாங்களேன்…” என்று மகிழ் அழைக்க,
“இந்தா இவளே, அவ உனக்கு அண்ணி முறையாகனும். ஒழுங்கா அண்ணி, இல்ல மதினி சொல்லி கூப்பிடு…” என்று பூங்கோதை திருத்த,
“இல்லம்மா, அவ இப்படியே கூப்பிடட்டும். எனக்கு புடிச்சிருக்கு…” என்ற விமலாவையே அன்புக்கரசி பார்வை ஆதுரமாய் பார்க்க,
“நான் போய்ட்டு வரட்டுமா அத்தை…” என்று லேசான பயத்துடன் கேட்டாள் அவள்.
“கண்டிப்பா போடாம்மா. நீ போய்ட்டுவாடா….” என்றார் அன்புக்கரசி விமலாவின் கையை பிடித்து.
அந்த சூழ்நிலையே சந்தோஷம் மாறி சட்டென கனம் சூழ்ந்தது. அன்புக்கரசி, விமலா இருவரின் முகமுமே எதுவோ சரியில்லை என்பதை போல இருக்க,
“தினேசு லட்சுமிய கூட்டிட்டு போய் நீ வெளியில நில்லு. அப்பா வந்துட்டா என்னைய வந்து கூப்பிடு. நாங்க வாரோம்…” என்ற பூங்கோதை மகன் சென்றதும் கதவை சாற்றிவிட்டு,
“ஏத்தா விமலா கலங்குற போல? என்னத்தா?…” என நாடியை பிடித்து கேட்கவும்,
“இல்லைம்மா, கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கு குழந்தை உண்டாக வாய்ப்பு குறைவாம். இன்னும் ட்ரீட்மென்ட்ல தான் இருக்கோம். இப்ப நான் கூட போனா எதுவும் நினைச்சுக்க மாட்டீங்க தானே?…” என்று விமலா சொல்லிவிட,
“ஆத்தே என்ன வார்த்தை பேசற? அவ சந்தோஷத்த பாத்து தோள்ல சாய்ச்சுக்கிட்டியே அப்பவே நீ அம்மா ஆகிட்ட. சுமக்குறதும், பெத்துக்கறதும் மட்டுமா அம்மா? அட போத்தா…” என்று இலகுவாய் பூங்கோதை சொல்லிவிட,
“சம்பந்தி…” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டார் அன்புக்கரசி.
“என்னத்த இப்ப பெருசா பண்ணிட்டேன்னு கையை பிடிக்கறீங்க? உங்க மருமகளை நீங்க தாங்கறத விட இன்னைக்கு நான் என்னத்த பெருசா பண்ணிட்டேன்? அட போங்க சம்பந்தி…” என்று வெள்ளந்தியாய் சொல்ல,
“விமலா என் மருமக. நான் தான் பார்க்கனும். ஆனா நீங்க…”
“ஏன் எனக்கு உரிமை இல்லன்னுறீங்களா? லட்சுமி மாதிரி தான் விமலாவும். அவ அம்மான்னு தான கூப்பிடுறா…” என பூங்கோதை சொல்ல இப்பொழுது உடைந்துபோனாள் விமலா. பூங்கோதையை கட்டிக்கொள்ள,
“ஏத்தா கண்ணக்கிண்ண கசக்காத. மொத்த சனமும் கூடிருக்கு…” என்று அவர் அவளை ஆறுதல் படுத்த,
“விமலாவுக்கு அப்பா மட்டும் தான் சம்பந்தி. அம்மா தவறிட்டாங்க. அதான் நீங்க சொல்லவும்…” என்ற அன்புக்கரசியின் கண்களும் கலங்கிவிட பூங்கோதைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“எனக்கு தெரியாதுங்களே, இத நானு கவனிக்கலையே…” என்று பாவம் போல சொன்ன பூங்கோதை,
“இந்தா இவளே, பாத்துக்கிட்டு நிக்கித. முகத்த கழுவிட்டு போய் டாக்டரை பாருங்க…” என்று மகிழிடம் விரட்ட,
“விமலாக்கா அழாதீங்க. எனக்கு என்னனோ இருக்கு…” என்று மகிழ் சொல்லவும் கண்களை துடைத்துக்கொண்ட விமலா,
“இல்லை, இல்லை. நீ வொர்ரி பண்ணாத. அழலை பாரேன்…” என்று துடித்த கண்களுடன் சிரிக்க,
“அப்படி இருக்கனும்த்தா அழுதா ஆச்சா? போ போயி கெளம்பு. ஒன்னு மனசுல வச்சுக்கோ. அம்மா இந்த பூவு இருக்கேன்…” என்று அவர் வேகமாய் சொல்லிக்கொண்டிருக்க,
“ஆமா தூக்கி தலையில வச்சுக்கனும்…” என மகிழ் கிண்டல் பேச,
“பாத்தியா ஒண்ணு சொல்ல விடுறாளா? இதுக்கு தான் அப்பப்ப வாயில நாலு போட்டு அடக்கி வைக்கிறது…” என்றவர்,
“போய் கிளம்புங்க. கொஞ்சம் நேரத்துல விருந்து ஆரம்பிச்சுடுவாங்கள்ள…” என சொல்லியவர்,
“நன் கூட கூட போயிருவேன் சம்பந்தி. ஆனா பாக்கறவங்க என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க. பதில் சொல்லி மாளாது. அதான்…” என தயங்க,
“அட அதுக்கென்ன? புள்ளைங்க போகட்டும். விவரம் தெரிஞ்ச புள்ளைங்க தான?…” என பூங்கோதை சொல்லிவிட்டு,
“சரிசரி, வாங்க சம்பந்தி நாம வெளில இருப்போம்…” என்று அன்புக்கரசியை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார்கள்.
“என்னங்கத்தை பார்த்தும் நல்லா இருக்கேனான்னு கேட்காம போறீங்க?…” என எதிரே வந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
அவனை பார்த்ததும் திடுக்கிட்டு நின்றவர் தங்களை சுற்றி உள்ள கூட்டத்தினரை பார்த்துவிட்டு,
“வந்து நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை…” என கேட்க,
“வாசு என்ன இது?…” என்று அன்புக்கரசி கண்டிக்க,
“ம்மா, அத்தை வந்ததுல இருந்தே பேசலை. அதான் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு கேட்டேன். கேட்கலைன்னா நீங்க என்னை திட்ட மாட்டீங்க?…” என அவரையே மாட்டிவிட,
“ஒன்னும் வேண்டாம். போ போயி உன் மாமனார் வந்தாச்சான்னு பாரு….” என அவனை அனுப்பியவர்,
“நீங்க வாங்க சம்பந்தி…” என பூங்கோதையை அங்கிருந்து கூட்டி சென்றார்.
பூங்கோதைக்கு இப்பொழுதே மறுவிருந்தில் மருமகனை எப்படி சமாளிக்க என யோசித்து யோசித்தே கிலி பிடித்தது.
“அடங்கமாட்டியாடா நீ? வீட்டுல இத்தனை பேர் இருக்கோம். அதையெல்லாம் விட்டுட்டு அவங்களை போய் கலாய்க்கிற…” என மருதவேல் பேச,
“அப்படி எல்லாம தப்பா பேசாதடா கலாய்க்கிறேன் அது இதுன்னு. அவங்க தான் நிச்சயம் பண்ண போன அன்னைக்கு என்னை நினைச்சு ரொம்ப கவலையோட இருந்தாங்க. அதான் பேசி பேசி அவங்களை நார்மல் ஆக்கறேன்…” என்று அப்பாவியாய் சொல்ல,
“சத்தியமா மூஞ்சியை அப்படி வச்சுக்காத. நீ கோபமா பேசினா கூட நம்பிருவேன். இந்த மூஞ்சியை நம்பவே மாட்டேன்…” என மருதவேல் முறைக்க,
“உன்னை யார் நம்ப சொன்னா? கேட்ட சொன்னேன்….” என அங்கே ஒரு ரகளையே செய்து கொண்டிருந்தான்.
அபூர்வா தான் அவனின் ஒவ்வொரு செய்கைகளையும் ஆச்சர்யமாகவும் ஆசையுடனும் அவதானித்துக்கொண்டு இருந்தாள்.
விமலாவுடன், மகிழ், தினேஷ் இருவரும் ஹாஸ்பிட்டல் சென்று வந்தும் மருமகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். தாமோதரன் அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்தார்.
யாருக்கு எதுவும் சொல்லப்படவில்லை. அன்புக்கரசி தெளிவாய் சொல்லிவிட்டார் இப்போதைக்கு இங்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று.
மதிய விருந்து முத்துவேல் வீடிருக்கும் வீதியின் கடைசியில் ஒரு மண்டபம் இருக்க அங்கே வைத்து ஏற்பாடாகி இருந்தது. நடை தூரம் தான். ஐந்து வீடுகளுக்கு அப்பால்.
அதனால் அனைவரும் நடந்தே செல்ல மண்டபத்தின் வாசலில் ராணியும், செல்வமும் முத்துவேலுடன் நின்று அனைவரையும் வரவேற்றனர். முத்துவேல் சம்பந்தகாரர்களை வரவேற்று பேசிக்கொண்டே உள்ளே அழைத்து சென்றுவிட்டார்.
ராணியையும், செல்வத்தையும் பார்க்கவுமே முகம் கடுக்க வாசுதேவகிருஷ்ணன் திரும்பிக்கொள்ள மீண்டும் அபூர்வாவிற்கு ஆச்சர்யமாகவும் திகைப்பாகவும் போனது.
சொந்த அத்தை, மாமாவிடம் இப்படி பாராமுகம் காட்ட முடியுமா என யோசித்தவள் அப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் என்று மௌனமானாள்.
“பவி எங்க அத்தை? இன்னைக்கு வரலை?…” என மருதவேல் வேண்டுமென்றே கேட்க,
“இந்த மனுஷனுக்கு சுத்தமா மண்டையில மசாலாவே இருக்காது. நேரங்கெட்ட நேரத்துல இது தேவையா? பாருங்க அத்தை வாசு முகத்தை…” என விமலா அன்புக்கரசியிடம் சொல்ல,
“வாசு உள்ள போய் உட்காரு. லட்சுமியை கூட்டிட்டு போ…” என்று அன்புக்கரசி மகனிடம் சொல்ல அங்கே அனைவரின் எச்சரிக்கை முகமும் அபூர்வாவின் கண்களில் தப்பவில்லை.
ஏன் என்று புரியாமல் குழம்பியவள் மீண்டும் ராணியை பார்த்து பேசும் முன்பு அவளை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“பெரியவனே…” என அன்புக்கரசி பார்க்க,
“பெரிய மாப்பிள்ளையை ஏன்மா முறைக்கிற? அவரு அத்தை மகன்னு தான பாசத்துல கேட்டாரு. பவியை பார்க்கனும்னு நினைச்சிருப்பாரு…” என்று செல்வம் இடக்காய் சொல்ல விமலா அப்படியா என்பதை போல உஷ்ணப்பார்வை பார்க்க,
“ஏய் கிண்டலுக்கு சொல்றாருடி. நீ என்ன என் மூஞ்சியை பார்க்குற? போ போ போய் வேலையை பாரு…” என்றவன் அங்கிருந்து நைஸாக நழுவினான்.
கோபக்காரன் தான். ஆனால் இது போன்ற பேச்சுக்களை அவனுமே ரசிக்க மாட்டான். என்றுமே இப்படி பேசியிறாத செல்வம் இன்றைக்கு பேசவும் உண்மையில் திடுக்கிட்டு விமலாவை பார்க்க அவன் நினைத்தது போல அவளும் முறைக்க தான் செய்தாள்.
“நானே தட்டி தட்டி வச்சிருக்கேன். இவர் சும்மா இல்லாம ஸ்க்ரூ குடுக்கறாரு. இன்னைக்கு எதுவும் பேசுவாளோ இதை வச்சு?…” என்ற புலம்பலுடன் அவன் உள்ளே செல்ல,
“பெரிய மாப்பிள்ளை, அவ ஆபீஸ்ல இருந்து வெளியூர் அனுப்பிருந்தாங்கள்ள. பவி இன்னும் ட்ரைனிங் முடிஞ்சு வரலை….” என முன்னால் சென்ற மருதவேலை அழைத்து சொல்ல அவனோ காது கேட்காதவன் போல விமலாவின் பின்னே சென்றுவிட்டான்.
“என்னங்க இது? பேசாம இருக்க மாட்டீங்க? நீங்க பேசினது எனக்கே பிடிக்கலை…” என்று ராணி முகம் சுளிக்கவும் தான் செல்வத்திற்கும் ஒரு மாதிரியானது.
“சின்னவர் கோபமா போகவும் பெரியவரும் கேட்ட கேள்விக்கான பதிலை வாங்காம போனாரா அதான் கோபத்துல…” என தயங்க,
“இங்க பாருங்கண்ணே, எல்லாமே முடிஞ்சு போச்சு. இப்ப பழசை பேசி நம்ம சொந்தத்துக்குள்ள எந்த மனஸ்தாபமும் வர வேண்டாம்னு நினைக்கறேன். என் வீட்டுக்காரருக்கு அவர் தங்கச்சியும், தங்கச்சி பொண்ணும் ரொம்ப ரொம்ப முக்கியம்…”
“தெரியும் அன்பு…” என்ற செல்வத்தை பேச விடாமல்,
“ஆண்டவன் புண்ணியத்துல நமக்குள்ள எந்த தகராறும் இல்லாம இத்தனை வருஷம் ஒரு மனசா வாழ்ந்துட்டு வரோம். இப்ப நீங்க இப்படி பேசனுமா? அதுவும் என் மருமக முன்னாடி…” என்றதற்கு செல்வம் அமைதியாய் நிற்க,
“வாசு கோபப்படறான், முகத்தை காண்பிக்கறான்னு சொல்றீங்களே, அவன் கோபப்படாம என்ன செய்வான்? சொல்லுங்க. அவன் கோபத்தில நியாயமில்லையா? எல்லாம் மறந்துட்ட மாதிரி சொந்தத்துக்காக நாங்க வேணும்னா இருக்கலாம் அண்ணே…”
“ஏனா அவனுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் நீங்க பண்ணதெல்லாம் மறந்துட்டு நாங்க உங்களோட உறவாடுறோம் இல்லையா? ஆனா என்னை மாதிரி என் பிள்ளை இருக்கனும்னு அவசியமில்லை. அவன் கோபப்படத்தான் செய்வான். அவன் கோபத்தில நியாயம் இருக்க போய் தான் ராணி அமைதியா இருக்கா….”
“புரியுதும்மா, அப்ப ஏதோ…”
“விடுங்கண்ணே, எல்லாத்தையும் பேச பேச வருத்தம் தான். நினைக்க வேண்டாம். விட்டுடுங்க. இப்ப வாசுவையும், நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்கற பொண்ணையும் மனசார வாழ்த்துங்க. ஆசிர்வாதம் செய்யுங்க, அது போதும்…” என அன்புக்கரசி சொல்லவும் செல்வமும் தலையசைத்தார்.
“நீ வா ராணி, நாம உள்ள போய் எல்லாரையும் கவனிப்போம்…” என்று ராணியை உடன் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட முத்துவேல் வந்து அங்கே செல்வத்துடன் சேர்ந்து நின்றார்.
விருந்து அமர்க்களப்பட்டது. சைவமும், அசைவமுமாய் ஏகப்பட்ட வகைகளை முத்துவேல் சொல்லியிருந்தார்.
மிகப்பெரிய கேட்டரிங் சர்வீஸ் சுவை குறையாமல் செய்திருக்க அத்தனை பேரும் புகழ்ந்துகொண்டே சாப்பிட முத்துவேலுக்கு திடீர் றெக்கை முளைத்தது. அப்படியே வானத்தின் உயரத்தில் தன்னை நிறுத்திக்கொண்டார். முகத்தில் டன் டன்னாய் பெருமிதம் வழிந்தது.
“அம்மா உங்க வீட்டுக்காரரை மலையிறக்குங்க. மனுஷன் இமைய மலைக்கே போய்ட்டாரு…” என்று கிண்டலாய் சொல்ல,
“டேய் இது எல்லாம் பெத்தவங்க பெருமை. உனக்கு புரியாது…” என மருதவேல் சொல்ல,
“அதான் பார்த்தோமே அவர் பெருமையை. போதும்டா உங்க பெருமையும் அருமையும்…” என கையெடுத்து கும்பிட,
“ரெண்டு பேரும் சும்மா இருங்கடா. எல்லாரும் கிளம்பறாங்க. வாசு வா நீ. உன் மாமனார் மாமியார் சொல்லிக்க இருக்காங்க…” என சொல்ல,
“ம்மா, என்ன இது? வீட்டுக்கு வந்துட்டு அங்க இருந்து போக சொல்லுங்க. அடுத்தவங்க மாதிரி மண்டபத்துல இருந்தே கிளம்பிட்டு…” என வாசுதேவகிருஷ்ணன் சொல்ல,
“பார்ரா இது கூட அருமை தான்…” என மருதவேல் மீண்டும் தம்பியிடம் வம்பு பேச,
“இந்த அருமை கூட இல்லைன்னா எப்படி ப்ரதர்? என் மாமனார் மாமியாரை நான் தான பார்த்துக்கனும்…” என்று கண்ணடிக்க,
“நீ எப்ப எப்படி பேசுவன்னு இத்தனை வருஷம் ஆகியும் தெரியமாட்டிக்கு…”
“பெரியவனே…” என்ற முத்துவேல் சத்தத்தில்,
“இதோ வந்துட்டேன்ப்பா…” என்று ஓடினான்.