நிஜம் – 11
அனைவரும் பேசியபடி சாப்பிட்டு முடித்து அனைத்து பாத்திரங்களையும் மாடியில் இருந்த குழாயில் கழுவி, கொண்டு வந்ததை எல்லாம் மீண்டும் கூடையில் அடுக்கிக்கொண்டனர்.
“எப்பவும் இப்படி சாப்பிடுவீங்களா? அப்போ சாப்பிடும் முன்னாடியே வந்திருக்கலாமே? மாமாவும் வந்திருப்பாங்க…” என அபூர்வா கேட்க,
“இங்க வந்து சாப்பிட உன் மாமனாருக்கு பிடிக்காது. அதனால நாங்க மட்டும் வருவோம். அவருக்கு தெரியாது நாங்க இங்க வந்து இப்படி சாப்பிடறது….” என அன்புக்கரசி சொல்ல,
“ஆமா, அதுவும் வாசு வந்துட்டா கீழே அரை சாப்பாடு தான். மாமா தூங்கற வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு நாங்க மாடிக்கு வந்திருவோம். இப்படி சாப்பிட சூப்பரா இருக்கும். இனிமே நீயும் விடமாட்ட பாரு…”
விமலா அத்தனை உற்சாகத்துடன் சொல்ல சொல்ல அபூர்வாவிற்கும் முகத்தில் புன்னகை.
“என்ன எதுவும் சொல்லாம சைலன்டா சிரிக்கிற?…” என விமலா கேட்க,
“சும்மா அதான் விமலாக்கா. எனக்கு இங்க இப்படி சாப்பிட ரொம்ப பிடிச்சது. எங்க வீட்லயும் கூட எல்லாரும் ஒண்ணா தான் சாப்பிடுவோம். ஆனா கீழே உட்கார்ந்து பேசிட்டே. இதுவரைக்கும் மொட்டை மாடில சாப்பிட்டதில்லை…” என சொல்ல,
“அதிராம பேசற நீ…” என்றாள் விமலா. அதற்கும் புன்னகை தான் அபூர்வாவிடம் இருந்து.
“அதனால என்னம்மா? இனி பழக்கிக்கோ. பிடிச்சதுன்னு வேற சொல்லிட்ட. இதுக்கே என் அம்மா உன்னை வரும் போதெல்லாம் இங்க கூட்டிட்டு வந்திருவாங்க பாரு…” என்று மருதவேல் சொல்ல,
“டேய் அப்பா…” என வாசுதேவகிருஷ்ணன் திடீரென குரல் கொடுக்கவும் என்ன ஏதென்று கூட பார்க்காமல் ஒடி ஒளிந்தான் மருதவேல்.
தண்ணீர் பைப் இருந்த சுவற்றிற்கு பின்னால் சென்று ஒளிந்தவன் சில நொடிகள் ஆகியும் சத்தம் எதுவும் இல்லாமல் இருக்க மெல்ல எட்டி பார்த்தான்.
பெண்கள் மூவரும் இவனின் திசையை திரும்பி பார்த்தபடி இருக்க வாசுதேவகிருஷ்ணனனோ காலை நன்றாக நீட்டி இரண்டு கைகளையும் பின்னால் முட்டுக்கொடுத்து சாவாகாசமாய் சாய்ந்து இருந்தான்.
அதனை கண்டு எரிச்சலுடன் தன் தலையில் அடித்துக்கொண்டு மறைவிலிருந்து அகன்றவன் கோபமாய் எழுந்து வந்து,
“என்னடா ரொம்ப பன்ற? ஒரு நிமிஷம் நெஞ்சே நின்னுடுச்சு…” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு நிற்க,
“நான் அப்பான்னு அப்படி சொல்லலை ப்ரோ. நீ ஏன் பதறின? என் காலுக்கு நேரா உட்கார்ந்திருந்த. நீட்ட கஷ்டமா இருக்கேன்னு உன்னைத்தான் டேய் அப்பா நகருடான்னு சொல்ல வந்தேன். நீ ஓடினா நானா பொறுப்பு?…” என்று கேட்டு காலை ஆட்ட,
“அதை முழுசா சொல்றதுக்கென்ன? அதென்ன டேய் அப்பாவுக்கு அடுத்து ஒரு கேப் விட்ட?…” என அவனின் காலை மிதிக்க அன்புக்கரசி ஆரம்பித்துவிட்டார்.
“ஏன்டா இத்தனை வருஷத்துல உங்கப்பா என்னைக்கு மாடி ஏறி வந்திருக்காரு? மேல எடுத்து கட்டி இதுக்கு பால் காய்ச்சினப்போ சொந்தக்காரங்க வந்தாங்கலேன்னு சுத்திக்காட்ட வந்தவரு. அடுத்து அடுத்து கட்ட ஆரம்பிச்சு பால் காய்ச்சவும் தான் வருவாரு. தெரிஞ்சும் நீ ஓடினா அதுக்கு அவனை ஏன் சொல்ற?…”
“அதானே, கேளுங்கம்மா. இதுக்காக தானே இங்க இருந்த சிசி கேமராவை வரப்போ ஆஃப் பண்ணிடறோம்…” என வாசுதேவகிருஷ்ணன் சலுகையாக சொல்ல,
“எல்லாம் ஒரு பதட்டம் தான்…” என மீண்டும் அமர்ந்தான்.
“நல்ல பதட்டம்? வந்தா என்ன செஞ்சிருவாராம்? கேட்டா காக்காய்க்கு இப்பவே கறிதோசை வைக்க வந்தேன்னு சமாளிக்கறதை விட்டுட்டு…”
“ஆமா நம்பிடுவாரு. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் அம்மா…” மருதவேல் கடுப்படிக்க,
“அடேய் அதை யார் சொல்றாங்கன்றது இருக்குல. நான் சொன்னா உங்கப்பா நம்புவாரு…” என்று பெருமிதமாய் சொல்ல,
“அப்படியே உங்க சமத்து எனக்கும் சொல்லி குடுங்க அத்தை…” என விமலா கேட்க,
“ஏய் எந்திச்சு போய் தூங்குடி…” என்றான் மருதவேல்.
“ம்க்கும் இதுல எல்லாம் உஷாரு தான்…” என்ற விமலா எழுந்து கூடையை தூக்கிக்கொண்டு செல்ல அவளின் பின்னே அன்புக்கரசியும் சென்றுவிட்டார்.
“நீங்க போகலையா? போய் தூங்குங்க…” என்று தம்பியையும் தம்பி மனைவியையும் பார்த்து மருதவேல் சொல்ல வெட்கத்துடன் தன் கையில் இருந்த மொபைலில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
“ஹ்ம்ம், தூங்கனும்…” என்று அபூர்வாவை பார்த்தபடி அவன் சொல்லவும் அவனின் தூங்கு என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்து சிரிப்பு வர இதழ்களை அழுத்தமாய் மூடிக்கொண்டாள் அவள்.
அவள் குனிந்து கொண்டதும், வாசுதேவகிருஷ்ணன் ஒரு மார்க்கமாய் சொல்லிய விததையும் பார்த்த மருதவேல் தன் தம்பியை கூப்பிட்டான் அருகே.
“நான் பேசறப்ப நீ ட்ரிகர் பண்ணுவியா? இல்ல இதுதான் பேசுவேன்னு நினைச்சு என்னை ரவுண்டப் பன்றியா? என்னென்ன மாடுலேஷன் வச்சிருக்கடா நீ? ஒரு வாய்க்கு எத்தனை பேச்சு? சரியான ஆக்ட்டோபாஸ் வாயன்டா நீ…” என்று முறைக்க,
“சரிடா ஆட்டோ பஸ் வாயா…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“அண்ணன்டா…” அழமாட்டாமல் மருதவேல் சொல்ல,
“குட்நைட் டா….”
“இதுக்கு என்னை கழுத்த பிடிச்சு தூக்கி கீழே விட்டுருக்கலாம்…”
“உன் விருப்பம்…” என மருதவேலை அலேக்காக தூக்க போக,
“நீ போலீஸ்க்கார் இல்லைடா அக்யூஸ்ட் பார். இந்த மூஞ்சிக்குள்ள எத்தனை வில்லத்தனம் ஒளிச்சு வச்சிருக்க? மனுஷன் பேசுவானா உன் கூட…” என்று பேசி நகர,
“அதான் நீ பேசினியே இத்தனை நேரம். நின்னு இதுக்கு பதில் சொல்லுடா அண்ணா…” என செல்பவனை வம்பிழுக்க,
“நீ யாருன்னே தெரியாது எனக்கு. போடா…” என இறங்கிவிட்டான் படிகளில்.
“என்னாச்சு கோவமா போறாரு…” என தன்னருகே வந்தமர்ந்தவனை கேட்க,
“ரொம்ப பாசம் கூடிருச்சுன்னா அப்படித்தான். என் அண்ணனாச்சே…” என்று சிரித்தவன்,
“இந்த வீடு புடிச்சிருக்கா பூர்வி. காலையில் இருந்து கேட்கனும்னு இருந்தேன். சொல்லு….” என அவளின் வலது கையை எடுத்து வருடிக்கொண்டே கேட்க,
“ஹ்ம்ம், புடிச்சிருக்கு…” என சற்று இழுத்து அவள் சொல்ல,
“ஆனா புடிக்கலை. அதானே?…” என சிரிப்பு மாறாமல் கேட்டவன்,
“எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லு. எனக்கு உண்மை பேசினா ரொம்ப புடிக்கும்…” என கேட்க,
“நீங்க எப்பவுமே இப்படித்தான் பேசுவீங்களா?…” என்றாள் அவள்.
“இப்படித்தான்னா?…” என சிரிக்க,
“இல்லை வார்த்தை என்னவோ சாதாரணம் தான். ஆனா அதுக்குள்ளே இன்னொரு மீனிங் இருக்கற மாதிரியே பேசறது…”
“யூ மீன் டபுள் மீனிங்?…” என்று கண்கள் சிரிக்க கேட்டதும் பதறியவள்,
“ஐயோ இல்லை, அப்படி சொல்லலை. அது வந்து. நீங்க என்கிட்டே எதுவோ கேட்க நினைக்கறீங்க. கேட்கவும் செய்யறீங்க. ஆனா எனக்கு தான் அது புரியலை…” என சொல்லவும் அவளின் கண்களுக்குள் ஆழ்ந்தவனின் பார்வை சட்டென மாற்றம் பெற,
“இதோ இதுதான் இந்த கண்ணு, இந்த பார்வை என்கிட்டே என்னவோ சொல்லனும், கேட்கனும்னு நினைக்கறீங்க. இல்லை நான் சொல்லனும்னு எதிர்பார்க்கறீங்களா? சத்தியமா புரியலை. எனக்கு யோசிக்க யோசிக்க எதுவுமே தெரியலை….” என படபடவென சொல்ல,
“ஈஸி, ஈஸி பூர்வா. லீவ் இட். இப்ப எதுவும் யோசிக்க வேண்டாம். நான் கேட்டது தான். உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே கேட்டுட்டு தானே இருக்கேன். நீ இன்னும் சொல்லலையேன்னு உன்னை பார்த்து புரிஞ்சுக்க ட்ரை பன்றேன்…” என்றவன் அவளை நிறைய பேச வைத்தான்.
“பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிருக்காங்களா?…” என்று சலுகையாய் நொடித்துக்கொள்ள,
“அந்த பிடித்தம் இல்லை. என்னை பார்த்ததும் உனக்கு பிடிச்சதா? வாசுதேவகிருஷ்ணன் அப்படின்ற ஒரு தனி மனுஷனை பிடிச்சதா? ஐ மீன் நான் உங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளையா இல்லாம இருந்திருந்தா உனக்கு என்னை பிடிச்சிருக்குமா?…” என்றான் தீவிரமாய்.
“இப்ப ஏன் இதெல்லாம்?…” என்றாள் சங்கடமாய்.
“இப்ப நான் உன் ஹஸ்பண்ட். நீ எந்த பதில் சொன்னாலும் அதை நான் ஏத்துப்பேன். உன் மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு…” என அவளின் இரு கைகளையும் பிடித்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவனின் முகமே இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதாக இருந்தது.
“நிஜமா கோபப்பட மாட்டீங்களே?…”
“உன்கிட்ட நான் எப்போ கோபமா பேசியிருக்கேன்?…” என்றான் கனிந்த புன்னகையுடன்.
“கண்டிப்பா அம்மாப்பா பார்த்த மாப்பிள்ளைன்றதால தான் உங்களை நான் பார்க்க முடிஞ்சது. அதுதான் நமக்கான பந்தத்தை கொடுத்துச்சு. இல்லைன்னா நீங்க யாருன்னு எனக்கு தெரிய வாய்ப்பில்லையே. பார்த்ததும் பிடிச்சிருந்தது. இதை நீங்க முன்னாடி கேட்டப்போ சொல்ல கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு…” என தலையை கவிழ்ந்தபடி நாணத்துடன் சொன்னவள் அவனின் பதிலற்ற தன்மையில் துணுக்குற்று,
“தப்பா எடுத்துக்காதீங்க, வீட்டுல அண்ணாவுக்கும் சரி, எனக்கும் சரி அப்பா எடுக்கறது தான் முடிவு. அது அம்மாவை வச்சு செயல்படும். தனியா ஆசைப்பட்டதில்லை. இதோ அண்ணாவே அவன் கல்யாணத்தப்போ தான் மொபைல் வச்சுக்கிட்டான். வீட்டுல கூடாதுன்னு சொன்னதில்லை தான். ஆனாலும் நாங்களா நினைச்சுப்போம்….”
“பெருசா ஆசைப்பட வாய்ப்பிருந்ததில்லை. பிறந்ததுல இருந்தே பெத்தவங்க எது செஞ்சாலும் நல்லதுன்னு சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டோம் எங்க ஆச்சி தாத்தாவால. ஒரு கட்டத்துல அவங்க எங்களை விட்டுட்டு போனாலும் விதைச்சது அப்படியே தான் இருந்துச்சு. நிறைய கட்டுப்பாடு. வார்த்தையால சொல்லலைனாலும் நடைமுறையில நாங்களே எங்களை அந்த வட்டத்துக்குள்ள வச்சிக்கிட்டோம்…”
“அப்பா சொன்னா அது நல்லத்துக்கு தான் அப்படின்னே வளர்ந்துட்டதால நிழலோ நிஜமோ எங்களுக்கு அதுதான் நிஜம். கற்பனைகளுக்கு இடமில்லாத ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை தான் உங்களை எனக்கு தந்திருக்கு. ஒரு வேளை நீங்க மாப்பிள்ளையா….” என்றவளின் பேச்சை தன் விரல்கொண்டு நிறுத்தியவனை மிகவும் பாதித்தாள் அபூர்வா.
அவளின் இந்த பரிமாணமும் கூட வெகுவாய் அவனை ஈர்த்தது. ஆனாலும் மனதின் ஓரத்தில் அதனை ஏற்க முடியாமல் தடுமாறியவன் முதல் முதலாய் அவளை மொத்தமாய் தனக்கென தன்னிடம் சேர்ப்பித்த விதியை மனதார கொண்டாடினான்.
“நான் எதுவும் நினைக்கலை. இப்போ நீ என்னோட வொய்ப். நான் உன்னோட நிஜம்…” என சொல்ல அவனை புரியாத பார்வை பார்க்க,
“நான் உன்னோட ஹஸ்பண்ட். இதுதான் நிஜம். அதை சொல்ல வந்தேன்…” என சமாளித்தவன்,
“இப்ப சொல்லு, இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்கா? உன் முகத்துல எதுவோ குறையுதே?…” என்று அவளின் முகத்தின் நேரே ஆள்காட்டி விரல் கொண்டு வட்டமிட அன்றொரு நாள் அவனின் இந்த செய்கை நியாபகம் வர அவனின் விரலசைவிற்கேற்ப விழிகளை சுழற்றினாள்.
“அன்னைக்கு மாதிரி இன்னைக்கு என்னை தள்ளிவிட்டு ஓடலை?…” என்றான் கள்ள சிரிப்புடன்.
அவன் எதை கேட்கிறான் என்பதை உணர்ந்தவள் சட்டென இரு கைகள் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வாய்விட்டு சிரித்தவன்,
“ஓகே ஓகே, சொல்லு…”
“நீங்க சொல்லவே விடமாட்டேன்றீங்க. சொல்லு சொல்லுன்னா நான் எப்போ சொல்றதாம்?…” என கேட்டுவிட,
“யக்கா….” என்றான் சிரிப்போடு.
“ஐயோ போதும், ஒரே ஒருதடவை நான் தெரியாம தம்பின்னு சொல்லிட்டேன். அப்போ உங்க ஹைட் எனக்கு தெரியலை. அதனால தான்…” என சிணுங்க,
“ஆனாலும் எவ்வளோ பேசின நீ? இப்ப என்னடான்னா பேச தெரியாதவளாட்டம் என்னை சீட் பண்ண பார்க்கிற? பர்டன் சொன்னா பாடரானு கலாய்ச்சா தானே?…”
“அதுக்கென்னவாம் இப்போ? நீங்க கூட தான் என்னை மிரட்டுற மாதிரி பண்ணுனீங்க?…” என்று சொல்லவும் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து,
“என்ன பண்ணுனேன்?…” என்றான் கிசுகிசுப்பான குரலில். சட்டென முகத்தை விலக்கி திரும்பியவள்,
“உங்க வீடு ரொம்ப பெருசு…” என்றாள் பேச்சை மாற்றுவதற்காக.
“ஹ்ம்ம் தெரியும்…” என்றான் இளநகை இதழ்களில் மின்ன.
“ஆனா நம்மளோட அந்த வீடு மாதிரி பீல் குடுக்கலை…” என்றாள் கொஞ்சம் தயக்கம் பொதிந்த குரலில். இந்த பதிலை எதிர்பார்க்காதவன் ஆச்சரியமாக பார்க்க,
“என்னாச்சு?…” என்றாள்.
“இல்லை இந்த வீட்டை பிடிக்கலைன்னு சொல்றியே. அதான் கேட்டேன்…” உலகின் ஒட்டுமொத்த ரசனைகளும், டாம்பீகமும் நிறைந்திருக்கும் வீடு அது.
“பிடிக்கலைன்னு இல்லை. தெரியலை. இதை விட நம்ம குட்டி வீடு ரொம்பவே ரொம்ப பிடிச்சிருக்கு. இதை சொல்லுவேன்…” என்றவள்,
“இந்த வீட்டோட டிஸைன் நீங்க சூஸ் பண்ணினதா?…” என கேட்க,
“ம்ஹூம், எல்லாமே அப்பாவோட சாய்ஸ். இது எல்லாம் அப்பா மட்டுமே முடிவெடுத்து செய்யறது…” என்றவன் லேசான சிரிப்புடன்,
“நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ இந்த வீடு இத்தனை பெருசு கிடையாது முன்னாடி. கடையும் மளிகை கடை தான் சின்னதா. கொஞ்சம் கொஞ்சமா தான் பெருசு பண்ணினார். மனுஷன் கடுமையான உழைப்பாளி. கடை பெருசா இருந்தாலும் வீடு அப்படியே இருந்துச்சு…”
“இங்க இருக்கற ரிலேட்டிவ் மேரேஜ்க்கு ஊர்ல இருந்து வந்திருந்த யாரோ ஒருத்தர் தங்கறதுக்கு இடம் தேட வீட்டுக்கு வாங்கன்னு அப்பா கூப்பிட்டிருந்திருக்கார். அவர் சொல்லிட்டாராம் உன் வீட்டுல உங்களுக்கே இடமில்லை. நாங்க அங்க வந்து எப்படி தங்க. அதனால உங்களுக்கும் சிரமம். வெளில ஹோட்டல்ல தங்கிக்கறோம்ன்னு. அதுதான் வசதின்னும்…”
“அதுவரைக்கும் காசை மட்டுமே சேர்த்துட்டு வர வருமானம் போதும்னு இருந்த மனுஷன் இன்னும் வேகமா உழைக்க ஆரம்பிச்சார். இருந்த கடையையும் பெருசு பண்ணினார். அதே நேரம் வீட்டையும். முதல்ல பின்னால, பக்கத்துலன்னு இருந்த இடத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கி போட்டார்…”
“அப்பறமா மொத்தமா இடிச்சு புது மாடல்ல கட்ட ஆரம்பிச்சார். ஒரு குறிப்பிட்ட வைப்புத்தொகைக்கு மேல சேர்ந்தா அதை தனியா சேர்க்க ஆரம்பிச்சார். ஒரே கடை தான். சீக்கிரம் சம்பாதிக்கனும்னு அதிக அநியாய விலைக்கெல்லாம் விக்கமாட்டார். அதே நேரம் வருமானமும் பெருகுச்சு…”
“கடை தேவையான ரொட்டேஷனுக்கு எல்லாமே தனியா எப்பவும் இருக்கும். அது போக வீட்டுக்குன்னு சேர்த்துட்டே தான் இருக்கார் இன்னமும். முதல்ல கிரவுண்ட் ப்ளோர் மட்டும் கட்டினவர் ரெண்டு வருஷத்துல பர்ஸ்ட் ப்ளோர் காட்டினார். இப்ப ரெண்டாவது ப்ளோர் முடிஞ்சு மருதண்ணன் கல்யாணத்துக்கு ஐஞ்சு மாசம் கழிச்சு பால் காய்ச்சிட்டார்….”
“இப்ப வரைக்கும் வீட்டை எப்படி எல்லாம் அழகு படுத்தன்னு யோசிச்சுட்டே இருப்பார். வீட்டுக்கு வரவங்க வாய் பிளக்கறதுல அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம். பெருமை. முதல்ல வாழ்ந்து காட்டன்னு ஆரம்பிச்சு இப்ப அந்த பெருமையில் ஊறி போய்ட்டாரு…”
“அது ஒரு மாயமான கர்வத்தை கொடுக்குது. இந்த பகட்டு குடுக்கற சந்தோஷம் இன்னும் போதலை அவருக்கு. இந்த ஏரியாவுலயே மிகப்பெரிய வீடுன்னு தன்னை தன் வீட்டை பார்க்கிறவன் வாழ்த்த மட்டுமில்லை வயிறெரியவும் செய்வான்னு இவருக்கு புரிய மாட்டிக்கு. எதுவா இருந்தாலும் அளவா இருக்கனும்னு யார் சொல்றது?…” என்றவன்,
“இப்ப வரைக்கும் அவரால மறக்க முடியாத ஒண்ணுன்னா அந்த கல்யாணத்துக்கு வந்தவர் பேசினது தான். ஒவ்வொருத்தவங்களும் வீட்டுக்கு விசேஷத்துக்கு அழைக்கன்னு வந்துட்டு வீட்டை சுத்தி பார்த்துட்டு போகும் போதெல்லாம் அதை பத்தி பேசாம இருக்கவே மாட்டார். அன்னைக்கு அவன் என்னை அப்படி பேசிட்டானேன்னு…”
வாசுதேவகிருஷ்ணன் சொல்லியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அபூர்வாவின் மனதில் கேள்வி எழுந்தது.