“உங்கப்பாவை நினைச்சு இவ்வளோ பீல் பன்றீங்க, ஆனா ஏன் அவரோட பேசறதே இல்லை. கோவமா வேற மல்லுக்கு நிக்கறீங்க?…” என்று கேட்க ஒரு நொடியேனும் அவனின் முகம் மாறி இயல்புக்கு திரும்பியது.
“இப்ப இந்த கதை எல்லாம் ரொம்ப முக்கியமா? இப்ப அவரோட நான் மல்லுக்கு நிக்கறதா முக்கியம்? எங்க என்னோட நீ மல்லுக்கு நில்லேன்…” என்றவன் எழுந்துகொண்டு அவளுக்கு கை கொடுக்க,
“ஒன்னும் வேண்டாம். நானே எழுந்துப்பேன்…” என்றவள் எழுந்ததும்,
“என்ன வேண்டாம்? தூங்க வேண்டாமா?…” என கண் சிமிட்டி கேட்டவன் விரித்திருந்த பாயை சுருட்டி மறைவாக வைத்துவிட்டு வர இருவருமாய் கீழே இறங்கினார்கள்.
அவனறைக்குள் நுழையவுமே கண்களை மூட மறந்தாள் அபூர்வா. பிரமாண்டம் என்பதை அன்று நேரில் கண்டாள்.
காலையில் வந்ததில் இருந்து கீழே தன் குடும்பத்தினர், விமலா இவர்களுடனே சுற்றிக்கொண்டிருந்ததில் அவனறைக்கு வரும் அவசியமே ஏற்படவில்லை. வர நேரமும் இருக்கவில்லை.
“என்ன பூர்வா அப்படியே மிரண்டு போய் இருக்க?…” என சிரிப்புடன் கேட்டவன் அவளின் பேக்கை எடுத்து தர,
“இல்லை நான் எந்த ரூம்க்கும் போய் பார்க்கவே இல்லை. உங்க ரூம் ரொம்ப பெருசு…” என்றவளுக்கு புது கவலை.
அவனுக்கு தன்னுடைய சின்ன அறை எப்படி போதும் என்று யோசித்தபடி நின்றாள்.
“எல்லாமே பெருசு தான். பாரு நான் இந்த மொபைலை வைக்கனும்னா இன்னும் நாலு ஸ்டெப் நடந்து வந்து வைக்கனும். எடுக்கனும்னாலும் கூட. எல்லாமே தூரம் தூரம். பக்கத்துல இல்லை. சோ உன்னை மாதிரி எனக்கும் நம்ம குட்டி வீடு தான் பிடிக்கும்…” என சொல்லி,
“போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. தூங்கலாம்…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“தூங்கலாம்” என்ற வார்த்தை மற்றதை மறக்க செய்ய லேசாய் அவனை முறைத்துவிட்டு,
“தூங்க தான் போறேன்…” என லேசான வீம்புடன் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.
மீண்டும் வரும் பொழுது வாசுதேவகிருஷ்ணன் அவளின் மொபைலை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.
“வா வா, உனக்கு என்னோட காண்டக்ஸ்ட் எல்லாம் ஏத்திட்டேன். சோஷியல் அக்கவுண்ட்ஸ் டவுன்லோட் பண்ணி ஐடி க்ரியேட் பண்ணிட்டேன்…” என்று அவளை அமர வைத்து ஒவ்வொன்றாய் சொல்லி கொடுக்க,
“இது அண்ணன் காண்பிச்சிருக்கான். பெருசா பார்த்துக்கமாட்டேன்…” என சொல்ல,
“சோ வாட்? இனிமே பார்த்துக்கோ. உனக்கும் கொஞ்சம் பொழுது போன மாதிரியும் இருக்கும். நான் கிளம்பி ஸ்டேஷன் போய்ட்டா லோன்லியா பீல் பண்ண கூடாது பாரு…” என்றவன் அவளுக்கு ஒவ்வொன்றாய் கற்று தர கேட்டுக்கொண்டிருந்தவளோ எப்பொழுது உறங்கினாள் என்றே தெரியவில்லை அவனுக்கு.
அமர்ந்திருந்தவள் தலை அவன் மீது சரிந்ததும் தான் பார்த்தவன் அவளை சரியாய் படுக்க வைக்க பார்க்க பதறி விழித்தாள்.
“தூங்கிட்டேனா? ஸாரி…” என கேட்க,
“ரொம்ப டயர்டா இருக்க. எனக்கும் தான். நிஜமாவே தூங்குவோம்…” என்று அருகே படுத்து தன் மீது சாய்க்க அவனின் தோளில் லேசாய் அடித்தவள்,
“இனிமே இப்படி பேசாதீங்க…” என்றதும் வாய்விட்டு சிரித்தவன்,
“ஸ்வீட் ட்ரீம்ஸ் கண்மணி…” என்றான் அவளின் நெற்றியில் முத்தமிட்டு.
“லட்சுமி ப்ச் இல்ல பூர்வா…” என்று அவள் திருத்தி,
“யார் கண்மணி?…” என கேட்டாள் யோசனையோடு.
“நீ தான் கண்மணி. உன் அம்மா வீட்டுல வச்சு உன்கிட்ட சொன்னேனே உன் கண்ணுக்கு கண்மணின்னு பேர் வச்சிருக்கனும்னு. அவங்க வைக்கலை, அதான் நானே வச்சுட்டேன் கண்மணி…” என்று அவன் சொல்லவும் அது சரி என்பது போலவும் தோன்றியது, ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மனதினுள் எதுவோ ஒரு குரல் அவளை விரட்டியது.
“கண்மணி…” என சொல்லிப்பார்த்தவளை சட்டென இறுக்கமாய் அணைத்தவன்,
“தூங்கலாமா? நிஜமா தூங்கலாமா?…” என கேட்க,
“நிஜமாவே தூங்கலாம்…” என வேகமாய் சொல்லி பின் அவனின் குறும்பான பார்வையை கண்டு,
“ஹ்ம்ம் உங்க இஷ்டம். எப்படினாலும்…” என மெல்லிய குரலில் சொல்ல அவளை புன்னகையுடன் தன் மார்பினுள் புதைத்தவன் அவளை அணைத்தபடி உறங்க அவளும் உறங்கிப்போனாள்.
காலை குளித்து கீழே இறங்கி வர மருதவேல் வீட்டில் இல்லை. முத்துவேல் கடைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.
“நீ அம்மாவை பாரு…” என்றவன் அன்றைய தினசரி பேப்பரை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
வெளியே வந்த முத்துவேல் மகன் தன்னை பார்ப்பான் என்று பார்க்க அவன் தீவிரமாய் அதில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான். தோரணை உடல்மொழி அனைத்திலும் போலீஸ்க்காரனாய் அமர்ந்திருந்தவனை பார்த்துக்கொண்டே,
“அன்பு…” என மனைவியை அழைத்தவர்,
“உன் மகன்கிட்ட அந்த பொண்ணை கூட்டிட்டு நம்ம கடைக்கு வந்து சுத்தி காண்பிக்க சொல்லு. நம்ம வழமை எல்லாம்…” என்று நிறுத்தியவர் இன்னும் தன்னை திரும்பி பார்க்காத மகனை பார்த்து முறைத்துவிட்டு,
“நம்ம வழமை பழக்கம் எல்லாத்தையும் நீ சொல்லி குடு. நீயும் விமலாவும் சேர்ந்து சொல்லி குடுங்க. கத்துக்கட்டும். புரியனும்ல. எத்தனை நாளைக்கு தனியா இருக்கறது? இங்க தான வந்தாகனும்…” என்று சொல்லி சாமி கும்பிடும் அறைக்குள் செல்ல,
“நீ உட்கார்ம்மா…” என்ற அன்புக்கரசி,
“தூங்குறீங்கன்னு தான் ரூம்க்கு எதுவும் அனுப்பலை. டீ குடிக்கிறியா?…” என கேட்க,
“இல்லை வேண்டாம் அத்தை….” என எழுந்துகொண்டவள் தன் கணவனை பார்க்க அவன் நாளிதழில் ஆழ்ந்திருந்தான்.
“நானும் உங்களோட வரேன் அத்தை…” என்று அன்புக்கரசியுடன் சென்றுவிட்டாள்.
காலை உணவாக இட்லி ஆவி பறக்க வெந்து கொண்டு இருந்தது. ஒரு கடாயில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதங்கிக்கொண்டு இருக்க,
“என்ன பன்றீங்க அத்தை, சொல்லுங்க நானும் பன்றேன்…” என்றாள் அபூர்வா.
“எப்பவும் போலதான். இட்லி, சட்னி, சாம்பார், கேசரி, வடை. இது உன் புருஷனுக்கு ஸ்பெஷல்…” என்று வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வதக்கினார்.
“என்ன இது?…” என்று கேட்க அடுக்களையின் பின்பக்கத்தில் இருந்து விமலா வந்துவிட்டாள்.
“இந்தாங்க அத்தை பூண்டு தட்டிட்டேன்…” என பின் வாசலில் இருந்து.
சிறு கிண்ணத்தில் பூண்டும், மிளகும் ஒன்றிரண்டாக நைத்து கொண்டு வந்திருந்தாள்.
“அதை வச்சுட்டு அந்த கறியை வடிச்சு எடு…” என்ற அன்புக்கரசி அந்த பூண்டு, மிளகு இடித்ததை வெங்காயத்தில் போட்டு பிரட்டினார்.
“நேத்து வச்ச கோழி குழம்புல இருந்து வெறும் துண்டுகளை மட்டும் எடுத்து இந்த வெங்காயத்தோட சேர்த்து நல்லா சுருள வதக்கனும். வாசுவுக்கு இது கொள்ளை பிரியம்….” என சொல்லவும் சிரத்தையுடன் அதனை கேட்டவள்,
“அப்போ அந்த குழம்பு? வெறும் குழம்பு வேஸ்ட் ஆகிடாதா?…”
“அது ஏன் வேஸ்ட் ஆக போகுது? இட்லிக்கு தொட்டுக்கலாம். இங்க சாம்பார், சட்னியை விட இட்லிக்கு கோழிக்குழம்பு, மீன் குழம்பு தான் தொட்டுப்பாங்க. மிச்சம் ஆகாது. கடை பசங்களும் சாப்பிடுவாங்க…” என சொல்லி,
“அந்த கொத்தமல்லிஇலையை குட்டியா கட் பண்ணு…” என விமலாவிடம் சொல்ல,
“நான் பன்றேன்…” என்று வாங்கிக்கொண்ட அபூர்வா கட் செய்து கலவையில் தூவி அவர்களுடன் பேசிக்கொண்டே கோழியை பிரட்டினாள்.
“பரவாயில்லையே உடையாம பிரட்டற…” என அன்புக்கரசி சொல்ல,
“ஆமா, நான் கூட கொத்து பரோட்டா போட்டுடுவேன் தெரியுமா? கறி தனியா எலும்பு தனியா பிரிச்சுடுவேன். அந்தளவுக்கு கொதறி விட்டுடுவேன்…” என விமலாவும் சொல்ல,
“இந்தாப்பா சிகப்பு சட்டை…” என்ற வாசுதேவகிருஷ்ணன் குரல் கிட்சன் வரை கேட்க,
“யாரை கூப்பிடறான் இவன்?…” என கேட்டுக்கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்த அன்புக்கரசி நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார்.
வாசுதேவகிருஷ்ணன் பின்னால் கோபமாக இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைத்தபடி முத்துவேல் நின்றிருந்தார். அவர் அணிந்திருந்ததும் சிகப்பு கலர் சட்டை.
“அன்பு…” என்று அவர் கத்திய கத்தலில் பெண்கள் மூவருமே ஹாலிற்கு வர,
“அம்மா, அந்த சிகப்பு சட்டை திரும்ப மாட்டேன்றான். அவன் நம்ம கடைல வேலை பார்க்கற பையன் தானே?…” என கேட்க,
“வாசு….” என்ற பீதியுடன் முத்துவேலை பார்க்க எதற்கு இந்த பயம் என்பதை போல திரும்பியவனின் முகத்தில் ஒரு நொடி அதிர்ச்சியும் பின் சட்டென சிரிப்பும் வர பார்க்க முயன்று அடக்கியவன்,
“நான் கவனிக்கலை…” என்றவன் பின்,
“அந்த பையனை கூப்பிட்டு நம்ம வீட்டுக்கு ப்ளம்பிங்க்கு வரவனை வர சொல்லுங்க. எங்க ரூம்ல பைப்லைன்ல அடைக்குது. ஷவர் வேற மாத்தனும்…” என்று பேச்சை மாற்ற,
“ம்ஹூம், அவன் வேண்டாம். விலை கம்மின்னு லோக்கல்ல வாங்கிருவான். நான் பார்த்து மாத்தறேன். சொல்லு அவன்ட்ட….” என மகனின் மேல் உள்ள கோபத்தை மறந்தவராக சொல்லிவிட்டு,
“சாப்பாட்டை கடைக்கு குடுத்தனுப்பு. நான் போய் பெரியவனை அனுப்பறேன்…” என்றவர் வாசலில் நின்றவனை பார்த்து,
“டேய் சிகப்பு சட்டை…” என முத்துவேலும் வாய்தவறி ஏதோ ஞாபகத்தில் சொல்லி பின்,
“டேய் பரமா, வாடா இங்க…” என கத்தியவர்,
“எனக்குன்னு வாய்க்கறானுங்க வாய்ல நுழையாத பேர் வச்சுட்டு…” என கடுகடுத்துக்கொண்டே,
“அவன்கிட்ட சாப்பாட்டை குடுத்து அனுப்பு. அவனுக்கு சாப்பாட்டை போட்டுட்டு குடுத்தனுப்பு…” என சொல்லி,
“அம்மா, சாப்பாடு குடுப்பாங்க. வாங்கிட்டு வா. இப்ப முன் ஹால்ல உட்காரு. சாப்ட்டுட்டு வாங்கிட்டு வா…” என்று அவனை அனுப்பிவிட்டு,
“கோழி வறுத்துருக்க தான. அதையும் எலும்பில்லாம அஞ்சாற போட்டு அனுப்பு…” என்று உத்தரவாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட அவர் தலை மறையும் வரை அமைதியாக இருந்த விமலாவும், அன்புக்கரசியும் சட்டென வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க வாசுதேவகிருஷ்ணனுக்குமே அடக்கமாட்டாமல் சிரிப்பு தான்.
அபூர்வா என்னடா இது என்பதை போல பார்த்துக்கொண்டு நின்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் மருதவேல் வந்துவிட்டான்.
அனைவரும் பேரும் பேச்சும் சிரிப்புமாய் முதல் நாள் இரவை போல அனுபவித்து உண்டனர்.
அதன் பின் வீட்டிற்கு அழைத்து குடும்பத்தினரிடம் பேசி முடித்தவளை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினான் வாசுதேவகிருஷ்ணன். கிளம்பும் முன்னரே,
“வாசு நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க குடும்பத்தோட போகனும். இன்னைக்கே போயிருக்கனும். வீட்டுல கவுச்சி வச்சிட்டு வேண்டாம்னு தான். நாளைக்கு நாளும் நல்லா இருக்கு. போய்ட்டு வந்திருவோம்…” என சொல்ல,
“சரிங்கம்மா, ஏற்பாடு பண்ணுங்க…”
“நாளை மறுநாள் மாப்பிள்ளை மறுவிருந்து, ஞாபகம் இருக்குல. எந்த வேலையும் வச்சுக்காத…” என ஞாபகப்படுத்த அபூர்வாவின் முகம் இப்பொழுதே மலர்ந்துவிட்டது.