“என்ன கேட்டீங்க?…” என மீண்டும் கேட்க,
“இல்லை இதுவரை எத்தனை பேர்ன்னு கேட்டேன்…”
“இல்லை புரியலை. என்ன எத்தனை பேர்?…”
“விண்டோ வழியா கவுன்ட் பண்ணிட்டே வந்த தானே? ஹாஸ்பிட்டல் விட்டு நாலு கிலோமீட்டர் வந்துட்டோம். அதான் உன்னோட கவுண்டிங் நம்பர்ஸ் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்…” என்றான் கிண்டலாய் சிரிக்காமல்.
“கோவமா இருக்கறீங்களா?…” என்றாள் அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல்.
“இல்லையே ஏன்?…”
“எனக்கு தோணுச்சு…”
“நான் கோபமாவே இல்லை. உனக்கு எப்படி தோணும்?…”
“அதே மாதிரி தான் நானும் கவுன்ட் பண்ணவே இல்லை. உங்களுக்கு எப்படி தோணுச்சு?…” என்று அவனிடமே திருப்பி கேட்க சட்டென காரை நிறுத்திவிட்டான்.
“பார்ரா பூர்வி பேசறாங்க. சிட்டிக்கு கோபம் வந்துருச்சு…” என்று சிரிக்க அவள் பதில் பேசவில்லை.
“இப்ப நீ தான் எதையோ நினைச்சுட்டு இருக்க பூர்வி. என்ன?…”
“ஒண்ணுமில்லையே. ஏன்?…” என அவள் திருப்பி கேட்க,
“சும்மா தான். ஒண்ணுமில்லைன்னா உன் மடியில உட்காரலாம்னு தான்…” என சிரிக்காமல் சொல்ல,
“செஞ்சாலும் செய்வீங்க…” என்றாள் அவளும் விடாமல். பதிலுக்குப்பதில் அவனிடம் அவள் பேச கேட்பவனுக்கு உலகின் ஒட்டுமொத்த குளிர் பிரதேசத்தின் மொத்த குளுமை.
“செஞ்சாலும்னு உனக்கு டவுட் வேறயா?…” என்றவனிடம்,
“ஐயோ போதும்ங்க. வீட்டுக்கு போவோம் ப்ளீஸ்…” என்றவள் அவனின் முகம் பார்க்காமல் இருக்க,
“இப்ப என்னன்னு என்னை பார்க்காம கூட பேசற?…”
“பின்ன ஹாஸ்பிட்டல்ல வச்சு நீங்க ஏன் அப்படி பண்ணுனீங்க? அதுவும் முகேஷ் அண்ணாவை கண்ணை மூடிட்டு…” என சொல்லி முகத்தை திருப்ப அவளின் இந்த செயலில் ரசனையாக பார்த்தவன்,
“என்ன செஞ்சேனாம் கண்ணை மூடி?…” என உல்லாசமாய் சிரித்தவன் காரை கிளப்ப போக,
“என்னால பதில் பேச முடியாதுப்பா உங்களோட…” என்றவளின் பதில் இன்னும் அட்டகாசமாய் சிரித்தவன்,
“பழகிக்கலாம்…” என்றான் விடாமல். வெட்கம் பூசிய முகத்துடன் எங்கே சென்று ஒளிந்து கொள்வது என தெரியாமல் முகத்தை மூடிக்கொள்ள,
“ஓகே ஓகே, இனி பப்ளிக்ல பேசலை. பார்க்கலை. கண்ணடிக்கலை. முத்தம் குடுக்கலை. கையை பிடிச்சு…” என்றவனின் வாயை பொத்தியவள்,
“போதும். இனி செய்யாதீங்கன்னு கூட சொல்லமாட்டேன்…” என அபூர்வா அவனிடம் சரணடைய, சிரிக்கும் கண்களுடன் அவளை பார்த்தவன்,
“ட்ரைவிங் பண்ண வேண்டாமா?…” என்றான் மூடிய கரங்களுக்குள். அவன் பேசியது புரியாமல் கையை எடுத்துவிட்டு,
“என்ன சொன்னீங்க?…”
“என்னை ட்ரைவிங் பண்ண விடாம டைவர்ட் பன்ற நீ. என் மைண்டை மெஸ்மரிசம் பன்ற நீ. என்னை ஆட்டிப்படைக்கிற நீ என் கண்மணி…” என்று சொல்ல,
“ஏமாத்தறீங்க, இவ்வளோ லென்த்தியா அப்போ நீங்க பேசலை…” என்றால் சீரியஸாக.
“நீ தான் என்னை பேச விடாம அரஸ்ட் பண்ணி வச்சிருந்தியே. அதான் கையை எடுத்ததும் மொத்தமா சொன்னேன்…”
என்ன பேசினாலும் அதற்கொரு பதில் அதுவும் அடுத்து கேள்வி கேட்க முடியாதபடி பதில் கொடுப்பவனை பார்த்தவளுக்கு தான் பேசாமல் இருந்தாலே உசிதம் என்று தோன்றியது.
“நான் ஒன்னும் பண்ணலை. வீட்டுக்கு போகலாம்…” என மீண்டும் சொல்ல,
“தூங்கறதுக்கா பூர்வி?…” என்றான் விஷமமாய் புன்னகைத்து.
அவ்வளவு தான். தன் முகத்தை மூடியவள் ஒருக்களித்து ஜன்னல் புறமாய் சாய்ந்தபடி திரும்பிக்கொண்டாள் அபூர்வா. அவளின் செயலில் அடக்கமாட்டாமல் சிரித்தவன் அந்த இருக்கையை நன்றாக சாய்த்துவிட்டு,
“இப்பவே நிஜமா தூங்கிரு…” என சொல்ல கண்களை இன்னமும் மூடிக்கொண்டாள். அவனை திரும்பி பார்க்கவே நாணம் தடுத்தது. அவளின் காதை லேசாய் நிமிண்டியவன்,
“காரை கிளப்பறேன், நேரா வீட்டுக்கு…” என்று தகவலாய் சொல்லிவிட்டு முகத்தில் உறைந்திருந்த ரகசிய புன்னகையுடன் வீட்டை நோக்கி சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
வீட்டிற்கு சென்றதும் அவனிடம் தனியே சிக்காமல் அன்புக்கரசியுடன் சுற்ற குளித்துவிட்டு வந்து அவளை காணாமல் தேடியவன்,
“அண்ணி பூர்வா எங்க?…” என கேட்டான்.
“அத்தை கூட தான் வெளில நின்னுட்டு இருந்தா வாசு…” என விமலா சொல்லவும் அங்கே சென்றவன் அன்புக்கரசியுடன் புதினாவை பறித்துக்கொண்டிருந்தவள் கூந்தலை பிடித்து லேசாய் இழுத்து,
“ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தா குளிக்க வேண்டாமா? இங்க நின்னுட்டு இருக்க? உன்னை ரூம்ல தான் இருக்க சொன்னேன்…” என கடிய,
“டேய் வீட்டுக்குள்ள கூட இல்லை. இங்க தோட்டத்து பக்கம் தான் இருந்தா. இப்ப எதுக்கு குதிக்கிற? நீ போய் வேலையை பாரு. நான் அனுப்பறேன்…” என அன்புக்கரசி சொல்ல,
“அம்மா…” என அவன் அழுத்தமாய் அழைக்க,
“பிடிவாதம். அப்படியே உங்கப்பா மாதிரி…” என அவனின் கோபத்தில் திட்டியவர்,
“லட்சுமி நீ போய் குளிச்சுட்டு வா. நான் டீக்கு வடைக்கு செய்யறேன்…” என சொல்லி,
“பட்டுப்புடவை கட்டிக்கோ. இன்னைக்கு தெரிஞ்சவங்க வராங்க வீட்டுக்கு. கல்யாணத்துக்கு வர முடியலை அவங்களால…” என்றதும் சரி என்று சொல்லி உள்ளே சென்று மாடியேறிவிட மகனிடம் திரும்பியவர்,
“இப்படியே கத்திட்டு இருக்காத. பொறுமையா சொல்ல வேண்டியது தானே? நேத்து தான் நம்ம குடும்பத்துக்கு வந்திருக்கா. புதுசு தானே?…” என கோபமாய் ஆரம்பித்து கனிவாய் முடிக்க அதை கண்டுகொள்ளாதவனாய்,
“வெறும் வடை மட்டுமா? கேசரியும் செய்ங்களேன். அன்னைக்கு நிச்சயத்துல என் மாமியார் செஞ்சிருந்தாங்களே அதே மாதிரி…” என அன்புக்கரசியை வெறுப்பேற்றிவிட்டு செல்ல முதலில் அதனை புரியாதவர் பின் “இவனை” என கோபமாய் நினைத்து,
“வரட்டும் வச்சுக்கறேன். என்கிட்டையே எத்தனை பேச்சு இவனுக்கு…” என்று முணுமுணுத்து இன்னும் கொஞ்சம் புதினாவை பறிக்க,
“இன்னைக்குத்தான் உன் மகன் பேசறானாக்கும். பார்த்தியா அதுக்குள்ளே மாமியார் புராணம் பாடறதை…” என மகன் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த முத்துவேல் சொல்ல,
“என்ன செய்ய நன் வாங்கி வந்த வரம் அப்படி. புள்ளையும் மாமியார் புராணம். என் புருஷன் நீங்களும் என் மாமியார் புராணம். என் புராணத்தை பாடத்தான் ஒருத்தரும் இல்லை…” என போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்ல,
“என்னது இவ மாமியார் புராணத்தை நான் பாடினேனா?…” என்றவர்,
“அன்பு, நான் எங்க உன் மாமியார் புராணத்தை பாடுனேன். சும்மா உன் புள்ளை மாதிரி என்னை சேர்க்காத. நான் ஒன்னும் உன் மாமியார் புராணத்தை பாடலை…” அன்புக்கரசி சொன்னதை முழுவதும் உணராமல் முத்துவேல் பேச,
“அதத்தான் நானும் சொன்னேன். எனக்கெங்க அந்த குடுப்பினை இருக்கு. என் புள்ளை அவனோட மாமியார் புராணத்தை பாடின மாதிரி ஒத்த நாள் கூட நீங்க உங்க மாமியார் புராணத்தை பாடலை. என் மாமியாரை பத்தி தான் பாடுனீங்க…” என சொல்ல இன்னுமே முத்துவேலுவுக்கு விளங்கவில்லை.
“என் மாமியார் யாரு?…” என்றார் அன்பு,
“யாரு?…” என அப்பாவியாய் கேட்க,
“அது தான் உங்க அம்மா, உங்கம்மாவை தான தூக்கி பேசுவீங்க. என் அம்மாவையா பேசுவீங்க? ஒருநாள் ஒரு பொழுதாச்சும் எங்கம்மா சமையல் அப்படின்னு சொல்லியிருப்பீங்களா?…”
“அன்பு…” என திகைத்தார். என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பார்க்க,
“அதத்தான் சொன்னேன், அம்மாவாவும் குடுப்பினை இல்லை. உங்க பொண்டாட்டியாவும் குடுப்பினை இல்லை…” என்று முந்தானையை இழுத்து மூக்கை துடைக்க,
“அன்பு அழறியா?…” என்றார் முத்துவேல்.
“ம்க்கும், அழுதா மட்டும் யார் என்னை மடியில போட்டு சீராட்ட போறா? அட போங்க. போயி முகத்தை கையை, காலை கழுவிட்டு வாங்க. போயி உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னி செய்யறேன். அதான உங்களுக்கு புடிக்கும்…” என்றவர்,
“இப்படியே கடைசி வரைக்கும் ஒரு ஒருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செஞ்சே என் காலம் ஓய்ஞ்சிரும். எனக்கு என்ன புடிக்கும்னு கேட்க யாரு இருக்கா?…” என்று புலம்பிக்கொண்டே அவர் வேலையை பார்க்க அவரின் பின்னோடு வந்த முத்துவேல்,
“சரி சரி மூக்கை சீந்தாத. என்ன வேணும்னு சொல்லு. வாங்கிட்டு வாரேன்…” என்றார் எங்கோ பார்த்துக்கொண்டு.
“ஆத்தே என் ராசா, நிசமாத்தான் சொல்லுறீங்களா?…” என அதிசயித்து கேட்க,
“அட ஆமா, சொல்லு வேகமா. யாராச்சும் வந்துற போறாங்க…” என படபடக்க,
“ஒன்னும் வேண்டாம். எனக்கு பாவம் பார்த்து ஒன்னும் வாங்கிட்டு வர வேண்டாம்…” என முறுக்கிக்கொள்ள அவரின் அந்த முகம் முத்துவேலுக்கு சிரிப்பாய் இருந்தது.
“அன்பு நீ இப்படி கூட பேசுவியா?…” என அதிசயித்தவர்,
“சரி சொல்லு…” என நிற்க,
“நம்ம பழைய கடைல முன்னாடி தேன்மிட்டாய் வாங்கிட்டு வருவீங்களே. அது வேணும். ஆனா நீங்க எப்படி வாங்கிட்டு வருவீங்க?…” என கேட்டு கிடைக்காதென்றும் சொல்ல,
“அட கூறுகெட்டவளே, அதுதான் நம்ம கடையில சரம் சரமா தொங்குதே. கடைக்கு வரப்ப நாலு மிட்டாயை அள்ளி வாய்ல போட வேண்டியது தான?…”
“அது என்னத்துக்கு? எனக்கு தெரியாதாக்கும்? நீங்க எதுக்கு கேட்டீங்களாம்? சரி எனக்கு வேண்டாம். உங்க கையால வாங்கி சாப்பிடலாம்னு பார்த்தேன். எனக்கு எல்லாம் அந்த குடுப்பினை இருக்குமா?..” என ஒரே வார்த்தையில் முத்துவேலை சாய்க்க,
“சரி சரி போய் கொண்டு வரேன். திரும்பவும் ஆரம்பிக்காத…” என்றவர் அங்கிருந்து நகர அவர் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு முகத்தை நன்றாக துடைத்தவர் முத்துவேலை நினைத்து சிரித்துக்கொண்டு திரும்ப அங்கே அரிசிப்பெட்டி பின்னால் ஒண்டிக்கொண்டு நின்றாள் விமலா.
“நீ இங்க என்னடி பன்ற?…” என கேட்க,
“பின்றீங்க அத்தை. எப்படி இப்படியெல்லாம். ஆலமரத்தையே சாய்ச்சுட்டீங்க…” என்று அதிசயித்து சிரித்தபடி வெளியே வர,
“பின்ன சும்மா போறதை விட்டுட்டு மகனை பத்தி என்கிட்டையே வத்தி வைக்க பார்க்கறாரு. இவரும் தான் நிச்சயம் முடியவும் அப்படி இருந்துச்சு கேசரின்னு புகழ்ந்தாரு. இதையே மகன் சொல்லவும் பொத்துக்கிட்டு வந்திருச்சு. அன்னைக்கே ஒன்னும் சொல்ல முடியலையேன்னு இருந்தேன். இன்னைக்கு தானா சிக்கவும் பேசிட்டேன்….”
“மாமா போற வேகத்தை பார்த்தா தேன்மிட்டாய் கடையையே கொண்டு வந்திருவார் போல….” என்று விமலா கேலி செய்ய,
“வரட்டும் சேர்ந்தே சாப்பிடுவோம் எல்லாரும்…” என்றவர் வடைக்கு எண்ணையை காய வைக்க முத்துவேல் மகனை எண்ணி காய்ந்துகொண்டு சென்றார்.
“பேசாம போயிருக்கலாம். அவன் பேசினதை கேட்டு பொங்க போயி இப்ப தேன்மிட்டாய் சப்ளையர் ஆக்கிட்டான் என்னை. என் பொண்டாட்டி இத்தனை வருஷம் பேசவே பயந்தவ இன்னைக்கு குறை சொல்றா ஒரு மிட்டாய் வாங்கி குடுத்தியான்னு குத்தி காண்பிக்க வச்சுட்டான்…” என புலம்பிக்கொண்டே சென்றார் கடையை நோக்கி.