நிஜம் – 13
முத்துவேல் மீண்டும் வீட்டிற்கு வரும் நேரம் மொத்த குடும்பமும் ஹாலில் அமர்ந்து டிவியில் காமெடி ஷோ பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களிடமிருந்து கையில் இருப்பதை எப்படி மறைப்பது என யோசித்தவர் மெல்ல அப்படியே நகர்ந்து கிட்சனில் சென்று மறைந்தார்.
“அத்தை மாமா வந்தாச்சு…” என விமலா சொல்ல,
“பார்த்தேன் பார்த்தேன். கூப்பிடட்டும்…” என டிவியில் கவனத்தை வைக்க,
“அன்பு…” என சத்தமாய் குரல் கொடுத்தார் முத்துவேல். முதல் இரண்டு குரலுக்கு செவி சாய்க்காத அன்புக்கரசி மெதுவாக எழுந்து உள்ளே சென்றார்.
“சொல்லுங்க, எதாச்சும் வேணுமா? ஒரே மூட்டு வலி. வயசாகுதுல. உடனே எந்திச்சு வர முடியலை…” என ஒன்றும் அறியாதவர் போல கேட்க,
“இந்தா நீ கேட்ட தான? தேன்மிட்டாய்…” என கையில் இருந்த கவரை நீட்ட ஆசையுடன் வாங்கிக்கொண்டவர்,
“நிசமாவே வாங்கிட்டு வந்துட்டீங்க…” என சொல்லி அதனை பிரித்து வாயில் போட்டு சுவைக்க அதனை பார்த்தும் பார்க்காமல் தண்ணீர் குடிப்பதை போல திரும்பி நின்ற முத்துவேலுக்கு மனதினுள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது புதுமையாக.
“அப்பப்ப நாமளும் எதாச்சும் வாங்கி குடுப்போம். கிழவி காலம்போன கடைசில ஆண்டு அனுபவிச்சுட்டு தான் போகட்டுமே” என நினைத்தவராக தண்ணீரை குடித்துவிட்டு,
“அன்பு யாருக்கும் சொல்லாம நீ மட்டும் சாப்பிடு. எல்லாத்துக்கும் கோவில் புளியோதரை மாதிரி தூக்கி குடுத்துட்டு இருக்காத…” என்று சொல்லி திரும்ப அங்கே அன்புக்கரசி இல்லை.
“அதுக்குள்ளே எங்க போனா?” என தேடி வெளியே வர அங்கே டீப்பாயில் தேன்மிட்டாய் ஒரு கண்ணாடி பவுல் நிறைய போடப்பட்டு அனைவருமாக சேர்ந்து சுவைத்துக்கொண்டு இருந்தனர்.
“நீங்களும் வாங்க…” என்று அன்புக்கரசி அழைக்க அவரை திரும்பி வாசுதேவகிருஷ்ணன் பார்த்த பார்வையில் புதிதாய் வெட்கம் பிறந்தது முத்துவேலுவுக்கு.
“நான்… நான் ரூமுக்கு போறேன். டீ போடு…” என சொல்ல,
“அப்படியே வடையும் சூடா தட்டறேன். நீங்க முகம் கழுவிட்டு வரப்ப ரெடியா இருக்கும்…” என்று சொல்லிய அன்புக்கரசி அவரை தாண்டிக்கொண்டு உள்ளே சென்றார்.
மகனின் பார்வை இன்னமும் தன் மீதே இருக்க மருமகள்கள் இருவரும் திரும்பே இல்லை தன் புறம். தொண்டையை செருமிக்கொண்டு விரைப்பாய் உள்ளே சென்றவர்,
“இவன் வேற ஒரு மார்க்கமா பார்த்து வைக்கிறான். இந்த வயசுல எனக்கு இது தேவையா? அவ கேட்டா செவுலுல நாலு விட்டு இருக்கிறதை ஆக்கி தின்னுன்னு சொல்றதை விட்டுபோட்டு நானும் இளந்தாரி கணக்கா போயி கை நிறைய அள்ளிட்டு வந்திருக்கேன்” என தன்னையே நொந்துகொண்டார்.
கடையில் மருதவேல் கண்ணை மறைத்து எடுத்து வருவதற்குள் கடை பையன் பார்த்து இவரிடம் கேட்டு பார்சல் கட்ட ஐயோவென்றானது முத்துவேலுக்கு.
“என்னங்க இன்னும் வரலையா?…” என்று அவரின் அறைக்கே வந்து அன்புக்கரசி கூப்பிட இடது கையை சுவற்றில் ஊன்றி வலது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு சோகமாய் அவர் நின்றிருக்க,
“என்னாச்சுங்க, வயிறு வலியா?…” என்று அக்கறையுடன் அன்புக்கரசி கேட்கவும் கோபமாய் திரும்பினார்.
“உன்னை என்ன சொன்னேன்? நீயா தனியா வச்சு சாப்பிடுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள கடை பரப்பிட்ட…” என எரிந்துவிழ,
“புள்ளைகளை விட்டுட்டு நான் என்னைக்கு சாப்பிட்டிருக்கேன்?…” என பயந்தது போல பாவமாய் பேச,
“போ போயி எடுத்து வை. ஒரு வார்த்தை சொல்லிட கூடாது. உடனே மூஞ்சியை தூக்கி வச்சுப்ப…” என்று கத்த ஒன்றும் பேசாமல் வெளியே வந்துவிட்டார். வந்ததும் மகனிடம்,
“வாசு லட்சுமியை நம்ம கடைக்கு கூட்டிட்டு போய்ட்டு வா. அவளும் பார்க்கனும்ல…” என சொல்ல,
“நாளைக்கு போறோம்மா, இப்ப வேண்டாம். நாளைக்கு கோவிலுக்கு போகும் முன்ன அங்க போய்ட்டு…”
“என்னது கோவிலுக்கு போகமுன்னவா? விடியற்காலையிலையே கோவிலுக்கு கிளம்பனும். ஆறுமணிக்கு இங்க இருந்து போகனும் பார்த்துக்கோ…” என்று சொல்லி முடிக்க முத்துவேல் வந்துவிட்டார்.
அவருக்கு சிறிய தட்டில் வடையும் சட்னியும் வைத்து நீட்டியவர் டீ எடுத்து வர செல்ல வாசுதேவகிருஷ்ணன் எழுந்து வெளியே வந்து நின்றுவிட்டான்.
முக்கியமான போன் வரவேண்டியதாக இருந்தது. அதை எதிர்பார்த்துக்கொண்டு அவன் நிற்க,
“வாசு…” என அன்புக்கரசி அழைத்தார். முகமே தயக்கமாய் இருந்தது.
“சொல்லுங்கம்மா, என்ன தனியா பேச வந்திருக்கீங்க?…”
“ஹ்ம்ம், உன் அப்பா டிவி பார்க்கறார். விமலாவும், லட்சுமியும் உள்ளே இருக்காங்க. அதான் உன்கிட்ட பேசலாம்னு…”
“சொல்லுங்கம்மா…”
“ராணி மத்தியானம் வந்திருந்தா…”
“ஹ்ம்ம்….”
“உங்களுக்கு விருந்து போடனும்னு…” என சொல்லும் பொழுதே முகத்தை சுளித்துவிட்டான்.
“இல்லை இல்லை, அங்க போக வேண்டாம். நீ அங்க வரமாட்டன்னு அவளுக்கே தெரியும்…”
“அப்பறம் எதுக்காக இதை பேசறீங்க?…”
“இல்லை அவ சமைச்சு இங்க எடுத்துட்டு வரேன்னு சொல்றா. நீ என்ன சொல்ற?…” என்று மகனின் கடுமையில் கவலையுடன் பார்த்தார்.
முத்துவேலுக்கு தெரிந்தால் சரி என்று ஏன் சொல்லாமல் கேட்டு சொல்கிறேன் என்று ஏன் சொன்னாய் என்பதை போல தான் குதிக்க ஆரம்பிப்பார் என கவலையாக இருந்தது.
அதுவும் இரண்டு நாளில் மறுவீடு செல்லும் நேரம். ராணியை அழைக்காமல் செல்ல முடியாது. இப்பொழுது போய் இது பிரச்சனையாக மாறவேண்டாம் என இருதலைக்கொள்ளி எறும்பென தவித்தார்.
“புருஷன் விஷயத்துல தோசையை பத்தா கூட திருப்பிருவேன். நான் பெத்து வச்சிருக்கறது அதை பதினாலா திருப்புமே” என உள்ளுக்குள் புலம்பியபடி மகனை பார்க்க,
“அவங்க சாப்பாட்டை நீங்க வேணும்னா சாப்பிடுங்க. நானோ, பூர்வாவோ சாப்பிட மாட்டோம். சொல்லிருங்க….”
“வாசு உன் அப்பா சமாளிக்க முடியாதுப்பா…” என்றவரை இடை மறித்தவன்,
“அதான் நாளைக்கு நாம கோவிலுக்கு போறோம்ல. நாளை மறுநாள் பூர்வா வீட்டுக்கு. வந்ததும் எங்க வீட்டுக்கு போய்டுவோம். விடுங்க…” என ஈசியாக சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டான்.
மாலை வடை சாப்பிட்டதால் இரவு ஒருவருக்கும் உணவும் இறங்கவில்லை. கொஞ்சமாக சாப்பிட்டு முடித்து உறங்க செல்ல,
“ம்மா, கருப்பட்டி டீ போடுங்களேன். ஒரு மாதிரி இருக்கு…” என நெஞ்சை நீவியபடி அவன் சொல்ல,
“எனக்கும்…” என விமலா வர அவளுடன் அபூர்வாவும்.
“உனக்குமா…” என அவளின் கன்னத்தை பற்றி அன்புக்கரசி கேட்க,
“ஹ்ம்ம், ஆமாம் அத்தை. இவங்க சொல்லியிருக்காங்க. நீங்க சூப்பரா போடுவீங்கன்னு…” என சொல்லவும் அனைவருக்குமே போட்டு முத்துவேலுக்கு கொடுத்துவிட்டு வந்து வாசலில் கேட்டை ஒட்டி போடப்பட்டிருந்த சிமிண்ட் கல்லில் வந்து அமர்ந்தார்.
கீழே சிறு சிறு ஸ்டூல்கள் போல அமரும் கற்கள் வேலைபாட்டுடன் இருந்தது. அதில் ஆளுக்கொன்றாய் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தனர்.
“பெரியவனை எங்கம்மா?…” என அன்புக்கரசி கேட்க,
“அவருக்கு டயர்டா இருக்குன்னு தூங்கிட்டார் அத்தை. தலைவலியாம். எழுப்பாதன்னு சொல்லிட்டே படுத்துட்டார்…”
“அடடா இந்த டீயை குடுத்திருக்கலாம். கொஞ்சம் தலைவலி மட்டுப்படும்…”
“எழுப்பியிருந்தா என் கழுத்தை பிடிச்சிருப்பார். விடுங்க தூங்கி எந்திச்சா சரியா போய்டும்…” என விமலா சொல்ல,
“ஹ்ம்ம், சரி சரி, போய் தூங்குங்க. காலையில ஆறு மணிக்கு ரெடியா வந்துடனும். புரியுதா?…” போங்க. நாளைக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்து துணிமணிகளை எடுத்து வைக்கனும். விழுப்புரம் போக…” என சொல்லிவிட்டு அந்த பாத்திரங்களை போட்டுவிட்டு அன்புக்கரசி உறங்க சென்றுவிட விமலாவும் எழுந்து சென்றாள்.
“வாங்க நாமளும் போவோம்…” என அபூர்வா அழைக்க,
“நீ ரூம்ல இரு பூர்வா, ஒரு கால் பேசிட்டு வரேன்…” என அவளை அனுப்ப அவனின் முகமே சரியில்லாததை போல இருந்தது. மாலை தான் குளித்துவிட்டு வரும் போது கூட அப்படித்தான் இருந்தான். (Alprazolam)
அதுவரை நன்றாக கலாட்டா செய்து பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில் சிந்தனை கோடுகள் வலுப்பெற்று இருந்தது. கேட்க முடியாததால் விட்டுவிட்டாள். ஆனால் இப்பொழுதும் அப்படியே இருக்கவும் மனது கேட்கவில்லை.
“ஒன்னும் பிரச்சனை இல்லையே…” என சஞ்சலத்துடன் கேட்டவள் மனதினுள் சட்டென முகேஷ் வந்து சென்றான்.
“பூர்வா…”
“இல்லை, நீங்க உங்க முகம் ஏதோ…” என்று பிரித்து பிரித்து பேச,
“என்ன என் முகத்தில? சொல்லேன்…” என்று மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு மெல்லிய புன்னகையுடன் கேட்க,
“இல்லை ரொம்ப யோசனை பண்ணிட்டு இருந்தீங்க. அதான் எதுவும் பிரச்சனையோன்னு…”
“உன்னை பத்தி தான் நினைச்சுட்டு இருக்கேன். நீ எப்போ என் கண்ணுக்குள்ள உன்னை தேடுவன்னு தான் யோசனை…” என சிரிப்புடன் சொல்ல,
“பொய்…”
“சரி அப்போ நீயே சொல்லு…” என மீண்டும் கேட்க,
“நீங்க பேசிட்டே வாங்க, நான் போறேன்…” என சொல்லிவிட்டு அவள் நகர்ந்துவிட அவளின் கையை பிடித்து நிறுத்தியவன்,
“உன் மொபைல் சார்ஜ் போட்டிருக்கேன். போய் எடுத்து பார்த்திட்டு இரு. வந்திடறேன்…” என்று சொல்லி அனுப்பியவன் முகம் மீண்டும் பழைய இறுக்கத்திற்கு மாறியது.
இப்பொழுது அவன் எதிர்பார்த்த அழைப்பு துரையிடமிருந்து வர அங்கிருந்து நகர்ந்தபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க துரை…”
“ஸார் அவன் இரண்டு தடவை தப்பிக்க பார்த்துட்டான். அதுவும் இத்தனை பேர் இருக்கும் போதே…”
“ஈஸிட், திரும்பவும் ஒண்ணா? ஹ்ம்ம், இது நான் எதிர்பார்த்தது தான்…”
“நம்ம டீம்ல…”
“ஐ நோ துரை…”
“பின்ன ஏன் ஸார் போட்டீங்க? வேற ஆளை மாத்துங்க…” என்றவன் பின்,
“ஸாரி ஸார், ஒரு வேகத்துல…”
“இட்ஸ் ஆல்ரைட் துரை, எனக்கு முதல் நாளே தெரியும். அது மட்டுமில்லை அங்க இருந்து என்னென்ன நியூஸ் பாஸ் ஆகுதுன்னும். வேணும்னு தான் விட்டு வச்சிருக்கேன். நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தான்…” என்றவன்,
“ஒரு வேலை இன்னொருத்தனும் இப்படி உளவாளியா இருந்தா? ரிஸ்க். இப்ப ஒரு கறுப்பாடு சிக்கிருக்கு. ஆனா நான் விரிச்சிருக்கற வலை கறுப்பாட்டுக்கு இல்லை…” என்றவனின் பேச்சில் புரியாமல் துரை இருக்க,
“ஓகே துரை, நீங்க வழக்கமான வேலைகளை பாருங்க. எதையும் கண்டுகொண்ட மாதிரி இருக்க வேண்டாம். எல்லாம் தானா நடக்கும்…”
“ஓகே ஸார், நாளைக்கு அப்டேட் பன்றேன்…”
“ஓகே குட்நைட்…” என்று சொல்லி வைத்தவன் மேலும் இரண்டு பேருக்கு அழைத்து பேசியப்பின் அதன் சாராம்சங்களை ஜெயபாலுக்கு ஓரிரு குறிப்பிட்ட வார்த்தைகளில் அனுப்பி வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு மேலே வந்தான்.
கதவு ஒரு சாய்த்து திறந்திருக்க அபூர்வா மொபைலில் வாசுதேவகிருஷ்ணன் என்ற அவனின் பிரத்யோகமான முகநூல் பக்கத்தை பார்வையிட்டுக்கொண்டு இருந்தாள்.
காக்கி உடையில் அத்தனை கம்பீரமாய் நின்றவனின் தோற்றம் மனதை அள்ளியது. இதுவரை நேரில் அந்த உடையில் இன்னும் அவனை பார்த்ததில்லை. புகைப்படத்தில் ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஹாசினியிடம் அவன் பேசியது அனைத்தும் மீண்டும் மனதினுள் வலம் வர தனக்குள் அதனை உருப்போட்டுக்கொண்டாள்.
அவன் வந்ததையும் கவனிக்காமல் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தாள். படக்கென மொபைலை பறித்தவன் அவளின் மடியில் தலைசாய்த்துக்கொண்டான்.
திடீரென அவனின் செயலில் ஒரு நொடி பதறினாலும் பின் அவனை கண்டு ஆசுவாசமானவள்,
“சொல்ல வேண்டியது தானே? ஒரு நிமிஷம் திக்குன்னு ஆகிடுச்சு…” என்று சொல்ல அவனோ அவள் லைக் செய்திருக்கும் ஒவ்வொரு போட்டோவையும், போஸ்ட்டையும் பார்த்தவன் அவளை அண்ணாந்து முறைத்து பார்த்தான்.
“என்னடி இது எல்லாத்துக்கும் கம்பு சுத்திருக்க?…” என கேட்க,
“என்ன என்ன கம்பு சுத்தியிருக்கேன்? எதுவும் நேரடியா பேச மாட்டீங்களா?…” என்று அபூர்வாவும் புரியாமல் கேட்க,
“உன் புருஷன் நான். ஒரு ஹார்ட் இல்லை. கேர் இல்லை. வாவ்னு கூட வாயை பிளக்களை. இதென்ன உப்பு சப்பில்லாம கம்பு சுத்தி வச்சிருக்க?…”
“லைக் பன்றதுக்கு பேரு கம்பு சுத்துறதா? நல்ல கண்டுபிடிப்பு. ஏன் ஹார்ட் போடனும்? கேர் பண்ணனும்?…” என சிரித்தபடி கேட்க அவனின் அட்டகாசத்தில் அபூர்வாவின் சற்று முந்தையை கவலை எல்லாம் பறந்தது.