“நீ என்ன மாதிரி என்னை ரசிச்சிருக்க, என் போஸ்ட்டை விரும்பி இருக்கன்னு நான் தெரிஞ்சுக்க தான். வெறும் குச்சியை நட்டு வச்ச மாதிரி கொடி நாட்டினா நான் என்னன்னு புரிய?…” என்றவன் அவனே அவளின் மொபைலில் இருந்து அனைத்திற்கும் ஹார்ட்டை பறக்கவிட்டான்.
“இதை நான் பண்ணனும். நீங்க இல்லை…”
“நீ வேற நான் வேறையா?…” என்று அவளின் வாயடைத்தவன் பேசிக்கொண்டே அவளின் மொபைலில் தானும் அவளுமாய் இருக்கும் போட்டோவை தேட ஒன்று கூட இல்லை.
“நாம செல்பி எடுத்துக்கவே இல்லை பாரேன். இப்ப வா…” என்று சொல்ல,
“நைட்டியோடவா? நான் மாட்டேன்…” என அவனிடமிருந்து போனை பறித்தவள் அதை அணைத்துவிட்டு,
“நாளைக்கு கோவிலுக்கு போகனும், எந்த ட்ரெஸ் உங்களுக்கு எடுத்து வைக்கட்டும்?…” என்றதும் தான் அவனுக்கும் ஞாபகம் வர அதற்குள் ஜெயபாலிடம் இருந்து மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டது.
“அந்த கப்போர்ட்ல இருக்கு. நீயே எடுத்து வை. வரேன்…” என்றவன் ஒரு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு டேபிளில் சென்று அமர்ந்தான்.
அவன் வருவான் என காத்திருந்தவள் ஒரு கட்டத்தில் உறங்கியே விட காலையில் அவன் எழுப்பி தான் கண் விழித்தாள். வாசுதேவகிருஷ்ணன் நன்றாக குளித்து தான் எடுத்து வைத்திருந்த உடையில் தயாராகி நின்றான்.
“என்ன கிளம்பிட்டீங்களா?…” என கண்ணை கசக்கியபடி கேட்க,
“நீ எழுப்புவன்னு பார்த்தேன். நல்லா தூங்கின. அதான் நானே எழுந்துட்டேன், கிளம்பிட்டேன்…” என்றவன்,
“எட்டு மணி ஆகிடுச்சு. கிளம்புவோமா?…” என சொல்ல,
“அய்யோ எட்டா? போச்சு, அத்தை ஆறுக்கே கீழே வர சொன்னாங்க. அலார்ம் வைக்காமலே தூங்கிட்டேன். போச்சு போச்சு…” என புலம்பிக்கொண்டே குளித்துவிட்டு வேக வேகமாய் எடுத்து வைத்திருந்த புடவையை சுற்றிக்கொண்டு வெளியே வந்தவள் ஈர தலையை அப்படியே வாரி தளர்வாக பின்னல் போட்டுவிட்டு,
“ஹ்ம்ம், போகலாம்…” என்றவளை அவன் பிடித்து நிறுத்தி எதுவோ சொல்ல பார்க்க அவள் விடவில்லை. பேசிக்கொண்டே இருந்தாள்.
“ஆமா எல்லாரும் போய்ருப்பாங்களா? திட்டுவாங்களோ? ப்ச் என்னைக்கும் இவ்வளவு தூங்க மாட்டேன். இன்னைக்கு எப்படி?…” என வாய் ஓயாமல் புலம்புக்கொண்டே கதவை திறந்து கீழே இறங்கி வர அன்புக்கரசி டீ போட்டு முடித்திருந்தார்.
“ஸாரி, ஸாரி அத்தை. என்னால தான். நான் தான் தூங்கிட்டேன். எனக்கே தெரியலை. அசந்துட்டேன் போல. இப்ப கோவிலுக்கு போக முடியுமா?…” என்று அவரை பேச விடாமல் அபூர்வாவே பேச,
“உனக்கு என்ன ஆச்சு? பாதி தூக்கத்துல இருந்து எழுந்து வந்துட்டியா என்ன?…” என கேட்க,
“பாதி தூக்கமா? அத்தை மணி எட்டாகிடுச்சுன்னு அவங்க தான்…” என சொல்ல,
“நல்லா ஆச்சு போ. ரூம்ல தான் பார்க்கலை. கீழே வரப்போவுமா கவனிக்கலை. பாரு இன்னும் விடியவே இல்லை. நான் கூட இன்னும் குளிக்கலை. ஐஞ்சு மணி ஆக இன்னும் பத்து நிமிஷம் இருக்கு…” என்று சொல்லி அவளின் தலையை பிடித்து ஆட்டியவர்,
“வந்ததும் வந்துட்ட, இதை உன் மாமாவுக்கு குடுத்துட்டு வந்து டீ போடறேன் குடி…” என சொல்ல,
“இருக்கட்டும் அத்தை, நானே போடறேன்…”
“அப்ப சரி, நேத்து பால் ப்ரிட்ஜ்ல இருக்கு. எடுத்துக்கோ. நமக்கு வழக்கமான பால் ஊத்தறவன் ஐஞ்சரைக்கு தான் வருவான். அதுக்கு முன்னாடி வந்தா வாங்கி வச்சிடறையா? அபிஷேகத்துக்கும் சொல்லியிருக்கேன். அதுக்கும் சேர்த்தே தனி கேன்ல கொண்டு வந்துருவான்…” என்றதற்கு எல்லாம் அவள் தலையசைக்க,
“இனிமே அவன் என்ன சொன்னாலும் உடனே நம்பிடாத. அவங்கப்பாவையே ஐபிஎஸ் ட்ரைனிங் முடிஞ்சு வந்து நடு ராத்திரி ரெண்டரைக்கு வாக்கிங் போக வச்சவன். பார்த்துக்க…” என்று இலவசமாக சொல்லி செல்ல,
“நல்ல அம்மா…” என வாசுதேவகிருஷ்ணன் அடுக்களை வாயிலில் நின்று சொல்ல,
“அதனால தான்டா நீ எனக்கு வந்து பிறந்திருக்க. வேற ஒருத்தினா சமாளிப்பாளா?…” என்று ஒரே போடாக போட,
“டீ ஆறிருக்கும்…”
“அது என் கவலை. பாரு இவ வந்து நின்னு பேசவுமே மூடிட்டேன். இப்ப போய் குடுத்தா குடிக்கிற சூட்டுக்கு சரியா இருக்கும். உடனே கொண்டு போய்ருந்தாலும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் குடிப்பார்…” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
அவர் போன பிறகு மெதுவாய் உள்ளே வந்தவன் அபூர்வாவின் முகம் கோபமாக இருப்பதை கண்டு சிரிப்புடன் பின்னால் இருந்து அணைத்துக்கொண்டான்.
“பூர்வி கோபமா இருக்கீங்க போல?…” என்று அவள் கன்னத்தோடு இழைந்தபடி கேட்க,
“நீங்க செய்ங்க, செய்ங்க. எனக்கும் நேரம் வரும்…” என்று உர்ரென முகத்தை வைத்து சொல்ல அதிரடியாக சிரித்தவன்,
“வெய்ட்டிங் கண்மணி…” என்று இடுப்பை இறுக்க,
“நான் டீ போடறதா வேண்டாமா?…” என்றாள் இன்னும் கோபம் குறையாத குரலுடன்.
“ஹேய் நிஜமா டென்ஷன் ஆகிட்டியா?…” என்று தன் புறம் திருப்பி கேட்க,
“ஆகமாட்டாங்களா? அத்தை என்ன நினைச்சிருப்பாங்க. நானும் நீங்க சொன்னதை லூஸு மாதிரி நம்பிட்டேன். ரூம்ல தான் கர்ட்டன்ஸ் மூடி இருந்தது. கீழே வந்தும் நான் கவனிக்கலை பாருங்க. எல்லாரும் என்ன நினைப்பாங்கன்ற பதட்டத்துல எதையும் யோசிக்கலை…” என்று முரண்டுபிடிக்கும் குரலில் சொல்ல,
“சும்மா ஒரு ஜாலிக்கு. ஆனா நான் சொல்றதுக்குள்ள நீயா பேசிட்டு கீழே இறங்கிட்ட. நான் என்ன பண்ண?…”
“நான் லூசாகறது உங்களுக்கு ஜாலியா?…” என்றாள் சீரியஸான குரலில்.
“உண்மையா ஜெர்க் ஆகிட்டேன். நீ இவ்வளோ சென்ஸிட்டிவா எடுத்துப்பன்னு தெரியாம போச்சு…”
“கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகியிருக்கு. கோவிலுக்கு போகனும்னு சொல்லியும் இவ்வளோ லேட்டா வெளில வந்தா என்ன நினைப்பாங்க?…”
“என்ன நினைப்பாங்க?…” என்றான் அவளை போலவே.
“நான் பேசவே மாட்டேன். போங்க…” என்று மீண்டும் திரும்பிக்கொள்ள,
“நான் பேசறேன். நீ கேளு…”
“அதையும் கேட்க மாட்டேன். ஏமாத்துவீங்க…” என சொல்லி டீ தூளை எட்டி எடுக்க அவனின் கரங்களின் சில்மிஷத்தில் துள்ளி விலகியவள்,
“பால் சூடா இருக்கு. தட்டினா கால்ல தான் கொட்டும். கோவிலுக்கு கிளம்பும் போது போய்…”
“இதெல்லாம் அநியாயம்டி. சும்மா பார்த்துட்டே இருக்கத்தான் கல்யாணம் பண்ணினேனா?…” என்றவனின் வாயை பொத்தியவள்,
“பேச கூடாது, நீங்க பேசறதுக்கு எல்லாம் யோசிச்சு யோசிச்சே என் மண்டை காயுது. போய் உட்காருங்க. டீ எடுத்துட்டு வரேன்…”
“எனக்கும் பொழுது போக வேண்டாமா?…” என்றவனை முறைக்க,
“ஹ்ம்ம்ம், ஓகே ஓகே. சாப்பிட எதாச்சும் எடுத்துக்கறேன். நைட் எல்லாம் தூங்கவே இல்லை…” என்று இயல்பு போல சொல்லியவனை இப்பொழுது நன்றாக திரும்பி அவள் பார்க்க,
“ஹேய் நிஜமாவே தூங்கலை பூர்வி. ஜஸ்ட் கேஷுவலா தான் சொன்னேன். உன்னை சீண்ட சொல்லலை. நம்பிடு…” என்று சொல்லியவனை கண்டு சிரித்தவள்,
“உங்களை நம்ப கூடாதுன்னு அத்தை சொல்லிருக்காங்க…” என்று சொல்ல,
“நேத்து தேன்மிட்டாய் வந்ததுல இருந்து அம்மா சரியில்லை. ஓவர் பேச்சா இருக்கே…” என்று சொல்லியபடி பிஸ்கெட் முறுக்கு என சிலபல நொறுக்குத்தீனிகளை அள்ளிக்கொண்டு ஹாலுக்கு சென்று அமர்ந்தான்.
அரைமணி நேரத்தில் மருதவேலும், விமலாவும் இறங்கி வர மருது முகமே உர்ரென இருந்தது.
“இன்னுமாடா உனக்கு தலைவலி குறையலை?…” என வாசுதேவகிருஷ்ணன் கேட்க அபூர்வா அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனாள். அவள் சென்றதும்,
“நேத்து அப்பாக்கிட்ட ஒன்னு கேட்டேன்டா, காரணமே இல்லாம ரொம்ப திட்டிட்டாரு. அதான் இன்னும் டென்ஷனா இருக்கு…” என சொல்ல,
“இதென்ன புதுசா அழுதுட்டு நிக்கற? உன்னை தான் வச்சு செய்வார்ல…”
“போடா டேய், நான் சொன்னா நீ ஷாக் ஆகிடுவ…” என்றவன் குரலை இறக்கிக்கொண்டு,
“அப்பா நேத்து நிறைய தேன்மிட்டாய் எடுத்துட்டு போனாருடா. வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு திரும்ப கடைக்கு வந்து மிட்டாய் எடுத்துட்டு போய்ருக்காரு. நைட்ல கடை சாத்தறப்போ கேட்டேன் நான். நான் என்னவோ கணக்கு கேட்ட மாதிரி எகிறு எகிறுன்னு எகிறிட்டாரு…”
“நான் என்ன யாருக்கு குடுத்தீங்கன்னா கேட்டேன். ப்ச், என்னடா இதுன்னு ரொம்ப கஷ்டமா போச்சு…” என்று பாவமாய் அவன் சொல்லவும் தொடையை தட்டி தட்டி சிரித்தவன்,
“இரு வாரேன்…” என்று உள்ளே சென்று ஒரு டப்பாவை கொண்டு வந்து காண்பிக்க அதில் தேன்மிட்டாய்கள் மிச்சம் இருந்தது.
“அம்மாவுக்கு தான் அப்பா எடுத்துட்டு வந்திருக்கார். யாருக்கு தெரியாம குடுக்கனும்னு நினைச்சா அம்மா எல்லாருக்கும் குடுத்தாச்சு. மனுஷனுக்கு வெட்கமா போச்சு போல. அதான் உன்கிட்ட குமுறிட்டார்…” என சொல்லி இன்னும் சிரிக்க முத்துவேல் சட்டை பட்டனை மாட்டியபடி வெளியே வர,
“டேய் ப்ரோ, தேன்மிட்டாய் சாப்பிட்டா தலை வலி பறந்துரும். எடுத்து வாய்ல நாலு போடு…” என வாசுதேவகிருஷ்ணன் நமுட்டு சிரிப்புடன் சொல்ல,
“அன்பு…” என வேகமாய் முத்துவேல் அழைக்க,
“ரூம்க்குள்ள தான இருந்தேன். உள்ளயே சொல்ல வேண்டியது தானே?…” என்றபடி தலையில் பூவை சுற்றிக்கொண்டு அன்புக்கரசி வெளியே வர பல்லை கடித்தார் முத்துவேல்.
“வண்டி வந்திருச்சான்னு பார்க்கறேன். சீக்கிரம் கிளம்பி வெளிய வர பாரு. போற வழியில சாப்பிட்டுக்குவோம்…” என்றவர்,
“இந்த சிறுதீனியை வேணும்னா உன் பசங்களை எடுத்துக்க சொல்லு. அப்பவாச்சும் பேச்சை குறைச்சுட்டு வாய்க்கு வேலை குடுப்பாங்க…” என சொல்ல மருதவேலும் வாசுதேவகிருஷ்ணனும் சேர்ந்து சிரிக்க அங்கே நிற்கமாட்டாமல் விறுவிறுவென வெளியேறிவிட்டார்.
“வர வர அவரை ரொம்ப படுத்தறீங்கடா….” என்று புலம்பியபடி கோவிலுக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே சென்று நிற்க வண்டியும் வந்துவிட்டது.
“இதுக்கு நம்ம இன்னோவாவை எடுத்தாலே போதும். உங்க வீட்டுக்காரர் கேட்கனுமே? ஆறு பேர் போக இவ்வளோ பெரிய வண்டி…” என்று வாசுதேவகிருஷ்ணன் சொல்ல,
“வாசு…” என்று அன்புக்கரசி சொல்லும் முன் அனைவரும் வண்டியில் ஏறியிருக்க கடைசியாக ராணி வந்து ஏறவும் அன்புக்கரசியை முறைத்து பார்த்தான் அவன்.
கெஞ்சும் பாவனையுடன் அவர் முத்துவேலை காண்பிக்க அவரோ கோபத்துடன் ராணியிடம்,
“அண்ணன் பக்கத்துல உட்காரும்மா…” என தன்னருகே அமர்த்திக்கொண்டார்.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை..” என சலித்துக்கொண்டான்.
சென்னையில் இருந்து மூன்று மணிநேர தொலைவில் அந்த கோவில் இருக்க இவர்கள் செல்ல தயாராக காத்துக்கொண்டிருந்தார் பூசாரி.
பொங்கல் வைத்து பூஜை சிறப்பாக முடிய அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு அதன் பின்னர் தான் கிளம்பினார்கள்.
மறுநாள் காலை உணவிற்கே தினேஷும், மகிழும் வந்து சேர்ந்தனர். உணவை முடித்துக்கொண்டு முத்துவேல் சொந்தங்களுடன் பெரிய வேனில் கிளம்ப மருதவேல், விமலா, மகிழ், தினேஷ், அபூர்வா வாசுதேவகிருஷ்ணன் ஆறு பேரும் அவர்களின் காரில் கிளம்பினார்கள்.
செல்லும் பொழுதே சொல்லிவிட்டார் முத்துவேல் அங்குமிங்கும் சுற்றாமல் தங்களுடனே விழுப்புரம் வந்து சேர வேண்டும் என்று.