நிஜம் – 14
முத்துவேல் குடும்பத்தினர் விழுப்புரம் வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வாசுதேவகிருஷ்ணன் கார் வந்து சேரவில்லை.
“உன் மகன் தனியா வாரேன்னு சொல்லும் போதே தெரியும் இப்படி ஏடாகூடமா செய்யுவான்னு. பாரு ஊரே இங்க காத்து கிடக்குது. இவனுக்கு ஊர்வோலம் போவனுமாக்கும் ஊர்வோலம்? காரை என்ன உருட்டிட்டா வரான்?…” என அன்புக்கரசியிடம் எகிறியவர் மருதவேலுக்கு அழைத்தார்.
“பக்கத்துல வந்துட்டோம்ப்பா…” என அவனும் வழக்கமாக சொன்னதையே சொல்ல,
“ஏன்டா உன் தம்பி காரை என்ன இடுப்புல சுமந்துட்டா வரான். பக்கத்துல வந்துட்டோம் வந்துட்டோம்னு படம் காமிச்சுட்டு இருக்க?…” என மூத்த மகனையும் ஒரு வாங்கு வாங்க,
“இப்ப எதுக்குங்க எல்லாரும் பார்க்கற மாதிரி கோவமாகறீங்க? கொஞ்சம் மெதுவா பேசுங்க. இவ்வளவு கோவமா சொல்றவங்க அவன் காரை எடுக்கும் போதே வேன்ல வான்னு சொல்ல வேண்டியது தானே?…” அன்புக்கரசி கேட்க,
“சின்ன புள்ளைங்க சரி தனியா எதாச்சும் பேசிட்டு வரும்னு தான் சரின்னு விட்டேன். கிளம்பும் போது சீக்கிரம் வான்னு சொன்னதுக்குன்னே அவன் லேட்டா வரான். எல்லாம் திமிரு…”
“அப்ப நீங்க மெதுவா வான்னு சொல்லிருக்கனும் தானே? அப்படி பேசி பழகுங்க…” என மெதுவாய் பயந்த குரலில் அறிவுரை போல சொல்லி சட்டென இடத்தை காலி செய்ய முத்துவேல் திகைத்து நின்றார்.
“இவ என்னை கேலி செய்யறாளா, இல்லை அட்வைஸ் பன்றாளா? உண்மையா பயந்தாளா? எதுவுமே தெரியலையே?” என வழக்கம் போல உள்ளுக்குள் குழம்பிக்கொண்டு இருந்தார்.
“மாப்பிள்ளை கார் வந்தாச்சு…” என வெளியே குரல் கேட்டதும் வேகமாய் எழுந்து அனைவரும் வரவேற்க பந்தல் போடப்பட்டிருந்த வாசலுக்கு செல்ல எல்லோரும் இறங்கிய பின் கடைசியாக தான் இறங்கினான் வாசுதேவகிருஷ்ணன். அவனை பார்த்ததுமே முத்துவேல் மூத்தமகனை பார்வையால் அழைத்தார்.
“இவனோட இம்சையா இருக்கே” என புலம்பிக்கொண்டு மருதவேல் தந்தையின் அருகே சென்று நிற்க,
“என்னடா இது கோலம்? என்ன சாமியார் ஆக போறானா?…” என மூத்த மகனிடம் பல்லை கடித்தார் முத்துவேல்.
“அப்பா எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா. அவனா தான் மாத்திக்கிட்டான். வரப்ப கோவிலுக்கு போய்ட்டு வர லேட் ஆகிடுச்சு…” என்று சொல்லி தம்பியை முறைக்க அவனோ சாந்த சொரூபனாக முகத்தில் பால் வடியும் களையுடன் நின்றான்.
பட்டு வேஷ்டி, பட்டு சட்டை நெற்றியில் விபூதி பட்டை என்று இறங்கியவனை பார்த்து பக்தி பழமோ என்று அனைவரும் நினைக்க அவனோ பூங்கோதையிடம் சென்று,
“இந்தாங்கத்தை பிரசாதம். உங்க ஊர் கோவிலுக்கு தான் போய்ட்டு வந்தோம்…” என்று நீட்ட கையில் இருந்த ஆரத்தி தட்டை மறந்து அப்படியே நின்றார் பூங்கோதை.
“கோதை அதான் மாப்பிள்ளை குடுக்கார்ல. வாங்கிக்க…” என்றார் தாமோதரன். பதில் பேசாமல் வாங்கிய பூங்கோதை “எனக்குத்தான் வேண்டிருப்பாரோ?” என நினைத்து பின்னே நகர்ந்தார்.
அவன் மிடுக்குடன் வந்து இறங்குவான் என அனைவரும் எதிர்பார்த்திருக்க இப்படி வரவும் சப்பென்று ஆனது.
“போலீஸ்க்கார தம்பிக்குள்ள முருகனே குடியிருக்கார். பார்க்கவே பரவசமா இருக்கு…” என சுந்தரம் வாயை வைத்துக்கொண்டு இல்லாமல் வாய் தவறி சட்டென சொல்லிவிட்டு வாசுதேவகிருஷ்ணன் முகம் பார்க்க அவனோ,
“இப்ப பரவச நிலை என் அப்பாவுக்குத்தான்…” என்றான் அபூர்வாவின் காதில் முணுமுணுத்து.
“ஏன் தான் இப்படி அட்டகாசம் பன்றீங்களோ?…” என்று அவளும் பதிலுக்கு சொல்ல,
“மகிழு வந்து ஆரத்தி எடும்மா உன் நாத்தனாருக்கு…” என அவளை பூங்கோதை அழைக்க,
“வாசு அப்பா செம்ம கோபத்துல இருக்கார்…” என அவனருகே வந்த மருதவேல் சொல்ல,
“வாட் இஸ் திஸ் நான்சன்ஸ் ப்ரோ?…”
“எதுடா தம்பி நான்சன்ஸ்? நாமளா?…” என புரியாமல் மருதவேல் பார்க்க,
“அவரு இப்ப உன்னையும் என்னையும் நாட் சன்ஸ் திங்கிங்ல தான் பார்த்துட்டு இருக்கார்…” என்ற வாசுதேவகிருஷ்ணன்,
“ப்ச், பொண்ணுங்க மட்டும் மாமியார் வீட்டுக்கு பதவிசா வரனும். மருமகன் வர கூடாதா?…”
“ஆனாலும் இது உலகமகா நடிப்புடா. நீயி? பதவிசு? இங்க இருந்து கிளம்பற வரைக்கும் உன் கூட சேர மாட்டேன்…” என்று விலகி விட ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்து வந்தனர்.
“மைனருக்கு இன்னும் மாப்பிள்ளைன்னு நினைப்பு. முதல்ல அந்த வேஷ்டி, சட்டையை கழட்டி எறிய சொல்லு…” என்று மருதவேலிடம் சொல்ல,
“இல்லப்பா, அம்மாக்கிட்ட சொல்லி…”
“அவ எங்க என் பக்கத்துல இருக்கா? போ போ போயி சொல்லு…” என அனுப்ப எரிச்சலுடன் தம்பியிடம் வந்தான்.
“பாலும், பழமும் எனக்கு. புடுங்கி சாப்பிட வந்த மாதிரியே ஒரு லுக்கோட நீ எதுக்கு பக்கத்துல வர?…” என்று உதட்டை மட்டும் அசைத்து அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,
“உன் வேஷத்துக்கும் உன் பேச்சுக்கும் ஏணி வச்சாலும் எட்டலை. ஆனா என் நேரம் உனக்கு அண்ணனா பிறந்து சீரழியறேன்…”
“இதை சொல்லத்தான் வந்தியா? ஓடி போ…” என சொல்ல,
“தேவை தான். போயி இந்த வேஷத்தை கழட்டி எறின்னு சொன்னாரு அப்பா. உன்கிட்ட சொல்ல சொல்லி என்கிட்டே சொன்னாரு…”
“கழட்டி எறிஞ்சுட்டு ஆர்ம்ஸ் காட்டி நிக்க சொல்றியா? அதெல்லாம் முடியாது. வேணும்னா…” என்றவனின் கையை பிடித்துக்கொண்டான் மருதவேல்,
“இன்னை இப்பவே கிளம்ப வச்சிடாத சாமி. சத்தியமா தாங்க மாட்டேன்…” என்றவனை பார்த்தவன்,
“ஹ்ம்ம், உனக்காக போறேன்…” என சொல்லி,
“பூர்வா நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என்று அவளுக்கு சொல்ல,
“சரி வாங்க…” என தங்கள் அறைக்கு அவள் அழைக்க,
“உன் அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்களா?…” என்றான் கள்ளப்புன்னகையுடன்.
“இப்ப உங்க கூட வராம இங்க இருந்தா தான் எதாச்சும் சொல்லுவாங்க. ஆனாலும் ரொம்ப பன்றீங்க…” என்றவள் முன்னால் நடந்தாள்.
முத்துவேலை தாண்டிக்கொண்டு சென்ற வாசுதேவகிருஷ்ணன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவரின் கையில் திணித்துவிட்டு போக என்னவென்று எடுத்து பார்க்க அது ஒரு ஏர்டைட் ட்ரான்ஸ்பரன்ட் கவர். கவரினுள் குட்டி குட்டியாய் தேன்மிட்டாய்கள் இருந்தது.
முத்துவேல் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே அங்கிருந்த குழந்தைகள் அவரிடம் இருந்த மிட்டாயை பார்த்து,
“தாத்தா எனக்கு தாங்க, மிட்டாய் எனக்கு தாங்க…” என்று சூழ்ந்து கொள்ள ஒரு குழந்தையின் கையில் அப்படியே கொடுத்துவிட்டார்.
“வேற வச்சிருக்கீங்களா? வாங்கி தரீங்களா?…” என மொத்தமாய் அவரை மொய்த்துவிட பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனவர் மருதவேலை முறைக்க,
“ஆத்தீ, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இவன் எப்ப இந்த மிட்டாயை பார்சல் பண்ணினான்னு தெரியலையே…” என விமலாவை பார்க்க அவளுக்கு ஒரே சிரிப்பு.
“சம்பந்திக்கு தேன்மிட்டாய் ரொம்ப புடிக்குமோ? நம்ம ஊர்ல நல்லா டேஸ்ட்டா இருக்கும். இருங்க வாங்கிட்டு வர சொல்றேன்…” என்ற சுந்தரம்,
“தினேஷு போயி உன் மாமாவுக்கு தேன்மிட்டாய் வாங்கிட்டு வா. அவரு சாப்பிட வச்சிருந்ததை புள்ளைங்க புடுங்கிக்கிச்சுங்க…” என சொல்ல,
“முனைக்கடையில வாங்காத தினேஷ். நம்ம பட்டியத்தம்மா தெருவுல இருக்கற கடையில வாங்கு. தெரியும்ல…” என தாமோதரன் வேறு வழி சொல்லி அனுப்ப வாசுதேவகிருஷ்ணன் செய்த வேலையால் அந்த வீடு முழுவதும் முத்துவேலுக்கு தேன்மிட்டாய் தான் பிடிக்கும் என்று நொடியில் செய்தி பரவியது.
பூங்கோதை வேறு அவர் பங்குக்கு சம்பந்தியை குளிரவைக்க தனக்கு நன்றாக செய்ய வரும் என்று சொல்லி அபூர்வா கிளம்பும் அன்று செய்து அனுப்புவதாக அன்புக்கரசியிடம் சொல்ல என்னடா இது என்று வெளியே வந்து பார்க்க அங்கே பாவமாக அமர்ந்திருந்தார் முத்துவேல்.
“என்ன பண்ணிருக்கீங்க? இங்க வரைக்கும் அதை தூக்கிட்டு வரனுமா? இப்ப பாருங்க எல்லாரும் இதை தான் பேசறாங்க. நல்ல வேளை நீங்க எனக்கு தான் கொண்டு வந்தீங்கன்னு யாருக்கு தெரியலை. இல்லைன்னா ஒரே வெட்கமா போயிருக்கும் சம்பந்தி வீட்டுல…” என்றவர்,
“எனக்கு கூட தெரியலை பாருங்க நீங்க கொண்டு வந்தது. என்ன சொல்லுங்க எம்புருசன் பலாப்பழம் மாதிரி…” என்று அவர் பங்குக்கு பேசி சொல்ல,
“நான் எங்கடா கொண்டு வந்தேன்?” என முழி பிதுங்கி நின்றார்.
கீழே இளைய மகன் உடை மாற்றி வந்ததும் ஆளாளுக்கு தேன்மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டு இருக்க அனைவருக்கும் வைக்கப்பட்டிருந்த இனிப்பு காரத்தில் தேன்மிட்டாயும் இடம்பெற்று இருந்தது.
“உங்க ஊர் வழக்கமா? லட்டு, அதிரசம், முறுக்கு, மிக்சர் கூட தேன்மிட்டாய் வைக்கிறதும்?…” என ஒன்று அறியாதவன் போல கேட்க,
“அடேய் நீ ஆரம்பிச்சு வச்சது தான்டா இது. தயவு செஞ்சு கிளம்பற வரைக்கும் பேசாம இருப்பா. புண்ணியமா போகும்…” என்று மருதவேல் சொல்லிவிட்டு செல்ல விமலா தான் நடந்ததை விளக்கினாள்.
சிரிப்பை அடக்க படாதபாடுபட்டவன் மீண்டும் மீண்டும் முத்துவேலை பார்த்து உதட்டை கடித்துக்கொண்டு கண்களால் சிரித்தான்.
“டேய் அண்ணா, இப்பத்தான் அப்பா முழு பரவச நிலையை அடைஞ்சிருக்கார்…”
“விட்டா என்னை அறைஞ்சிருப்பார். மூச்…” என மருதவேல் மிரட்ட பின் ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.
முத்துவேல் அங்கே மாப்பிள்ளை விருந்தில் நகரத்து பாணியில் அசைத்தி இருந்தார் என்றால் இங்க பெண் வீட்டு விருந்தில் அனைத்தும் கிராமிய மணம் கமழும் விருந்து. ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது.
“என்ன சொல்லு நம்ம வில்லேஜ் ஸ்டையில் சாப்பாட்ட அடிச்சுக்க முடியாது. மாமியார் வீட்டு விருந்து அப்படியே மனச தொட்டுருச்சுடா அண்ணா…” வாசுதேவகிருஷ்ணன் சில்லாகிக்க,
“அதை ஏன்டா என்கிட்ட சொல்ற?…” என்றவனின் பார்வை பயந்து மறந்தும் கூட தனது வலதுபக்கம் அமர்ந்திருந்த முத்துவேலிடம் செல்லவே இல்லை.
“எனக்கு பட்டும் புத்தி வர மாட்டிக்கு. இதுக்கே நீ என்னை இழுத்துட்டு வந்து உன் கூட உட்கார வைக்கிற போல. சொல்றதை நேரடியா சொல்லேன்…”
“நான் சொல்லிருவேன். எனக்கென்ன பயமா?…” என்று வேறு கேட்டுவைக்க,
“ஆணியே புடுங்க வேண்டாம். சாப்பாட்டை அள்ளி வாய்ல அடை…” என சொல்ல,
“பெரிய மாப்பிள்ளை, இந்தாங்க வறுத்த மீன் ஆம்லேட்…” என்று தினேஷ் மருதவேலை கவனிக்க,
“இதெல்லாம் கூட இருக்கா? வை வை…” என்ற மருதவேல்,
“வாசு சூப்பரா இருக்குடா. நீ சொன்ன மாதிரியே புது டேஸ்ட் தான்…” என்றவன்,
“அப்பா நீங்களும்…” என திரும்பி அவரின் உக்கிர பார்வையில்,
“ஒரு வாய் சோறு திங்க உசுர கையில பிடிச்சுட்டு உட்கார வேண்டியதா இருக்கே” என்று தலையை குனிந்துகொண்டவன் இலையில்,
“இன்னும் இருக்கு பெரிய மாப்பிள்ளை. நண்டு ஆம்லேட் போடறாங்க. உங்களுக்கு கொண்டு வரேன்…” என கையில் கொண்டு வந்ததை அவர்கள் மூவருக்கும் வைத்துவிட்டு செல்ல,
“அவன் வரதுக்குள்ள நான் கிளம்பிடனும்.” என நினைத்தவனாக வேகமாய் சாப்பிட்டான்.
“மெதுவா, கம்பெனி குடுடா…” என வாசுதேவகிருஷ்ணன் நிதானமாய் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
முத்துவேலுவுக்கும் பிடித்திருந்தது தான். ஆனாலும் வீராப்பாய் அமர்ந்து இருந்தார். ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து வெளியே பந்தலுக்கு கீழே போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று ஆண்கள் அமரவும் பெண்கள் உணவருந்த ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் ஆளுக்கொரு பக்கமாக கூட்டமாக அமர்ந்து இருந்தனர் வெற்றிலையை அதக்கியபடி.
மாலை மூன்று மணி ஆகவும் அடுத்து அனைவருக்கும் டீயும், டிபனும் தயாராக இருந்தது. சாப்பிட்டு முடித்து சபையில் சீர் செய்ய தயாராக இருந்தார் தாமோதரன்.
அனைவருக்கும் முன்னிலையில் தட்டில் வைத்து கொடுப்பதற்காக எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.
அதை பார்த்ததுமே முத்துவேலின் உடல்மொழியில் ஒரு தோரணையை கொண்டு வர அதை பார்த்தபடி இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“கோதை லட்சுமியை கூப்பிடும்மா…” என தாமோதரன் அழைக்க அனைவரும் வரவேற்பறையில் கூடினார்கள்.
ஒரு பெரிய தாம்பாள தட்டில் புத்தம் புதிய உடுப்புகள் மாப்பிள்ளை, பெண்ணிற்கு. பழங்கள், பூ, நகைகள் அதனுடன் ஒரு பணக்கட்டு, வங்கிக்கணக்கு புத்தகம் என்று அடுக்கப்பட்டு இருந்தது.
“வாங்க மாப்பிள்ளை, வாம்மா லட்சுமி…” என மகள், மருமகனை அழைத்தவர்,
“சம்பந்தி நீங்களும் வாங்க…” என முத்துவேலை அழைக்க அவரும் எழுந்து வந்து நின்றார்.
“எங்களால முடிஞ்ச தொகையை லட்சுமி பேர்ல அக்கவுண்ட்ல போட்டுட்டேன். சம்பிரதாயத்துக்கு ஒரு பணக்கட்டு வச்சிட்டேன். மாப்பிள்ளை சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன். உங்களுக்கு சந்தோஷம் தாங்களே?…” என கேட்க,
“அதுக்கென்ன ரொம்ப சந்தோஷம்….” என்றார் உள்ளே இருக்கும் புகைச்சலை காட்டிக்கொள்ளாமல்.
“சரிங்க, அப்படியே நீங்களும் சம்பந்தி அம்மாவும் ஒரு கை பிடிங்க. சீரை செஞ்சிடறோம்…” என்றவர்,
“தினேசு, வா இங்க…” என அழைக்கவும் அவர்கள் இருவருமே தம்பதியராய் வர தட்டை முத்துவேல் கை நீட்டி வாங்கும் முன்பு,
“உங்க பொண்ணுக்கு குடுக்கறீங்க. அவங்க கையிலையே குடுத்துரு தாமோதரா. அதத்தான உன் சம்பந்தியும் விரும்புவாரு. ஒவ்வொரு தடவையுமா சொல்லிட்டு இருப்பாரு? மகன் மருமகளுக்கு செய்யறது அவங்க தான வாங்கற முறை…” என்ற சுந்தரம்,
“சரிதானுங்களே?…” என சொல்ல,
“ரொம்ப சரியா சொல்லிட்டீங்க. நிஜமாவே அப்பா அதைத்தான் விரும்புவாங்க. இல்லையாப்பா?…” என்றான் நக்கல் குரலில்.
முத்துவேலுவுக்கு தலையில் இடி விழுந்ததை போல ஆனது. விமலா நகைகள், ரொக்க பணம் என அனைத்தும் இவர் கை வசம் தான் வந்தது. இன்றுவரை அதனை லாக்கரில் வைத்து பாதுகாத்து வருகிறார்.
தன் சம்பாத்தியமே அதிகம் என்றாலும் மருமகள் கொண்டுவரும் சீரை குடும்பத்தின் கௌரவமாக பெருமையாக நினைத்தார். அதிலும் அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை குடும்பத்தலைவனின் கடமையாக நினைத்தார்.
தன் காலத்தின் பின் அவர்கள் தான் கட்டி ஆள போகிறார்கள் என்றாலும் தன் காலம் முழுவதும் தன்னிடம் நிற்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் எப்பொழுதும் உண்டு அவருக்கு.
இப்பொழுது இல்லை என்னிடம் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தனக்கு அசிங்கம் என நினைத்தவர் வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்,
“புள்ளைகள்ட்டயே குடுங்க சம்பந்தி…” என வேறு வழி இன்றி சொல்ல வாசுதேவகிருஷ்ணன் முகத்தில் அழுத்தமான பார்வையும், சிறு நக்கலும்.
“எல்லார் வாழ்க்கையிலும் முடிவெடுக்க நீங்க நினைப்பீங்க. ஆனா அது இனிமே நடக்காது. இனியாச்சும் வறட்டு கௌவுரவத்தை தலையில தூக்கி சுமக்காம இருக்க பாருங்க…” என்றவன் அபூர்வாவுடன் சேர்ந்து தன் மாமியார், மாமனார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தட்டை வாங்கி கொண்டான்.