“சம்பந்திக்கு என்ன இருக்குன்னு சொல்லனுமே…” என தாமோதரன் சொல்ல,
“அப்பறமா நானே சொல்லிடறேன் மாமா. இப்பவே சொல்லனுமா?…” என கேட்ட விதத்தில்,
“இல்லை மெதுவாவே சொல்லுங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை….” என்றதும்,
“பூர்வா இதை நம்ம ரூம்ல வச்சிடு. அண்ணியையும் அம்மாவையும் கூட்டிட்டு போ…” என சொல்லி மனைவியை அனுப்பி வைத்தான்.
மீண்டும் அனைவரும் அங்கங்கே சென்று அமர அன்புக்கரசியை அழைத்தார் முத்துவேல்.
“அன்பு, என்ன குடுத்திருக்காங்கன்னு போய் பாரு. பாஸ்புக் என் கைக்கு வந்தாகனும். புரியுதா?…” என கட்டளை குரலில் சொல்ல,
“ஆரம்பிச்சுட்டாரா?” என நொந்துபோன அன்புக்கரசி,
“பாஸ்புக் எப்படிங்க?…” என கேட்க,
“வாங்கிட்டு தான் வர. வெறுங்கையோட வரக்கூடாது. எதுவும் நம்ம கைக்குள்ள இருந்தா தான் நமக்கு மரியாதை. சும்மாவே உன் மகன் ஆட்டம் தாங்காது. இப்படி பொண்டாட்டியை தூக்கிவச்சு ஆடினா அவளும் மதிக்கமாட்டா பார்த்துக்க. எப்பவும் நம்ம கை தான் ஓங்கி இருக்கனும்…” என்றவர்,
“உன் மகன் விஷயத்துல மட்டும் எதுவும் நான் நினைச்சது நடக்கமாட்டிக்கு…” என சொல்ல,
“அதான் இந்த கல்யாணம் நடந்துச்சே…”
“நான் தான் பொண்ணை பார்த்து நடத்தி வச்சேன். ஆனா பாரேன். முறுக்கிக்கிட்டு திரிஞ்சவன் இப்ப அவளை சுத்தி சுத்தி வரதை பார்க்க தான செய்யறேன். இந்த பய மட்டும் என் கணிப்புக்குள்ள சிக்கவே மாட்டேன்றான். நல்லா பெத்து வளர்த்திருக்க பாரு அடங்காத புள்ளையை…”
“இத்தனை வருஷமா உங்கள கூடத்தான் புரிஞ்சுக்க முடியலை. உங்க மகன் உங்கள மாதிரி தான இருப்பான். என்னை குறை சொல்லி என்ன பிரயோசனம்?…” என்று புலம்பிக்கொண்டே மாடிக்கு செல்ல அங்கே அவருக்கு முன்பே வாசுதேவகிருஷ்ணன் அமர்ந்திருந்தான்.
“என்னடா என்னை போக சொல்லிட்டு நீ வந்துருக்க?…” என கேட்க,
“நீங்க உங்க வீட்டுக்காரர் கூட கிசுகிசுப்பு பேசினதிலே நான் மேல வந்துட்டேன். என்னவாம்?…” என்றான் சட்டையின் காலரை தூக்கிவிட்டபடி.
“வழக்கம் போல தான்…” என அன்புக்கரசி அவனருகே கட்டிலில் அமர கீழே விமலாவும், அபூர்வாவும் அமர்ந்திருந்தனர். வாசுதேவகிருஷ்ணன் விமலாவை பார்த்தான்.
“ஏன் அண்ணி, உங்க பாஸ்புக் இன்னமும் அப்பாக்கிட்ட தான் இருக்கா?…” என கேட்க,
“ஏன் வாசு பத்து வருஷம் கழிச்சு பார்க்கிற மாதிரி கேட்க? எல்லாமே மாமாட்ட தான் இருக்கு. உனக்கு தெரியாதா? ஹாஸ்பிட்டல் போறதா இருந்தா கூட அத்தை தான பணம் வாங்கி தருவாங்க…”
“ஹ்ம்ம்…” என்றவன் மேலும் பேசும் முன்பு மருதவேல் வந்து சேர்ந்தான்.
“அம்மா உங்களை அப்பா கூப்பிடறார்…” என சொல்ல இப்பொழுது அன்புக்கரசி இளைய மகனை பார்த்தவர் அவனின் முகத்தில் இருந்த சிரிப்பில்,
“கடுப்பேத்தாத…” என்று எரிச்சலுடன் பார்த்து பின்,
“விமலா அந்த பையை எடு…” என்ற அன்புக்கரசி,
“லட்சுமி இந்த பழம், பூ எல்லாத்தையும் இந்த பைல போடும்மா….” என சொல்ல அவர் சொல்லியதை அப்படியே தட்டாமல் செய்தாள். பின்,
“இதை எல்லாம் மாமாக்கிட்டையே குடுத்திருவோமே? நாளைப்பின்ன நமக்கு வேணும்னா வாங்கிப்போம். அவங்கட்ட இருந்தா சேஃப்ட்டி தானே?…” என அபூர்வா சொல்ல,
“குடுக்கற வரைக்கும் சரி தான். ஆனா வாங்கனுமே?…” என முணுமுணுத்தவன் தன் அண்ணனை முறைத்து பார்த்தான்.
அத்தனை சம்பாத்தியம் கடையில். இரவும் பகலும் உழைத்து கொட்டுகிறான். ஆனால் மனைவிக்கென்று தனியாய் எதுவும் செய்ய அப்பாவின் கையை பார்த்துக்கொண்டு நிற்பதும், இன்று வரை பள்ளி செல்லும் சிறுவனுக்கு காசு கொடுப்பதை போல தன் தகப்பன் செய்வதையும் எரிச்சலுடன் நினைவு கூர்ந்தான்.
மனைவி என்று வரும் வரை அனைத்தும் சரி தான். ஆனால் பாதுகாக்கிறேன் என்னும் பெயரில் தனது கட்டுப்பாட்டுக்குள் இறுக்கிக்கொள்வதை தான் அவனால் ஏற்க முடியவில்லை.
வீட்டிற்கு அனைத்தையும் இல்லை என்ற சொல் வராமல் வாங்கி போடுகிறார் தான். ஆனாலும் கையளவு மல்லிகை பூ வாங்கி தர வேண்டும் என்றாலும் அவரிடம் கேட்டு நிற்கவேண்டும். ஆனால் மனைவிக்கென கேட்டு அவன் இதுவரை நின்றதே இல்லை.
ஒரு சினிமாவிற்கோ, வெளியே ஹோட்டலுக்கோ என்று எதுவும் இன்றுவரை அனுபவித்ததில்லை. அவரை போல உழைக்க மட்டுமல்ல மனைவியை சொல் பேச்சு கேட்கும் அளவிற்கு நடத்த மட்டும் கற்று கொடுத்திருக்கிறார்.
மருதவேலுக்கு வாய்த்தவளும் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட இரண்டாவது மருமகளையும் கட்டுக்குள் வைக்க நினைக்க அதற்கு வாசுதேவகிருஷ்ணன் அனுமதிக்கவில்லை.
“என்னை ஏன்டா முறைக்கிற? நான் என்ன பண்ணேன்?…” என மருதவேல் கேட்க,
“ஒன்னும் பண்ணலை தான்…” என்று முறைத்தவன்,
“அண்ணி இங்க எங்களோட இருக்கீங்களா நீங்க? இவனை சொன்னாலும் இருக்க மாட்டான். நீங்க இருங்களேன்…” என்ற வாசுதேவகிருஷ்ணன்,
“பூர்வா…” என அழைத்ததும்,
“நானே சொல்லனும்னு இருந்தேன். எனக்கு சந்தோஷம். அம்மாவும், மகிழ் அண்ணியும் கூட சந்தோஷப்படுவாங்க. விமலாக்கா கண்டிப்பா நீங்க இருந்தே ஆகனும்…” என அபூர்வா அவனுக்கு மனைவியென நிரூபிக்க,
“நீ என்னடா சொல்ற?…” என அண்ணனை கேட்க,
“ம்ஹூம், அப்பாவை கேட்கனும்…” என்றவன் விமலாவை பார்க்க அவளின் முகத்தில் ஆர்வமும் ஆசையும் போட்டி போட்டது.
“இருக்கியா?…” என்றான் அதிசயமாய்.
அவனுக்கும் மனைவியின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் மனதினுள் வலி தான். திருமணம் ஆகி இத்தனை வருடத்தில் மாமனார் வீட்டில் மறுவிருந்துக்கு சென்று தங்கியது.
அதன் பின் ஏதேனும் விசேஷம் நல்ல நாள் என்றால் விமலாவை கொண்டு சென்று விட்டுவிட்டு மறுநாளே கூட்டிக்கொண்டு வந்துவிடுவான். தங்குவதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் முத்துவேல் அனுமதிக்கமாட்டார். விமலாவையும் அதிகமாய் அங்கே தங்கவிட மாட்டார்.
“அதென்ன சும்மா பொசுக்குன்னா பொறந்த வீட்டுக்கு போறது? சீராட்ட அங்க யாரு இருக்கா? இங்க என்ன குறையா இருக்கு?…” என்று அவளின் காதுபடவே மருதவேலை சத்தம் போடுவார்.
அதை புரிந்துகொண்டு அவளும் அங்கே போவதை குறைத்துக்கொள்வாள். அவளின் அப்பா வீட்டிற்கு என்றைக்காவது கோவிலுக்கு என்று அன்புக்கரசி தான் அழைத்து செல்வது. இன்றுவரை முத்துவேலுக்கு தெரியாமல் நடந்துகொண்டிருகிறது.
அதனை மனதில் வைத்துக்கொண்டு தான் இங்காவது அவள் இருந்து வரட்டும் என்று நினைத்தான் மருதவேல்.
“பார்ரா, இருக்கியான்னு கேட்கவெல்லாம் செய்யற? இன்னும் அப்பாக்கிட்ட கேட்கலை தம்பி…” என வாசுதேவகிருஷ்ணன் அவனை கிண்டல் பேச,
“அதான் நீயே முடிவெடுத்துட்டியே. நடத்தாம விடமாட்ட. பார்த்துக்கோடா…” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான்.
“அவனும் என்னடா செய்வான்? கிளிப்பிள்ளை மாதிரி வளர்த்துட்டார் உன் அப்பா. சின்னதுல கூட அடம்பிடிச்சு எதுவும் கேட்டு வாங்க தெரியாது. இப்ப வரைக்கும் பயந்து பயந்தே இருந்துட்டான்…” என்ற அன்புக்கரசி,
“ஆனா நீங்க எல்லாரும் ஒத்துமையா இருக்கறது தான் என் நெஞ்சை நிறைக்கிது. என் காலத்துக்கு பின்னால தகப்பனா இருந்து உன் அண்ணனை நீ பார்த்துப்ப. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு சாமி. உன் அண்ணனும் சரி, அவனை கட்டிட்டு வந்த இந்த மகராசியும் சரி. ஒண்ணுக்கொண்ணு அப்பாவிங்க. உங்கப்பா அதான் இப்ப வரைக்கும் அரட்டி குடியிருக்காரு…”
அன்புக்கரசி சொல்லும் பொழுதே அவரின் கண்கள் கலங்கி விட்டது. உடனே அவரின் மடியில் சாய்ந்துகொண்டாள் விமலா.
“ஒன்னும் கலங்க கூடாது. இங்க பாரு விமலா. அதான் உனக்கு இத்தனை பேரு இருக்கோம்ல…” என்ற அன்புக்கரசி அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு,
“சரி சரி பேசாம இருங்க. வாசு உன்கிட்ட இன்னொன்னு சொல்லனும்…” என்றவர்,
“நீ திரும்ப பிளாட்டுக்கு போகவும் பெரியவனை ரெண்டு நாளைக்கு உன்னோட இருத்திக்கோ. அவனை பாடா படுத்தறாரு. அவனுக்கும் கொஞ்சம் செலாத்தலா இருக்கனும்ல. யார்க்கிட்ட கேட்பான். கேட்கவும் தெரியாது அவனுக்கு…”
“அதுக்கென்னம்மா? அங்க இருக்க சொன்னா என் கூட வந்து இருன்னு என்னை சொல்லுவாரு உங்க வீட்டுக்காரர். பரவாயில்லையா?…”
“இவன் ஒருத்தன், போலீஸ்க்காரன் மூளை மூலைமுடுக்கெல்லாம் யோசிக்கும்னு சொல்லுவாங்க. இங்க உனக்கே நான் சொல்ல வேண்டியாதா இருக்கு. என் நேரம். யோசி. அதான் மாமியார் வீட்டுல நாலு நாள் சும்மா தான இருக்க போற?…” என்று கிண்டலாய் சொல்லிவிட்டு அந்த பழங்கள் அடங்கியிருக்கும் பையை தூக்கிக்கொண்டு திரும்ப,
“இது எதுக்கும்மா?…” என்றான் மகன்.
“உங்கப்பாவுக்கு தான். வரப்ப வெறுங்கையா வராதன்னு சொன்னாரு. நீ குடுத்துவிட்டன்னு இதை குடுத்துருவேன்…” என சொல்லி நிற்காமல் சென்றுவிட விமலாவும் அபூர்வாவும் வெடிச்சிரிப்பு சிரித்தனர்.
“அத்தைக்கு நிகர் அத்தை தான்…” என்ற விமலாவும் கீழே இறங்க,
“அண்ணி நீங்க எதையும் காட்டிக்க வேண்டாம். தினேஷ்ட்ட கீழே சுந்தரம்னு ஒருத்தர் இருப்பாரு. அவரை தனியா பேசனும்னு சொன்னேன்னு சொல்லுங்க…” என சொல்ல,
“சொல்லிட்டா போச்சு…” என கீழே இறங்கிவிட்டாள்.
“ஹ்ம்ம் அப்பறம் மிசஸ் யக்கா…” என்று வாசுதேவகிருஷ்ணன் உல்லாச குரலில் அபூர்வாவை வம்பிழுக்க,
“எப்படித்தான் எல்லா சூழ்நிலையிலையும் நீங்க கவர் பண்ணிடறீங்களோ? உங்க ட்ரெய்னிங் பீரியட்ல இதையும் சொல்லி குடுத்தாங்களா? ஆனா அத்தை உங்களை மாதிரி இல்லை. உங்களை விட தூள்…” என சொல்ல,
“புருஷனுக்கு முதல்ல சர்ட்டிபிகேட் குடுங்க கண்மணி. அப்பறமா மாமியாருக்கு நல்ல மருமகள் ஆகலாம். அவார்டே குடுக்கலாம்…” என்றவன் கட்டிலில் இருந்தே அவளை எட்டி பிடிக்க பார்க்க இன்னும் பின்னால் தள்ளி அமர்ந்தவள்,
“கீழே போங்க, மாமா அத்தையை எதுவும் சொல்லாம பாருங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல எல்லாரும் கிளம்பிருவாங்க…” என்று அவனிடம் சொல்ல அவனோ கீழே செல்லும் முன் நிலுவையில் இருந்த சிலபல கடன்களை நிவர்த்தி செய்துகொண்ட பின்பே இறங்கி சென்றான்.
கீழே அன்புக்கரசியிடம் சத்தமாக பேச முடியாமல் பல்லை கடித்தபடி அடிக்குரலில் சீறினார் முத்துவேல்.
“என்ன அன்பு இதுவா நான் கேட்டேன்?…” என,
“வாசு இதத்தான் குடுக்க சொன்னான். நான் என்ன பண்ணுவேன்? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்? என் புருஷன் பேச்சை கேட்பேனா? புள்ளை பேச்சை கேட்பேனா? ஆனா ஒருத்தரும் என் பேச்சை கேட்கறதில்லை…” என்று ஆரம்பிக்கவுமே,
“சரி, போ, போ…” என அனுப்பிவிட்டு கோபமாக அமர்ந்திருந்தார். இனி எதுவும் கேட்பதற்கு இல்லை என்ற எண்ணம் இருந்தாலும் அப்படியே விட்டுவிடவும் தயாராய் இல்லை.
அங்கே தினேஷ் சுந்தரத்தோடு பேசிக்கொண்டிருக்க தானும் சேர்ந்து சென்று நின்றதும் சுந்தரத்திற்கு திக்கென்று இருந்தது.
“இன்னைக்கு வாய் நிக்காம ஊர் பெரியமனுஷன்னு வார்த்தையை விட்டுட்டேன். இவன் வேற எடாகூடமாவே பேசுவானே?” என நினைத்தபடி அவனை பார்த்து அசடு வழிய சிரிக்க,
“அப்பறம் சுந்தரம் ரொம்ப பத்திரமா இருக்கீங்க போல?…” என கேட்க,
“ஹ்ம்ம், தம்பி…” என்றார் பொதுவாக.
“இன்னைக்கு கூட நல்லா பேசுனீங்க…” என்றான் சிரித்தபடி.
“அப்படிங்களா? இருக்கட்டும் இருக்கட்டும்…”
“இன்னொன்னும் பேசனுமே…” என சொல்லவும் தினேஷும் பார்த்தான் என்னவென்று. அவனிடம் கண்ணடித்தவன் விஷயத்தை சொல்ல தினேஷுக்கு நிரம்ப மகிழ்ச்சி.
“அதுக்கென்னங்க தம்பி, பேசிடுவோம். இது எல்லாம் முறை தானே?…” என்ற சுந்தரம் வாசுதேவகிருஷ்ணன் நினைத்ததை போலவே பேசிவிட அன்று மணமக்களுடன் மருதவேலும், விமலாவும் அங்கே தங்க வைக்க முத்துவேல் சரி என்றுவிட்டார்.