நிஜம் – 15
முத்துவேலுக்கு அங்கே இருக்கவே விருப்பமில்லை. அனைவருமாக சேர்ந்து அவமதித்துவிட்டதாக அவர் நினைத்திருந்தார்.
“அன்பு, கிளம்புவோம்…” என மனைவியை அழைத்து சொல்ல,
“இதோங்க…” என்றவர் வாசுதேவகிருஷ்ணனை பார்க்க அவன் கண்ணை மூடி திறந்தான்.
“என்னத்த பண்ண போறானோ? முணுக்குன்னா தூங்கற போற மாதிரி கண்ணை மூடி திறக்கறது…” என விமலாவிடம் வந்து முணுமுணுக்க,
“இது எதுக்கு அத்தை? சும்மா இருக்கமாட்டீங்களா?…” என அவள் கேட்டதும்,
“அப்ப நாங்க புறப்படறோம். நாலாவது நாள் என் பெரியவனையும், மருமகளையும் அழைக்க அனுப்பறோம்…” என முத்துவேல் விடைபெற,
“மாப்பிள்ளை வீட்டு சார்பா யாராச்சும் தங்கனும்ல சம்பந்தி. நீங்க கூப்பிட வர அன்னைக்கு அனுப்பறேன்னு சொல்றீங்க? உங்க பெரிய புள்ளையையும், மருமக பொண்ணையும் இங்க இருக்க சொல்லுங்க. புது மாப்பிள்ளை. சங்கோஜமா இருக்கும்ல. அவங்களும் இருந்தா சகஜமா இருப்பாரு…” என்ற சுந்தரம்,
“என்ன தாமோதரா நான் சொல்றது?…” என கேட்க,
“நீங்க சொல்லி மறுக்க முடியுமா ஐய்யா…” என தாமோதரன் சொல்லவும் வாசுதேவகிருஷ்ணன் முகத்தை பார்க்க அவனோ பார்வையால் மெச்சினான்.
“ஆமாம் விமலாக்கா, இங்க எங்களோட இருங்களேன்….” என சொல்லிய அபூர்வா,
“அம்மா, நீங்க சொல்லுங்க…” என பூங்கோதையை அழைக்க,
“ஆமாம்மா, நீயும் இருந்தா லட்சுமிக்கும் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்…” என அவரும் சொல்ல மருதவேல் தம்பியை பார்த்தான்.
“ஆமாங்க சம்பந்தி, பிள்ளைங்க இருந்துட்டு வரட்டுமே? நீங்க என்ன சொல்றீங்க?…” என கேட்க விமலாவை திரும்பி பார்த்தார் முத்துவேல்.
அவள் தன்னை பார்த்தாலாவது வேண்டாம் என சொல் என்பதை போல பார்க்கலாம். ஆனால் அவளோ பூங்கோதையிடம் பேசிக்கொண்டிருக்க அன்புக்கரசியும் சிரித்தபடி இருக்க பற்றிக்கொண்டு வந்தது.
“அவர் என்ன வேண்டாம்னா சொல்ல போறாரு? அண்ணனும் தம்பியும் ஒத்துமையா இருந்துட்டு வந்தா கசக்கவா செய்யும். அதுவும் மூத்த மருமகளை மகளா ரெண்டாவது மருமக வீட்டுல தாங்க சொல்றது எங்க நடக்கும்? அவரு சந்தோஷத்துல பேச முடியாம இருக்காரு…”
சுந்தரம் மேலும் எக்கச்சக்க பிட்டுகளை போட வாசுதேவகிருஷ்ணன் மனதினுள் அட அட அட என்று சுந்தரத்திற்காக எக்கச்சக்க அட – களை போட்டுக்கொண்டு இருந்தான்.
“இது சம்பிரதாயமா?…” என ராணி கேட்க,
“அட ஆமாங்க, பொண்ணை விட வந்த அன்னைக்கு தான் மகிழு முழுகாம இருக்குன்னு தெரிஞ்சிருக்கு. அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டோம். இல்லைன்னா அங்கயே தான் தங்கி இருந்திருப்பாங்க தினேஷும் மகிழும்…” என சுந்தரம் தெளிவாய் சொல்ல அவரை சேர்ந்தவர்கள் ஆமாம் என்று வேறு சொல்லிவிட்டனர்.
இதற்கு மேலும் மறுக்க முடியுமா முத்துவேலுவுக்கு. மருதவேலை பார்க்க அவனிடம் வாசுதேவகிருஷ்ணன் பேச்சு கொடுத்து தன் பக்கம் திருப்பியிருக்க,
“அதுக்கென்ன சம்பந்தி இருந்துட்டு வரட்டும். எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை…” என சொல்லவும் அபூர்வா சந்தோஷத்தில் விமலாவை கட்டிப்பிடித்து விடுவிக்க இடுங்கிய கண்களுடன் அவர்களை பார்த்தார் முத்துவேல்.
“ம்க்கும்…” என்ற இளைய மகனின் குரலில் திரும்பிய முத்துவேல் பெரியவனை பார்க்க,
“அப்பறம் என்னடா, அப்பாவே சொல்லிட்டாரு. நீ அவர் பேச்சை மீற மாட்ட தான். சரி சரி எல்லாரும் கிளம்பறாங்க. வா பை சொல்லுவோம்…” என வாசுதேவகிருஷ்ணன் வேண்டுமென்றே சொல்ல,
“டேய் ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலைடா…”
“பெரியமாப்பிள்ளை…” என்ற தினேஷ்,
“இங்க பெரிய கடைங்க எல்லாம் இருக்கு. இப்ப போய் எடுத்துட்டு வந்துருவோம். அவ்வளவு தானே? அதான் மாமாவே சொல்லிட்டார்…” என்ற தினேஷும் வாசுவிடம் எப்படி என்று புருவத்தை உயர்த்த,
“நீ நடத்து மச்சான்…” என்று சில்லாகித்தான்.
“சரி அப்பறம் என்ன? நாம கிளம்புவோம்…” என ராணி சொல்லவும் முத்துவேலும் முன்னால் வேகமாய் நடந்தார்.
“பார்த்துக்க லட்சுமி. இந்த புள்ளைக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். இனி இங்க நீ தான்…” என சொல்லும் பொழுதே,
“அட என்ன சம்பந்தியம்மா, அதான் நான் இருக்கேனுல்ல. பாத்துக்கமாட்டேனா? அன்னைக்கே சொன்னேனுல்ல விமலா என் மக மாதிரின்னு. அப்பறம் என்னவாம்?…” என பூங்கோதை சொல்லவும் அவரின் கைகளை பிடித்துக்கொண்ட அன்புக்கரசி,
“இது போதும்ங்க…” என சொல்லிவிட்டு பெரிய மகனிடம் வந்தார். தனியே அவனை அழைத்து சென்றவர்,
“இங்க பாரு பெரியவனே, நாளைக்கே உன் அப்பா பேசலைன்னு கிளம்பி வந்து அங்க நிக்காத சொல்லிட்டேன். இந்த நாலு நாளாச்சும் உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இரு. அவளையும் நீ தான் பார்த்துக்கனும். அப்பாவும், கடையும் மட்டும் உலகமில்லை. இதை எத்தனையோ விதமா உன்கிட்ட நான் சொல்லிட்டேன்…”
“எல்லா சரிதாம்மா, ஆனா இங்க எப்படி?…” என சங்கடமாக உணர்ந்தன மருதவேல்.
“சரி இங்க வேண்டாம்ன்னா? வேற எங்கையாச்சும் அவளை கூட்டிட்டு போறேன்னு சொல்லு. இப்பவே உன் தம்பிக்கிட்ட சொல்லி ஏற்பாடு பன்றேன். போறியா?…” என கேட்க,
“அப்பாக்கிட்ட கேட்டுட்டு…”
“ஏன்டா கல்யாணம் ஆனா புதுசுல அவளை கூட்டிட்டு கோவிலுக்கு போகவே அம்புட்டு யோசிச்சு நிப்ப. இப்பவுமாடா? ஆனா நீ இப்படி இருப்பன்னு தெரிஞ்சிருந்தா உனக்கு அந்த புள்ளையை கட்டி வச்சிருக்கவே மாட்டேன். இப்ப கூட பாரு, நீ இங்க தங்கற. உன்கிட்ட எவ்வளவு காசு இருக்கு? அட இருக்கா இல்லையான்னு கூட கேட்காம வண்டியில ஏறி உக்காந்தாச்சு. நீ என்னன்னா…” என சொல்லும் பொழுதே கண்ணீர் வந்துவிட்டது அவருக்கு.
“அம்மா, நான் என்னம்மா பண்ணுவேன்?…”
“ஒன்னும் பண்ண வேண்டாம் தான். அது நீ மட்டும் இருக்கும் போது. ஐஞ்சு வருஷம் ஆகிப்போச்சு. புள்ளைகுட்டின்னு இருந்திருந்தா கூட நீ எப்படியும் போன்னு அவ அதுகளை வளர்த்துட்டு பொழுதை கழிச்சு வாழ்க்கையை ஓட்டிருப்பா என்னைய மாதிரி…” என சொல்ல சுருக்கென்று இருந்தது மருதவேலுக்கு.
தன் கையில் இருந்த சின்ன பர்ஸில் இருந்து பணத்தை எடுத்தவர் அவனின் கையில் யாருமறியாமல் திணித்தார். இன்னொரு கார்டையும் அவனிடம் கொடுத்தவர்,
“இது அப்பாவுக்கு தெரியாம வாசு எனக்கு தனியா அக்கவுன்ட் ஆரம்பிச்சு மாசா மாசம் பணம் போட்டு வச்சிருக்கான். அதோட அட்டை. இதையும் வச்சுக்க. இந்த காசு அப்பிடி இப்பிடின்னு சுருவாடு புடிச்சது. என் நேரம் உனக்கு உதவுது…” என்றதும் அதிர்வுடன் பார்த்த மருதவேல்,
“அம்மா, இது ஏன் என்கிட்டே குடுக்கறீங்க? அதுவும் அவன் உங்களுக்கு குடுத்ததை…” என்று சொல்லும் பொழுதே சற்று வெட்கமாகவும் அவமானமாகவும் உணர்ந்தான் மருதவேல்.
“என்ன செய்ய நீ இப்படி இருக்கும் போது வேற எப்படி உனக்கு புரிய வைக்க? இங்க பாரு பெரியவனே இங்க உன்னை வாசுவே பார்த்துப்பான் தான். ஆனா நீ வந்திருக்கறது அவன் மாமியார் வீட்டுக்கு. இங்க நீயும் வளமையா இருக்கனும் பெரியவனே….”
“அம்மா, இது இது வேண்டாம்மா எனக்கு. ஒரு மாதிரியா?…”
“டேய் உனக்கு குடுக்கறேன்னு உன் தம்பிக்கு தெரிஞ்சா அவன் சந்தோஷமா தான் நினைப்பான். உங்கப்பாவுக்கு புத்தி வேணும். கல்யாணம் ஆனா மவன் அவன் பொண்டாட்டிக்கு அவன் சம்பாத்தியத்துல ஒரு நூல் சேலையாவது எடுத்து குடுக்கனும்னு ஆசை இருக்கும்னு நெனப்பிருக்குதா? விவஸ்தை கேட்ட மனுஷன்….” என புடவை தலைப்பால் கண்ணை ஒற்றிக்கொண்டவர்,
“இப்படி எல்லாத்துக்கும் அவங்கட்டையே நிக்கனும்னு இருக்கற மனுஷனுக்கு நீயும் தப்பாம வாய்ச்சிருக்க. அதை விடு. அவரும் திருந்தமாட்டாரு, நீயும் மாற மாட்ட. புள்ளை இல்லைன்னு ஏங்கி நிக்கிற அவளுக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசி பழகு. அவளுக்கு நீதான்டா எல்லாம் இருக்கனும். நான் எம்புட்டு காலத்துக்கு இருப்பேன்…”
ஏனோ அன்று அன்புக்கரசிக்கு வார்த்தைகளும் பொங்கியது, அழுகையும் பொங்கியது. மருதவேல் மனதினுள் சம்மட்டியால் அடிவாங்கிய வலி. அதையும் விட யாரேனும் பார்த்தால் தேவையில்லாத பேச்சாகுமே என்ற நினைப்பு.
“அம்மா போதும், அப்பா வேற உங்களை அங்க இருந்தே பார்த்துட்டு இருக்காரு. என்னன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?…”
“என்னையும் இருக்க சொன்னாங்க, என் புருஷனை விட்டுட்டு இருக்க எனக்கு மனசில்லைன்னு சொல்லி அழுதேன்னு சொல்லுவேன். எனக்கா தெரியாது அந்த மனுஷனை என்ன சொல்லி சமாளிக்கன்னு…” என்று சட்டென சிரிக்க,
“எப்படிம்மா இதெல்லாம்?…” என மருதவேலும் அவரை அணைத்துக்கொண்டு நின்றான்.
“எப்பவுமே தான். பயந்த மாதிரி பாவமா நின்னா உங்கப்பாவுக்கு அப்படியே புல்லரிச்சு போயிரும். யாரும் சொரிஞ்சுவிடறதுக்குள்ள ஆகற வேலையே பாரத்துடனும்…”
“அப்படித்தான் சுகர் மாத்திரை போடாம வாசு படிக்க நினைச்சதை படிக்க வச்சீங்களா?…” என்றான் சிரிப்புடன்.
“உனக்கும் ரெடியா நாலு மாத்திரை வச்சிருந்தேன். எங்க? அவர் சொல்லவும் மஞ்சத்தண்ணி ஊத்தின ஆடாட்டம் அவர் ஆட்டத்துக்கு எல்லாம் ஆடின…” என சொல்ல,
“அன்பு…” என முத்துவேல் அழைக்கவும்,
“டேய் கிளம்பறேன்டா. கார்டை என்னமும் பண்ணு. ஆனா நான் குடுத்த காசுல ஒத்த பைசா எனக்கு திரும்ப வர கூடாது. விமலாவுக்கு என்ன வாங்கி குடுக்கனும்னு உனக்கு தோணுதோ எல்லாத்தையும் வாங்கி குடு. இங்க வேண்டாமா சொல்லு எங்கையாச்சும் குளுகுளுன்னு போயி இருந்துட்டு வாங்க. இந்த மனுஷன் கடியில இருந்து நிம்மதியா இருப்பீங்க…”
“அப்ப உங்களை கடிச்சா பரவாயில்லயா?…”
“என்னையை எதுக்கு கடிக்க போறாரு? நான் கடிச்சா பத்தாதாக்கும்…” என சொல்ல அதை கேட்டுக்கொண்டே வந்த வாசுதேவகிருஷ்ணன்,
“ஆமாமா, கடிச்சுட்டு சுகர் மாத்திரை போடாம மயக்கத்துல கடிச்சுட்டேன்னு சொல்லி சமாளிச்சிடலாம். என்னம்மா?…” என கேட்கவும் அவனின் தோளில் தட்டிய அன்புக்கரசி,
“பார்த்துக்கடா இவனை. கொஞ்சமாச்சும் உன் சமத்தை சொல்லி குடு…” என்று சின்ன மகனிடம் சொல்ல,
“அதையும் நீங்களே சொல்லி குடுங்களேன்?…” என அவன் சிரிக்க,
“பெரியவனே அப்படின்னு கூப்பிட்டா என்னப்பான்னு அதே மாதிரி சத்தமா கேட்கனும். இப்போதைக்கு அதை சொல்லி குடு. மத்தது தானா வரும்…” என சொல்லி செல்ல,
“நன்றி சட்ட ஆலோசகரே…” என வாசுதேவகிருஷ்ணன் சலாம் போட்டு சிரிக்க,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை….” என்றவர் அப்போதுதன இரு மகன்களும் தோளை பிடித்துக்கொண்டு பேசியபடி தன்னை மெதுவே நடத்தி செல்வதை உணர்ந்தவர்,
“அடேய் பிள்ளைங்களா தள்ளி போங்கடா. எனக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு சொல்லி மொத்த குடும்பத்தையும் வேனுக்குள்ள ஏத்திற போறாரு. கோட்டை தேடிட்டு இருக்கறவருக்கு ரூட்டை போட்டு குடுக்காம இருங்க. இல்லைன்னா நீ மறுவீடு கொண்டாடின மாதிரி தான்…” என சொல்லி அவர்களை விட்டு விலகி நடந்தார்.
பின் வேனுக்கருகே நின்று அங்கிருந்தே மருமகள்களுக்கு கையை ஆட்டிவிட்டு மகிழிடமும் விடைபெற,
“விட்டா அரசியல்ல நிப்பா போல. போதும். கையை இறக்கி உள்ள வந்து உட்காரு…” என்று அடிக்குரலில் கத்திய முத்துவேல் மகன்களை ஒரு பார்வை பார்த்து மருதுவேலிடம்,
“பார்த்து இரு…” என சொல்ல வேன் கிளம்பியது.
வந்திருந்த பெண் பக்க உறவினர்களும் அப்படியே கிளம்பிவிட சுந்தரத்திடம் வந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“உண்மைக்கும் ரொம்ப நல்லா பேசுனீங்க. எனக்கு இங்க தனியா இருக்க சங்கடமா இருக்குன்னு என் அப்பாட்ட சொல்லி அவ அண்ணன்ட்ட பேசி என் அண்ணன் கேட்கமாட்டேன்னு சொல்றான்னு சொல்லவும் சபையில சொல்லி அவனை சம்மதிக்க வச்சுட்டீங்க….”
“தம்பி நீங்க இம்புட்டு கூச்ச சுபாவம்னு எனக்கு தெரியாம போச்சு பாருங்க…” என அவரும் சிரிக்க,
“என் இடுப்பை கிச்சுகிச்சு மூட்டுங்களேன். எம்புட்டு கூச்சம்னு நீங்களே அசந்து போவீங்க…” என்றன் சிரிக்காமல்.
“என்ன மூஞ்சியில சிரிப்பை காணோம்?” என அவனை அவர் உற்று பார்க்க,
“என்ன பார்வை?…” என்றான் அவரிடம்.
“இல்லைங்க தம்பி, கிளம்பறேன்…” என சொல்லி தாமோதரனிடமும் விடைபெற்று கிளம்பிவிட தினேஷும் வாசுதேவகிருஷ்ணனும் ஹைபை அடித்துக்கொண்டனர்.
“உங்க அண்ணன் பார்க்கறார்…” என தினேஷ் சொல்ல,
“இந்நேரம் அவன் கேட்ச் பண்ணிருப்பான் மச்சான். அண்ணி மட்டும் தான் இருப்பாங்கன்னு அவனுக்கு நினைப்பு. அவனுக்கும் சேர்த்து தான் ஸ்கெட்ச் போட்டேன்னு அம்மாவுக்கு கூட தெரியாது…” என சிரிக்க,
“உங்க ஸ்கெட்ச் லெவல் தான் எனக்கு தெரியுமே…” என்ற தினேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே மருதவேல் அவர்களை நெருங்கி,
“டேய் இதான் உங்க ப்ளானா? நான் கூட சம்பிரதாயம்னு நினைச்சேன். தினேஷ் நீயுமா?…” என கேட்க,
“அது வந்து பெரிய…”