“டேய் நிறுத்து. என்னை விட சின்ன பையன் தான நீ. சும்மா நீட்டி முழக்காம மாமான்னே கூப்பிடு. அதான் மாப்பிள்ளைக்கு இவன் நிக்கறானே. இல்லைன்னா ஒவ்வொருவாட்டியும் வேஷ்டியும் சட்டையுமா வந்து நான் தான் மாப்பிள்ளைன்னு உசுரை எடுப்பான்…” என மருதவேல் கடுப்பாய் சொன்னாலும் கடைசியில் சிரித்துவிட மூவருமாய் பேசி சிரித்தபடி உள்ளே வந்தனர்.
வாசுதேவகிருஷ்ணன் கூடத்தில் வந்து அமர்ந்ததும் அப்படியே பூங்கோதை அடுக்களைக்குள் சென்றுவிட்டார்.
“வாங்களேன் கடைக்கு போய் நாளைக்கு போட ட்ரெஸ் எடுப்போம். ஒரு சின்னதா ஷாப்பிங்…” என தினேஷ் சொல்ல,
“ஓகே எல்லாரும் ப்ரெஷ் ஆகிட்டு புறப்படுவோம்…” என்று வாசுதேவகிருஷ்ணன் எழுந்துகொள்ள,
“தினேஷ், பெரிய தம்பியை மாடி ரூம்க்கு அழைச்சுட்டு போ. லட்சுமி ரூமுக்கு எதுக்கால இருக்கற ரூமை சுத்தம் பண்ணி தான் வச்சிருக்கேன்…” என அங்கிருந்தே சொல்ல மாடி ஏறினார்கள் மூன்று ஜோடிகளும்.
மருதவேலுவுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழையும் பொழுதே மகிழ் அவளிடம் புது பேஸ்ட், சோப், ப்ரெஷ் என சகலதையும் நீட்ட,
“நன்றிம்மா…” என்றான் மருதவேல்.
“அட போங்கண்ணே இதுக்கு நன்றி சொல்லுவாங்க?…” என சிரித்தபடி கீழே இறங்க,
“பாத்து போய் மகிழு. மெதுவா இறங்கு…” என விமலா சொல்லவும் சரி என அவளும் சென்றுவிட மனைவியின் முகத்தை பார்த்தான் மருதவேல்.
“சந்தோஷமாடி?…” என்றான் எதிர்பார்ப்புடன்.
“தெரியலை. உங்களுக்கு…” என அவனின் பதிலுக்கு விமலா காத்திருக்க,
“எனக்கும் தெரியலை…” என்றான் உள்ளுக்குள் குறுகுறுத்த குற்ற உணர்வில்.
“சரி கிளம்புவோம். எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க…” என முகம் கழுவ உள்ளே சென்றாள்.
மருதவேல் கதவை சாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தான். திருமணமாகி இத்தனை வருடத்தில் என்றேனும் அனுசரணையாய் பேசியிருக்கிறோமா என தனக்குள்ளேயே சுய அலசலில் ஈடுபட்டான்.
திருமணமானவர்களுக்கே உரித்தான முதல் சில மாத கொஞ்சல்கள் கூட அவர்களின் வாழ்க்கையில் இல்லை. அப்பொழுதும் கூட ஒரு இறுக்கமும், விரைப்புடன் தான் நடந்துகொள்வான் மருதவேல். ஆசை, நேசம் என்று ஏனோ அவனுக்கே வரவில்லை.
இரவுகளின் தேடல்கள் மட்டும் நடந்தேறும். அப்பொழுதும் கூட ஒரு கடமை என்றளவில். விமலாவும் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமேல் திருமணமாகி வந்தாள்.
தாயில்லாமல் தந்தையை பிரிந்து வருகிறோமே என்ற எண்ணத்தில் இருக்க மருதவேலின் நடவடிக்கையும் அவனின் சுபாவமே இப்படித்தான் என்று நினைத்து அதற்கேற்றது போல நடக்க பழகி போக நாளடைவில் அதுவே நிரந்தரமானது.
அதன் பின் குழந்தை இல்லாததால் உண்டான சலிப்பு ஒருபுறம், கடை வேலை என்று அவர்கள் மனம் விட்டு பேசுவதற்கு கூட நேரமின்றி போக பேசும் நேரமும் விமலாவின் இயல்பான பேச்சு அவனுக்கு அதிகப்படியாக தெரிந்தது. தெரியவைக்கப்பட்டது என்றும் சொல்லலாம்.
“என்ன பெரியவனே ஒரு மதிப்பில்லாத பேச்சால இருக்குது. சொல்லி வை. நம்ம குடும்பத்துக்கு இது சரி வராது…” என ஒரு விளையாட்டு பேச்சில் முத்துவேல் மூக்கை நுழைக்க அத்தனை பேர் முன்னிலையிலும் கை நீட்டிவிட்டான் மருதவேல்.
அன்றிலிருந்து தன் விமலாவும் முத்துவேலிடம் எதையும் பேசிக்கொள்வதில்லை. மருதுவிடம் மட்டும் சில நேரங்களில் வாய் நிற்காது. அதற்கும் முறைப்பான். இப்பொழுது சில நாட்களாக கொஞ்சம் அடக்கிவாசிக்கிறான்.
“போலாமா?…” என்று விமலா வர,
“ஹ்ம்ம் போவோம்…” என அப்படியே எழுந்து கொள்ள,
“நீங்க முகத்தை கழுவுங்க. பாருங்க நெத்தியில வச்சிருக்க சந்தனம் எல்லாம் கலைஞ்சு தலை உலைஞ்சு போச்சு…” என கவனித்து அவள் சொல்ல அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தான்.
“என்ன நான் சொன்னா நம்ப மாட்டீங்களா?…” என்றவள் அவனை கை பிடித்து இழுத்துக்கொண்டு பாத்ரூமினுள் தள்ளவும் ஒரு சிரிப்புடன் முகத்தை கழுவிவிட்டு வந்தான்.
இவர்கள் இருவரும் கிளம்பி கீழே வர மற்றவர்கள் தயாராக நின்றனர். பூங்கோதை கையை பிசைந்துகொண்டு நிற்க வாசுதேவகிருஷ்ணன் அவரிடம் எதுவோ பேசிக்கொண்டிருந்தான். தாமோதரன் மட்டும் அங்கே இல்லை.
“சொல்லுங்க அத்தை. ஊருக்கே தேன்மிட்டாய் வாங்கி குடுத்திருக்கீங்க. எனக்கு ஒரு மிட்டாய கண்ணுல காண்பிக்கலை…” என கேட்க,
“கடையில அம்புட்டுதான் இருந்துச்சாம் மாப்பிள்ளை…” என அவர் சொல்ல,
“கடல்லையே இல்லையாம்…” என அவருக்கு பதில் சொல்ல,
“என்னது?…” என நிமிர்ந்து பார்த்தார். அபூர்வாவோ அவனை முறைக்க அவளின் முறைப்பில் சரண்டர் ஆனவன்,
“சரி நாங்க வெளில போய்ட்டு வரோம்….” என சொல்லி கிளம்ப,
“ஒரு இடத்துலையும் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியாடா நீ?…” என மருது கண்டித்து,
“அவன் எப்பவுமே இப்படித்தான் விளையாடுவான் அத்தை. நீங்க ஒன்னும் நினைக்காதீங்க…” என சொல்லி வெளியேற எல்லாரும் கிளம்பிவிட அப்பொழுது தான் மூச்சே வந்தது பூங்கோதைக்கு.
உடனே தாமோதரனுக்கு அழைத்த பூங்கோதை மாப்பிளைக்கு என்று சொல்லி மிட்டாய் வாங்கிவர பணிக்க அன்புக்கரசி ஆரம்பித்து பூங்கோதையிடம் வந்து நின்றது தேன்மிட்டாய் விளையாட்டு.
இரவு உணவிற்கு வரும் நேரம் கை கொள்ளா பொருட்களுடன் வந்து சேர்ந்தனர். விமலாவின் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.
மிதமான தூறல் விழ ஆரம்பித்திருந்தது அப்பொழுது. இரவு இட்லியும் கறி குழம்பும் என்று முடித்துக்கொண்டனர். அசதியும் அலுப்பும் சேர்ந்துகொண்டதில் விரைவிலேயே உறங்க சென்றனர்.
விடியற்காலை வழக்கம் போல நான்கு மணிக்கே தாமோதரன் வேலைக்கு கிளம்ப ஆரம்பிக்க அவருக்கு டீ போட என்று பூங்கோதை எழுந்து கூடத்தை கடக்க அங்கிருந்த விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் கதவு இழுத்து திறக்க யாரோ முயற்சிக்க அதனை பயத்துடன் திரும்பி பார்த்தார் பூங்கோதை.
“எவனோ களவாணிபயலா இருப்பானோ? இதென்ன வீட்டுல இத்தன மனுசக இருக்கறப்ப வந்திருக்கான்?” என நினைத்தவர்,
“என்னங்க இங்க வாங்களேன். வாங்களேன்…” என்று மெல்லிய குரலில் அலற அதுவே வீடு முழுக்க கேட்டது.
வேகமாய் கதவை உள்ளிருந்து தாழ் போட்டு பூட்டிக்கொண்டவர் சாவியை காணாது தேட அதற்குள் தாமோதரன் வந்துவிட்டார்.
“என்ன கோதை பதட்டமா கூப்பிடற? என்னாச்சு?…” என்று கேட்க தினேஷ், மகிழும் கூட வந்துவிட்டனர்.
“களவாணிப்பய, அடுப்படியில மேல விறகு அடிக்கிருக்கேன். ஒன்னை எடுங்க. நான் உலக்கையை எடுத்தாறேன்…” என்று மாடிப்படிக்கு அருகே இருந்த உலக்கையை எடுத்துவந்து கதவு திறந்தால் உடனே அடிக்க தயாராய் நிற்க படாரென திறந்தது.
வாசலில் இருந்த இருளில் உள்ளே வந்தவன் முக சரியாக தெரியாமல் போக,
“தினேசு, போடுடா அந்த லைட்டை. இன்னைக்கு மண்டையை உடச்சு மாவிளக்க போடறேன். போலீஸ்க்கார சம்பந்தம் பண்ணிருக்கோம்னு ஒரு பயமில்ல இவனுக்கு…” என்று வீரவசனம் பேச விளக்கு எறியவும் அப்படியே நின்றார் பூங்கோதை.
“என்னத்த பண்ணிட்ட கோதை? நம்ம மாப்பிள்ளை இவரு….” என கடிந்துகொள்ள வாக்கிங் சென்றிருந்தவன் தலையில் மாட்டியிருந்த தொப்பியையும் முகத்தில் கட்டியிருந்த கைக்குட்டையையும் கழற்றியவன்,
“ஒரு வாக்கிங் போனது குத்தமா? தூக்கம் வரலைன்னு எழுந்துட்டேன். சரி ஒரு வார்ம்அப் பண்ணுவோம்னு வெளில போனேன். எல்லாரும் தூங்கிட்டிருந்தீங்க. இந்த கதவு வேற…” என சொல்லிக்கொண்டே சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.
“போயி மாப்பிள்ளைக்கு குடிக்க டீ போடு…” என அவரை உள்ளே அனுப்பிய தாமோதரன் அவனருகே வந்து அமர்ந்தார்.
“தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை. அவ ஏதோ…” என சொல்ல,
“அதொண்ணுமில்லை மாமா. யாரா இருந்தாலும் டவுட் வரத்தான் செய்யும். அந்த கதவுக்கு என்னாச்சு?…” என கேட்க,
“நீ போய் படுத்துக்கோ மகிழ்…” என அவளை அனுப்பிய தினேஷ்,
“நேத்து மழை பெய்ஞ்சது தானே? மழை நேரத்துல கதவு நீர் பிடிச்சு கீழ் இறங்கிக்கும். அப்போ லேசா தூக்கிவிட்டு திறந்தா வந்துரும்…” என சொல்ல டீயை போட்டு எடுத்து வந்த பூங்கோதைக்கு முகத்தை எங்கு வைப்பதேன்பதை போல தவித்து போனார்.
“ஈஸி அத்தை…” என சொல்லியபடி வாங்கிக்கொண்டவன் டீயை குடித்துவிட்டு அவர்கள் கிளம்பும் வரை இருந்து பேசிவிட்டு மேலே வர அப்பொழுது தான் எழுந்து அமர்ந்தாள் அபூர்வா.
“யக்கா…” என்றபடி அவன் வந்து நிற்கவும் தான் தன்னருகே அவனை தேடி பார்த்தவள்,
“நீங்க கீழே போயிருந்தீங்களா?…” என கொட்டாவியை அடக்கியபடி கேட்க,
“ஹ்ம்ம். அது கூட தெரியாம தூங்கிருக்க…” என்று சொல்லி கட்டிலில் சாய்ந்தவன் அவளையும் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,
“ம்ஹூம், விடுங்க, போய் குளிச்சுட்டு கோலம் போட போகனும்…” என்று விலக பார்க்க,
“ஒன்னும் வேண்டாம். மழையில கோலம் போட்டு யார் பார்க்க? நானும் கோலம் போடறேனே. என் கூட தூங்கு…” என்று அவளின் முகத்தோடு இழைய புன்னகையுடன் அவனுடன் கரைந்துபோனாள் அவனின் கண்மணி.
அன்றைய காலை உணவை முடித்ததும் முத்துவேலுவுக்கு மருதவேல் அழைக்க அவரோ கேட்டதற்கு ஆம், இல்லை என்ற பதிலுடன் வைத்துவிட இப்பொழுதே கிளம்புகிறேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.
அங்கிருந்தே தன் அண்ணனை ஆட்டுவிக்கும் தந்தையின் செயலில் கடுப்பான வாசுதேவகிருஷ்ணன்,
“ஒழுங்கு மரியாதையா என் கூட இங்க இரு. இல்லையா நானும் உன்னோட வரேன்….” என முடிவாய் சொல்லவும் தான் அமைதியானான்.
மருதவேலுவுக்கும் அங்கிருக்க அத்தனை பிடித்திருந்தது. எப்பொழுதுமே தாமோதரனும், பூங்கோதையும் ஒரு மரியாதையுடன் தள்ளி நின்றுகொண்டாலும் பார்த்து பார்த்து கவனித்தனர்.
ஒரு நாள் பாட்டு, சிலபல விளையாட்டுகள் என பொழுது போக அதற்கு மறுநாள் அலப்பறையை கூட்டினான் வாசுதேவகிருஷ்ணன்.
ஆண்களை கூட்டிக்கொண்டு மார்கெட் சென்று தேவையான காய்கறிகள் எல்லாம் வாங்கி வந்தவன் அன்று தாங்கள் தான் சமைப்போம் என்று சொல்ல பூங்கோதைக்கு திக்கென்று ஆனது.
“நீங்க என்ன செய்வீங்க? அம்மாவே சமைக்கட்டுமே?…” என அபூர்வா சொல்ல வாசுதேவகிருஷ்ணன் விடவே இல்லை.
“நீ பேசாம இரு பூர்வா. இன்னைக்கு எங்க சமையல் தான். சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க. அது வரைக்கும் இங்க தான் உட்காரனும். புரியுதா?…”
“ஏன்டி இவளே, நான் இருக்கறதே அடுப்படி ஒண்ணுல தான். அங்கயும் விடமாட்டேன்னா எப்படி?…” என மருமகளின் காதை கடிக்க,
“வேணும்னா கூட போயி அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணுங்களேன்…” என மகிழ் கிண்டல் பேச,
“முதல்ல என்ன செய்ய போறீங்க? அதை சொல்லுங்க. நாங்களும் மனசளவுல எங்களை தயார்ப்படுத்திக்கனும் தானே?…”
“ஏய் விமலா இவங்களுக்கு தான் தெரியாது. உனக்கு தெரியும்ல வாசு நல்லா சமைப்பான்னு. சாப்பிடாதவ மாதிரி பேசற…” என்று மருதவேல் சொல்ல,
“ப்ச், விடு விடு. இன்னைக்கு சாப்பிட்டு சொல்லட்டும்…” என்றவன் அபூர்வாவை பார்த்து,
“இதுவரைக்கும் நம்ம சைட் சாப்பாட்டுகள் தான் சாப்பிட்டிருப்பீங்க. இப்ப டிபரண்ட் டிஷ். சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க. எல்லாமே தி கிரேட் தம்பி ஸ்பெஷல்…” என்று சொல்ல அபூர்வா திடுக்கிட்டு பார்க்க,
“அதாவது நான் என்னை தம்பின்னு நானே சொல்லிக்கிட்டேன்…” என சொல்லி அவளை பார்த்து கண் சிமிட்டி,
“முதல் ஐட்டம் புதுமைனானது. ஸ்டஃப்ட் ஆபோஜின்…” என சொல்ல பூங்கோதை மகிழிடம்,
“ஏன்டி இவளே, சட்டுன்னு ஆப்பம் சட்னின்னா மாவு அரைக்கலையேடி. நேத்தே சொல்லியிருந்தா ஊற வச்சு அரைச்சிருப்பேன்ல. இதை செய்யத்தான் இம்புட்டு காயாக்கும்?…” என்று நொடிக்க மகிழிற்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை.
“அடியேய் எதுக்கு இம்புட்டு சிரிக்கிறவ? முன்னப்பின்ன நான் ஆப்பம் சுட்டு நீ சாப்பிட்டதில்லையாக்கும்?…” என முறைக்க,
“ஐயோ அத்தை அது ஆப்பம் இல்லை. ஆபோஜின். பெரிய கத்தரிக்காய். நீங்க கூட அதை நல்லா சுட்டு கோசுமல்லி செய்வீங்க தானே? அந்த கத்தரிக்காய்க்குள்ள எந்த காயையாவது அடைச்சு வச்சு செய்யறது…” என்று விளக்க,
“அதை எல்லாம் யாரு கண்டா? இதுக்கொரு சிப்பாலு. வாயை மூடு. அவரு பார்த்தா என்ன நினைப்பாரு?…” என சொல்லி திரும்ப அவர்களுக்கு வெகு அருகில் அந்த டீப்பாயின் மீது அமர்ந்து காதில் கை வைத்து கேட்டபடி இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஆத்தே…” என மூச்சை பிடித்துக்கொண்டு அலறியேபோனார் பூங்கோதை.