“பூர்வா போய்ட்டு வரேன். நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு. இல்லை உன் மாமனார் சொன்ன கெஸ்ட்டை பார்க்கனும்னா இருந்து தாராளமா பாரு…” என சொல்லிவிட்டு எழுந்ததும் அபூர்வாவும் சேர்ந்து எழுந்து நின்றாள்.
அவளின் கண்களில் தெரிந்த பதட்டத்தில் அவளின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தவன்,
“வந்திருவேன்…” என சொல்லி திரும்ப வாசலில் கேட் திறக்கும் சத்தத்தில் அனைவருமே வாசலை பார்த்தனர்.
அபூர்வாவை பற்றியிருந்த கை ஒரு நொடி இறுகி பின் இலகுவாக அபூர்வாவின் பயம் இன்னும் அதிகமாகியது.
“உங்க கெஸ்ட்…” என்றான் அழுத்தமாய் நக்கல் குரலில்.
“அவ கெஸ்ட்டா?…” என்று முத்துவேல் கொந்தளிக்கு பொழுதே தன் மனைவிக்கு கையை ஆட்டிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.
“ஹாய் அத்தான்…” என எதிரே வருபவளை கண்டுகொள்ளாத பாவனையோடு அலட்சியத்துடன் கடந்து செல்ல அவளின் முகமே விழுந்துவிட்டது.
“வாம்மா பவி…” என அன்புக்கரசி முத்துவேலின் பார்வையின் உக்கிரத்தின் தாக்கத்தில் அழைக்க விமலாவும் வா என்றாள் வெளியே வராத குரலில் வாயசைப்புடன்.
“என்னம்மா சின்ன மருமகளே இதுதான் என் மருமக. வீட்டுக்கு வந்திருக்கறவளை வான்னு கேட்க மாட்டியா? என்ன சொல்லிக்குடுத்திருக்காங்க உங்க வீட்டில…” என்றதும் சட்டென அபூர்வாவின் பார்வை கூர்மையாய் முத்துவேலை பார்த்தது.
“என்ன பார்க்கிற? இந்த வீட்டுக்கே ரொம்ப முக்கியமானவ. முக்கியமா எனக்கு…” என தன் மருமகளின் கையை பிடித்தபடி அவளின் தலையை வருடி சொல்ல,
“வாங்க…” என்றாள் அபூர்வா. சற்றும் விரும்பாத தன்மை அவளின் முகத்தில்.
“அப்படி பேசனும். இனிமே யாரு என்னன்னு கவனமா பார்த்து பேசனும். இங்க நீ வரும் போது பவிக்கான மரியாதையை குடுக்கனும். ஞாபகம் இருக்கட்டும்…” என சொல்ல,
“வந்தவ லட்சுமியை பார்க்க வந்திருக்கா, நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி?…” என நிலைமையை சமாளிக்க அன்புக்கரசி பேச,
“நீ என்ன இங்க நின்னுட்டு. போயி பவிக்கு சாப்பிட பலகாரத்தை எடுத்துட்டு வா. அவளுக்கு பிடிக்குமேன்னு அசோகா அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன். லேசா சூடு பண்ணி அதை முதல்ல தட்டுல போட்டு கொண்டா. காபிக்கு பில்ட்டர்ல பொடியை போடு. சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள டிகாஷன் இறங்கட்டும்…”
உத்தரவுகளுக்கு மேல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட அன்புக்கரசி அபூர்வாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே உள்ளே செல்ல,
“நீ இங்க என்ன செய்யற? போ போ. போய் வேலையை பாரு. பவி உன்னையா பார்க்க வந்திருக்கா?…” என விமலாவை விரட்ட அந்த சூழ்நிலையே அபூர்வாவிற்கு கசந்தது.
முத்துவேலின் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவர் அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தார் பவி என்பவளுடன்.
“புது ஊர், உனக்கு ஒத்துக்கிச்சாம்மா? ஏன்டா போகமாட்டேன்னு சொல்லாம அங்கலாம் போய் கஷ்டப்படற?…” என வாஞ்சையாக பேச பவியும் அவரிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.
“என்ன இவர், பெத்த பிள்ளைங்களை கூட தள்ளி வச்சு பேசிட்டு இந்த பொண்ணுக்கிட்ட உருகறார்.” என அவரை வித்தியாசமாக பார்க்க அன்புக்கரசி வந்துவிட்டார்.
“லட்சுமியை பார்த்து பேசன்னு வந்து உன் மாமாக்கிட்டையே பேசிட்டு இருக்க…” என சொல்லிவிட்டு கொண்டு வந்த பலகாரத்தை வைத்துவிட்டு தள்ளி நிற்க,
“அட ஆமால. நானும் மறந்தே போய்ட்டேன். இவங்க இங்க இருக்கறதையே மறந்துட்டேன் அத்தை…” என சொல்ல,
“அதென்ன அவங்க இவங்கன்னு, உன்னை விட இளையவ தான். சும்மா வா போன்னே பேசு…” என்று முத்துவேல் சொல்ல விமலாவிற்கு அபூர்வாவின் முகத்தை பார்க்கவே அச்சமாக இருந்தது.
அப்படி ஒரு இறுக்கமாக இருந்தாள். இதுவரை மென்மையாக மட்டுமே அவளை பார்த்திருக்க, அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருப்பவளை போல கை விரல்களை பிரித்து கோர்த்து என்று சிரிப்பில்லாமல் இருக்க அன்புக்கரசியை அழைத்து காண்பித்தாள் விமலா.
“அத்தை லட்சுமி முகமே மாறிடுச்சு. கோபமா இருக்கா போல?…” என முணுமுணுக்க,
“உன் மாமனார் இழுத்துவிட்ட தேரு தெருவுக்கு வர போகுது போல. இந்த பேச்சு பேசினா கோவம் வரத்தான செய்யும். எல்லாரும் உன்னையும், என்னையும் மாதிரியா இருப்பாங்க. பார்க்க சாதுவா இருந்தா உடனே உன் மாமனார் மழுமட்டைன்னு நினைச்சிருவாரு. பார்ப்போம்…”
அன்புக்கரசிக்கு இன்று எதுவோ நடக்கவிருக்கிறது என்றே அவரின் உள்ளுணர்வு உருத்திக்கொண்டே இருந்தது.
“சரிம்மா நீ பேசு…” என முத்துவேல் சொல்லி பார்வையாளராக மாற உடனே பவி அபூர்வா பக்கம் திரும்பினாள்.
“ஹாய்…” என சொல்ல,
“ஹ்ம்ம் ஹாய் சொல்லுங்க…” என அபூர்வாவும் ஒட்ட வைத்த புன்னகையுடன் கேட்க,
“நான் பவானி. எல்லாருக்கும் பவி. ஐடில வொர்க் பன்றேன். லேக்ஸ்ல மந்திலி சேலரி…” என சொல்ல,
“ஓஹ், நல்லது…” என்றாள் அபூர்வா.
“அத்தை நம்ம லட்சுமிக்கு இப்படிலாம் பேச தெரியுமா?…” என விமலா அன்புக்கரசியை சுரண்ட,
“யாரு கண்டா? வாசுவே ட்ரெய்னிங் குடுத்திருப்பான். பேசாம இருடி…” என அவர்களை வேடிக்கை பார்க்க,
“என் பேர் சொல்லிட்டேன். உங்க பேர்…” என கேட்க,
“இப்ப தானே கேட்கறீங்க. என் பேர் அபூர்வலட்சுமி. மிசஸ் வாசுதேவகிருஷ்ணன்…” என்று கணவனின் பெயரையும் சேர்த்தே சொல்ல,
“நைஸ்…” என்றவள்,
“என்ன படிச்சிருக்கீங்க? இதுக்கு முன்னால வொர்க் பண்ணிருக்கீங்களா?…” என பொதுவாய் பேச,
“அதெல்லாம் இல்ல. சும்மா டிகிரிதான். ஆர்ட்ஸ் அன்ட் சைன்ஸ்ல. வேலைக்கும் போகலை…” என சற்று இடக்கான குரலில் முத்துவேல் பேச பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அபூர்வா.
அதன் பின்னான பேச்சுக்கள் அபூர்வாவிடம் அந்த வீட்டில் தன் உரிமையையும், தன் வேலையயையும் பற்றியே இருக்க இடையிடையே முத்துவேலும் தனக்கு பவி இன்றியமையாதவள் என்பதை அபூர்வாவிற்கு உணர்த்திக்கொண்டே இருந்தார்கள்.
முகம் மாறாமல் அபூர்வாவும் சிலவற்றிற்கு பதில் சொல்வதும், சிரிப்பதுமாக இருக்க பின் அரைமணி நேரம் கழிந்த நிலையில் வாங்கி வந்த பரிசுபொருளை பவி நீட்ட,
“தேங்க்ஸ்…” என்று அபூர்வா வாங்கியதும்,
“இது இங்க வாங்கினதா? நீ போன இடத்துல வாங்கிட்டு வந்ததாம்மா?…” என முத்துவேல் கேட்க,
“ஆமாம் மாமா, போன ஊர்ல தான். ரொம்ப நாளா நீங்க ஒரு டிஸைன் வால்க்ளாக் காமிச்சுட்டு வாங்கனும்னு சொல்லிட்டு இருந்தீங்கள்ள. அதான் அதையே கிப்ட்டா வாங்கிட்டு வந்துட்டேன்…” என சொல்ல “சுத்தம்” என விமலா நினைக்க அவளின் நினைப்பு போலத்தான் அபூர்வாவும் நினைத்தாள்.
“மாமாவுக்கு கிப்ட்னா அவங்கட்டையே குடுத்திடலாமே. வாங்கிக்கோங்க மாமா…” என மீண்டும் பவியின் கையில் அந்த பரிசை தந்துவிட்டாள் அபூர்வா.
பவானிக்கு ஒரு நொடி ஒன்றுமே விளங்கவில்லை. அன்புக்கரசியும், விமலாவுமே இதை எதிர்பார்க்காமல் அதிர்வுடன் பார்க்க முகத்தில் மறையாத சிரிப்புடன் இருந்த அபூர்வாவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை.
“நீங்க எதுவும்…” என பவி ஆரம்பிக்கும் பொழுதே,
“ச்சே ச்சே, அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நீங்க மாமா ஆசைப்பட்டதை வாங்கிட்டு வந்தீங்க இல்லையா? அதான் அவர்ட்டயே குடுத்தா இன்னும் சந்தோஷப்படுவாங்கன்னு தான் குடுக்க சொன்னேன். ம்ம்ம், குடுங்க…” என சொல்ல,
“அதான் சொல்லிடுச்சுல, நீ குடு…” என்று வாங்கி டீப்பாயில் வைத்தவர் அதை பிரித்தும் பார்க்க கலைநயத்துடன் மிக அழகாகவே இருந்தது.
“விவஸ்தை கெட்ட மனுஷன், விவஸ்தை கெட்ட மனுஷன்…” என அன்புக்கரசி நறநறவென பல்லை கடிக்க,
“ஒன்னும் சொல்றதுக்கில்லை…” என விமலாவும் முணுமுணுத்தாள்.
“அன்பு, பலகாரம் எல்லாம் எடுத்து வை. கொண்டு போய் ராணிக்கிட்ட குடுத்துட்டு வரேன்…” என சொல்ல,
“மாமா, நானே கொண்டு போறேன். ஸ்கூட்டில தான் வந்திருக்கேன்…”
“இருக்கட்டும்டா, மாமா கொண்டு வரேன். அப்படியே நைட்டுக்கு உனக்கு புடிச்ச பால்கொழுக்கட்டை செஞ்சு வாங்கிட்டு வரேன். இப்ப நீ கிளம்புடா…” என விழுந்து விழுந்து மருமகளை கொஞ்ச அமைதியாக இருந்தனர் மற்றவர்கள்.
“சரி மாமா, நான் கிளம்பறேன்…” என பவி எழுந்து கொள்ள,
“வா வா, வாசல் வரைக்கு நானும் வரேன்…” என சொல்லி அன்புக்கரசியை பார்க்க,
“வா வழக்கம் போல போயி தேரை நகர்த்துவோம். இல்லைன்னா நம்ம மேல தேரை ஏத்திருவாரு. காணாத மருமகளை கண்டுட்ட மாதிரி…” என்ற முணுமுணுப்புடன் அவரை பின் தொடர்ந்து அன்புக்கரசியும் விமலாவும் செல்ல அபூர்வா மாடிக்கு சென்றுவிட்டாள்.
வாசலுக்கு சென்ற பின்னர் தான் அபூர்வாவை காணாத முத்துவேல் பின் பவியை அனுப்பிவிட்டு உள்ளே வந்து,
“என்ன அன்பு இதெல்லாம்? இந்த புள்ளையை தேடி பார்க்க தான பவி வந்துட்டு போனா. அவளை வாசல் வரைக்கும் வந்து அனுப்பி வைக்காம அப்படி என்ன தெனாவெட்டு? வரட்டும் இன்னைக்கு…” என கோபமாக அமர,
“ம்க்கும், உன் மாமனார் சும்மாவே வேதாளம். இப்ப பவி வந்துட்டு போய்ட்டா. கேட்கவா வேணும். நல்லா கவனிச்சாலே இது நொட்டை அது சொட்டைன்னு சொல்லுவாரு. பாவம் லட்சுமி…” என்று சொல்ல,
“என்ன பார்வை இங்க? போ போ, போயி அவளுக்கு சீக்கிரம் செய்…” என்று விரட்டாத குறையாய் விரட்டவும் எரிச்சலுடன்,
“இவர் முகத்தை பார்க்க நிக்கிறேனாக்கும். உடனே போனா அதுக்கும் கத்துவாறேன்னு நின்னா நெனைப்பை பாரேன்…” என அன்புக்கரசி சொல்ல விமலா உள்ளே ஓடியேவிட்டாள்.
“இவ ஒருத்தி பயத்துல பிறந்தவ…” என சாவகாசமாய் சென்றார் அன்புக்கரசி.
“நாளைக்கு வரைக்கும் வேப்பிலை இல்லாத குறையா ஆடத்தான் போறாரு. திட்டத்தான் போறாரு. சீக்கிரம் போனா மட்டும் திட்டாம விட்டுடுவாரக்கும்?…” என்று விமலாவிடம் சொல்லிக்கொண்டே மாவை பிசைய ஆரம்பித்தவர்,
“விமலா அந்த வெல்லத்தை எடுத்து தட்டி தண்ணில போடு. கொதிக்கட்டும்…” என சொல்லிக்கொண்டே வேலையை பார்க்க இருவருமாய் மாவை உருட்ட ஆரம்பித்தனர்.
“என்ன அத்தை செய்யறீங்க? என்னையும் கூப்பிட்டுவிட்டிருக்கலாம்ல…” என வந்தாள் அபூர்வா. குளித்து வேறு புடவைக்கு மாறியிருந்தாள்.
“வாம்மா லட்சுமி, உன் மாமா வேலை தான். பார்த்த தானே உத்தரவை. கட்டளையே சாசனம். சிம்மாசனம், சித்திரகுப்தன்னு வசனம். அதான். செஞ்சிட்டு இருக்கேன்…”
வெகு இலகுவாக முத்துவேலின் அடாவடியை சிரிப்புடன் சொல்லும் அத்தையை அன்புடன் கட்டிக்கொண்டாள் அபூர்வா.
“நீங்க ரொம்ப ரொம்ப தூள் அத்தை…” என சொல்ல,
“நானும், எனக்கும் அத்தை தூள் தான்…” என விமலாவும் ஒரு புறம் கட்டிக்கொள்ள,
“என்ன தூளுடி மிளகாய் தூளா? அப்படினா முதல்ல என் புருஷன் தான கண்ணு கலங்கியிருக்கனும்…” என்று அதற்கும் அவர் கேலியாய் பேச,
“இந்தாம்மா சின்ன மருமகளே…” என வெளியில் இருந்து முத்துவேல் அழைத்த விதமே அன்புக்கரசியை திடுக்கிட செய்ய,
“இன்னைக்கு ஏடாகூடமா எதுவும் பேசிட போறாரு” என பயந்து,
“லட்சுமி, மாமா கோபமா இருக்காரு…”
“நான் தப்பு பண்ணலை அத்தை…” என்றாள் இன்னும் அதே சிரித்த முகத்துடன்.
“நான் அப்படி சொல்லலைடா…” என்றவருக்கு என்ன சொல்வதென தெரியாமல் கையை பிசைய,
“அன்பு…” என இப்பொழுது பெருங்குரலில் கத்திவிட்ட சட்டென அடுக்களையை விட்டு வெளியேறி முத்துவேலின் முன்னால் நின்றாள் அபூர்வா.
“சொல்லுங்க மாமா. என்னை கூப்பிட்டீங்க. அத்தை வேலையா இருக்காங்க…” என சொல்ல உள்ளே இருந்தே விமலாவும், அன்புக்கரசியும் எட்டி பார்த்தனர்.
“இங்க வாம்மா…” என சற்று தள்ளி மருமகளை அழைத்தவர்,
“உன் பேச்சு ஒன்னும் பவிக்கிட்ட சரியில்லையே. என்ன உன் கணக்கு? உன் புருஷன் எதுவும் சொல்லிக்குடுத்தானா?…” என கேட்க,
“நீங்க கேட்கிறது எனக்கு புரியலையே மாமா…” என்றாள் தன்மையாக.
அதுவே முத்துவேலை கோபமுற செய்தது. விமலாவென்றால் அப்படிங்களா? மன்னிச்சுக்கங்க மாமா. என்று போய்விடுவாள். இவளானால் கேள்வி கேட்கிறாளே? என பார்க்க,
“நான் இன்னைக்கு தான் அவங்களை பார்க்கறேன். இதுவரைக்கும் யாருமே இந்த வீட்டில அவங்களை பத்தி சொன்னதோ பேசினதோ இல்லை. அதுவும் இல்லாம முன்ன பின்ன தெரியாதவங்கட்ட முதல் தடவை பார்க்கும் போது இந்தளவு தானே என்னால பேச முடியும். எந்த இடத்திலும் மரியாதை இல்லாம நான் பேசலையே?…”
பட்டு பட்டென்று பேச உள்ளிருந்த பெண்கள் வாயை பொத்தியபடி இருவரும் பதறினார்கள்.
“என்னது முன்னப்பின்ன தெரியாதவளா? அவ என் மருமக. சொல்ல போனா இந்த வீட்டுக்கு மகாராணியா வந்திருக்க வேண்டியவ. ஞாபகம் இருக்கட்டும். அவ வேண்டாம்னு சொன்னதால தான் நீ வந்திருக்க…”
“இருந்துட்டு போகட்டுமே. ஆனா இப்ப நான் தான் உங்க மருமக. சொல்ல போன உரிமைப்பட்ட மருமக. இந்த வீட்டு மனுஷங்களை யாரையும் நான் தெரியாதவங்கன்னு சொல்லலை. பவி இந்த வீட்டு மனுஷி இல்லை. அப்ப அப்படித்தானே சொல்ல முடியும். அதுவும் பர்ஸ்ட் டைம் பார்க்கறேன்…”
என்னதான் முத்துவேல் ஆக்ரோஷமாக பேசினாலும் காயப்படுத்தும் விதமாக பேசினாலும் அபூர்வா மிக நிதானமாக அமைதியான குரலில் தான் எடுத்து சொன்னாள்.
“ஓஓஹோ, போயும் போயும் ஒரு சமையல்காரன் பொண்ணு உனக்கு இவ்வளவு பேச்சா? எவ்வளவு திண்ணக்கம்மா உனக்கு…” என்ற எள்ளல் குரலில் அபூர்வா அதிர்ந்துவிட்டாள்.
தன்னை பெண் கேட்டு வந்த இடத்தில் இனிக்க இனிக்க பேசியதென்ன? இன்று இந்தளவுற்கு தாழ்த்தி பேசுவதென்ன? உள்ளுக்குள் தகப்பனை எண்ணி தவித்துப்போனாள்.
“என்ன சொன்னீங்க? சமையல்க்காரன் பொண்ணா?…”
“ஆமா ஆமா, உங்கப்பா காண்ட்ராக்ட் எடுத்து சமையல் வேலை தான பார்க்கறாரு. உனக்கு இவ்வளவு பேச்சா? என் தங்கச்சி புருஷன் சொந்தமா பிஸ்னஸ் பன்றாரு. ஒரே பொண்ணு பவி. அவளும் நீயும் ஒண்ணா?…”
“ஒண்ணில்லைன்னா ஏன் தேடி வந்து பொண்ணு கேட்டீங்க? சமையல்க்காரன் பொண்ணுன்னு அப்போ தெரியலை போல?…” என்றவள்,
“அப்படி பார்த்தா வீட்டுக்கு சமைச்சு போடற ஒவ்வொரு அம்மாவும் சமையல்காரி தான். எங்க இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம். எங்கப்பா ஆயிரக்கணக்கான பசங்களுக்கு, பொண்ணுங்களுக்கு அம்மா மாதிரி. பெத்த பிள்ளைங்களுக்கு சமைக்கிற மாதிரி பார்த்து பார்த்து செய்யறாரு…”
உணர்ச்சிவசப்பட்டு அபூர்வா பேசும் பொழுதே கண்கள் கலங்கி கண்ணீர் இறங்கிவிட்டது கன்னத்தில்.
“அம்மாடி லட்சுமி…” என்று அன்புக்கரசி ஆதரவாய் அவளின் தோள்மேல் கை வைக்க,
“ஏன் மாமா நீங்க கூட தான் முன்னாடி பலசரக்கு கடை வச்சிருந்தீங்க. உங்களை மளிகை கடைக்காரர்ன்னு தானே எல்லாரும் சொல்லியிருப்பாங்க. அது நீங்க பார்க்கிற வேலைக்கான பேர் இல்லை. உங்க உழைப்புக்கானது. அரிசி பருப்புகளை பாக்கெட் போட்டு வியாபாரம் செய்யற விஷயம் இல்லை எங்கப்பாவோட வேலை…”
“வீட்டுல நாலு பேருக்கு சமைக்கனும்னாலே ஆயிரத்தெட்டு சுத்தம் பார்த்து நுணுக்கம் பார்த்து ருசியா செய்யனுமேன்னு பார்த்து பார்த்து செய்யிறோம். குடும்பத்துக்கே இவ்வளோ பார்க்கும் போது அது காலேஜ். எவ்வளவு கவனம் இருக்கனும்….”
“நீங்க என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க. நான் இந்த வீட்டு மருமக. ஏத்துப்பேன். எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டேன். அதை விட்டுட்டு அந்த பொண்ணு முன்னாடியே பேசறதும் சரியில்லை மாமா. அதே மாதிரி என்னை பெத்தவங்களை பேசறதும் சரியில்லை. கேட்டுட்டு சும்மா இருக்கமாட்டேன்…”
“என்ன சரியில்லை மாமனாரை மதிக்கனும்னு கூட தெரியலை. கட்டிட்டு வந்து பத்துநாள் ஆகலை, இந்த பேச்சு பேசற. விட்டா குடும்பத்தை நாலாக்கிருவ…” என இன்னும் வீம்பாய் பேச,
“என்னை நீங்க தானே பேச வச்சீங்க. யாரோ ஒருத்திக்கு நான் ஏன் மரியாதை குடுக்கனும். உங்க தங்கச்சி பொண்ணாவே இருந்தாலும் கால்ல விழ முடியுமா? நான் குடும்பத்தை நாலாக்கிருவேனா? வீட்டுக்கு வந்து பத்து நாளே ஆன பொண்ணுக்கிட்ட நீங்க கூட தான் பேசறீங்க…”
“அன்பு…” என்று பதில் சொல்ல முடியாமல் மனைவியை முறைக்க,
“என்னை சொல்லுங்க மாமா. கேட்கறேன். இதுல அத்தையை ஏன் திட்டனும்? அதான் சொல்லவேண்டியதை நேரடியா சொல்லிட்டீங்கள்ள…”
“நல்லா வளர்த்து கட்டிக்குடுத்திருக்காங்க உங்க வீட்டுல. என் வீட்டுக்குள்ள நின்னு என்னையே பேசற. இருந்த இருப்பை மறைந்திற கூடாது பார்த்துக்க. இது என் வீடு. நான் சொல்ற மாதிரி தான் இருக்கனும்…” என சொல்லிய நொடி அவரை ஒரு பார்வை பார்த்தது தான்.
வேகமாய் மாடிக்கு சென்றுவிட்டாள். முத்துவேல் அழைக்க அழைக்க திரும்பவே இல்லை.
“நான் சொல்லலை. தேரு தெருவுக்கு வந்தாச்சு. வாழ வந்த பொண்ணை இப்படி நோகடிக்கிறாரே. வாசுவுக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ?…” என அன்புக்கரசி விமலாவிடம் புலம்பியவர்,
“கொளக்கடையாம் கொளக்கட்ட. அமத்து அந்த அடுப்ப…” என சொல்ல,
“மாமா கேட்டா…” விமலா பயப்பட,
“அதான் மாவ உருட்டியாச்சே. உருகுன பாகையும், உருட்டின மாவையும் குடுத்துவிடுவோம். அவிச்சு சாப்பிடட்டும் மாமனும், மருமகளும்…” என பல்லை கடித்தார் அன்புக்கரசி.
மாடிக்கு சென்ற கால்மணி நேரத்தில் வாசுதேவகிருஷ்ணன் மேலே வந்து விட்டான். வந்தவனிடம்,
“நான் நம்ம வீட்டுக்கு போகனும். இப்பவே. கூட்டிட்டு போவீங்களா?…” என கேட்க என்ன ஏதென்று எதுவும் பேசாமல்,
“வா போகலாம்…” என அவளின் கை பிடித்து கீழே இறங்கிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.