நிஜம் – 18
கீழே இறங்கி வந்தவர்களின் முகத்தை பார்த்ததுமே புரிந்துபோனது முத்துவேலுவுக்கு.
“எங்க கிளம்பிட்டீங்க ரெண்டுபேரும்?…” என முத்துவேல் கேட்க,
“வாசு என்னப்பா?…” என்றார் அன்புக்கரசி.
மனதே தாளவில்லை அவருக்கு. முத்துவேல் மேல் கோபம் கோபமாக வந்தது. ஆனால் கோபப்பட்டு ஒரு நிமிடம் வார்த்தைகளை இறைத்துவிடலாம் தான். அதனால் முத்துவேல் கோபம் அதிகமாகுமே தவிர புரியவோ உணரவோ மாட்டார்.
“இனியும் இந்த மனுஷனை இவர் போக்குல விட்டா நான் என் பிள்ளைகளுக்கு அம்மாவா? என் தலையெழுத்து சகிச்சு வாழனும்னு இருக்கு. என் பிள்ளைகளுக்கு என்ன?” என்று மனதினுள் பொருமியவர் இளைய மகனை பார்க்க,
“நாங்க கிளம்பறோம் எங்க வீட்டுக்கு…” என்றான் இறுக்கம் குறையாமல்.
“என்னது உன் வீடா?…” என அதற்கும் முத்துவேல் எகிற,
“ஆமா, என் வீடுதான் இல்லைன்னு சொல்லி பாருங்க…” என்றான் மல்லுக்கு நிற்கும் பாவனையில்.
அபூர்வா எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாய் தள்ளி சென்று வாசலுக்கு அருகே நின்றுகொள்ள,
“அப்ப இது யாரு வீடு? யாரோ ஒருத்தன் மாதிரி பேசற…”
“இது உங்க வீடு. அதான் சொன்னீங்கள்ள வாய்க்கு வாய் என் வீடு என் இஷ்டப்படி தான் இருப்பேன்னு. என் பொண்டாட்டிக்கு அந்த அவசியமில்லை. இது உங்க வீடு. நீங்க பார்த்து பார்த்து கட்டின வீடு. உங்ககிட்டையே இருக்கட்டும். யாரா இருந்தாலும் வாயும் வயிறும் வேறன்னு காண்பிச்சுட்டீங்க…”
“என்னடா ரொம்ப பேசற, எல்லாம் அவ பேச வைக்கிறாளா?…”
“ஏன் இதுவரைக்கும் நான் உங்கக்கிட்ட பேசினதே இல்லையா? இன்னைக்கு தான் பேசறேனா? ரோஷம் இருக்கிற நான் இப்படித்தான் பேசுவேன். அவ சொல்லனும்னு என்ன இருக்கு? நீங்க பேசினதை தான் நான் என் காது குளிர கேட்டேனே. இதுல தனியா வேற சொல்லி குடுக்காங்கலாம்…” என்றவன்,
“கட்டின பொண்டாட்டி, பெத்த புள்ளைங்க ரெண்டாம்பட்சமா பார்க்கறது உங்களுக்கு வேணும்னா பழக்கமா இருக்கலாம். எனக்கு இல்லை…”
“நீயும் தான் இப்ப என்னை ரெண்டாம்பட்சமா பார்க்க. அதான வீட்டை விட்டு போற?…”
“இது ஒன்னும் முதல் முறை இல்லை நான் வீட்டைவிட்டு போறது. ஏற்கனவே போனது தானே. அதுக்கும் நீங்க தானே காரணம்…” என்று சொல்ல அபூர்வா அவனை ஏறிட்டு பார்த்தாள். கண்களில் அத்தனை வலி. கசப்பு மருந்தை விழுங்குவதை போல விழுங்கிக்கொண்டாள்.
“அப்படியெல்லாம் போக கூடாது நீ…”
“இங்க இருக்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு. ஏனா நீங்க சொன்ன மாதிரி இது உங்க வீடு. உங்க உழைப்பால உருவாக்கினது. தாராளமா சொல்லிக்கோங்க. ஆனா இதை விட்டு போகறது என் உரிமை. அதை தடுக்க முடியாது உங்களால…” என்று வாசு சொல்ல முத்துவேல் பல்லை கடித்துக்கொண்டு நின்றார்.
“உங்களுக்கு உங்க வீடுன்னு சொல்லிக்க எவ்வளவு கர்வமோ அதே மாதிரிதான் எல்லாருக்கும் ஒரு கர்வம் இருக்கும். அது என் வீடு. என் சுயசம்பாத்தியத்துல வாடகை குடுத்து இருக்கறேன். அங்க வந்து என் பொண்டாட்டியை நீங்க என் வீடுன்னு சொல்ல முடியாதுல…”
“இவளை காயப்படுத்த ஒரு நல்ல மனுஷனை இப்படி நீங்க பேசியிருக்க கூடாது. எப்படி எப்படி உங்க தங்கச்சி புருஷன் பிஸ்னஸ் பன்றாரா? ஒரு நிமிஷம் ஆகாது ஐடி டிபார்ட்மென்ட்க்கு போன் பண்ண? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா?…” என சொல்ல திக்கென்று ஆனது முத்துவேலுவுக்கு.
“அவர் உன் மாமாடா…” என சொல்ல,
“அப்ப பூர்வா யாராம்?…” என்றதற்கு பதில் சொல்லாமல் நிற்க,
“உங்களுக்கு உங்க மருமக முக்கியம்னா அவளுக்காக என் பொண்டாட்டியை நீங்க பேசினா எனக்கு என் பொண்டாட்டி முக்கியம். என்னை நம்பி வந்தவ. அவளுக்காக நானும் என்ன வேணும்னாலும் செய்வேன். புரியுதா? புரிஞ்சிருக்கும்…” என்று கடுகடுவென சொல்லிமுடிக்க அந்த இடமே நிசப்தமாய் இருந்தது.
பல்லை கடித்தபடி முத்துவேல் மேலும் பேச போக வாசுதேவகிருஷ்ணனின் கையை பிடித்த அன்புக்கரசி அவனை கிளம்புமாறு சைகை செய்யவும் ஒரு பெருமூச்சுடன் தலையசைத்துவிட்டு கிளம்பினான்.
அவனின் பின்னே பொம்மையை போல சென்றவள் முகமே வாடிப்போய் இருக்க அனைவருக்கும் முத்துவேல் பெசியதான் என்று நினைத்து கவலையுடன் இருந்தனர். காரை கிளப்பியவன்,
“கெட் இன் பூர்வி…” என்றதும் பதில் பேசாமல் பின்னால் ஏறி அமர்ந்தவள் இருக்கையிலேயே அப்படியே சுருண்டுகொண்டாள். அவளின் இந்த செயலில் துணுக்குற்றவன் காரின் லைட்டை போட்டு,
“பூர்வா…” என்றான் மென்மையாக.
கண்ணை திறக்கவே இல்லை. கைகளை கொண்டு முகத்தை மூடியவள் உடலை இன்னுமே குறுக்கிக்கொள்ள விளக்கை அணைத்துவிட்டு காரை கிளப்பினான்.
மனைவியின் முகமே எதுவோ சரியில்லை என்பதை தான் உணர்த்தியது. ஆனால் என்ன ஏதேன புரியவில்லை. வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்வோம் என எண்ணியவன் மனது ஏனோ அமைதியுற மறுத்தது.
இரண்டு மணிநேரத்திற்கும் மேல் ஆனது தங்கள் அப்பார்மென்ட் வந்து சேர. மருதவேல் அழைத்துக்கொண்டே இருந்தான் தம்பிக்கு.
காரை தனது பார்க்கிங் ப்ளேஸில் நிறுத்தியவன் திரும்பி பார்க்க இன்னும் அப்படியே படுத்திருந்தாள் அபூர்வா.
கீழே இறங்கி வந்து கதவை திறந்து மீண்டும் அழைக்கவும் தான் எழுந்துகொண்டாள்.
“ஆர் யூ ஓகே?…” என கேட்க தலையை மட்டும் அசைத்தவள் லிப்ட்டை நோக்கி செல்ல தங்களுடைய பேக், ட்ராலியை எடுத்து தள்ளிக்கொண்டு நடந்தவன் பார்வை நொடிக்கொருமுறை அவளை தீண்டி தீண்டி மீண்டது.
கதவை திறந்து உள்ளே சென்றதும் தான் மொபைலை காரிலேயே விட்டு விட்டு வந்தது ஞாபகம் வர,
“பூர்வா நான் மொபைலை எடுத்துட்டு வரேன். இதை உள்ள எடுத்து வை…” என சொல்லி கதவை சாற்றிவிட்டு செல்ல அறைக்குள் நுழைந்தவள் அவன் வருவதற்குள் முகத்தை கழுவிவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வந்து படுத்துவிட்டாள்.
அவனின் வார்த்தைகளில் இருந்து விலகி எங்கோ ஓடுவதை போல தலைதெறிக்க ஓட ஆரம்பித்தாள்.
இப்பொழுது வாசுதேவகிருஷ்ணன் என்பவன் தனது கணவன். தனக்கு மட்டுமே சொந்தமான ஒருவன். உரிமையானவன். ஆனாலும் முத்துவேலிடம் அவன் பேசியவற்றை கேட்கையில் அவன் கொண்ட கோபமும், ஆக்ரோஷமும் அவளின் மனதின் அமைதியை குலைத்தது.
கண்ணை இறுக்கமாய் மூடிக்கொண்டாள். அதை நினையாதே நினையாதே என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
தான் பேசிவிட்டு மாடிக்கு வந்ததோடு இருந்திருக்கவேண்டும். எதையும் கேட்டிருக்கவே கூடாது. அவன் குரல் கேட்கவும் ஓடியிருக்க கூடாது என மீண்டும் மீண்டும் நினைத்து உள்ளுக்குள் சிதறிக்கொண்டு இருந்தாள்.
கீழே வந்தவன் மொபைலை எடுக்க அன்புக்கரசியும் அழைத்திருந்தார். நேரத்ததை பார்க்க இந்நேரம் மருதுவும் வீடு வந்திருப்பான் என நினைத்தவன் முதலில் அண்ணனுக்கு அழைத்தான்.
“சொல்லுடா…” என கேட்க,
“என்னத்த சொல்றது? எதுக்குடா அப்படி கிளம்பி போன? அதுவும் அந்த புள்ளையை கூட்டிட்டு. நான் வார வரைக்கும் இருக்க வேண்டியது தானே?…” என மருதவேல் சொல்ல அவனின் அந்த பேச்சு உண்மைக்கும் ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
முதலில் அந்த வீட்டை விட்டு வெளியேறிய சமயம் கூட அவன் தான் சொல்லி அனுப்பினான்.
“இங்கிருப்பதை விட உனக்கு தனியாக இருப்பது தான் நிம்மதி”என்று. அதை நினைவு கூர்ந்தவன்,
“நீ வரவும் கிளம்பினா பரவாயில்லையா? இல்லை நீ வந்ததும் கிளம்பிருந்தா உடனே தடுத்திருப்பியா?…”
தடுக்காம? அண்ணன்டா நானு. இப்படியே விட சொல்றியா? யாருக்கு சேர்த்து இப்படி வீடு கட்டியிருக்காறாம்? கேட்பேன் தானே?…” என பொங்க,
“நிஜமாவா? நம்பிட்டேன். ஆனாலும் சந்தோஷம்டா அண்ணா…”
“அட போடா, சந்தோஷமாம். வாழ வந்த பொண்ணு. என்ன பேச்சு பேசிருக்காங்க. கண்டிப்பா கேட்டிருப்பேன் நான். விட்டிருப்பேன்னு நினைச்சியா? அண்ணன் எல்லா நேரமும் கை கட்டித்தான் இருப்பான்னு…”
“ரொம்ப சந்தோஷம். இதே வேகத்தை நீ அண்ணியை பார்த்துக்கறதுல காமி…” என்றவன்,
“முடிஞ்சா உனக்கு நேரம் கிடைக்கிறப்போ இங்க வா…” என்றும் சொல்ல,
“அங்க வர நீ என்னை கூப்பிடனுமா? போடா…” என்ற மருதவேல்,
“லட்சுமி ரொம்ப சங்கடப்பட்டுச்சாமே? அழுதுச்சுன்னு விமலா சொன்னா. நீ தான் சமாதானம் செய்யனும். பார்த்துக்க. அம்மாவுக்கு பேசு…” என சொல்லி அவன் வைத்ததும் அன்புக்கரசிக்கு அழைத்தான்.
“வாசு, வீட்டுக்கு போய்ட்டியாப்பா? லட்சுமி எப்படி இருக்கா?…” என கேட்க,
“கொழுக்கட்டை செஞ்சு அனுப்பியாச்சாம்மா?…” என்றான் சிரிப்புடன்.
“விளையாட்டு தான் உனக்கு. இம்புட்டுக்கு பின்னாடியும் நான் அவிச்சு அடுக்கி அனுப்புவேனாக்கும்? எனக்கென்ன கிறுக்கா? போடா போடா…” என சொல்ல,
“ஆனா உங்க வீட்டுக்காரர் விட்டிருக்கமாட்டாரே…” என கேட்க,
“ஆமா வந்து குதிச்சாரு…” என்றவர் நடந்ததை சொல்ல சொல்ல சிரிப்பும் ஆதங்கமும் மனதில் பொங்கியது.
“அம்மா விடுங்க, அவர் குணம் தான் தெரியுமே. விடுங்க…” என சொல்ல,
“அதை விடு நான் பார்த்துக்கறேன். அந்த பொண்ணு மனசு நொந்து போயிருக்கு. பார்த்துக்க. முடிஞ்சா நாளைக்கு நாங்க வரோம்…” என்று சொல்லி வைத்துவிட்டார்.
மீண்டும் வீட்டிற்கு வர அபூர்வா அறைக்குள் இருப்பதை பார்த்துவிட்டு கதவை பூட்டிக்கொண்டு உடை மாற்றி அவளருகே படுத்துக்கொண்டான்.
“சாப்பிடாம படுத்துட்ட பூர்வா…” என தன் பக்கம் திருப்பியவன் மென்மையாய் அணைத்து முகம் பார்க்க நிமிர்த்த அவள் கண் திறவாமல் இருந்தாள்.
“நீ தூங்கலைன்னு தெரியும். பசிக்கலையா? சாப்பாடு வேண்டாமா?…” என்றதற்கும் பதில் சொல்லாமல் மறுப்பாய் தலையசைத்தவள் அவனின் கழுத்தடியில் முகம் புதைத்தபடி அவனை அணைத்துக்கொண்டு உறங்க முற்பட்டாள். அவளாக அணைக்கும் முதல் அணைப்பு. ஆனால் அதில் வேறெதுவோ ஒன்று.
“பூர்வா, என்னன்னு பேசு. சம்திங் ராங். பேசு. கேட்கறேனில்ல…” என்றவனின் இதழ்களை தன் கரம் கொண்டு அழுத்தமாய் சிறை செய்தவள் அப்படியே இருக்க அவனும் அசையவில்லை.
அவளின் உடல்மொழியில் ஒரு இறுக்கம். இத்தனை நாட்களில் இதுவரை அவன் உணராதது.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ அவள் உறங்கி போனாள் அவனின் கையணைப்பில். ஆனால் அவன் தான் உறங்காமல் தவித்து போனான். மனது சொன்னது என்னவோ உள்ளது என்று.
————————————————————
வாசுதேவகிருஷ்ணன் கிளம்பியதும் சிலமணித்துளிகள் தான் முத்துவேல் அசையாமல் நின்றது.
அதன் பின்னர் அங்கிருந்து வாய்க்கு வந்தபடி இருவரையும் மரியாதை தெரியாதவர்கள் அது இதுவென வசைபாடிவிட்டு அடுக்களைக்குள் வர அங்கே கீழே புடவைத்தலைப்பை வைத்து வாயை பொத்திக்கொண்டு விமலாவின் தோளில் சாய்ந்து இருந்தார் அன்புக்கரசி.
“என்ன அன்பு, ரெடியா?…” என கேட்க இவரை பார்த்ததுமே,
“என்னது ரெடியா?…” என்றார் நிமிர்ந்தும் பாராமல்.
“என்னன்னு உனக்கு தெரியாதா? பவிக்கு செய்ய சொன்னேனே?…” என்றவர் பார்வை அடுப்பை ஆராய அங்கே எல்லாம் அப்படி அப்படியே இருப்பதை பார்த்துவிட்டு,
“என்ன செய்யாம உக்கார்ந்துட்ட? என்ன அன்பு இதெல்லாம்?…” என கேட்க,
“என்னத்த செய்ய? பெத்த மனசு வயிறும் எரியுது. என் புள்ளையும் மருமவளும் கலங்கிப்போய் போயிருக்காங்க. என்னால ஒரு மடக்கு தண்ணி குடிக்க முடியுமா? இதுல இன்னொருத்தவகளுக்காக செய்ய நான் என்ன மனசாட்சி இல்லாதவளா? என் புள்ளைக்கே இங்க இல்லையாம்…” என்று அழுது கொண்டே பேச,
“இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு பேசற? அதெல்லாம் தானா வருவான். வேற எங்க போக போறான்?…” என தெனாவெட்டாய் கேட்க,
“அது இம்புட்டு நாளும் அவன் உங்க மகன்றதால. இப்ப பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா. என்னைய மாதிரியா நாதியத்து நிக்கா? அவள தாங்க என் புள்ளை இருக்கான். என்னன்னு கேட்க அவ குடும்பம் இருக்கு. சும்மா விட்டுடுவாங்களா?…”
“என்ன பேச்சு இது? என்ன என்ன பண்ணிருவாங்க?…” என முத்துவேல் படபடப்ப,
“என்ன பண்ணமாட்டாங்க? பவி நமக்கு வேணும்னா முக்கியமா இருக்கலாம். வந்தவளும் அப்படி இருக்கனும்னு என்ன இருக்கு? அதை வச்சு இப்ப அவ அப்பாவையும் இழுத்து மருமகளும் பதிலுக்கு பேசியாச்சு. இனி இந்த வீட்டுப்படி ஏறுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை…” என்ற அன்புக்கரசி முத்துவேலின் முகத்தை ஓரப்பார்வையில் பார்க்க அவரின் முகமோ முழு யோசனையில் இருந்தது.
“விமலா, பார்த்தியா? வந்த மருமகட்ட முழுசா நாலு வார்த்த மனசார பேச முடிஞ்சதா? உன்னைய ஓரகத்தின்னு பார்க்காம சீராட்டி அனுப்பி வச்சாங்க. என் மகனை ராசாவா பாத்துக்கிட்டாங்க. அம்புட்டு பெருமனசுக்காரங்க. இந்த வீட்டில இன்னைக்கி நடந்தது தெரிஞ்சா பைசாவுக்கு மதிப்பிருக்குமா?…”
“பொண்ணை கட்டி குடுத்தா கேட்காம இருக்க அவுங்க என்ன புள்ளைப்பூச்சியா? என் மகனே அவங்க பக்கம் தான் நிப்பான். அப்ப சொல்லவா வேணும்? அவங்க நம்மளை விட வசதி குறைச்சல்னாலும் மரியாதை தெரிஞ்சவங்க. காசு பணம் இருக்கற எடத்துல கௌரவத்துக்கு குறைச்சல்னு கீழே தான பாப்பாங்க நம்மளை…”
அன்புக்கரசி பேச பேச முத்துவேல் யோசிக்க ஆரம்பித்தார். அவரின் முகமே மாறிவிட்டிருந்தது.
“நாளைப்பின்ன சுளுவா அங்க போயி அதிகாரம் பண்ண நமக்கு உரிமை இருக்குமா? எங்களை வெளிய அனுப்பின தான நீயின்னு ஒத்த வார்த்தை விரலை நீட்டி பேசிட்டா அங்க நம்ம சொல்லு எடுபடுமா? நாளைபின்ன பேரன் பேத்தின்னு வந்தா வச்சு பார்க்க அவன் விடுவானா? இல்லை இங்க கூட்டிட்டு வச்சு பார்க்கத்தான் எனக்கு வக்கிருக்கா?…”
“இதுல இன்னொருத்திக்கு பாயாசமாம் பாயாசம். எனக்கு எம்புள்ளை தான் முக்கியம். அவனே போயிட்டான். என்னால எதுவும் பண்ண முடியாது….” என்று சொல்ல,
“அன்பு…” என முத்துவேல் அழைக்க,
“எனக்கு படபடன்னு வருதே விமலா. அந்த தண்ணிய எடேன்…” என சொல்லி சுவற்றில் சாய பயந்துபோனார் முத்துவேல்.
“இந்தா அன்பு எந்தி. வா ரூமுக்கு வா…” என சொல்ல அசையவே இல்லை அன்புக்கரசி.
“விமலா…” என அழைக்கவும் வேகமாய் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்து அவரின் வியர்வையை துடைக்க,
“விமலா இவளை அங்க ஹாலுக்கு கூட்டிட்டு வா. பாரு வேர்க்குதுன்னு சொல்றா. மாத்திரையை ஒழுங்கா போடறாளா இல்லையா? எல்லாம் அவனால…” என கத்த,
“எம்புள்ளையை இனி ஒத்த வார்த்த பேசினீங்க பச்சை தண்ணி குடிக்க மாட்டேன். பார்த்துக்கோங்க…” என்று வேறு நேரடியாக மிரட்டிவிட அரண்டுபோனார் முத்துவேல்.
“விமலா எனக்கு என் மகனை பார்க்கனுமே. என்னால போக முடியுமா? இங்கயே என்னை விட்டுட்டு போய்ட்டானே? அவனுக்கு போனை போடு. என்னையும் கூட்டிட்டு போக சொல்லு. மகன் போன வருத்தமில்லாம கொழுக்கட்டை கேட்குதாமாம் தங்கச்சி மவளுக்கு. இந்த வீட்டுல நான் இருக்கலாமா?…”
நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் பேச பேச பயந்து போனார் முத்துவேல். எங்கே உண்மைக்கும் அன்புக்கரசி கிளம்பி சென்றுவிடுவாளோ என்று பயந்தவர்,
“இல்லை, அன்பு இனி சொல்லலை. இங்க பாரு. வாசு வருவான். நானே அவனை ஒரு நாள் கூட்டிட்டு வரேன். நீ கொஞ்ச நேரம் பேசாம ஹால்ல வந்து கண்ணை மூடி படு….” என்று அவரின் கையை பிடிக்க போக,
“விமலா போக சொல்லு இவரை. இவரை பார்த்தாலே கொழுக்கட்டை கேட்கிற மாதிரியே இருக்கு. போக சொல்லு…” என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்ல சொல்ல முத்துவேலுக்கு வெலவெலத்து போனது.