நிஜம் – 19
இரவு சாப்பிடாமல் படுத்ததாலோ என்னவோ நடு இரவிலேயே விழிப்பு வந்துவிட்டது அபூர்வாவிற்கு.
கண்ணை திறந்தவளுக்கு நாக்கெல்லாம் வறண்டதை போல் இருந்தது. எழுந்தமர்ந்தாள். லேசாய் தடுமாறி கீழே விழ போனவள் அப்போது தான் தூக்கத்தில் கட்டிலின் விளிம்பில் இருப்பதை உணர்ந்து சுதாரித்து நின்றாள்.
உறக்கத்தில் அவனின் கையணைப்பில் இருந்து நழுவியிருப்பது புரிந்தது. கணவனை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் அவன். சில நொடிகள் இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவனின் முகம் பார்த்து நின்றவள் பாத்ரூமிற்கு சென்றுவிட்டு கதவை திறந்து கொண்டு கிட்சனிற்குள் நுழைந்தாள்.
சாப்பிட சொல்லி இரைப்பை கூச்சலிட்டாலும் அவனும் உணவருந்தாமல் உறங்குவதில் சுணங்கியவள் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு திரும்ப அங்கே மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு படுக்கையறை வாசலில் நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
ஒரு நொடி திடுக்கிட்டவள் பின் வரவழைத்துக்கொண்ட சாதாரண முகபாவனையுடன் அவனை தாண்டிக்கொண்டு செல்ல பார்க்க அவளின் கை பிடித்து நிறுத்தினான்.
“என்ன உன் மண்டையை பிச்சு தின்னுது?…” என நேரடியாக கேட்க,
“என்ன என்ன? ஒண்ணுமில்லை. தாகமா இருந்தது. அதான் தண்ணீர் குடிக்க வந்தேன். இதுல என்ன?…” என அவனின் முகம் பார்க்க மறுக்க,
“பூர்வா எனக்கு பொய் சொன்னா பிடிக்காது…”
“நிஜமாவே தாகம் தான். ஏன் இதுவரைக்கும் நான் நைட்ல எழுந்து தண்ணி குடிச்சதில்லையா? இல்லை…”
“அதுக்கு காரணங்கள் வேற…” என்றவனின் பார்வை சொல்லிய செய்தியில் இப்பொழுது நேரடியாக அவனை முறைக்க அவனின் முகம் சாதாரணமாக இருந்தது.
“நான் சொல்றதை நீ ஏன் வேற மாதிரி புரிஞ்சுக்கற?…” என அவளை வம்பிழுக்கும் குரலில் கேட்க,
“என்னை விடுங்க. உங்களோட இந்த மயக்கும் பேச்சுக்கு நான் இப்ப மயங்கும் மூட்ல இல்லை…” என்று அவனிடமிருந்து தன் கையை பிரிக்க முயன்று கொண்டே சொல்ல,
“பார்ரா கண்மணி மயக்கத்தை பத்தி பேசறதை…” என்றவனின் குரலில் இப்பொழுது அப்பட்டமான கேலியும் விஷமமும் பொதிந்திருக்க வெடுக்கென கையை உதறி பின்னால் நகர்ந்தாள்.
“ஏன் நடு ராத்திரில வம்பு பன்றீங்க? தூங்கிட்டு தானே இருந்தீங்க?…”
“என் நேரம், திரும்பின பக்கம் எல்லாம் வம்பு பண்ணனும்னு இருக்கு…” என்று சுவற்றில் ஒரு கையால் தட்டியபடி சொல்ல பதில் சொல்லாமல் வாய்க்குள் அவள் எதையோ முணுமுணுக்க,
“என்னன்னு வாயை திறந்து பேசுடி. மனுஷனை கிறுக்காக்குற. வந்ததுல இருந்து நீ டல்லா இருக்கியேன்னு யோசிச்சு யோசிச்சு மூளை சூடாகி போச்சு…” என இப்பொழுதும் முரட்டுத்தனமாய் அவளிடம் முறுக்கிக்கொண்டு நிற்க சற்றே வெளிப்படையாய் அபூர்வா உடல் உதறியது.
அதில் தன்னையே நிந்தித்துக்கொண்டவன் கோபத்தை மட்டுப்படுத்தும் விதமாய் சட்டை பட்டனை தேடி கழுத்தில் சென்று கை நிற்க உள் பனியன் மட்டுமே அணிந்திருக்க அதை பிடித்து இழுத்துவிட்டவன்,
“கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுது….” என சொல்லும் பொழுதே அவனை திரும்பி பார்த்தவள்,
“ஆமா கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுது. ஆனா அதுக்குள்ளே உங்க வாயால கேட்டுட்டேன் உங்க மனசுல இருக்கறதை தெரிஞ்சுட்டேன்…”
“என்ன தெரிஞ்ச?…” சட்டென அவனின் உடலில் ஒரு பரபரப்பு தோன்ற விழிகள் ஒளிர ஒரு எதிர்பார்ப்புடன் அவளை நெருங்கினான். அதை புருவ சுளிப்புடன் பார்த்தவள்,
“பவானியை நீங்க எந்தளவுக்கு மிஸ் பண்ணிருக்கீங்கன்னு பார்த்தேன். உங்கப்பா கட்டாயத்தால என்னை கல்யாணம் பண்ணினதையும் கேட்டேன்…” என சொல்ல ஒரு நொடி தலைசுற்றி போனது வாசுதேவகிருஷ்ணனுக்கு.
“வாட்? ஆர் யூ கிடிங் மீ?…” என அவன் கேட்க,
“என்னை பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு?…” என கண்கள் கலங்கி உதடு துடிக்க அவள் கேட்ட விதம் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள தான் பரபரத்தது. ஆனால் அபூர்வாவின் கேள்வியில் அவளை தீர்க்கமாய் பார்த்தான்.
“நீ என்ன நினைச்சுட்டு இருக்க என்னை பத்தி? என்னை பார்த்தா லவ் பெயிலியர் மாதிரியா இருக்கு? இல்லை…” என்றவனை பேச விடாமல் தடுத்தவள்,
“ஏன் இல்லாம நீங்க மாமாட்ட பேசினீங்க தானே? நினைச்சா ஒருத்தியை காட்டி இவளோட தான் கல்யாணம்னு சொல்லி சொல்லி வளர்க்கிறதும், நினைச்சா இன்னொருத்தியை பார்த்து அவளைத்தான் நீ கட்டனும்னு மிரட்டுறதும் என்னை ஆட்டி வைக்கறீங்க நீங்கன்னு கேட்டீங்க தானே?…” என்று அவளிடம் அவள் சிலிர்த்துக்கொண்டு நின்ற விதத்தில் கணவனவனுக்கு கோபம் பொங்கியது.
“நானானால் இவளுக்காக வருடக்கணக்காய் உருகி நிற்க இவளானால் கோபத்தில் சொல்லிய வார்த்தைகளை பிடித்துக்கொண்டு சண்டையிடுகிறாளே” என அவளை முறைத்தான்.
“கடமைக்கு கல்யாணம் பண்ணி கல்யாணம் ஆனதால என் கூட வாழறீங்க. இதுவரைக்கும் என்னை பார்க்கிறப்போ எல்லாம் பிடிச்சிருக்கான்னு கேட்ட நீங்க ஒருவாட்டி கூட என்னை பிடிக்கும்னு சொல்லவும் இல்லை. இதுவரை சொன்னதும் இல்லை. அப்போ எனக்கு தெரியலை. ஆனா இன்னைக்கு தான் புரியுது…” என முகத்தை மூடி அழ வெறுத்துப்போனது வாசுதேவகிருஷ்ணனுக்கு.
“அடியேய் உன்னை தான்டி பிடிக்கும் என சொல்ல ஒரு நொடி ஆகாது. பத்துநாளே என்றாலும் வாழ்ந்த வாழ்க்கையில் இவள் என்னை உணரவில்லையா?” என்ற கோபம் அவனுக்கு மிதமிஞ்சி பொங்க ஆரம்பித்தது.
“எனக்கும் அப்பாவுக்கும் உள்ள பிரச்சனை வேற. அது நமக்கு நம்ம வாழ்க்கைக்கு இப்ப தேவை இல்லாதது. எப்பவோ முடிஞ்சு போனது. என் கோபத்துக்கான காரணம் அதை விடு இப்போ…”
“உன் பின்னாடியே வந்தேன் தானே? நீ பேசலைனா கூட தேடி தேடி வந்து அத்தனை தடவை என்னை புடிக்குதான்னு கேட்டது உன் மேல எந்த அபிப்ராயமும், பிடித்தமும் இல்லாமலா பூர்வா? இப்ப ஏன் முடிஞ்சதை கட்டிட்டு பிரச்சனை பன்ற?…” என கேட்டு அவளை கட்டிக்கொள்ள,
“அப்போ முடிஞ்சதை வச்சு ஏன் உங்கப்பாக்கிட்ட மல்லுக்கு நிக்கறீங்க? பார்த்தேனே நான். அப்போ எந்தளவுக்கு நீங்க பவியை ப்ச். இப்பவும் எவ்வளோ ஆத்திரம்? எவ்வளவோ கோபம்? முன்னாடி நீங்க விரும்பினது ஆசைப்பட்டது, எனக்கு அது தேவையில்லை. ஆனா…”
“ஆனா?…” என அவன் மிதப்பாய் கேட்க,
“இப்பவும் நமக்கு கல்யாணம் ஆனா பின்னாடியும், பொண்டாட்டின்னு நான் வந்த பின்னாடியும் உங்களோட வாழ ஆரம்பிச்சதுக்கு அப்பறமும் உங்களுக்கு ஏன் அதை நினைச்சா இவ்வளோ கோபம் வருது?…”
“அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை. அப்படித்தானே பூர்வா?…”
“நீங்க பேசினதை கேட்டா யாரா இருந்தாலும் லவ் பெயிலியர்ன்னு தான் சொல்லுவாங்க. என்னை மாதிரி தான் யோசிப்பாங்க. நான் உங்க பொண்டாட்டி. இப்பவும் உங்களுக்கு அந்த பேச்சு ஏமாற்றமும் கோபமும் தருதுன்னா எனக்கு எப்படி இருக்கும்? யோசிச்சு பாருங்க….”
“முடிஞ்சது பேசாத அப்படின்னா உங்க மனசே அதை முடிஞ்சதா ஏத்துக்கலையே. அப்படி இருந்திருந்தா உங்களுக்கு மாமா மேல இன்னைக்கு வரைக்கும் எதுக்கு இவ்வளவு கோபம்? வீட்டை விட்டே வெளியேறிருக்கீங்கன்னா விருப்பம் இல்லாமையா?…”
“சரி அதை பத்தி நான் பேசலை. இப்ப ஏன் கோபப்படறீங்க? பவியை சாதாரணமா உங்களால ஏன் கடந்து போக முடியலை. அவ பேரை கேட்டாலே டென்ஷன். அந்த குடும்பத்தையே வெறுக்கறீங்க. ஒரு வேளை அந்த பொண்ணு உங்களை வேண்டாம்னு…”
“ஷட் அப் பூர்வா…” என அவன் கத்தவும் கலங்கி இருந்த கண்ணில் இருந்து நீ உடைப்பெடுக்க ஆரம்பிக்க அவளையே எரிச்சலுடன் பார்த்தான்.
“சரி கோபப்பட்டுட்டேன். இனியும் கோபப்படத்தான் செய்வேன். என்ன செய்யனும்ன்ற? என்னால மாத்திக்க முடியாது…”
அபூர்வா அப்படி உணர்ச்சிபிழம்பாக பேசியும் வாசுதேவகிருஷ்ணன் அயரவே இல்லை. மறுத்தும் பேசவில்லை.
“இது முடிந்துபோனது. பேசாதே” என்று சொல்பவன் அதை பற்றி பேச தவிர்த்தானே தவிர அவளுக்கு விளக்க முயலவில்லை. அதுவே அபூர்வாவை உள்ளுக்குள் உடைந்து போக செய்தது.
“ஒரு வார்த்தை சொல்லுங்களேன், அவளை இப்போ நினைக்கலைன்னு. அதை சொல்ல உங்களால இப்ப கூட முடியலையே…” என அபூர்வாஅவனிடம் கேட்டாள்.
அவளுக்கு கடந்தகாலத்தை பற்றிய எந்த கவலையும் இல்லை அவளுக்கு. தான் நிரந்தரம். ஆனால் ஏமாற்ற அளவில் கூட வேறொருவர் அவனின் எண்ணங்களில் வலம் வருவதை அவள் விரும்பவில்லை. இத்தனை பேசியும் அவனிடம் தான் எதிர்பார்த்த பதில் மட்டும் வரவே இல்லை.
அழுது கொண்டிருந்தவளை அணைத்து பிடித்ததை போல தான் கை வளைவிற்குள் பிடித்து நிறுத்தியவன் அவளின் கண்ணீரை துடைத்தான். ஏதாவது பேசுவான் என அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“வெல் பூர்வி, இதுக்கு நீ என்னை நம்பலைன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம். அப்படியே வச்சுக்கோ. இனி உன்னை நம்பவைக்கவோ, சமாதானம் செய்யவோ நான் ட்ரை பண்ண போறதில்லை…”
“அப்போ நான் கேட்கிறது உங்களுக்கு ஒரு விஷயமே இல்லையா? அப்போ இப்பவும்…” என்றவளை கன்னத்தை அழுத்தமாய் பற்றியவன்,
“என்னை ஒரு மாசமா தெரியுமா? இந்த பத்து நாளா என்னோட வாழ்ந்திருக்க. அதுல ஒரு நொடி கூட என்னை பத்தி இப்படி நினைக்க கூடாதுன்னு உனக்கு தோணலை. முடிஞ்சதை விடு விடுன்னு சொல்றேன். கேட்காம அதையே வச்சுட்டு பேசற. போடி…” என்றவன் வேகமாய் அறைக்குள் நுழைந்துவிட அங்கேயே சுவற்றோடு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பூர்வா.
அப்படி இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் வாசுதேவகிருஷ்ணன் அவளின் வருத்தத்தை போக்கிவிடலாம். இல்லாத ஒன்றை இல்லவே இல்லை என்று ஏன் சொல்ல வேண்டும்? அதை நிரூபித்து காண்பிப்பதில் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்ற கோபம் அவனுக்கு.
அவன் வாய்மொழியாக கேட்ட வார்த்தைகள் அவளை கூறு போட்டன. வேறு எவராக சொல்லி இருந்தாலும் கூட நம்பியிருக்கமாட்டாள் அபூர்வா. வார்த்தைகளை சொன்னவனிடமே என்னவென கேட்க அவனும் சொல்ல மறுத்து செல்ல அவன் மீதான உரிமையை அவனின் வார்த்தைகளே பொசுக்கியது.
வாசுதேவகிருஷ்ணன் உள்ளே சென்று பத்து நிமிடங்கள் கூட இருக்காது. மீண்டும் வெளியே வந்தவன் ஹாலின் லைட்டை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தவளை இரு கைகளாலும் அள்ளிக்கொண்டவன்,
“இம்சை உன்னை விட்டு என்னால தூங்க கூட முடியலை…” என்று கோபமாய் சொல்ல முயன்ற குரல் காதலில் குழைந்து கரைந்தது.
“அதான் போடின்னு விட்டுட்டு போனீங்க தானே? விடுங்க விடுங்க….” என அவன் வந்து தூக்கியதில் மீண்டும் அவன் மீதான கோபம் தலைதூக்க அவனின் கைகளுக்குள் இருந்து துள்ளினாள்.
“பேசாம இருந்தா நிஜமா தூங்கலாம்னு இருந்தேன். இல்லைன்னா தூங்கலாம் டைப் தான்…” என்று கட்டிலில் போட்டவன் அவளை அணைத்துக்கொண்டு படுக்க அவனின் கைகளில் இருந்த முடியை ஒவ்வொன்றாய் பிடித்து இழுத்தாள்.
“என்னை டென்ஷன் ஆக்காத பூர்வா. ஏற்கனவே உன்னோட லூசுத்தனத்தால செம்ம கோபத்துல இருக்கேன். இத்தோல் இப்படி வேற பண்ணி வாங்கி கட்டாத சொல்லிட்டேன்…” என்று இன்னும் அணைப்பை இறுக்க,
“வலிக்குது. கொஞ்சம் ப்ரீயா விடுங்க ப்ளீஸ்…” என்றாள் அபூர்வா.
இத்தனை பேசியும் என்னை விட்டு தள்ளி செல் என்ற வார்த்தை அவளிடத்தில் இருந்து வரவில்லை என்பதை உணர்ந்தவன் இதழ்கள் புன்னகையில் நெளிய,
“ப்ரியாவை நான் ஏன் விடனும்? பிடிக்கவே இல்லையே…” என வெறுப்பேற்ற,
“என்னது ப்ரியாவா? உங்களை…” என்று அவனின் பக்கம் திரும்பியவள் அவனின் மார்பில் சரமாரியாக அடிக்க,
“சண்டை போடற, முறைக்கிற, கோபப்படற. அடிக்கிற. இன்னைக்கு எத்தனை விதமா நடந்துக்கற நீ? ஒரு பேச்சுக்கு அன்னைக்கு என் அப்பாவை நீ பேசிக்கோன்னு சொன்னா நிஜமாவே அவரை நடு வீட்டுல வச்சு அந்த பேச்சு பேசிட்ட…” என்று விளையாட்டாய் அவன் சொல்ல அவனின் நேசத்தில் முகம் புதைத்து விசும்ப ஆரம்பித்தாள் அபூர்வா.