நிஜம் – 1
உள்ளிருந்து வேகமாய் வெளியே வந்த தாமோதரன் அனைவரையும் பார்த்து கைகூப்பி,
“வாங்க வாங்க, எல்லாரும் வரனும்…” என முகம் மலர்ந்து சிரித்தபடி வரவேற்றார்.
அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டவராக தானும் சிரித்தபடி வணக்கம் செய்த முத்துவேல் அவரின் கையை பிடித்துக்கொண்டார்.
“வாங்க எல்லாரும் உள்ள வாங்க…” என சொல்லி வேகமாய் உள்ளே சென்றிருக்க முத்துவேலின் பின்னால் நின்ற வாசுதேவகிருஷ்ணன் இப்பொழுது அவரோடு சேர்ந்து வந்தான்.
“உன்னை யாரு இங்க வர சொன்னா?…” என யாருக்கும் கேட்டுவிடாத குரலில் கடுமையுடன் மகனிடம் பாய,
“நீங்க பார்த்த பொண்ணு தான் வர சொன்னா. அவளையே கேளுங்க…” என்றான் மகனும் கடுமையும் தெனாவெட்டுமாய்.
“என்கிட்டையே உன் புத்தியை காண்பிக்கறையா? நான் உன் அப்பன்டா…”
“அதனால தான் உங்களுக்கு தப்பாம இங்க வந்து நிக்கறேன்…” அவனும் விடாமல் பேச,
“என்னங்க இது? வந்த இடத்துல…” என அன்புக்கரசி சமாதானமாய் சொல்ல,
“வாசு டேய், இங்க வா…” என அவனை தன்னருகே இழுத்துக்கொண்டான் அவனின் அண்ணன் மருதவேல்.
“என்னடா இது இப்படி சொல்லாம வந்தும் அவரோட மல்லுக்கு நிக்கற?…” என அண்ணன் கேட்க,
“ம்க்கும், இவரும் கேட்க மாட்டாரு. கேட்கவும் விடமாட்டாரு. அவராச்சும் பேசட்டும்…” என்று நொடித்தாள் விமலா மருதவேல் மனைவி.
“ஓங்கி ஒரு அறை விட்டேனா பார். வாய மூடுடி. இங்க வந்து தூண்டிவிட்டுட்டு இருக்க…” என அவன் எகிறியதில் அமைதியாக நின்றாள்.
“வாய தொறக்க கூடாது அப்பாவுக்கும், புள்ளைக்கும்…” என்று மனதிற்குள் முணுமுணுத்தாலும் வெளியே காண்பிக்கவில்லை.
மருதவேல் பொது இடம் எதுவும் பார்க்கமாட்டான், வள்ளென்றும் விழுவான், எங்கிருக்கிறோம் என்றும் பார்க்காமல் அடிக்கவும் செய்வான். அதனை கொண்டே விமலா தன் வாயை மூடிக்கொள்வாள்.
“பொண்டாட்டியை எப்படி வைக்கனும்னு எம்மூத்தவன்ட்ட கத்துக்கனும்” என்று ஊரெல்லாம் பெருமை பாடுவார் முத்துவேல். அதனாலே மாமனார் என்றாலும் வேப்பங்காய் தான் விமலாவிற்கு.
நக்கலாக பேசுவாள் தான், ஆனால் யாராவது இருக்கும் பொழுது தான். அதிலும் வாசுவிற்கு ஆதரவாக என்றால் சொல்லவே தேவையில்லை.
“விமலா செத்த சும்மா இருடி…” என்றார் ராணி.
அவரின் குரல் கேட்டும் திரும்பி பார்க்கவில்லை வாசுதேவகிருஷ்ணன். அவன் பார்ப்பான், ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்து முகம் பார்க்க அவனோ அப்படி ஒருவர் நிற்பதாகவே எண்ணவில்லை. பின் தன் அண்ணனை பார்த்து,
“முத்தண்ணே, வாசு வந்ததை இன்னும் பொண்ணு வீட்டுக்கு சொல்லலை…” என்று அவருக்கு கூறிக்கொண்டே உள்ளே செல்ல,
“ம்மா, அவங்கவங்க வேலையை பார்க்க சொல்லுங்க. இல்ல இங்க வச்சே ரகளை பண்ணிடுவேன். சும்மா இங்க வந்து நாட்டாமை பண்ணிக்கிட்டு. பேசாம இருக்க சொல்லுங்க…” என்று தாயிடம் கொந்தளித்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஐயோ இங்கயே எனக்கு பிபி ஏறி என்னை கொண்டு போகாம விடமாட்டீங்க…” என்று தலைசுத்தி போனார் அன்புக்கரசி.
அவரின் பேச்சில் சற்று தணிந்தவன் பின் பல்லை கடித்துக்கொண்டு அமைதியாகி உள்ளே சென்று தன் அண்ணனுடன் அமர்ந்தான்.
[the_ad id=”6605″]
அந்த பெரிய வரவேற்பறையில் கல்யாண ஜமுக்காளம் விரிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே பெண்வீட்டு உறவுமுறைகள் வந்து அமர்ந்திருந்தனர்.
இவர்களை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றுவிட்டு மீண்டும் அமர அவர்களுடன் மாப்பிள்ளையின் உறவு பெண்கள் கீழே வரிசை தட்டுக்களை வைத்துவிட்டு அமர்ந்துகொண்டனர்.
முத்துவேல் வீட்டை சுற்றி பார்க்க வாசுதேவன் அருகே அமர்ந்திருந்த மருதவேல் லட்சுமி அண்ணன் தினேஷுடன் பேசிக்கொண்டிருந்தான். முத்துவேல் தன் தொண்டையை செருமிக்கொண்டு,
“ம்க்கும், அப்பறம் சம்பந்தி, இவன் தான் உங்க வீட்டு மாப்பிள்ளையாக போகிறவன்…” என மகனை கை காட்ட அவரின் அறிமுகப்படுத்துதலில் பல்லை கடித்தவன்,
“ரொம்ப லட்சணம் தான்…” என்று முணுமுணுக்க,
“வாசு…” என மருதவேல் அவனின் கையை பிடித்து அழுத்தினான்.
“இவன் வேற…” என அவனின் கையை தட்டினான்.
“இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்னு சொன்னான். அதான் சரி அப்படியே ஒரு எட்டு வந்துட்டு போன்னு வர சொன்னேன். அவனுக்கும் பார்த்த மாதிரி இருக்கும்ல…” என்று தாமோதரனிடம் சொல்ல அவர் எழுந்து வந்து வாருங்கால மாப்பிள்ளைக்கு மீண்டும் வணக்கத்தை வைத்து,
“உங்களை இங்க பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை…” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல தலையசைத்துக்கொண்டவன் மீண்டும் அமர்ந்து கொள்ள தினேஷும் அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு எழுந்து உள்ளே செல்ல,
“அவர் தான் பேசறார்ல, பதிலுக்கு ஏதாவது பேச வேண்டியது தானே?…” என்று மருதவேல் சொல்ல,
“என்ன பேச? பேசனும்னா சட்டத்துல இருக்கற செக்ஷன் பத்தி தான் பேசுவேன். பரவாயில்லையா?…” என்று இடக்காய் சொல்லி மருதவேலை டென்ஷன் ஆக்கினான்.
“உன்னையெல்லாம் திருத்த முடியாது….”
[the_ad id=”6605″]
“முதல்ல நீ திருந்து…” என்று பதிலுக்கு பதில் பேச,
“மூஞ்சியை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்கோயேன். எல்லாரும் மாப்பிள்ளைன்னு உன்னைத்தான் பார்க்கறாங்க…”
“சிரிச்சா லேசா எல்லாம் சிரிக்கமாட்டேன். எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்னு குதிச்சுட்டு தான் சொல்லுவேன். ஓகே வா?…” என்று பேச அதற்கு மேலும் மருதவேல் வாயையே திறக்கவில்லை.
அவனின் முகமே உர்ரென இருக்க அதனை பார்த்த விமலாவுக்கு குதூகலமாய் இருந்தது. அவளுக்கு தெரியும் தானே அண்ணனும் தம்பியும் பேசினால் என்ன நடக்கும் என்று. நிச்சயம் மருதவேல் மொக்கை வாங்கியிருப்பான் என்று நிச்சயம்.
“விமலா வா போய் பொண்ணை பார்த்துட்டு வருவோம்…” என ராணி சொல்ல,
“சரிங்க பெரியம்மா…” என்று எழுந்து கொண்டாள் அவள்.
“எங்கடி போற?…” என்று மருதவேல் கேட்க,
“பொண்ணை பார்த்துட்டு வரோம்…” என சொல்லி மாடிக்கு சென்றார்கள் ராணியும், விமலாவும்.
“இந்தா மகிழு, இவங்கள கூட்டிட்டு போயி லட்சுமிய காட்டு….” என பூங்கோதை மருமகளை ஏவ அவளும் அவர்களுடன் மாடிக்கு சென்றாள்.
“நீங்க தான் பொண்ணுக்கு அண்ணியா?…” என்று விமலா கேட்க,
“ஆமாங்க, நீங்க…” என மகிழ் கேட்க,
“நான் மாப்பிள்ளைக்கு அண்ணி. இவங்க எனக்கு பெரியம்மா முறையாவனும். அதாவது என் மாமனாருக்கு தங்கச்சி…” என ராணியை அறிமுகப்படுத்தி வைத்ததும் மேல அறைக்குள் வந்துவிட்டனர்.
அவர்களை கண்டதும் லட்சுமி எழுந்து நின்று புன்னகைக்க மகிழ் அவர்களை பற்றி விவரித்ததும்,
“கால்ல விழு லட்சுமி…” என ராணியின் காலில் விழ சொல்லவும் லட்சுமியும் விழுந்து எழுந்தாள்.
“ரொம்ப அழகா இருக்க நீ. அமைதியா இருக்கியே? நான் நல்லா பேசுவேன். லொடலொடன்னு…” என்று விமலா தன்னைப்பற்றி சொல்ல,
“நானுமே நல்லா பேசுவேனே…” என்று லட்சுமியும் சொல்ல,
“அப்ப ப்ரெண்ட்ஸ்…” என உடனடியாக விமலா கையை நீட்ட லட்சுமியுமே பற்றிகொண்டாள்.
“ப்ரெண்ட்ஸ் தான்…” என்று சொல்ல,
“அப்ப நான்?…” என்று அவர்களின் கையோடு மகிழும் கையை வைத்துக்கொள்ள,
“ரொம்ப நல்லது, இப்படி இருந்தா குடும்பமும் நல்லா சந்தோஷமா இருக்கும்….” என்று ராணி மனநிறைவுடன் கூறினார்.
“லட்சுமி மாப்பிள்ளையும் வந்திருக்காரு. கீழே…” என்று மகிழ் சொல்ல,
“ஆமா திடீர்ன்னு கிளம்பி வந்து…” என்று விமலா சொல்ல ராணி அவளின் கையை பிடித்துக்கொண்டார்.
“ஓஹ்ஹ, ஹ்ம்ம், சரி, ஓகே…” என்று லட்சுமி வரிசையாக சொல்ல அவளினுள் சிறு பதட்டமும், ஒரு எதிர்பார்ப்பும் குடிகொண்டது.
திருமணம் என்னும் பொழுது இயல்பாய் இருந்தவள் மனதினுள் அவனை பார்க்க வேண்டும் என்கிற சிறு ஆசையும் எழுந்தது. இதழ்களுக்குள் அதக்கிய ரகசிய சிரிப்புடன் தன்னை சாதாரணமாக காட்டிக்கொள்ள முயன்றாலும் அவளின் முகம் காட்டிக்கொடுத்தது.
“ஹ்ம்ம் பொண்ணு வெட்கபடறா…” என்று மகிழ் கிண்டல் பேச,
“இருக்காதா பின்ன? இதுவரைக்கும் மாப்பிள்ளை வரலைன்னு ரிலாக்ஸா இருந்திருப்பா. இப்ப வந்திருக்கார்ன்னு தெரியவும் இந்த வெட்கமும், படபடப்பும் கூட இல்லைனா எப்படி?…” என்று விமலாவும் சொல்ல,
“சரி சரி நீங்க பேசிட்டிருங்க, நான் கீழே போறேன்…” என்று ராணி சென்றுவிட விமலாதான் கேட்டாள்.
“தம்பியை பத்தி ஏதாவது சொன்னாங்களா?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், மாப்பிள்ளை, போலீஸ். சென்னையில் இருக்கார்னு சொன்னாங்க…” என லட்சுமியும் சொல்ல,
“அவ்வளோ தானா?…” என்று விமலா சொல்லி,
“அங்க மட்டும் என்ன? உன் பேரும் ஊரும், உன்னோட பேமிலில யார் இருக்காங்கன்றதும் தான் சொன்னாங்க எங்களுக்கும்…”
“உங்க வீட்டிலையும் மாமனார் சொல்றது தானா?…” என்று கேட்ட மகிழ் சட்டென நாக்கை கடித்துக்கொண்டாள்.
[the_ad id=”6605″]
“அட சும்மா சொல்லுங்க, நான் ஒன்னும் நினைக்க மாட்டேன். வீட்டுக்கு வீடு வாசப்படி…” என்று விமலா சொல்லவும் மூவருக்குள்ளேயும் ஒரு நட்புணர்வு வளர ஆரம்பித்தது.
“சரி அதிருக்கட்டும். இன்னும் கொஞ்சம் நேரத்துல உன்னை கூப்பிடுவாங்க. கீழே என் மாமனார் பக்கத்துல தான் உட்கார்ந்து இருக்கார். தம்பி பேரு வாசுதேவகிருஷ்ணன்…” என்று சொல்லவும் அந்த பேரை சொல்லி பார்த்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“ம்ஹூம், நீ ரொம்ப சாப்ட் நேச்சரா இருப்ப போல?….” விமலா கேட்க,
“கொஞ்சம் அப்படியும் சொல்லலாம்…” என்று கண் சிமிட்டியவளிடம் ஊர் கதைகளை பேச ஆரம்பித்துவிட்டாள் விமலா. உடன் மகிழ்தினியும்.
கவனமாய் வீட்டுக்கதை எதையும் பேசவில்லை இரு வீட்டு மருமகள்களும். விமலாவிற்கு லட்சுமி அங்கு வந்து அனைத்தும் தெரிந்துகொள்ளட்டும் என்னும் எண்ணம். மகிழ்தினிக்கு இப்போதே தன் குடும்பத்தை சொல்ல வேணுமா என்னும் எண்ணம்.
கீழே உள்ளவர்களை மறந்து மாற்றி மாற்றி இரு அண்ணிகளும் பேசிக்கொண்டிருக்க லட்சுமியின் நினைப்பு அவன் எப்படி இருப்பான் என்பது தான்.
முடிவான திருமணம். எப்படியும் முடிந்துவிடும் திருமணம். அவன் மீது எதிர்பார்ப்புகள் சில உண்டாக ஆரம்பித்தது. மனதிற்குள் அதனை பூட்டியவள் அவனை பார்க்கும் ஆவலின் மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.
“அண்ணி சொன்னப்பவே கேட்டு இன்னும் கொஞ்சம் நல்லா தலை வாரி இருக்கனுமோ? புடவை கூட இன்னும் நல்லா கட்டியிருக்கலாம். இப்ப மாத்தவும் நேரமில்லையே” என ஓரக்கண்ணால் தன்னை கண்ணாடியில் பார்த்து புடவையை நீவிவிட,
“சொன்னா நாங்களும் ஏதாவது ஹெல்ப் பண்ணுவோம்…” என்று மகிழ் கேலியாய் கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி…” என்று லட்சுமி சிரிக்க,
“சரி சரி நடக்கட்டும்…” என அவளும் சிரிக்க,
“இந்த புடவை நல்லா இருக்கா விமலாக்கா?…” என்றாள் அவளாகவே.
“அழகா எடுப்பா இருக்கு. அதுவும் உன் முடி ரொம்ப சில்க்கி. நீளமா ரொம்ப அழகா இருக்கு. கல்யாணத்துக்கு உனக்கு சவுரியே வைக்க வேண்டம் போல…” என்று அவளின் முடியை எடுத்து தனது கையில் வைத்து பார்த்தாள்.
“நல்ல ஸ்ட்ரெந்த் உன்னோட முடி…” என்று விமலா சில்லாகிக்க,
“சும்மாவா? எங்கத்தை பார்த்து பார்த்து பராமரிப்பாங்க. முடி நீளமா இருக்கறது தான் பொண்ணுங்களுக்கு அழகை கூட்டும்னு சொல்லுவாங்க. என்னையும் முடியை கட் பண்ண விடமாட்டாங்க…” என்று மகிழும் சொல்ல மகிழ்தினி தாய் வந்துவிட்டார்.
“கீழே பேசி முடிக்க போறாங்க. இப்ப கூப்பிட்டுடுவாங்க. வேற அலங்காரம் எதுவும் பாக்கி இருந்தா முடிங்க…” என்று சொல்லி கீழே சென்றுவிட்டார்.
கீழே விமலாவும் ராணியும் மேலே பெண்ணை பார்க்க சென்றதும் அந்த ஊரின் பெரிய தலைகள் சிலர் வீட்டிற்கு உள்ளே வந்தனர்.
“வாங்க வாங்க பெரியவங்க வரனும். வாங்கைய்யா…” என்று தாமோதரனும், தினேஷும் வரவேற்று தன் சம்பந்தகாரரை அறிமுகப்படுத்த தந்தை எழுந்து நின்றதும் தானும் எழுந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“உட்காருங்க…” என்று தினேஷ் சேரை எடுத்து போட ஏனோ அவர்கள் மத்தியில் அமர முடியாமல் வாசுதேவன் தன் தந்தை பக்கம் அவர்களை அமர்த்திவிட்டு அண்ணனையும் கோர்த்துவிட்டு,
“நான் அங்க உட்கார்ந்துக்கறேன்…” என்று தினேஷின் அறைக்கு அருகே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்துகொண்டான். அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.