“தம்பி போலீஸ்ன்னு சொன்னாங்க. ஆனா பார்த்தா பச்சப்புள்ளை மாதிரி இருக்காரு. சிரிச்ச முகமா…” என்று கூட்டத்தில் ஒருவர் முத்துவேலிடம் சொல்ல,
“ஆமா நல்ல கலகலப்பா பேசுவான்…” என்று அவரும் ஆமோதித்து சொல்ல மருதவேலுக்கு சிரிப்பாய் இருந்தது.
“சிரிச்ச முகமா? நானா?” என திகைத்தவன் தனது மொபைலை எடுத்து முகத்தை பார்த்துக்கொண்டான்.
அவனை பற்றி ஆருடம் சொல்லியவர் இப்பொழுது திரும்பி அவன் முகம் பார்த்து சிரிக்க அவனோ அப்படியே அவரை பார்த்தபடி சிரிக்காமல் இருந்தான். தன்னைத்தான் பார்க்கிறானா என்ற சந்தேகத்துடன் திரும்பி வேறு பேச ஆரம்பித்தார் முத்துவேலை பார்த்து.
மீண்டும் பேச்சினூடே அவனை திரும்பி பார்க்க இப்பொழுதும் அவரைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவனை பார்த்தால் முறைப்பது மாதிரியும் இல்லை. ஆனால் இவரையே பார்க்க மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை அவனிடம் உதிர்த்துவிட்டு அதன் பின்னர் அவனை பார்ப்பதையே தவிர்த்தார்.
“மத்த விஷயங்களை எல்லாம் பேசியாச்சா?…” என்று அடுத்த சம்பிரதாய பேச்சை ஆரம்பித்து பெண்ணின் சீர்வரிசை, திருமண செலவுகள் பங்கு என அனைத்தையும் பேசி முடித்தவர்கள் அதன் பின்பு தான் பெண்ணை அழைப்பதை பற்றியே பேச ஆரம்பித்தனர்.
“எல்லாம் சரி பொண்ணை அழைச்சுட்டு வாங்க. முதல்ல பார்த்திருவோம்…” என்று ஒருவர் சொல்லவும்,
“மாரி பாட்டிய கூட்டிட்டு வர போயிருக்காங்க. வரவும் அழைச்சிருவோம்…” என தினேஷ் சொல்ல,
“யார் அது?…” என்றான் மருதவேல்.
“இங்க எங்க தூரத்து சொந்தம் தான். எந்த விஷேஷம்னாலும் அவங்க கையால தொடங்கி வைக்கறது வழக்கம். ராசியான கை. மூத்த சுமங்கலி. அவங்க வாழ்த்தி ஆரம்பிச்சு வச்சா விருத்தி. அதான் இப்ப வந்திருவாங்க…” என்று பூங்கோதை அனைவருக்கும் சொல்ல வாசலில் நிழலாடியது.
“மெல்ல மெல்ல இறங்குங்க…” என்று ஒரு பெண் அவரின் கையை பற்றி படியை தாண்டி இறங்க வைக்க அனைவரும் திரும்பி பார்த்தனரே தவிர எழுந்து செல்லவில்லை.
[the_ad id=”6605″]
அதனை கண்ட வாசு எழுந்து சென்று அந்த பாட்டியை தூக்கி தான் அமர்ந்திருந்த சேரை நடுவில் நகர்த்தி அதில் அமர்த்திவிட்டான்.
“மாப்பிள்ளை…” என தாமோதரனும் தினேஷும் பார்க்க,
“நீங்க ஆரம்பிங்க…” என தான் அமர்ந்திருந்த இடத்தில் இன்னொரு ஸ்டூல் இருக்க அதில் சென்று மீண்டும் அமர்ந்துகொண்டான்.
“இங்க வந்து உட்காருங்க மாப்பிள்ளை. ஏன் அங்க போய்…” என்று சங்கடமாய் சொல்ல,
“எனக்கு இதுதான் கம்பர்டபிளா இருக்கு. நீங்க அங்க கவனிங்க. எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை…” என்றவனின் தொனியே வற்புறுத்தாதே என்பதாய் இருந்தது.
“அவனை விடுங்க சம்பந்தி, அதான் பெரியவங்க வந்துட்டாங்கல்ல. வாங்க…” என்று முத்துவேலும் சொல்லிவிட அதன் பின்னர் எதுவும் மறுப்பதற்கில்லை.
அதன் பின் நல்ல நேரத்தில் தாம்பாளம் மாற்றப்பட்டு திருமணத்தை உறுதி செய்து சம்பந்திகள் மாலை மாற்றிக்கொண்டனர். அனைத்தையும் ஒரு பார்வையாளன் போல பார்த்தபடி அமர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
சற்று நேரத்தில் கீழே அழைத்து வரப்பட்டாள் லட்சுமி. அமரிக்கையான அழகுடன் வந்தவள் முதலில் அனைவருக்கும் பொதுவான வணக்கத்தை சமர்ப்பித்தவள் பின் மாரி பாட்டியின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
வாசுதேவகிருஷ்ணனை நிமிர்ந்து பார்த்துவிட நினைத்தாலும் அத்தனை பேர் மத்தியில் அதனை செய்யமுடியாது வெட்கத்துடன் தலை கவிழ்ந்தே இருந்தாள்.
அன்புக்கரசியும், ராணியும் சேர்ந்து பட்டுப்புடவை சகிதம் உள்ள தாம்பாள தட்டினை எடுத்து அவளுக்கு நீட்ட மாரிப்பாட்டி தொட்டு வணங்கியதும் லட்சுமி அதனை வாங்கி மகிழிடம் நீட்ட இருவரும் புடவை மாற்றி வர உள்ளே சென்றனர்.
தன்னை தாண்டிக்கொண்டு செல்லும் அவளை வந்ததிலிருந்து ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டே தான் அமர்ந்திருந்தான். அவளின் முகத்தில் இருந்த சிறு வெட்கமும், மகிழ்ச்சியும், படபடப்பும் கூட அவனின் கண்களில் நன்றாகவே அகப்பட்டது.
ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டவன் பார்வை மருதவேலிடம் செல்ல இவனுக்காகவே காத்திருந்த அவன் பிடிச்சிருக்கா என்பது போல சைகையில் கேட்க இல்லை என்பதாக தோளை அலட்சியமாய் குலுக்கினான்.
அவ்வளவு தான். மருதவேல் அவனின் பக்கம் திரும்பவே இல்லை. அண்ணனின் செய்கையில் சிறு புன்னகை பிறக்க முதன் முதலாய் அந்த வீட்டில் புன்னகைத்தான் அவன்.
அவன் அமர்ந்திருந்த விதம் ஒருவரும் அருகே சென்று பேச முயலவில்லை. அதிலும் போலீஸ் என்றது வேறு சிறு தயக்கம். அதனால் தனியாகவே அமர்ந்திருந்தான்.
திடீரென காதுக்குள் கிசுகிசுப்பாய் ஒரு குரல். சுற்றிலும் அவன் பார்க்க மீண்டும் அதே கிசுகிசுப்பு குரல்.
“ஏய் தம்பி, ப்ச், தம்பி உன்னைத்தான். இங்க பின்னால…” என ஜன்னலில் இருந்து தன் கையை நீட்டி லேசாய் அவனின் தோளை தட்ட அவன் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.
அங்கே அழைத்தது லட்சுமி. இதனை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அவள் தம்பி என்று அழைத்து வைத்தது வேறு. புருவம் உயர்த்தியவன்,
“நீங்க என்னை தான் கூப்பிட்டீங்களா?…” என சந்தேகமாய் கேட்க,
“தம்பி தம்பின்னு எத்தனை வாட்டி கூப்பிட?…” என்றவள் இன்னும் கிசுகிசுப்பாகவே பேச இன்னும் திகைத்து நின்றான் அவன்.
லட்சுமியை சொல்லியும் தப்பில்லை. அவன் அமர்ந்திருந்தது உயரம் குறைவான ஒரு ஸ்டூலில். அவனை முழுதாய் பார்க்காமல் முகத்தையும் சரியாய் பார்க்காமல் கூட்டத்தினரை பார்த்துக்கொண்டே இவனிடம் பேசினாள்.
எங்கே தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ என்று. அதிலும் அவனை மாப்பிள்ளை வீட்டினரோடு வந்திருக்கிறான் என்று தம்பி என அழைத்து வைத்தாள்.
“என்ன கூப்பிட்டா காது கேட்காதா உனக்கு?…” என்றும் அவள் கேட்டு வைக்க,
“வாட்? பர்டன்…” என அதிர்ச்சி விலகாத குரலில் அவன் பார்க்க,
“ஹ்ம்ம் பாக்கிஸ்தான் பாடர். இப்ப பாடரை பத்தி பேசற நேரமா?…”
“இல்ல அது இல்ல…” என்றவனை கையமர்த்தி நிறுத்தியவள்,
“கொஞ்சம் தள்ளி நில்லேன், மாப்பிள்ளையை பார்க்கனும்…” என்றவளை சற்று முறைப்புடன் பார்த்தான்.
நன்றாக திரும்பி அவளை பார்த்ததனால் அந்த சிறு ஜன்னலில் அவனின் முகமே முக்கால்வாசி தெரிய கூட்டத்தில் முத்துவேலை தவிர யாரையும் பார்க்க முடியவில்லை அவளுக்கு.
[the_ad id=”6605″]
“ப்ச், என்ன பார்வை? தள்ளி நில்லுன்னா நிக்க வேண்டியது தானே?…” என சொல்லவும்,
“நீங்க ஏன் மாப்பிள்ளையை பார்க்கனும்?…” என வேண்டுமென்றே கேட்டு, வேறு யாரும் பார்க்கின்றனரா என கவனித்துக்கொண்டே அவன் பேச அனைவரும் சம்பிரதாய பேச்சுக்களில் ஆர்வமாய் இருக்க இவர்களை யாரும் கவனிக்கவில்லை. அவள் பதில் சொல்லும் முன்பு அவனே,
“ஏன் என்னை பார்த்தா மாப்பிள்ளை மாதிரி தெரியலையா?…” அவனுக்கு சுர்ர்ரென இருந்தது தன்னை கவனிக்காத கண்டுகொள்ளாத அவளின் அலட்சியம். அதிலும் அந்த தம்பி வேறு.
“ஹ்ம்ம், முச புடிக்கிற…” என்றவள் அடுத்த வார்த்தையை சொல்லும் முன் தீயாய் அவளை அவன் முறைக்க சற்று மிரண்டவள்,
“அட நீங்க ஏன்ப்பா அதுன்னு நினைக்கனும்? ஒரு சிறுத்தை, சிங்கம், புலி, குதிரை இப்படி நினைச்சுக்கங்க. அத தான் நானும் சொல்ல வந்தேன்…”என அவள் பேச்சை மாற்ற,
“மாப்பிள்ளை பேர் தெரியுமா?…” என்றான்.
“ஏன் தெரியாம? சரி அதை விடுங்க. மாப்பிள்ளை கூட வந்திருக்கீங்களா?…” என்று இன்னும் கேட்க பொறுமை இழந்தவன்,
“என் பேர் வாசுதேவகிருஷ்ணன்…” என என்றான் விரைப்பாய்.
“அதிருக்கட்டும், பரவாயில்லை…” என்றவளின் கவனம் அவனிடம் இல்லை.
“ப்ச், நல்லா கேளு, இங்க என்னை பார். என் பேர் வாசுதேவகிருஷ்ணன். புரியுதா?…” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய் சொல்ல இப்பொழுது அவனை பார்த்தவளுக்கு அவனின் பெயர் கவனத்தில் பதிந்தது.
அவளின் அதிர்ந்த முகத்தில் அவனுக்கு சற்று திருப்தியானது. லேசான சிரிப்பும் கூட இதழ்களில் பூக்க பார்க்க முகத்தை கடினமாக்கியவன்,
“இப்ப புரியுதா?…” என்று கேட்க சட்டென ஜன்னலை சாற்றிவிட்டாள் லட்சுமி. அவளின் பதட்டமும் வேகமாய் ஜன்னலை சாற்றியதும் வாசுவிற்கு புன்னகையை உண்டாக்க,
“கொஞ்சம் வாய் பேசற பொண்ணு தான் போலவே? முத்துவேலுக்கு இது தெரியாதோ?” என்று நினைப்புடன் தந்தையை பார்க்க இவனின் பார்வையை உணர்ந்தாரோ என்னவோ அவரும் இவனை பார்த்தார்.
நக்கலாய் ஒரு சிரிப்புடன் அவரை பார்த்துக்கொண்டே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவனின் தோரணையில் பல்லை கடித்தவர்,
“பொண்ணை வர சொல்லுங்க. நலுங்கு வைக்கனும்ல…” என்று பேச்சை மாற்ற,
“விமலா போயி பாரும்மா…” என அன்புக்கரசி மருமகளை அனுப்பி வைத்தார்.
“உன்னை சேலையை கட்ட சொல்லிட்டு தண்ணி குடிக்க போனா நீ என்னடான்னா சாவகாசமா உட்கார்ந்திருக்க…” என மகிழ் அவளிடம் கேட்க லட்சுமி நடந்ததை சொல்லவும் விமலா வரவும் சரியாக இருந்தது.
“தம்பி உன்னோட ரூம் பக்கத்திலையே உட்கார்ந்து இருக்காரே. பார்த்தியா நீ?…” என்று வேறு கேட்க லட்சுமியிடம் பதட்டம்.
“முதல்லையே சொல்லியிருக்கலாம்ல…” என மகிழ் கேட்க,
“ஆங், சொல்லியிருந்தா பார்த்திருப்பேன். நான் பார்க்கலை…” என்று லட்சுமி பேச்சை மாற்ற,
“சரி சரி சபைக்கு கூப்பிடறாங்க. வாங்க…” என்று சரசரவென புடவையை மாற்றிவிட்டு அவளை அழைத்து சென்று நடுவே போடப்பட்டிருந்த சேரில் அமரவைத்தனர். அவள் கழுத்தில் மாலையை போட சொல்லி சொல்ல,
“மாப்பிள்ளை வரலைனா பரவாயில்லை. அதான் வந்துட்டாரே. அவரே மாலையை போட்டுமே…” என்று மாரிப்பாட்டி சொல்லவும் வாசுவை அழைத்தார்கள்.
லட்சுமியினால் அவனின் வரவை உணர முடிந்தது. தொண்டை வரண்டு போக அமைதியாக அமர்ந்திருந்தாள் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல்.
அவளருகே வந்தவன் விமலா கொடுத்த மாலையை வாங்கி போட்டவன் அடுத்து அவர்கள் சொல்லியவற்றை செய்ய தன் கன்னத்தில் சந்தனத்தோடு படிந்த அவனின் விரல்களின் அழுத்தம் சற்று அழுத்தமோ என்னும் வகையில் தான் இருந்தது லட்சுமிக்கு.
வெடவெடவென நடுங்கியபடி நின்றவளின் முகம் ஏதோ ஒருவிதத்தில் திருப்தியை தர செல்லும் முன்னால் அவளின் தோளை லேசாய் இடித்துக்கொண்டு தான் சென்றான். கால்களை நன்றாய் தரையில் ஊன்றி தன்னை நிதானப்படுத்தியவள் குனிந்த தலை நிமிரவில்லை.
அதன் பின்னர் மாற்றி மாற்றி அனைவரும் வந்து அவளுக்கு பொட்டுவைத்து ஆசிர்வதித்து சென்றனர். என்னதான் தள்ளி சென்று அவன் அமர்ந்து கொண்டாலும் அவனின் பார்வை வீச்சை இவளால் உணர முடிந்தது.
கண்களை மூடி சற்று முன் அவனிடம் பேசியதை ஓட்டிப்பார்த்தவள் மனக்கண் அவனின் முகத்தில் நிலைத்தது.
“இப்படி பேசி பல்ப் வாங்கிட்டியேடி” என்று நினைத்து கண்களை இறுக்க மூடி திறந்தவள் தன் செயலினால் சிறு புன்னகையுடன் இருக்க அதையும் பார்த்தபடி தான் இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவளின் முகமாற்றங்களை அத்தனை கூர்மையுடன் கவனித்துக்கொண்டு இருந்தவனின் முகம் மட்டும் அப்படியே இருந்தது.
மருதவேல் தான் பெண்ணை பார்த்த பின்னாவது இதில் லயிப்பான் என்று நினைக்க தம்பியின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சட்டென அவனின் பக்கம் திரும்பியவன் “உன் மனைவியை பாரு” என்று பார்வையால் உணர்த்தி முறைக்க இவன் “தேறமாட்டான்” என்று முகத்தை கோபமாக திருப்பிக்கொண்டான்.
[the_ad id=”6605”]
சற்று நேரத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து சாப்பிட அமர்ந்தனர். சாப்பிட்டு முடிந்து சிறிது நேரம் பேசியவர்கள் திருமணத்தை பெண் வீட்டிலேயே வைக்க முடிவு செய்துவிட்டு கிளம்பினார்கள்.
வாசுதேவனும் அவர்களுடன் கிளம்பியவன் முத்துவேலிடம் சொல்லிக்கொள்ளாமலே கிளம்பிவிட்டான்.
“உடம்பு முழுக்க திமிர். அவனுக்கு இருக்கு ஒருநாள் என்கிட்டே. சொல்லி வை கல்யாணம் வரைக்கும் அவன் வாலை சுருட்டிட்டு இருக்க சொல்லி…” என வழக்கம் போல அன்புக்கரசியிடம் எகிறிவிட்டு தங்களின் வண்டியில் ஏறி கிளம்பிவிட்டனர்.
மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி சென்ற சற்று நேரத்தில் வீட்டை ஒழுங்கி படுத்த ஆரம்பிக்க வீட்டில் இருந்த சொந்தங்கள் கிளம்பி இருந்தனர்.
பூங்கோதையும், மகிழும் வரவேற்பறையை ஒழுங்குபடுத்தி முடித்து தண்ணீரை குடித்துவிட்டு கீழே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவரிடம்,
“இன்னும் லட்சுமிக்கு ஆரத்தி எடுக்கலை…” என்று வந்து நின்றாள் மகிழ்.
“நல்லவேளை சொன்ன. நானும் என்னத்தையோ மறந்துட்டேனேன்னு இருந்தேன். போயி எடுத்துட்டு வா எல்லாத்தையும்…” என்று சொல்லவும்,
“எல்லாம் கரைச்சு எடுத்துட்டேன். வாங்க…” என்றதும் எழுந்து வந்தவர்,
“ஏய் இவளே லட்சுமிய கூப்பிடுடி…” என்று சொல்லவும் தான் அவள் இல்லை என தெரிந்து மகிழ் அழைக்க வந்துவிட்டாள்.
“நீயே உன் நாத்திக்கு சுத்து. போற இடத்துல பதவிசா இருக்கனும்னுன்னு வேண்டிட்டு…” என்று மகிழிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தாமோதரன் அருகே அமர்ந்த பூங்கோதை,
“போலீஸ்க்கார புள்ளை, பாக்க கடிசா இருக்காரே. சிரிக்க கூட இல்லை. என்னவோ மனசுக்கு கிடுக்கி புடிக்குது…” என்று சொல்ல,
“போலீஸ்க்காரர்ல, கொஞ்சம் அப்படித்தான் இருப்பாரு. அதெல்லாம் கல்யாணம் ஆகிட்டா சரியாகிடும்…” என தினேஷ் சொல்ல,
“அட போடா கல்யாணம் ஆகறதுக்கு என்ன? இப்ப போறப்போ சொல்லிட்டு கூட போகலை. ஒரு முகதாட்சண்யம் வேணுமில்ல…” என்று சொல்லி முடித்து மகிழை பார்க்க அவள் சுற்றிய ஆரத்தியை கையில் வைத்துக்கொண்டு வாசலை பார்த்தபடி நிற்க அவளுக்கு பின்னர் லட்சுமி மறைந்து நின்றாள்.
“ஏய் இவளே, அத வச்சு பூசையா பண்ண போற? போயி வாசல்ல ஊத்து…” என்று சொல்லிய பூங்கோதையும் எழுந்து கொள்ள பார்வை தன்னைப்போல வாசலுக்கு சென்றது.
அங்கே வாசுதேவகிருஷ்ணன் நிலைக்கதவின் மேல் சாய்ந்தபடி கையை காட்டிக்கொண்டு நிற்க,
“வ்வ்வாங்க மாப்பிள்ளை…” என்ற பூங்கோதையின் பதட்டத்தில் தாமோதரனும் தினேஷும் எழுந்து வந்து பார்த்தனர்.
“கிளம்பும் போது சொல்லிட்டு போக மறந்துட்டேன். அதான். பார்த்துட்டு, பேசிட்டு, சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்…” என்று ஒவ்வொரு வார்த்தையையும் சொன்னவனின் பார்வை லட்சுமி மீது தான் படிந்திருந்தது.