நிஜம் – 23
வீட்டிற்கு வந்தவன் வேகமாய் உள்ளே செல்ல போக அன்புக்கரசி அவனிடம் வந்தார்.
“என்ன வாசு உங்கப்பா எதுவும் கோபமா பேசிட்டாரா?…” என கேட்க,
“அதெல்லாம் எதுவும் இல்லைம்மா…” என்று சமாளித்தவன் பார்வையால் அபூர்வாவை தேட விமலாவோடு அமர்ந்து வீடியோ காலில் பூங்கோதை மற்றும் மகிழ்த்தினியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
இவன் வந்ததை கவனிக்காமல் அவள் இருக்க மருதவேல் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான்.
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா வாசு?…” என அன்புக்கரசி கேட்க,
“இல்லைம்மா பசிக்கலை. ஒரு வேலையா வெளில போகனும். அர்ஜன்ட்…” என சொல்லி தங்கள் அறைக்கு சென்றவன் உடையை மாற்றிக்கொண்ட பின்பு,
“பூர்வா…” என அழைக்க,
“நீங்க பேசுங்க அக்கா. இதோ வந்திடறேன்….” என விமலாவிடம் போனை கொடுத்துவிட்டு,
“அத்தை அம்மா பேசனும்னு சொன்னாங்க. போய் பேசுங்க…” என அவரையும் அனுப்பிவிட்டு தங்களறைக்குள் நுழைந்தவளின் விழிகள் அப்படியே விரிந்தது.
காக்கி உடையில் தயாராய் நின்றவன் இவளை பார்த்ததும் வா என்று பார்வையால் அழைத்து அவளை நோக்கி கை நீட்ட, நகரவும் மறந்தவளாய் பார்த்தபடி நின்றாள்.
“பூர்வி…” என்றான் மீண்டும் அவளின் திகைத்த பார்வையில்.
இதுவரை போட்டோவில் அவனை இந்த உடையில் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் நேரில் முதன் முதலில் இன்று தான் பார்த்து நிற்க அவளறியாமல் சிறு பயம் அவளுள்.
“பூர்வி, உன்னைத்தான்….” என அழைக்கவும்,
“ஹாங்…” என தலையை உலுக்கியவள் மெதுவாய் அவனருகே வந்து நின்றாள்.
ஏனோ இத்தனை நாள் பார்த்த வாசுதேவகிருஷ்ணனாக இல்லாமல் அவனின் முகத்தில் தெரிந்த அந்த மிடுக்கும் கம்பீரமும் அந்த உடைக்கே ஏற்ற கூர்மையான பார்வையும் ஏதோ செய்தது.
“என்னடி இந்த பார்வை பார்க்கிற?…” என சட்டென இழுத்து அணைத்தவன்,
“என்ன இந்த ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன்னு ஆராய்ச்சி பன்றியா கண்மணி?…” என கண்ணடித்து கேட்க அவனின் அணைப்பிலிருந்து விடுபட பார்த்து,
“வெளில கிளம்பிட்டீங்களா?…” என்றாள் சரியாக.
“ஹ்ம்ம், ஆமா, ஒரு முக்கியமான விஷயம். இப்ப நான் போயி ஆகனும். வர லேட் ஆனாலும் ஆகும். நீ சாப்பிட்டு தூங்கு. சரியா?…” என சொல்லவும் தலை தன்னைப்போல சம்மதம் தெரிவித்தாலும் இந்த நேரத்தில் செல்கிறானே என்கிற பயம் அவளை கவ்வியது.
“இந்த டைம்ல…” என வார்த்தைகளை விழுங்க அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“நான் என்ன வேலை பார்க்கிறேன்னு தெரிஞ்சு தானே நம்ம கல்யாணம் நடந்தது…” என கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் அவள் நிற்க,
“ஹ்ம்ம், நீ இதுக்கெல்லாம் பழகிக்கனும் பூர்வி. இன்னைக்கு அம்மா, அண்ணா, அண்ணி இருக்காங்க. இதே மாதிரி எல்லா நாளும் யாராவது இருந்துட்டே இருக்க மாட்டாங்க. நீ தனியா இருந்தா மட்டும் போதாது தைரியமாகவும் இருக்கனும்…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றாள் சத்தமே வராத குரலில்.
“ப்ச், இதென்ன வெறும் ஹ்ம்ம்? காலையில அத்தனை பேசின? இப்பவும் பேசேன், கொஞ்சம் எனர்ஜியா இருக்கும்…” என்று அவளை சீண்ட இடையில் ஊர்ந்த அவனின் கைகளை தட்டிவிட்டவள்,
“போதும் கிளம்புங்க…” என கறாராக சொல்லவும் அவளின் பேச்சில் சிரித்தவன்,
“ஓகே, பை….” என்று சொல்லி அவளின் கன்னத்தில் இதழொற்றி விலகியவன்,
“சொல்ல மறந்துட்டேன், முக்கியமா நீ எனக்கு கால் பண்ண கூடாது. ப்ரீ ஆகிட்டா நானே கால் பண்ணுவேன். எனக்கு வேலை நேரத்துல போன் பண்ணவோ, பேசவோ முடியாது. புரியுதா?…” என சொல்லி அவளின் கன்னம் தட்டி விலகி சென்றவன் கப்போர்டில் எதையோ குடைய,
“என்னன்னு சொல்லுங்க நான் எடுத்து தரேன்…” என கேட்டு அவனுக்கு உதவ வந்து நிற்க,
“ஈஸிட், எடுத்து தருவியா?…” என சிரிப்புடன் சொல்லியவன் விலகி,
“இங்க ஒரு ப்ளாக் பாக்ஸ் இருக்குல. அதுக்குள்ளே ஒரு முக்கியமான பொருள் வச்சிருக்கேன். எடேன்…” என சொல்லி மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு நின்றுவிட அவனின் சிரிப்பிலே எதுவோ விளையாடுகிறான் என புரிந்து,
“ம்ஹூம், பார்வையும், சிரிப்பும் வில்லங்கம். நீங்களே எடுங்க…” என நகர பார்க்க அவளின் கை பிடித்து நிறுத்தியவன்,
“அதான் எடுக்கறேன்னு வந்த தானே? எடுத்து குடு…” என்றான் பிடிவாதமாய்.
“உள்ள பல்லி, கரப்பாம்பூச்சின்னு எதாச்சும் வச்சிருக்கீங்களா? நான் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்…” என சொல்லிக்கொண்டே அந்த பெட்டியை முன்னால் நகர்த்தி உள்ளே கைவிட்டு வெளியே எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு அச்சத்தில் விரிந்தது.
கைகள் நடுங்க அதன் கனத்தில் அலறி கீழே போட போக சட்டென்று அதனை கேட்ச் பிடித்தவன் அதனிடத்தில் பொருத்தினான் வாசுதேவகிருஷ்ணன்.
இன்னமும் நடுக்கம் குறையாமல் நின்றவளை லேசாய் அணைத்துக்கொண்டவன்,
“உனக்கு கூட குட்டியா காம்பெக்ட்டா ஒரு கன் வாங்கி குடுக்கலாம்னு இருக்கேன். உன்னோட சேப்ட்டிக்கு. சுடறதுக்கு நான் கத்து தரேன்…” என சீரியஸாக சொல்ல அவனின் மார்போடு ஒண்டியவள்,
“மாட்டேன், மாட்டேன். எனக்கு வேண்டாம். வேண்டாம்…” என தலையை அசைத்து அசைத்து பதறி சொல்லவும் சிரிப்புடன் அவளின் தலையை நிமிர்த்தி நெற்றியோடு முட்டியவன்,
“அரைமணி நேரத்துல அங்க இருப்பேன்னு சொன்னேன். உன்னால இன்னைக்கு அந்த டைம்ல ரீச் ஆவேனான்னு தெரியலை…” என சொல்லவும் அவனின் கையை தட்டிவிட்டவள்,
“கிளம்புங்களேன். யார் வேண்டாம்னு சொன்னா?…” என கப்போர்டில் சாய்ந்து கொள்ள வாசுதேவகிருஷ்ணன் சிரிப்புடன் அங்கிருந்து நகர அபூர்வா அதே இடத்தில் நின்றவள் அவன் தன்னை திரும்பி பார்க்கும் வரை அசையாமல் நின்றாள்.
அறை கதவருகே சென்றவன் மீண்டும் அவளை பார்த்து வா என கை நீட்டவும் வேகமாய் சென்று அவனின் கையோடு கை கோர்த்துக்கொண்டாள். வெளியே அவனை பார்த்ததும்,
“என்ன வாசு, கிளம்பிட்ட?…” என்று மருதவேல் சட்டென கேட்க,
“பெரியவனே வெளில போகும் போது சும்மா இரு. போய்ட்டு வரட்டும்…” என்று அன்புக்கரசி சொல்லி,
“கிளம்புப்பா…” என்றவர் அபூர்வாவின் கண்களில் இருந்த கலக்கத்தில்,
“விமலா வா நாம குழம்பு எல்லாத்தையும் சூடு பண்ணுவோம். சாப்பிட்டு படுத்தா தான் காலையில நேரத்துக்கு வீட்டுக்கு கிளம்ப முடியும்…” என ஏதேதோ பேசிக்கொண்டு மருதவேலையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்தார்.
கணவனின் கையை பற்றியபடி வீட்டு வாசலுக்கு வந்தாள். அங்கிருந்த ஸ்டேண்டில் ஷூவை மாட்டியவன் வெளியே யாரும் இருக்கிறார்களா என பார்த்துக்கொண்டே அபூர்வாவை தன்னருகே அழைத்து நிறுத்தினான்.
“என்ன பூர்வி இது? கண்ணு கலங்கிட்டு?…” என்று சற்று கண்டிக்கும் தொனியில் சொல்ல,
“இல்லை, பார்த்து கவனமா போய்ட்டு வாங்க. நான் வெய்ட் பண்ணுவேன்…” என அவனின் கண்களுக்குள் பார்த்தபடி சொல்ல,
“நானும் தான் வெய்ட் பண்ணினேன் கண்மணி. நாலு வருஷமா வெய்ட் பண்ணேன். காத்திருப்பு என்னைக்கும் கை விடாது. அது ஒரு சுகம்…” என சொல்ல அவன் பேசியது அவளுக்கு காதில் விழுந்தாலும் அப்போதைய மனநிலை எதையும் உணரவிடாது சதி செய்தது.
“ஷாலினிக்கு சொல்லும் போது நீயும் தானே பார்த்துட்டு இருந்த? நான் உனக்கும் தான் சொன்னேன். மறந்துட்டியா அதை எல்லாம்?…”
அவன் சொல்லவுமே ஷாலினியோடு சேர்ந்து முகேஷின் முகமும் அவனிருந்த நிலையும் மனக்கண்ணில் விரிய அவளின் பதட்டம் இன்னும் அதிகமாகியது.
“என்னோட தைரியமா நீ இருக்கனும். இப்படி உன்னை பார்த்துட்டு போனா நானும் உன்னை தான் நினைச்சுட்டு இருப்பேன். வேலை ஆனா மாதிரி தான்…” என விளையாட்டு போல அவளுக்கு விஷயத்தை புரிய வைக்க,
“இல்லை என்னால எந்த இடத்திலையும் உங்க கவனம் சிதறக்கூடாது. பத்திரமா நீங்க வந்திரனும். அது போதும்…” என தைரியத்தை வரவழைத்த குரலில் சொன்னாலும் கடைசியில் குரல் தழுதழுத்தது.
“ஹேய் என்னடி இது? மனசை என்னமோ பண்ணுது பூர்வி. என்னைக்கும் வேலைக்கு போறப்போ அதுல தான் கவனம் இருக்கும். இப்ப. ப்ச்…” என அவனின் முகம் மாறி தலையை அழுந்த கோதிக்கொண்டான்.
“அப்படி எதுவும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க. நான் நாளைக்கு நாம கிளம்பறதுக்கு எல்லாம் பேக் பண்ணிடறேன். சரிதானே?…” என்று சிரித்தவளை வாரி அணைத்தவன் அணைத்த வேகத்தில் விட்டுவிட்டு லிப்ட்டை நோக்கி நடந்துவிட்டான்.
செல்லும் அவனையே பார்த்தபடி அபூர்வா நிற்க அவளின் பார்வை ஊசிகள் முதுகை துளைத்தாலும் திரும்பவில்லை அவன்.
“லட்சுமி…” என அன்புக்கரசி அழைத்ததும் தான் திரும்பி பார்த்தவள் முகத்தில் இருந்த கலக்கத்தில் அவளை உள்ளே அழைத்து வந்து அமரவை வைத்து தண்ணீர் குடிக்க கொடுத்தார்.
அனைவருக்கும் அவளின் மனநிலை நன்றாக புரிந்தது. விமலா அருகே அமர்ந்து கையை பிடித்துக்கொள்ள,
“இப்ப என்ன கலங்கிப்போய் இருக்கற? வேலைக்கு தான போயிருக்கான்? வந்துருவான். இதென்ன அவனுக்கு புதுசா? நீ இப்படி இருந்தா அவன் அங்க ஒருமனசா இருப்பானா?…” என கேட்கவும்,
“அம்மா லட்சுமிக்கு இது முதல்தடவை. அதான் கொஞ்சம் பயந்து இருக்கு. நீங்களும் ஏன் இப்படி பேசறேங்க?…” என மருதவேல் சொல்ல,
“அதுக்கில்லைடா வேலைக்கு போற ஆம்பளைங்களும் சரி பொம்பளைங்களும் சரி வீட்டில இருந்து கிளம்பறப்ப சிரிச்ச முகமா தான் வழியனுப்பனும். அப்பத்தான் பார்க்கிற எல்லாமே நல்லதா இருக்கும். நிதானமா வேலை பார்க்கலாம். ஒரு கவலையோட பார்த்துட்டு போனாலும் மனசுக்கு அதுதான் நறுக்குன்னு குத்திட்டு நிக்கும்…” என்றவர்,
“நம்ம முகத்துல இருக்கிற சிரிப்பு தன்னால பார்க்கறவங்க பார்வைக்கு ஒரு குளுமையை தரும் லட்சுமி. என்னமோ சொல்லுவாங்களே பாசிட்டிவ்வு. அது ஒரு ஜவ்வு மாதிரி. சட்டுன்னு ஒட்டிக்கும். நமக்கு அது நெக்கட்டிவா பாஸிட்டிவா எதுவா இருந்தாலும்…”
“அத்தை முதல்ல அவ சாப்பிடட்டும்…” என விமலா சொல்ல,
“ஆமா முதல்ல வாங்க சாப்பிட்டு ஊருக்கு போறதுக்கு என்ன வேணும்னு பார்ப்போம்…” என சொல்லி அன்புக்கரசி எழுந்துகொள்ள அபூர்வா எழுந்து பூஜை மாடத்தருகே சென்று கடவுளை வணங்கி நின்றாள்.
விமலா அவளை அழைக்க செல்ல அவளின் கையை பிடித்து தடுத்த அன்புக்கரசி சிரித்த முகத்துடன்,
“அவ போக்குல விடு. இப்ப நாம இருக்கோம் தாங்கி பிடிப்போம். இல்லைன்னா அவளா தான் அவளையும் தாங்கி என் பிள்ளையையும் தாங்கனும். அவளுக்கு இதுல நம்பிக்கை இருக்குன்னா இருக்கட்டும். கும்பிட்டுட்டு வரட்டும். நீ வா…” என அபூர்வாவிற்கு தொந்தரவு செய்யாமல் தள்ளி வந்து அமர்ந்துகொண்டனர்.
நால்வரும் சாப்பிட்டு முடிக்க அபூர்வாவோ அன்புக்கரசி பேச்சை தட்டமுடியாமல் வைத்ததை விழுங்கி வைத்தாள்.
சாப்பிட்டால் போதும் என்பதை போல அன்புக்கரசியும் அவளுக்கு பரிமாறிய பின்பு தான் தான் உண்டார்.
நேரம் செல்ல செல்ல தன்னுடைய மொபைலை நொடிக்கொருதரம் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் அவள். கணவனிடமிருந்து போன் வந்தாலும் வரும் என காத்திருந்தாள்.
“முடிந்தால் தான் அழைப்பேன்” என்ற வார்த்தையை மறந்து அழைப்பேன் என்றதை மட்டும் பிடித்துக்கொண்டு மொபைலை பார்த்தபடி இருக்க அன்புக்கரசி அவளை உறங்க சொல்லி அனுப்பினார்.
மருதவேலை உள்ளே சென்று உறங்குமாறு சொல்ல அவனோ மறுத்துவிட்டான். யாருமே அவளுடன் அறைக்குள் சென்று படுக்க செல்லவில்லை.
“நீ போயி அங்க தூங்கு. இந்த சோபா நீட்டமா கால் நீட்ட வாட்டமா இருக்குது. மருது அங்க படுதுப்பான். நானும் விமலாவும் கீழே பாயை விரிச்சு படுத்துக்குவோம்…” என சொல்லவும்,
“அப்ப எல்லாருமே இங்கயே தூங்குவோம் அத்தை…” என சொல்லி அனைவருக்கும் ஹாலிலேயே படுக்கையை போட அன்புக்கரசிக்கும் அதுவும் சரி என்று தான் தோன்றியது.
உள்ளே தனியாக இவள் உறங்குவாளோ என்னவோ என்று தான் நினைத்தார். இங்கென்றால் தங்களுடன் சேர்ந்து தூங்கிவிடுவாள் என நினைத்துக்கொண்டார்.
படுத்ததும் அவளை வேறெதுவும் நினைக்கவிடாமல் விமலாவும் அன்புக்கரசியும் கதைகலாக சொல்ல சொல்ல மருதுவேலும் சேர்ந்துகொண்டான்.
நள்ளிரவு வரை அவர்கள் பேசிவிட்டு தான் ஓய்ந்தனர். அதன் பின்னர் தூக்கம் தானாக தழுவிக்கொண்டது அபூர்வாவை.
சுற்றிலும் மப்டியில் இருக்கும் காவலர்கள். அந்த இருளிலும் அனைவரின் கண்களும் வேட்டைக்காரர்கள் போல பளபளத்தது. நடுவில் நடுநாயகமாக வாசுதேவகிருஷ்ணன் மிரட்டும் தொனியில் அவன் அமர்ந்திருக்க அவனிடம் பார்வையை செலுத்தவே அஞ்சினான் ரவி.
“இதை நீ எதிர்பார்த்திருக்க மாட்ட தானே ரவி?…” என ஒரு கையால் இன்னொரு கையை தேய்த்தபடி,
“இந்த ஸ்கெட்ச் அக்யூஸ்ட்டுக்குன்னா நினைச்சீங்க?…” என கேட்டு அவன் சிரிக்க,
“ஸார் நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க. எனக்கு எதுவும் தெரியாது ஸார். என்னை நம்புங்க. இப்படி என்னை ட்ரீட் பண்ணாதீங்க….” என கோபமும் வன்மமுமாக ரவி சொல்ல,
“நான் சொன்னது புரிஞ்சதா உனக்கு. இந்த ஸ்கெட்ச் இப்ப உள்ள அடைச்சு வச்சிருக்கோமே அவனுக்கு இல்லைன்னு சொன்னேன்…” என்றான் அசால்ட்டாக.