நிஜம் – 24
மாலை வாசுதேவகிருஷ்ணன் வந்ததில் இருந்து முத்துவேல் அங்குமிங்கும் அசையவே இல்லை. அதிலும் அந்த வீட்டில் தன்னை ஒரு ஆள் இருப்பதாகவே யாரும் நினைக்காததை போல நடந்துகொண்டது அவரால் தாங்கவே முடியவில்லை.
“இவங்க எல்லாரும் சேர்ந்து ஆட்டமா ஆடறாங்க. இருக்கட்டும் எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்…” என முணுமுணுத்தபடி இருந்தார்.
“என்ன வாசு வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாம வந்ததும் கிளம்பறேன்னு நிக்கற?…” என்று அன்புக்கரசி கவலையுடன் கேட்கவுமே அவர்களை அதற்கும் மேலான கவலையுடன் பார்த்தபடி முத்துவேல் நின்றார்.
“இவன் ஒரு காபியாச்சும் குடிச்சுட்டு கிளம்பினா என்ன? சரியாய் உட்கார கூட இல்லை. அந்த பொண்ணு அதுக்கும் மேல. நின்னுட்டே இருக்கா. போன பின்னால இதை சொல்லியே அன்பு என்னை தூங்க விடமாட்டா. சோதிக்கிறானுங்களே என்னை…” என உள்ளுக்குள் புலம்பியவராக அவஸ்தையுடன் நிற்க அவர் நினைத்ததை போல அன்புக்கரசி முத்துவேலை திரும்பி ஒரு பார்வை பார்த்தார்.
“போச்சு, இந்தா ஆரம்பிச்சுட்டா.” என ஜெர்க் ஆகியவர்,
“உட்கார்ந்து எதாச்சும் சாப்பிட்டு போ. நீயும் உட்காறேன்மா. ஏன் அடுத்த வீட்டுக்கு வந்த மாதிரி நிக்கிற?…” என அவரின் அனுமதி இன்றி வார்த்தைகள் வந்து விழுந்திருந்தன.
“அதான் அப்பா சொல்றாரே வாசு…” என சந்தோஷமாய் அன்புக்கரசி சொல்ல,
“ஐயோ அம்மா, அதெல்லாம் எதுவும் இல்லை. ட்ரெயினுக்கு லேட் ஆகிடுச்சு. ட்ராபிக்ல மாட்டிக்கிட்டா மிஸ் ஆகிடும். அதான்…” என சொல்ல,
“சரி சரி கிளம்புங்க. நைட்டுக்கு சாப்பாடு பேக் பண்ணிருக்கேன். நேரத்துக்கு சாப்பிடுங்க…” என சொல்லி அதற்கொரு பேக்கை கொடுக்க,
“இதை செய்யாதீங்கன்னு சொன்னேன்ல. இப்ப இதையும் தூக்கிட்டு பத்திரமா கொண்டு வரனும்…” என்று வாசுதேவகிருஷ்ணன் முறைக்க,
“ரெண்டே ரெண்டு பாக்ஸ் தான் வச்சிருக்கேன். போய் சார்ஜ் போட்டுட்டா சூடாகிடும். பேப்பர் ப்ளேட் வச்சிருக்கேன். சாப்பிட்டு தூக்கி போட்டுடுங்க…” என சொல்ல அவரை ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்தவன்,
“அம்மா தம்பி என்ன சொல்றான்னு புரியுதாம்மா?…” என மருதவேல் கேட்க,
“ஏன் புரியாம? ஒரு காலத்துல நாமல்லாம் ஊர் சுத்தி பாக்க போறப்ப புளியோதரைய பொட்டலம் கட்டி கொண்டு போனவங்க தான். மறக்காம இருக்கனும். இப்ப நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துல சாப்பாட்டை வாங்கி சாப்பிடறோம். ஆனா அங்க என்னத்தை தொட்டு என்னத்தை போட்டு சமைச்சானுங்களோ?…”
“போறப்பவாச்சும் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு போங்க. அங்க போயி மூணு நாள் ஓட்டல் சாப்பாடு தான. அங்க இருக்கறதை, கிடைக்கிறதை தான் சாப்பிட்டாகனும். பார்த்துக்கோங்க…” என சொல்லவும் அவரை கட்டிக்கொண்டவன்,
“சரி, சரி, உங்களுக்கு சிரமமேன்னு தான் சொன்னேன்…”
“நம்பிட்டேன். இப்ப நேரமாகலையா உனக்கு?…” என்று இளைய மகனின் கன்னம் பற்றி கிள்ளியவர்,
“பார்த்து போய்ட்டு வரனும். அண்ணனை பார்த்துக்கோ. பத்திரமா போய்ட்டு வாங்க…” என காரில் ஏறி அமரும் வரை சொல்ல கேட்டுக்கொண்டே வந்தவன்,
“நாங்க போய்ட்டு வரவும் உங்களுக்கு ஒரு ட்ரிப் அரேஞ்ச் பன்றேன்…” என சிரிப்புடன் சொல்லி செல்ல,
“இவன் என்ன சொல்லிட்டு போறான்?…” என கார் நகர்ந்ததும் முத்துவேல் கேட்க,
“ஹ்ம்ம், நம்மளை நிலாவுக்கு அனுப்பறானாம். அதத்தான் சொல்லிட்டு போறான்…” என நொடிக்கும் குரலில் சொல்ல,
“அன்பு…” என இன்னும் புரியாமலே நின்றார்.
“பாருங்க அவன் கூட என்னை உங்களை வெளியூர் அனுப்பனும்னு சொல்றான். உங்களுக்கு ஒத்த நாளு தோணிருக்குமா?…” என்று சலிப்பாய் சொல்ல,
“என்னது? ஏன் உன்னை நானு எங்கயுமே கூட்டிட்டு போனதில்லையா அன்பு?…” என வேகமாய் கேட்க,
“ஆகா நல்லாவே கூட்டிட்டு போயிருக்கீங்க. உங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு, கோவிலுக்குன்னு…” என்று சொல்ல,
“இப்ப என்ன போவோம் போவோம்…” என்றதும்,
“ஒன்னும் வேண்டாம். இதெல்லாம் தானா தோணனும்…” என்று அதற்கும் முட்டுக்கட்டை போட,
“இப்ப தான போகனும்னு சொன்ன? இப்ப திரும்ப வேணாம்னு சொன்னா?…”
“என் மவன் ஒரு வாய் காபி கூட குடிக்காம கிளம்பிட்டான். எல்லாம் உங்களால. அந்த கவலை கொஞ்சமும் இல்லாம என்னை ஊர் சுத்தி பாக்க கூப்பிடறீங்க. புள்ளைங்க இப்படி கிளம்பிடுச்சுங்களேன்னு வருத்தமில்லாம தேனிலவு கேக்குதாமா உங்களுக்கு. கடைக்கு போயி வேலையை பாருங்க…”
அன்புக்கரசி அவரை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்து பேச முத்துவேல் திருதிருவென முழித்தபடி நின்றார் மனைவியின் பேச்சில்.
“நான் எப்ப தேனிலவுக்கு வான்னு கூப்பிட்டேன்?” என யோசனையுடனே கடைக்கு கிளம்பி போனார் முத்துவேல்.
சரியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ட்ரெய்ன் வருவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பாக வந்து சேர்ந்தனர்.
முதல்வகுப்பு ஏசி கூபே தான் அவன் புக் செய்திருந்தது. மருதவேலின் நல்ல நேரமோ என்னவோ வாசுதேவகிருஷ்ணன் புக் செய்திருந்த கூபேக்கு அருகில் இருந்த கூபேயில் கிடைத்துவிட்டது.
ட்ரெயின் ஏறியதுமே வாசுதேவகிருஷ்ணன் கூபேயில் இரண்டு கல்லூரி மாணவர்கள் இருக்க அவர்களிடம் பேசி மருதவேல் சீட்டை மாற்றி கொடுக்கும் படி கேட்டு நால்வரும் ஒரே கூபேயில் இருந்து கொண்டனர்.
வீட்டிற்கு அழைத்து கிளம்பிவிட்ட தகவலை அன்புக்கரசிக்கு சொல்ல அவர் முதலில் சாப்பிட்டு தூங்கும்படி பேசி வைக்க, அடுத்ததாக ஜெயபாலுக்கு அழைத்தான்.
“என்ன மேன் ட்ரெய்ன் மூவ் ஆகிடுச்சா?…” என அவர் கேட்க,
“ஹ்ம்ம் கிளம்பியாச்சு ஸார். உங்களுக்கு ஒன்னும்…” என்று ஆரம்பிக்கும் பொழுதே,
“ஹேய் இதுக்கு ஏன் மேன் வொர்ரி பன்ற? அதெல்லாம் எதுவும் இல்லை. அங்க சீசன் சரியில்லாதப்போ நாம மாத்திக்கிட்டோம். அவ்வளோ தானே?…” என அவர் சொன்னாலும் அவரின் பெருந்தன்மையில் மனம் நெகிழ்ந்தான்.
“இன்னொரு ட்ரிப் கண்டிப்பா வயநாடு போவோம் ஸார்…”
“கூட நானும் வருவேன் என் வொய்போட…” என்று அவர் கிண்டல் பேசவும் சிரித்தபடி இவனும் பேசிவிட்டு கூபேக்குள் வந்து அமர்ந்தன.
“என்னடா கமிஷனர் என்ன சொல்றார்?…” என மருதவேல் கேட்க,
“அடுத்த ட்ரிப் வயநாடு அவரோட வரனுமாம்…” என்று சிரித்தவன்,
“அங்க மழை வெளுத்து வாங்குது. இப்ப சேஃப் இல்லைன்னு தான் ஆலப்பிக்கு சேஞ்ச் பண்ணினோம்…” என சொல்லி அன்புக்கரசி கொடுத்துவிட்டிருந்த ஹாட்பாக்ஸ் டிபன் கேரியரை எடுத்து சார்ஜில் போட்டான்.
ஐந்து நிமிடத்தில் மீண்டும் அதனை எடுத்து பிரித்து நால்வருமாக பேசி சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தனர்.
“நாளைக்கு எப்போ போய் சேருவோம்ங்க?…” என கையை கழுவிவிட்டு வந்து படுக்கும் நேரம் அபூர்வா கேட்க,
“நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு எல்லாம் ஆலப்பி ரீச் ஆகிடுவோம்…” என்று சொல்லவும் மேல் பெர்த்தில் வாசுதேவகிருஷ்ணனும், அபூர்வாவும் படுத்துக்கொள்ள கீழே மருதவேலும், விமலாவும் கீழே படுத்துவிட்டனர்.
படுத்ததும் அவர்கள் தூங்கி போக அபூர்வாவிற்கு உறக்கம் வருவேனா என்றது. புரண்டு புரண்டு அவள் உறங்க முற்பட வாசு திரும்பி பார்த்தவன் சத்தமில்லாமல் கீழே இறங்கி அவளையும் இறங்க சொல்லி வெளியே அழைத்து வந்தான்.
“என்னாச்சு பூர்வி? தூக்கம் வரலையா?…” என ரயில் வேகத்தில் முகத்தில் அறைந்த காற்றின் அழுத்தத்தில் கலைந்த கூந்தலை ஒதுக்கியபடி,
“ம்ஹூம் வரலை. என்னோட பர்ஸ்ட் ட்ரெய்ன் ஜர்னி இது. தூக்கம் வரலை…” என்று அவனின் தோளில் சாய்ந்தபடி சொல்ல,
“ஆனா நீ பஸ் ட்ராவல் பண்ணுவ தானே?…” என கேட்க,
“ஹ்ம்ம், முன்னாடி. ரொம்ப ரொம்ப முன்னாடி. அப்பறம் நான் பன்றதில்லை. விழுப்புரம் தாண்டி எங்கயும் போறதும் இல்லை. சென்னை மட்டும் வருவேன். அதுவும் அண்ணா, அப்பா கூட தான். கார்ல தான். பஸ்ல வரதில்லை…” என சொல்லிக்கொண்டே செல்ல அவனின் அணைப்பு இறுகியதை அப்பொழுது தான் உணர்ந்தாள்.
“என்னாச்சு?…” என லேசாய் அவனின் முகம் பார்த்து கேட்க அவனின் முகம் சட்டென மாற்றம் பெற்று,
“என் கண்ணுக்குள்ள உன்னை எப்போ தேடுவ பூர்வி?…” என்றான் மீண்டும் வெகு நாட்களுக்கு பின்னர்.
அவன் கேட்டும் தான் பதில் சொல்லியும் அவனின் கேள்விக்கான அர்த்தமும் புரியவில்லை, அவனிடம் அந்நிகழ்வை பற்றியும் அவள் பகிரவில்லை. பொதுவாக பயணத்தை பற்றி சொல்லி முடித்திருக்க ஆழ்ந்து பேசியிருந்தால் கூட அவனே சொல்லியிருப்பான்.
ஆனால் அதற்கும் அபூர்வா வாய்ப்பளிக்கவில்லை. அவன் பேசியதற்கான அர்த்தத்தை தனக்குள் தேடாமல் ஆராயாமல் அவனிடம் தேடினாள்.
“இப்பவும் உங்க கண்ணுக்குள்ள தான் இருக்கேன். இதை தனியா வேற கண்டுபிடிக்கனுமா?…” என கேட்க அவளின் முகத்தை அசையாமல் பார்த்தவன் அவளின் நெற்றியை லேசாய் வருடிவிட்டான்.
“இதுவா, இது கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி அடி பட்டது. அப்போ தையல் போட்டது…” என சிரித்துக்கொண்டே சொல்ல அப்பொழுதும் எதுவும் முழுமையாய் அவள் பேசவில்லை.
அன்றைக்கு ஏனோ வாசுதேவகிருஷ்ணன் மனம் முழுவதும் அதன் தாக்கம் வெகுவாய் பரவி இருந்தது.
“தூங்குவோமா? எவளோ நேரம் இங்கயே கதவு பக்கத்துல நிக்க. கொஞ்சம் பயமாவும் இருக்கு…” என்றாள் அவனை இன்னும் நெருக்கமாய் கட்டிக்கொண்டு.
“நான் இருக்கும் போது நீ ஏன் பயப்படற பூர்வி. இதை எல்லாம் ரசிக்கனும். ரசிக்க ஆரம்பிச்சுட்டா பயம் போய்டும்…” என அவளுக்கு சொல்லித்தர,
“இப்ப இந்த அர்த்த ராத்திரில இந்த குளிர் காத்துல ரசனை…” என்று அவள் உதட்டை பிதுக்க,
“நேரம்டி, தூங்கிட்டு இருந்தவனை புரண்டு படுத்து உன் கொலுசு சத்தத்துல எழுப்பிட்டு இப்ப தான் உனக்கு அர்த்தராத்திரின்னு தெரியுதா?…” என அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“ஆனா எனக்கு பிடிச்சிருக்கு, உன்னோட இப்படி நெருக்கமா நின்னு இந்த குளுமையை அனுபவிக்க…” என முகமெல்லாம் காதல் கொட்டிக்கிடந்தது.
அவனின் முகத்தில் இருக்கும் அந்த உணர்வை உள்வாங்க முடியாமல் திணறலுடன் திகைத்து பார்த்தவளுக்கு ஒரு புன்னகையை பரிசளித்தவன்,
“சரி, வா. போகலாம். இன்னும் மூணு நாள் சுத்தி பார்க்கவே சரியா இருக்கும். டயர்ட் ஆகிடுவ…” என சொல்லி அவளை அழைத்து செல்ல போக ஒரு நிறுத்தத்தில் ரயில் நின்றது.
“டீ குடிக்கிறியா பூர்வி?…” என கேட்க அங்கே மிதமான தூறல் போட்டுக்கொண்டு இருந்தது.
“ஹ்ம்ம், ஓகே…” என்றதும் அங்கே இஞ்சி போட்ட டீயை இருவருக்குமாய் வாங்கியவன் ட்ரெயினில் ஏறி குடித்துக்கொண்டு இருக்க மருதவேல் வந்துவிட்டான் இவர்களை பார்த்து.
“இன்னும் தூங்கலையா நீங்க? இங்க என்ன பன்றீங்க?…” என்று வர,
“நீ என்னடா முழிச்சுட்ட?…” என்றான் பதிலுக்கு.
“பாத்ரூம் போக வந்தேன்…” என சொல்லி செல்ல அவன் வருவதற்குள் அவனுக்கும் ஒரு டீயை வாங்கியிருந்தான்.
“அண்ணி தூங்கறாங்களா?…” என கேட்க,
“நான் வரும் போது அவளுமே முழிச்சுட்டா. இதை அவளுக்கு குடுத்துட்டு வரேன்…” என்று அவன் வேகமாய் விமலாவை தேடி செல்ல,
“பார்ரா, அண்ணியை விட்டுட்டு குடிக்க மாட்டானாம்…” என சிரித்தபடி இன்னொன்றை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
விமலா எழுந்து அமர்ந்திருக்க கொண்டு வந்த டீயை அண்ணனுக்கு தந்தவன் கூபேயை மூடிவிட்டு மேலே ஏறி படுத்துவிட்டான். மருதுவும் இப்பொழுது மேலே படுத்துக்கொள்ள கீழே விமலாவும் அபூர்வாவும் பேசிக்கொண்டு வந்தனர்.
வெகு நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடியும் நேரம் தான் இருவருமே உறங்க ஆரம்பித்தனர். இறங்குவதற்கு இன்னும் நேரமிருப்பதால் அவர்களை எழுப்பாமல் மருதவேலும், வாசுதேவகிருஷ்ணன் வெளியே வந்து நின்றுகொண்டனர்.
பதினோரு மணியளவில் ஆலப்புழா ரயில்வேஸ்டேஷனில் வந்து இறங்கியவர்கள் அங்கே ஏற்கனவே வாசுதேவகிருஷ்ணன் முன்பதிவு செய்திருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.
சென்று குளித்து முடித்து மதிய உணவை அங்கே உள்ள ரெஸ்டாரென்ட்டில் உண்டு முடித்துவிட்டு அருகில் உள்ள இடங்களுக்கு சேர்ந்தே சென்றனர்.
மறுநாள் படகுவீட்டிற்கு முன்பதிவை அங்கேயே அந்த ஹோட்டல் சார்பிலேயே புக் செய்துவிட்டான்.
மறுநாள் அதற்கு ஹோட்டலில் இருந்தே காரில் கிளம்பி செல்ல இருவருக்கும் தனி தனியாக புக் செய்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“டேய் வாசு, எதுக்குடா தனியா?…” என கவலையாய் மருதவேல் கேட்க,
“ஏன்டா இந்த வீட்டுக்குள்ள தான இருக்க போற, உனக்கு என்ன வேணுமோ அவங்களே சொல்லுவாங்க. செய்வாங்க. ஒழுங்கா போய் அண்ணியோட ஹேப்பியா இரு. என் கூடவே சுத்திட்டு பொழுதை ஓட்டிடலாம்னு பார்க்காத. நாளைக்கு இதே இடத்துல இதே நேரம் மீட் பண்ணுவோம்…” என்று அவனை ஒரு விரட்டு விரட்ட மனமே இல்லாமல் விமலாவுடன் சென்றான் மருதவேல்.
“இப்ப ஏன் மாமாவை தனியா அனுப்பறீங்க? நம்மோடவே இருந்தா நமக்கு பொழுது போகும்ல…” என அபூர்வா வாசுதேவகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டே அந்த படகுவீட்டை சுற்றி பார்க்க,
“கூட பொறந்ததும் தத்தி, வந்து அமைஞ்சதும் தத்தி…” என்று அவளின் காதை பிடித்து திருகியவன்,
“உன் கூட விமலா அண்ணியும், என் கூட என் அண்ணனும் பேசிட்டு இருக்கத்தான் இங்க வந்திருக்கோமா பூர்வி…” என அப்படியே தன் மீது சாய்த்தவன்,
“அவனுக்கும் அண்ணிக்குமான ஒரு ஸ்பேஸ் அது இப்போ இங்க கிடைக்கும். தம்பி இருக்கான்னு அவனும் தள்ளி தான் நிப்பான். அது வேண்டாம். இன்னொன்னு இது மூலமா அவனுக்கு திரும்பவும் அண்ணியோட தனியா வரனும்னு ஒரு ஆசை வரும். அப்போ இந்த ட்ரிப் அவன் முழுமையா அனுபவிக்கனும். அப்போ தான் திரும்ப இந்த மாதிரி வர தோணும்…”
“ஓஹ், இதை நான் யோசிக்கவே இல்லை…” என்றவள் அந்த நீர் நிலைகளை ஆவலாக பார்த்தபடி இருக்க அவனோ அவளை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
மதிய உணவு தயாராகி வர அதை டேபிளில் வைத்துவிட்டு சமைத்தவர் சென்று விட சாப்பிட வந்து அமர்ந்தனர் இருவரும்.
“என்ன வீடியோ கால் முடிஞ்சதா?…” என்று சிரித்தபடி கேட்டவன் அவளுக்கு எடுத்து வைத்து தானும் சாப்பிட ஆரம்பித்தான்.
“அடுத்த தடவை எல்லாரையும் கூட்டிட்டு வரனும். எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு. சுத்திலும் தண்ணீர், பச்சை பசேல்ன்னு பார்க்கிற பக்கமெல்லாம் பசுமை. லேசான ஈர காத்து. அப்பப்ப மழை சாரல்ன்னு…” என முகம் முழுவதும் மகிழ்ச்சி மத்தாப்புக்கள்.
“திரும்பவும் வரது சரி. ஆனா எல்லாரையும் கூட்டிட்டு…” என கேள்வியாய் கேலி சிரிப்புடன் கேட்க,
“ஆமா, ஒரு தடவை பேமிலியா வந்தா என்னவாம்?…” என்றவள் தூரத்தில் நகர்ந்து கொண்டு இருந்த பெரிய படகுவீட்டை காண்பித்தவள்,
“அதுல நிறைய ரூம் இருக்கு. அது நம்ம பேமிலிக்கு சூட் ஆகும்ல…” என அப்பொழுதே திட்டங்களை வகுக்க அவளின் அதீத ஆர்வத்தில் தலையை பிடித்துக்கொண்டவன்,
“இப்ப இங்க இருக்கிறவனை பத்தி நினைக்காம ஏன்டி சோதிக்கிற?…” என்று கேட்க மருதவேல் அழைத்தான்.
“என்னடா அண்ணா சாப்பிட்டியா?…” என கேட்க அவனிடம் பேசிக்கொண்டே சாப்பாட்டையும் முடித்துவிட்டு அமர்ந்தார்கள்.