அங்கே சிலர் மீன் பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டு வேகமாய் எழுந்து மறுபுறம் வர திரும்பியவளின் நெற்றி ஒரு மரத்தூணில் முட்டி நிலை தடுமாறி பின்னால் சாய இருந்தவளை பதறி பிடித்தவன்,
“உன்னை யாரு கவனிக்காம எழுந்துக்க சொன்னா?…” என கடிந்தவன் அவளின் நெற்றியை தேய்த்துவிட,
“ப்ச், லேசா தான். விடுங்க…” என்றாள் அவனின் கையை எடுத்துவிட்டு. ஆனாலும் இடித்ததில் ஒருமாதிரி கலங்கி போனாள். கண்கள் கலங்க தலை லேசாய் சுற்றுவதை போல தோன்ற முகத்தில் அதன் தாக்கம் தெரிய,
“என்ன பண்ணுது பூர்வி?…” என்றான் வேகமாய்.
“ஒரு மாதிரி கிறுகிறுக்குது. போய் படுத்துக்கட்டா?…” என கேட்டதும் அவளை அறைக்குள் அழைத்து சென்றவன் படுக்க வைத்து போர்வையை போர்த்தியவன் கண்ணாடி ஜன்னல்களில் இருந்த திரைகளை அவிழ்த்துவிட்டான்.
“நீங்களும் தூங்குங்க. மழை பெய்யுதே. என்ன பண்ண போறீங்க?…” என முணுமுணுக்க சட்டென அவளருகில் சரிந்தவன் தன் அணைப்பிற்குள் அபூர்வாவை கொண்டு வந்தவன்,
“வலிக்குதா?…” என கேட்க இல்லை என்ற தலையசைப்புடன் கண்ணை மூடிக்கொண்டாள்.
இடித்த இடம் லேசாய் சிவந்து புடைத்திருக்க அவ்விடத்தில் போடப்பட்டிருந்த தையல் குறிப்புகள் இப்பொழுது தெள்ள தெளிவாய் பெரிதாய் தெரிந்தது. அதனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவனின் விழிகளுக்குள் முதன்முதலில் அபூர்வாவை சந்தித்த நிகழ்வை அசைபோட ஆரம்பித்தான்.
நான்கு வருடங்களுக்கு முன்பு….
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் ஹைவேஸ் ரோட்டில் வேகமாய் காரை செலுத்திக்கொண்டு இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“இப்ப எதுக்கு இவ்வளவு வேகம். மெதுவா தான் ஓட்டேன்…” என அருகில் இருந்த முகேஷ் சொல்ல அவனை கண்டுகொள்ளாமல்,
“இப்ப இப்படி ஓட்டினா தான் விடியும் போது திருப்பதில இருக்க முடியும். இல்லைன்னா அம்மா வச்சு செய்வாங்க. இது அவங்களோட வேண்டுதல். எந்த குறையும் இருக்க கூடாது…” என ஓட்டிக்கொண்டு சொல்ல,
“அதுக்குன்னு இத்தனை வேகமா? தரிசனம் மதியம் மூன்று மணிக்கு தான?…” என்று அவன் கடுப்பாக,
“இருக்கலாம். ஆனா இது அண்ணா அண்ணிக்காக வேண்டினது. போகனும் இல்லையா?…” என சிரிக்க,
“சரி திருக்கல்யாணம் நாளைக்கு தானே? ஏன் இன்னைக்கு மொட்டையும், தரிசனமும், நாளைக்கு திருக்கல்யாணம்? ஒரே நாள்ல முடிக்கலாம்ல. உங்க குடும்பத்துல மட்டும் எப்படிடா இப்படி யோசிக்கறீங்க?…” என்று முகேஷ் கேட்டதற்கு சிரித்தவன்,
“அது அப்படித்தான். அம்மா சொன்னா நோ அப்பீல்…” என்றவன் கடந்து சென்ற சாலையின் எதிர்புறம் ஒரு ஹோட்டலை பார்த்து காரை திருப்பியவன் அங்கே சென்று நிறுத்தினான்.
“ஒரு டீ சாப்பிட்டு போவோம்…” என சொல்ல,
“கிளம்பியே ஒருமணி நேரம் தான் ஆச்சு. இன்னும் டூ ஹவ்ர்ஸ்ல திருப்பதி ரீச் ஆகிடுவோம். அதுக்குள்ளே டீயா?…” என்று அவன் சொல்ல,
“அப்படியே கிளம்பி வந்தாச்சு எதுவுமே குடிக்காம. இப்ப குடிக்கனும்னு தோணுது. வா…” என இறங்கி செல்ல அவனுடன் முகேஷும் இறங்கினான்.
அங்கு ஏற்கனவே இரண்டு மூன்று பஸ்களும் சில கார்களும் நின்றுகொண்டு இருந்தன.
“ரெண்டு டீ…” என்றவன் பின் முகேஷை பார்த்துவிட்டு,
“சூடா வடையும் போடறாங்க. சாப்பிடறியா?…” என கேட்க,
“இங்க ஆனியன் போண்டா தான் நல்லா இருக்கும்…” என்றான் அவன். அவனை முறைத்தவன் பின் சிரித்தபடி,
“ஒரு ப்ளேட் ஆனியன் போண்டா…” என சொல்லிவிட்டு போனை எடுத்து அண்ணனுக்கு அழைத்தான்.
எடுத்ததோ அன்புக்கரசி. அவரிடம் பேசிவிட்டு இன்னும் இரண்டுமணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லவும் மெதுவாகவே வா என்று வைத்துவிட்டார்.
ஒரு பஸ் கிளம்ப உள்ளே இருந்த டேபிள்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் அமர்ந்திருந்தனர்.
டீயை வாங்கி ஒரு டேபிளில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருக்க வாசுதேவகிருஷ்ணன் பார்வை அந்த இடத்தையே அலசிக்கொண்டு இருந்தது பார்வையால்.
“போலீஸ்டா நீ இங்கேயும். பார்வை மொத்தமும் இங்க ஏதும் பிரச்சனையான்னு தேடுது. ஹ்ம்ம், உன்னை மாதிரி இருக்க முடியாதுப்பா…” என்றவன்,
“அங்க பாரேன். எல்லாம் காலேஜ் ஸ்டூடன்ஸ், ஆனா காலேஜ் பஸ் மாதிரி இல்லை. தானா வந்திருக்காங்க போல…” என சுட்டிக்காட்ட அங்கே ஒரே பாட்டு கூத்துமாக அந்த காலை வேளையே ரம்யமாக இருந்தது.
“கண்மணி…” என்ற அழைப்பில் தன்னைப்போல அவனின் கவனம் திரும்ப,
“மது பேக் அங்கயே இருக்கட்டும். பர்ஸ் எடுத்துட்டு வந்துட்டேன். நீ வா…” என சொல்லிய பெண்ணை பார்த்தவன் பார்வை அவளிடத்திலேயே நிலைபெற்றுவிட்டது.
யாரோ இவள் யாரோ இவள் கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே தொண்டைக் குழி விக்காதோ
என்னன பேச எப்படி பேச ஒத்திகைப் பார்த்தேனே
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக சேமித்து வைப்பேனே
இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சு
அதில் சந்தன கொஞ்சம் மஞ்சளை சேர்த்தால் உன் முகம் உண்டாச்சு
அடர் ரோஜாவர்ண பாவாடை தாவணியில் அழகுற நின்றவள் மீதான பார்வையை விலக்க முடியாமல் அவளையே பார்த்தபடி இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவளின் குரலோ, அவளின் நளினமோ, அந்த கண்களோ அவனை சுனாமியாய் சுருட்டிக்கொண்டு இருந்தது. அந்த புன்னகை முகம் சட்டென மனதில் ஒட்டிக்கொள்ள மெல்ல பார்வையை விலக்கினான்.
“கண்மணி…” அவனிதழ்கள் அவனறியாமல் உச்சரித்துப்பார்த்துக்கொள்ள,
“என்னடா பேசற?…” என்றான் முகேஷ் நண்பனின் உறைநிலை புரியாமல்.
“நத்திங்…” என்றவனிடம்,
“கிளம்புவோமா?…” என சொல்ல,
“இன்னொரு டீ சொல்லேன்…” என்றான் வாசுதேவகிருஷ்ணன் சாவகாசமாய் சாய்ந்து அமர்ந்து.
“என்னது இன்னொரு டீயா? டேய் என்னாச்சு உனக்கு?…”
“நீ வெங்காய போண்டா சாப்பிட்ட, நான் ஏதாவது கேட்டேனா? டீ சொல்லுடா…” என்றவன் பார்வை முகேஷ் தன்னை கவனித்துவிடாமல் கண்மணியாகப்பட்டவளின் பக்கம் திரும்ப அவள் இன்னும் தன் தோழிகளுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.
தலையை ஆட்டி அசைத்து பேச பேச வாசுதேவகிருஷ்ணன் உள்ளமோ மெல்ல மெல்ல அவளின் பக்கம் துள்ளி சென்றது.
“கண்மணி பஸ் கிளம்புது…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவள்,
“எப்பவுமே அவ்வளவு லாங்ல இருந்து தான் பேசுவா. ப்ச், வா கிளம்புவோம்…” என்று எழுந்து கொண்டவள் கையை கழுவ வாஷ்பேஷனிற்கு செல்ல அங்கிருந்தபடியே கையை கழுவிவிட்டு பஸ் இருக்கும் திசைக்கு சென்றாள்.
பர்ஸை மறந்து விட்டது கூட தெரியாமல் அவள் சென்றுவிட அவளை பார்த்தபடி கவனித்துக்கொண்டே இருந்தவன் பார்வைக்கு அது தப்பவில்லை.
“இரு வரேன்…” என முகேஷிடம் சொல்லி எழுந்து அந்த பர்ஸை எடுத்தவன்,
“கண்மணி…” என அழைத்தான்.
இரண்டு முறை அழைக்கவும் தான் திரும்பி பார்த்தவள் மீண்டும் அவனருகே வர,
“உங்க பர்ஸ்…” என்று நீட்டவும் சிரித்த முகத்துடன் வாங்கிக்கொண்டாள்.
“தேங்க்ஸ் ஸார்…” என புன்னகைத்து நன்றியை தெரிவிக்க அவனோ அதை உணரக்கூட முடியாமல் அப்படியே திகைத்து நின்று கொண்டிருக்க அவள் கிளம்பிவிட்டாள்.
பஸ் ஹாரன் சத்தத்தில் தன்னுணர்வு வந்தவன் ஒரு நொடியில் சுதாரித்து பேசும் முன்பு பஸ் ரிவர்ஸ் எடுத்து சென்னை செல்லும் பாதைக்கு திரும்ப,
“ச்சே, மிஸ் பண்ணிட்டியேடா…” என தன்னையே கடிந்தவனாக நிற்க,
“வாசு டீ…” என முகேஷ் வர,
“அதை நீயே குடி. உனக்குத்தான்…” என சொல்லிக்கொண்டே அந்த பஸ்ஸை பார்த்தபடி நின்றான்.
“சென்னைக்குத்தான் போகுதா? ப்ச், இதென்ன சின்ன பையன் மாதிரி பிஹேவ் பன்றேன்…” என தலையில் தட்டிக்கொண்டவன்,
“கண்மணி…” என்றான் ஆழ்ந்து சுவாசித்து.
லேசாய் தலை சாய்த்து நிமிர்ந்த நேரம் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பேருந்து திரும்பும் நேரம் எதிரே கண்மண் தெரியாத வேகத்தில் வந்துகொண்டிருந்த லாரி அதனை லேசாய் திருப்பிவிட அதில் கட்டுப்பாடிழந்து அங்கிருந்த கரண்ட் கம்பந்தில் முட்டி மோதி நிற்க அந்த இடமே களேபரம் ஆனது.
“ஒஹ், ஷிட். நோ….” என்ற அலறலுடன் வாசுதேவகிருஷ்ணன் வேகமாய் ஓட அங்கிருந்த அனைவருமே அதனை பார்த்து திகைத்து நின்றது ஒரு நொடிதான்.
அடுத்த நொடி அவர்களுக்கு உதவ செல்ல ஏசி பஸ் திறக்க முடியாத அளவிற்கு லாக் ஆகிவிட்டது. திறக்க முடியாத அளவிற்கு கதவு இருக்க உடைத்து தான் வெளியே வரவேண்டும்.
அதற்குள் உள்ளே தீ பற்ற ஆரம்பித்திருக்க வாசுதேவகிருஷ்ணன் பதறிப்போனான். அதற்குள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளிருப்பவர்களை வெளியே இழுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்க அதற்குள் ஆம்புலன்ஸிற்கு தகவல் சொல்லி அதுவும் வந்துகொண்டு இருந்தது.
அதற்குள் உள்ளே இருந்த பயணிகள் மயக்கத்திற்குள் செல்ல ஆரம்பிக்க மேலும் கண்ணாடிகளை உடைத்து இன்னும் சிலர் உள்ளே இறங்கினார்கள்.
வாசு அவனின் கண்மணியை தேடிக்கொண்டே கையில் அகப்பட்டவர்களை தூக்கி வெளியே அனுப்ப அவனின் பார்வைக்குள் சிக்காமல் புகையில் மயங்கி கிடந்தாள் அவள்.
சரியாய் அவளை அடைந்தவன் அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப அரை மயக்கத்தில் விழித்து பார்த்தவளின் கண்களுக்கு மங்கலான புகைவட்டத்திற்குள் அவனின் முகத்தை மேலும் மேலும் யோசித்து பார்த்தாள்.
வெளியே அவளின் நண்பர்கள் சிலர் கண்மணி கண்மணி என்று கத்தும் சத்தம் கேட்க வாசுதேவகிருஷ்ணன் ஒரு நொடி செய்வதறியாமல் திகைத்து செயலற்று போனான்.
“கண்மணி, கண்மணி. என்ன பண்ணுவேன். ஓஹ் காட். கண்மணி. வேக் அப்…” என்று அவனின் மனது ஜபிக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு தாறுமாறாக எகிற அந்த நொடி ஒரு சாதாரண மனிதனாக அவளை எண்ணி தவித்தான்.
அவளுக்கு தலையில் நன்றாக அடிபட்டிருக்க கால்கள் வேறு கம்பிகளுக்குள் சிக்கியிருந்தது. அவளை வெளியே இழுத்து பார்க்க முடியாமல் போக,
“கண்மணி இங்க பாரும்மா, கண்மணி…” என தன் நெஞ்சில் சாய்த்து அவளை எழுப்ப,
“கண்மணி…” என்றாள் அவளும் குளறலாக.
“எழுந்துக்கோ, பஸ் ஃபுல்லா தீ பரவுது. முழிச்சுக்கோ. வெளில போயிடலாம்…” என்று எழுப்ப எழுப்ப அவனின் சட்டையை பற்றியவளின் முகம் வலியில் சுருங்க,
“முடியலை, என்னால முடியலை…” என்று அழுதவள் அவனின் அணைப்பிலிருந்து விடுபட முயன்றாள்.
தீ இவர்களை இன்னும் நெருங்க ஆரம்பிக்க ஒரு நொடி மனதை திடப்படுத்தியவன் ,”காலோ, கையோ போனாலும் பரவாயில்லை. உயிரோடு இருந்தா போதும். என் கண்மணியை நான் பார்த்துக்கொள்வேன்” என்னும் எண்ணம் தான் வலுப்பெற தன் பலத்தை எல்லாம் திரட்டி சட்டென அவளின் காலை வேகமாய் இழுக்க அம்மா என்ற அலறலுடன் முழு மயக்கத்திற்குள் சென்றாள் அவள்.
நொடியும் யோசியாமல் அவளை தூக்கிக்கொண்டு கீழே இறங்கியவன் அவளை ஆம்புலன்சில் ஏற்றி தானும் ஏறிக்கொண்டு,
“முகேஷ், வேற யாராவது இருக்காங்களான்னு செக் பண்ணிடு இந்த ஹாஸ்பிட்டல் வந்திரு. க்விக்…” என சொல்லிவிட்டு அவனின் கண்மணியை மடிதாங்கி இருந்தான்.
அவளின் தலையில் இருந்து குருதி வழிய வழிய அதனை ஒரு பஞ்சை கொண்டு அழுத்தமாய் பிடித்தவன் கண்கள் கலங்கியது.
அவள் யார் எவர் என தெரியாமலே அவளுக்காக செயல்பட ஆரம்பித்தான். அவனை பொறுத்தவரை அவள் கண்மணி. கண்மணி என்றே அறியப்பட்டு காப்பாற்றப்பட்டு இருக்கிறாள்.