என்ன முயன்றும் ஞாபகம் வராமல் போக உள்ளுக்குள் ஏதோ போராட்ட உணர்வு. தேடி தேடி புகை மூட்டத்தில் அவனின் கண்களை பார்த்துக்கொண்டே மொத்தமாய் மயங்கி சரிய,
“என்னடா பார்த்துட்டு இருக்க? முதல்ல அவளை மேல அந்த வீட்டுக்கு தூக்கிட்டு போ. புகையில அவளுக்கு சேரலையோ என்னவோ. போ…” என சொல்லி அனுப்பிய அன்புக்கரசி பூஜை செய்ய வந்தவரிடம் எதுவும் சகுன குறை இல்லையே என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலே தூக்கி வந்தவன் அறைக்குள் அவளை படுக்க வைத்துவிட்டு முகத்தில் தண்ணீரால் துடைத்தவன் மீண்டும் அவளை எழுப்ப,
“இந்த தண்ணிய குடிக்க குடு வாசு…” என்று விமலா தரவும் வாங்கி அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புகட்டினான்.
“என்ன இவ இந்த புகைக்கே மயங்கிட்டா…” என்று மருதவேல் சொல்ல வாசுதேவகிருஷ்ணன் ஞாபகம் எல்லாம் அவளை எரிந்துகொண்டிருந்த பஸில் இருந்து தூக்கியதில் தான் இருந்தது.
“பூர்வி…” என்று அவளின் கன்னம் தட்டியவன் மீண்டும் சத்தமில்லாமல்,
“கண்மணி, எழுந்திருடி. முழிச்சு பாரு…” என அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் முணுமுணுக்க,
“வாசு உன்னை கீழே வர சொல்றாங்க. பாதிலையே நிக்குது பூஜை…”
“பூர்வி இல்லாம எப்படி அண்ணா?…”
“ப்ச், அதெல்லாம் ஒண்ணுமில்லையாம். நீ வா. அதான் மகிழும் விமலாவும் இருக்காங்களே…” என சமாதானம் சொல்லி அழைத்து செல்ல கண்ணை மூடி படுத்திருக்கும் அபூர்வாவை பார்த்துவிட்டு சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஹ்ம்ம்ம்…” என்ற முணுமுணுப்புடன் அபூர்வா அவன் சென்ற ஐந்து நிமிடத்தில் கண் விழித்திருக்க சட்டென எழுந்தமர்ந்தாள்.
“நீ ரெஸ்ட் எடு லட்சுமி. உன்னை இப்போ அங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. படு…” என மகிழ் சொல்ல,
“என்னாச்சு அண்ணி?…” என்றாள் அபூர்வா.
“ஒண்ணுமில்லை. புகைமூட்டதுல மயங்கிட்ட. அதுதான். இப்ப ஓகே வா? எதாச்சும் குடிக்கிறியா?…” என்று கேட்க தலையசைத்தவளுக்கு சூடாக டீ போட்டு எடுத்து வந்தாள் மகிழ்.
“நீங்க குடிக்கலையா அண்ணி…” என கேட்டுக்கொண்டே சாய்ந்து அமர்ந்தவள் டீயை வாங்கிக்கொண்டாள்.
“டீ குடிச்சா உங்கம்மா என்னை தொலைச்சு கட்டிருவாங்க. டாக்டர் அலைச்சல் கூடாதுன்னு சொல்லிருக்காங்க. அதான் அம்மா வீட்டுக்கு கூட போகலை. இன்னைக்கு சாயந்தரம் அம்மாவை வர சொல்லலாம்னு நினைக்கேன். அத்தைட்ட கேட்டுட்டு சொல்லனும்…”
“தாராளமா சொல்லுங்க அண்ணி. விசேஷத்துக்கே கூப்பிட்டிருக்கனும். ஆனா பாருங்க இப்ப சொல்ல வேண்டாம்னு அத்தை சொல்லிட்டாங்க…”
“பெரியவங்க சொன்னா சரிதான்…” என்று இருவருமாக பேசிக்கொண்டிருக்க சோர்வாக இருந்ததால் இரவும் உறங்காதது என மீண்டும் படுத்து உறங்கி போனாள் அபூர்வா.
மகிழ்தினியும் வெளியே வந்து சோபாவில் படுத்துக்கொள்ள பூஜை எல்லாம் முடிந்து தேடி வந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“பூர்வி…” என்ற ஒற்றை அழைப்பிலேயே கண்விழித்தவள் அவனை பார்க்கவும் எழுந்து அமர,
“இப்ப எப்படி இருக்கு?…” என கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே அனைவரும் வந்துவிட்டனர்.
மாற்றி மாற்றி அவளிடம் நலம் விசாரிக்க அதன் பின்னர் காலை உணவை முடித்துக்கொண்டு மேலே இருக்கும் பொருட்களை அன்றே இடம் மாற்ற ஆரம்பித்தனர்.
ஏதேதோ யோசானியில் இருந்தவள், அதை பற்றி வாசுவிடம் சொல்லவேண்டும் என நினைத்திருக்க அதற்கு சந்தர்ப்பமே வாய்க்காமல் போக கடைசியில் மறந்தும் போனாள்.
ஏற்கனவே பெரும்பாலான பொருட்கள் முதல் நாளும் இரவிலும் மாற்றியிருக்க சொச்சமே இருந்தது அங்கே.
மாலைக்குள் புது வீட்டில் அனைத்தும் கச்சிதமாக ஆங்காங்கே வைத்து முழுமையாக வைத்து முடித்தனர் அபூர்வாவிற்கு அடுத்து எந்த வேலையும் இல்லாமல்.
“ஆளும்பேருமா சேர்ந்து நல்லபடியா முடிச்சுட்டோம். இதுவே நிறைவா இருக்கு…” என அன்புக்கரசி பூங்கோதையிடம் சொல்ல,
“சரிதானுங்க சம்மந்தி. எல்லாம் உங்க சுறுசுறுப்புதான்…” என சொல்ல இருவருமாக கதை பேசிக்கொண்டிருக்க,
“அன்பு நான் கிளம்பறேன். நாளைக்கு நீ பெரியவனோட வந்திரு…” என சொல்ல,
“இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு போகலாம்ல அப்பா…” என வாசு சொல்ல,
“இல்ல இருக்கட்டும்ப்பா. கடையை நேத்து விட்டுட்டு வந்தது. கணக்கு பார்த்துப்பான் தான். இருந்தாலும் நாம இருக்கனும்ல…” என அனுபவஸ்தராக அவர் சொன்னாலும் பார்வை தாமோதரனை காண சங்கடப்பட்டது.
அவருக்கு நடந்த பிரச்சனை எதுவும் தெரியாதல்லவா? சிரித்தபடி எழுந்தவர் தானும் கிளம்புவதாக சொல்ல,
“இருந்து நாளைக்கு போகலாங்களே சம்பந்தி…” என்றார் முத்துவேல்.
“இல்லைங்க, காலையில விடியறதுக்குள்ள காலேஜ் போகனும். சாப்பாட்டு விஷயம் இல்லையா? என்னதான் நாம இல்லைனாலும் பொறுப்பா செஞ்சாலும் நமக்கு மனசு தோணிக்கிட்டே தான் இருக்கும். முன்ன நின்னு பார்த்தா ஒரு திருப்தி…” என சொல்ல முத்துவேலுவுக்கு குறுகுறுத்தது.
“அப்ப நான் கிளம்பறேன். நாளைக்கு எல்லாரும் கிளம்பி வரட்டும். மகளை பார்த்துட்டு வர மனசில்லை போல…” என பூங்கோதையை பார்த்து சொல்லியவர் முத்துவேல் இருக்கும் பொழுதே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அதன் பின் முத்துவேலும் கிளம்பிவிட கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அதிலும் சிரிக்காமல் வாசுதேவகிருஷ்ணன் பேச பேச வீடே அமர்க்களப்பட்டது.
மறுநாள் மகிழ்தினி பெற்றோர்களையும், விமலாவின் தந்தையையும் வர சொல்லி கறிவிருந்து சமைத்தனர்.
மதிய உணவிற்கு கடை பையன்களை வர சொல்லி அவர்கள் அனைவருக்குமே கொடுத்தனுப்பி விட முத்துவேலுக்கு வீட்டுக்கு கொடுத்தனுப்பிவிட்டார் கடை பையனிடம்.
மாலை வரை இருந்து அதன் பின்னர் தான் அனைவருமே கலைந்து சென்றார்கள். விமலாவின் தந்தைக்கு ஏகபோக மகிழ்ச்சி. இப்படித்தானே மகள் இருக்கவேண்டும் என நினைத்தார்.
மருதவேலே அவரிடத்தில் “இன்னொரு நாள் கண்டிப்பாக வீட்டிற்கு வருகிறோம்” என்று சொல்லவும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார் அந்த தந்தை.
மாலை விமலாவின் தந்தையும், நாயகம் குடும்பமும் கிளம்பிவிட அதன் பின்னர் பூங்கோதை, தினேஷ், மகிழ்தினி ஒரு காரில் கிளம்ப அவர்களுடனே இன்னொருபக்கம் அன்புக்கரசி, விமலா, மருதவேல் கிளம்பி சென்றனர்.
மீண்டும் வீட்டிற்கு நுழைந்தவர்களுக்கு அத்தனை பெரிய வீடு வெறிச்சோடி தெரிய அபூர்வாவின் முகமே வாடிப்போனது.
கதவை பூட்டிவிட்டு வந்து தொப்பென சோபாவில் அமர்ந்தவன் மனைவியாய் பார்க்க அவளோ வீட்டை சுற்றி சுற்றி பார்த்தபடி இருந்தாள். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. அவளின் மனதை புரிந்தவனாக எழுந்து சென்று,
“பூர்வி…” என தோள் தொட்டு திருப்ப,
“எல்லாரும் இருக்கும் போது எவ்வளோ கலகலப்பா இருந்துச்சுல. ப்ச்…” என சொல்லி கண்கலங்க கணவனின் தோள் சாய்ந்தவளை கைகளில் அள்ளிக்கொண்டவன்,
“நீ ஏன் கவலை படற? உன் புருஷன் ஒருத்தனே ஒரு ஊருக்கு சமம். உன்னை எப்படி கலகலப்பா வச்சுக்கறேன்னு மட்டும் இப்ப பாரேன்…” என சொல்லவும் சிரிப்புடன் அவனின் தோளில் மலையாக கை கோர்த்து அணைத்துக்கொண்டாள் அபூர்வா.
“வாய் வாய்…” என்று ஒரு கை அவனின் கன்னத்தை பிடித்து கிள்ள,
“அப்படியா…” என கண்கள் மின்ன சிரித்தவனின் கைகளுக்குள் நெகிழ்ந்து இழைந்தாள் பெண்.
ஐந்து மாதங்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. நித்தமும் புத்தம் புது நாள் என அவளை அதிசயிக்க வைத்துக்கொண்டே தான் இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவனின் லீலைகளுக்கான எல்லைகள் அவளை தொட்டு தொடர்ந்தபடியே விரிந்துகொண்டே தான் இருந்தது.
முதலில் அவனின் வேலையின் மீதான லேசான பயம் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருந்தது.
புது வீட்டிற்கு வந்த பின்னர் அருகில் இருப்பவர்களுடன் அபூர்வா நன்றாகவே பழகி உறவை வளர்த்திருந்தாள்.
அதிலும் முன்பே வாசுதேவகிருஷ்ணன் ஒரு காவல்துறை அதிகாரி என்று அறிந்திருந்தவர்கள் அவனிடம் மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு இருக்க அபூர்வாவின் வரவின் பின்னர் சற்று நட்பு ரீதியில் பழக ஆரம்பித்திருந்தனர்.
அதில் முதன் முதலில் வந்த நாளன்று அவளை அழைத்து தங்கள் இல்லத்தில் அமர்த்தியிருந்த பாஸ்கரன் குடும்பத்தினர் இன்னும் நெருக்கம் அவளுக்கு.
ஆனால் வாசுதேவகிருஷ்ணன் இன்னும் அதே அளவில் தான் ஒரு தலையசைப்புடன் அவர்களை எல்லாம் கடந்துவிடுவான்.
அவர்களை நெருங்கவிட்டதும் இல்லை, அதே நேரம் அபூர்வாவை இழுத்துப்பிடிக்கவும் இல்லை.
“யாராக இருந்தாலும் ஒரு லிமிட்டோட இரு…” என வந்தன்றே எச்சரித்திருந்தான் அவளிடத்தில்.
மற்றவர்களிடம் அப்படி இருந்தவள் பாஸ்கரன் குடும்பத்துடன் சற்று ஒட்டுதலுடன் தான் இருந்தாள். அவர்களுக்குமே அபூர்வாவை அத்தனை பிடித்திருந்தது.
பாஸ்கரனின் மகள் நிவியாவிடமும், மகன் வருணுடனும் அத்தனை தோழமை அவளுக்கு. நிவியா கல்லூரியில் பயிலும் பெண். அதிலும் அபூர்வா முன்பு சென்னையில் பயின்ற அதே கல்லூரி.
பேசுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் அவளிடத்தில். அக்கா அக்கா என்று ஒட்டிக்கொள்ளும் பெண். வருணுமே பள்ளியின் இறுதி ஆண்டில் இருக்கும் பிள்ளை.
வாசுதேவகிருஷ்ணன் இல்லாத நேரத்தில் மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வார்கள். அதிலும் பத்து நிமிடத்திற்கு மேலே இருக்கவே மாட்டார்கள். அதிகமாக பேசிக்கொள்ளும் இடம் கீழே உள்ள பார்க் தான்.
பாஸ்கரனின் மனைவி ரெஜினா. கலப்பு திருமணம் புரிந்தவர்கள் என்பதால் இன்றளவும் சொந்தங்கள் ஏற்றுகொள்ளாத நிலையில் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.
அன்று வாசுதேவகிருஷ்ணன் இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு கழித்து அன்று இரவு தான் வீட்டிற்கு திரும்பியிருந்தான்.
இத்தனை மாதங்களில் முத்துவேல் வீட்டிற்கு அவனின்றி அவள் மட்டும் தனியாக சென்றதே இல்லை. அவன் வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை வந்தாலும் அங்கே செல்ல அபூர்வா விரும்பியதில்லை.
முத்துவேல் சொன்னதன் வருத்தம் மறைந்துவிட்டிருந்தாலும் வடுவாய் தங்கிவிட்டிருந்தது. அபூர்வாவின் இந்த செயலில் முத்துவேலுக்கு கோபம் வந்தாலும்,
“அவ அப்படி இருக்கறது தான். சரி. அப்பத்தான் இவரு யோசிக்காம பேசறதை நிறுத்துவாரு. இவருக்கு மட்டும் ரோசம் பொத்துக்கிட்டு வரும். மத்தவங்களுக்கு வர கூடாதாக்கும்?…” என்று சொல்லிவிட விமலாவும், மருதுவும் கப்சிப்.
வாசுதேவகிருஷ்ணன் அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் வந்து இறங்கியதுமே ஒரு செக்யூரிட்டி ஓடி வந்து அவன் கீழே இறக்கி வைத்த பேக்கை தூக்கிக்கொண்டு லிப்டிற்கு செல்ல,
“உங்களை எத்தனை தடவை இதை செய்யாதீங்கன்னு சொல்லிருப்பேன்? ரெண்டு நாள் தூக்கிட்டு சுத்தினவனால இங்க இருக்கற வீட்டுக்கு போக முடியாதாக்கும்?…” என்ற கண்டிப்புடன் சொல்ல லிப்ட் திறந்துகொண்டது.
உள்ளே இருந்து வந்த பாஸ்கரன் வாசுதேவகிருஷ்ணனை பார்த்ததுமே தலையை குனிந்து கொண்டு நகர்ந்து சென்றுவிட எப்பொழுது பேசுபவர் இப்பொழுது தன்னை கண்டதும் பயந்து செல்வதை போல தோன்ற புருவம் சுருக்கினான்.
“ஏன் பாஸ்கர் டல்லா இருக்காரு. ஒரு மாதிரி பயந்து போனது மாதிரி?…” என கேட்டுக்கொண்டே லிப்டிற்குள் நுழைய போக,
“ஸார் மேடம் சொல்லலையா உங்கட்ட? பாஸ்கர் ஸார் பொண்ணு சூஸைட் அட்டன் பண்ணிடுச்சு. நீங்க கிளம்பி போன அன்னைக்கு நைட் தான்…”
“வாட்?…” என்றான் அதிர்ச்சியாக.
“என்னமோ வீட்டுல பிரச்சனை போல. இவரு திட்டிட்டாருன்னு அந்த பொண்ணு அவசரப்பட்டுடுச்சு. பெத்தவங்களுக்கு கொஞ்சமாவது பொறுமை வேண்டாமா ஸார்? ஒழுங்கா படிக்கலை, அதான் திட்டினேன்னு சொல்றாரு. என்னவோ? அதிர்ந்து கூட பேசாத மனுஷன். இவரை பார்த்தா திட்டுற மாதிரியா இருக்கு. நம்ப முடியல. இருந்தாலும் அதுவும் நல்ல பொண்ணுதான்…” என சொல்ல,
“சரி வரேன்…” என தனக்கான தளத்தின் எண்ணை அழுத்தியவன் யோசனையுடனே இருந்தன.
ஏன் அபூர்வா இதை தன்னிடம் சொல்லவில்லை என்பதே அவனின் மனதை அரித்தது.
காலையில் எழுந்ததில் இருந்து என்ன செய்தேன்? என்ன செய்ய போகிறேன் என்பது வரைக்கும் அவனிடம் நொடி பொழுதையும் தவறாது ஒப்பிப்பவள் இதை மட்டும் ஏன் சொல்லவில்லை என்ற யோசனையுடன் வாசலில் பெல்லை அழுத்த உடனே ஒடி வந்து கதவை திறந்தாள்.
“மிட்நைட் ஆகும்னு சொன்னீங்க. சொல்லியிருந்தா கீழே வந்திருப்பேன் தானே?…” என அவன் வந்ததும் படபடவென பேச ஆரம்பிக்க மற்றதெல்லாம் மறந்துபோனது அவனுக்கு.
வந்து குளித்து முடித்து சாப்பிட அமர அதற்குள் அவனின் பெட்டியை பிரித்து அழுக்கை எடுத்து மிஷினில் சுற்ற விட்டிருந்தாள்.
“நாளைக்கு போட வேண்டியது தான? இப்பவே துவைக்கனுமா?…” என்று சொல்லியபடி கருப்பட்டி டீயை தயாரித்தான்.
“சாப்பிட்டு நானே போட்டு தருவேன்ல. நீங்க உட்காருங்க…” என அவனை இழுத்து அமர்த்தியவளை விடாமல் மடியோடு சாய்த்தவன்,
“மிஸ் பண்ணுனியா கண்மணி?…” என அவளின் காதோரம் இருந்த முடிகளை மெதுவாய் இழுத்து அவளை கூச செய்தபடி.
“ம்ஹூம். பண்ணவே இல்லை…” என வழக்கம் போல அவளும் விளையாட,
“என்னடி பொண்டாட்டி நீ?…” என்று அவளுடன் விளையாடியபடியே உண்டு முடித்தவனுக்கு டீயை ஊற்றி கொண்டு வந்து தந்தவள் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.
ஊருக்கு சென்று வந்ததை பற்றி கேட்டு பேசியவள் இங்கு நடந்ததையும் விவரிக்க கேட்டுக்கொண்டே இருந்தவனின் பார்வை இப்பொழுது கூர்மை அடைந்தது. அனைத்தையும் எடுத்து வைத்து முடித்து படுக்கைக்கு செல்லும் வரை கூட அவள் சொல்லவே இல்லை.
மறந்துவிட்டாளா? இல்லை அவளுக்கே தெரியவில்லையா? என யோசித்து கடைசியாக வாசுதேவகிருஷ்ணனே கேட்டுவிட்டான்.
“பாஸ்கர் சாரை பார்த்தேன் கீழே…” என்றதும் அவனின் கைகளுக்குள் இருந்தவளின் உடல் லேசாய் அதிர்ந்து இயல்பாக கண்டுகொண்டான் அவன்.
“உனக்கு தெரியுமா பூர்வி?…” என்றான் இப்பொழுது நேரடியாக.
“ஹ்ம்ம், நானும் கேள்விப்பட்டு பார்த்துட்டு வந்தேன். ப்ச் அதை விடுங்க…” என சொல்ல,
“என்னன்னு உனக்கு தெரியாதா? போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணினாங்களா?…”என கேட்க,
“இங்கயும் போலீஸா? ஏதோ குடும்ப பிரச்சனை. இதை போலீஸ் ஸ்டேஷன் வரை இழுப்பாங்களா? விடுங்களேன்…” என்று அவள் சலித்துக்கொள்ளவும் அவனும் அத்தோடு விட்டுவிட்டான்.
மறுநாள் வருணை பார்க்கும் வரை தான். ஏனோ இதனை சாதாரணமாக விட முடியவில்லை அவனால்.
அதனால் வருண் ஸ்கூலில் இருந்து வரும் வழியிலேயே பார்த்துவிட்டவன் சாதாரணமாக பேச்சுக்கொடுக்க என்றுமே வருணுக்கு வாசுதேவகிருஷ்ணன் ஒரு ஹீரோவை போல் என்பதால் மெய்சிலிர்த்து போனான்.
அவனிடம் பேச அந்த சிறுவன் எப்பொழுதுமே ஆவலாக இருப்பான். இன்று தானாக தேடி வரவும் அதிலும் அவனுக்கு பிடித்த அபூர்வாக்காவின் கணவன் வேறு.
போலீஸ் புத்தி. சிறுவனிடம் நயமாய் பேச்சுக்கொடுத்து மெதுவாய் விஷயத்தை வாங்கியவன் கைகள் இறுகியது. பல்லை கடித்து கோபத்தை அடக்கியவன்,
“ஏன் இதை பத்தி கம்ப்ளைண்ட் எதுவும் பண்ணலை?…” என கேட்க,
“அபூர்வாக்கா தான் இதை பத்தி யார்க்கிட்டயும் மூச்சு விட கூடாதுன்னு சொன்னாங்க. நீங்களும் சொல்லிடாதீங்க ஸார்…” என சொல்ல முற்றிலும் அதிர்ச்சி அவனுக்கு.
வருணை தன்னிடம் சொல்லியதை பற்றி யாருக்கும் சொல்ல கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டு அதே கோபத்துடன் வீட்டிற்கு சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.