நிஜம் – 28
மாலை வெகு சீக்கிரமே வீட்டிற்கு வந்த கணவனை ஆச்சர்யம் மிகுந்த பாவனையுடன் பார்த்த அபூர்வா,
“இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்துட்டீங்க?…” என சிரித்தபடி அவனின் கையை பிடித்துக்கொண்டவள்,
“வெளில போலாமா? ம்ஹூம், விமலாக்காவை பார்க்க போவோம். நேத்து தான் செக்கப்க்கு போனாங்களாம். மருது மாமா தான் கூட்டிட்டு போயிருக்காங்க. அத்தையை கூட வர வேண்டாம்னு சொல்லி. ஸ்கேன்ல குழந்தையை பார்த்ததும் ஓன்னு அழுதுட்டாங்களாம். விமலாக்கா சொல்லி சொல்லி சிரிச்சாங்க. கொஞ்சம் நேரம் முன்ன தான் கால் பண்ணி சொன்னாங்க…”
அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்று கதை சொல்லிக்கொண்டு இருந்தாள் அபூர்வா.
“இன்னைக்கு சீக்கிரமே வருவீங்கன்னு சொல்லியிருந்தா நான் ரெடி ஆகிருப்பேன். அத்தைட்ட சொல்லிருக்கலாம். இப்பவும் ஒன்னும் இல்லை. போய்ட்டு வருவோமா? எனக்கு விமலாக்காவை பார்க்கனும் போல இருக்கு. ஸ்கேன் ரிப்போர்ட்டை கையில வச்சுட்டு குழந்தையை பார்த்துட்டே இருந்தாங்களாம் மருது மாமா. நைட் எல்லாம் முழிச்சுட்டு. ப்பா இத்தனை வருஷம் கழிச்சு எப்படி ஒரு பீல் இல்ல…”
உள்ளே சென்று உடையை மாற்றி முகத்தை கழுவி மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தவன் கையில் மொபைலை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க அவன் அமர்ந்ததும் தான் பேசிக்கொண்டே கிட்சனில் நுழைந்து அவனுக்கு டீ தயாரிக்க ஆரம்பித்தாள்.
பால் பொங்கும் வரை பேசிக்கொண்டே இருந்தவள் இன்னும் அவன் தன் பின்னோடு வராமல் இருப்பதை கண்டு யோசனையுடன் அவனை திரும்பி பார்த்தாள்.
அவனும் அவளைத்தான் பார்த்தபடியே இருந்தான். இத்தனை நாள் இல்லாத ஊடுருவும் பார்வை. அந்த பார்வை அபூர்வாவை ஊசியென துளைக்க அது சுத்தமாய் பிடிக்கவில்லை அவளுக்கு.
என்றைக்கும் இப்படி இருந்ததில்லை அவள் கணவன். இத்தனை மாதத்தில் அவனை நன்றாகவே உணர்ந்திருந்தாள். வீட்டுக்கு நுழைந்ததில் இருந்து அவளுடனே சுற்றிக்கொண்டு அவனின் கை வளைவிற்குள்ளேயே தான் அவளும் சுருண்டு கிடப்பாள்.
சமைக்கும் நேரம் கூட அவனும் வீட்டில் இருந்தால் கூடவே வந்து ஒட்டியபடி பேசி சிரித்தபடி கிண்டலும், சீண்டலுமாக தான் பொழுதுகள் பறக்கும்.
இன்றானால் தூரமாய் அமர்ந்து ஆராயும் பார்வை. ஏனோ மனதிற்குள் முள் தைக்கும் உணர்வு. ஆனாலும் முகத்தை சாதாரணமாக மாற்றியவள் அவனுக்கும் தனக்கும் கப்பில் டீயை ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தவள்,
“பேசிட்டே இருந்ததுல ஸ்நாக்ஸ் செய்ய மறந்துட்டேன். டீயை குடிங்க நைட் பார்த்துக்கலாம்…” என்றதும் டீயை எடுத்து பேசாமல் குடித்தவன் அமைதி அவளின் பயத்தை அதிகரித்தது.
அவன் வேலையில் எத்தனை டென்ஷன் இருந்தாலும் அவளிடம் காண்பித்ததே இல்லை.
வீட்டில் இருக்கும் பொழுதுகளில் போனில் பேசுவதை கேட்க நேரும் நேரங்களில் அவளின் பயந்த முகத்தில் இருக்கும் அச்சத்தை போக்கத்தான் நினைப்பானே தவிர அவனின் பார்வையில் நேசத்தையும், நெருக்கத்தையும் தவிர வேறேதும் கண்டதில்லை.
இன்று அமர்ந்திருப்பவன் நிச்சயம் கணவனாகப்பட்டவனே இல்லையே. உள் மனது எதையோ எச்சரித்தது. லேசாய் கண்கள் கலங்கும் போல இருந்தது.
“இந்த பார்வை வேறுபாடு என்னை கூறுபோடுகிறதே?” என உள்ளுக்குள் உயிரிடம் அலண்டவள் அவனிடம் கேட்கவே பயந்தாள்.
தனக்கு எடுத்துக்கொண்ட டீ கூட தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ய மிடறு மிடறாய் கசப்பு மருந்தை உட்கொள்வதை போல அவள் கஷ்டப்பட்டு விழுங்க,
“டீ ஆறி ரொம்ப நேரமாச்சு மிசஸ் அபூர்வலட்சுமி…” என்றான் அழுத்தமான குரலில்.
உண்மையில் விதிர்விதிர்த்து போனாள் பெண். இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட அபூர்வா என்றும் அழைத்திராதவன் இன்று முழு பெயரிட்டு அழைக்க கலங்கியிருந்த கண்களில் சட்டென உடைப்பெடுத்தது.
கண்ணீர் வழிய ஆரம்பிக்க அதை பார்க்க சகியாதவன் உணர்வுகளை கட்டுக்குள் நிறுத்தி ஒரு பெருமூச்சுடன் கிஞ்சித்தும் இளக்கமின்றி இரக்கமின்றி அவளை பார்த்தான்.
“இப்ப என்ன சொன்னேன்னு உடனே அழற? உன்னை திட்டினேனா?…” என்று கேட்க அவனின் விலகல் குரல் விறகென இவளை எரித்தது.
“ம்ஹூம்…” என்று தலையசைத்தவள்,
“நான்…”
“ப்ச், மூச். பர்ஸ்ட் டீயை குடிச்சு முடி. உன்கிட்ட சில கேள்விகள் இருக்கு. பேசத்தான் போறோம்…” என சொல்லி கால்மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்துவிட்டான்.
“ம்ஹூம், இவன் கணவன் வாசுதேவகிருஷ்ணன் அல்ல. காவல்துறை அதிகாரி வாசுதேவகிருஷ்ணன். தெரிஞ்சிருச்சோ. கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஆனா எப்படி? யார் மூலமா? மறைச்சதுக்கு தான் இத்தனை கோபமா? என்ன சொல்ல?” அபூர்வாவின் மனது பந்தையகுதிரை வேகத்தில் புழுதியை கூட்டிக்கொண்டு பறக்க அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“உன்னை குடிச்சு முடின்னு சொன்னேன்…” என மீண்டும் அதட்டலான குரல். ஒரே மடக்கில் குடித்து முடித்தவள் வியர்த்து போய் அமர்ந்திருந்தாள்.
“பேசட்டும். நான் செஞ்சதும் தப்பில்லையே. பார்த்துடுவோம்…” இதுதான் அவளின் நிலைப்பாடாக இருந்தது. முகத்தில் தானே ஒரு தைரியம் வந்தமர அதை கண்டுகொண்டவன்,
“சோ எனக்கு தெரியும்னு உனக்கு தெரிஞ்சிருச்சு. ரைட்…” என்றான் இறுகிய குரலில்.
தலையை மட்டும் ஆட்டியவள் வாயை திறந்தாள் இல்லை. அமைதியாய் அவளும் அவனை ஏறிட அவளின் பார்வை வீச்சில் சற்று தடுமாறித்தான் போனான்.
“ஏன் என்கிட்டே சொல்லக்கூடாதுன்னு பாஸ்கரன் வீட்டுல சொன்ன?…” என்று நேரடியாக கேட்க,
“இது ஸ்டேஷன் வரை போக வேண்டாம்னு தான் சொல்லலை…” அவளும் சொல்ல,
“உனக்குள்ள இத்தனை அடமென்ட் இருக்கா பூர்வா?…” என்றான் வருத்தமாய்.
“இதுக்கு பேர் அடமென்ட் இல்லை. ஒரு குடும்பத்தை அவங்களோட எதிர்காலத்தை காப்பாத்தினா அதை மனிதாபிமானம்னு கூட சொல்லலாம்…”
“ஈஸிட், இது அவங்களுக்கு நல்லதா? ஓகே லீவ் இட். என்கிட்டே ஏன் மறைச்ச?…”
“நீங்களும் போலீஸ் தானே?…” என்று சொல்ல சத்தியமாய் கோபத்தை அடக்க படாதபாடுபட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“அப்ப இந்த வீட்டுக்குள்ள உன்கூட கூட நான் போலீஸா தான் இருந்திருக்கேன். புருஷனா இல்லைன்னு சொல்றியா?…” என நக்கலாக கேட்க அவனை முறைத்து பார்த்தாள்.
“என்னடி பார்வை முறைப்பா? செஞ்சது தப்பு, இதுல முறைப்பு வேற…” என வேகமாய் அவன் எழுந்து நிற்க அவனின் கோபாவேசத்தில் உடல் தூக்கிபோட்டாலும் மெதுவாக அவளும் எழுந்து நின்றாள்.
“கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தா அந்த நாயை தூக்கி லாக்கப்ல வச்சு லாடம் கட்டிருக்கமாட்டேன். வெளில வர முடியாதபடி என்ன செய்யனுமோ நான் செஞ்சிருப்பேனே. ஏன் சொல்லலை?…”
“கண்டிப்பா செஞ்சிருக்க முடியாது. அவன் பெரிய பில்டரோட பையன். நம்ம இருக்கிறதே அவங்க கட்டிக்குடுத்த பில்டிங்கல தான். மறந்துடீங்களா?…”
“சும்மாவாடி இருக்கோம். காசு குடுத்து வாங்கி இருக்கோம். கட்டி குடுக்கறதோட அவன் வேலை முடிஞ்சது. இதுக்கும் அதுக்கும் ஏன் முடிச்சு போடற?…” என எரிச்சல் மிகுந்த குரலில் சொல்ல தன்னிடம் தன் கணவனுக்கு இப்படி எல்லாம் பேச வருமா என்று தான் வேதனையுடன் பார்த்தாள்.
“சரி கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?…”
“அவனை அரஸ்ட் பண்ணிருப்போம். கஸ்டடில எடுத்து விசாரிச்சு அவன்கிட்ட இருக்கிற ஆதாரத்தை எல்லாம் வாங்கி மத்த பொண்ணுங்கட்ட இதே மாதிரி நடக்காம நடவடிக்கை எடுத்து கோர்ட்ல அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்திருப்போம்…”
“அப்ப ஏன் ரெண்டு வருஷம் முன்னவே அதை செய்ய முடியலை?…” என கேட்க,
“வாட்?…” என்றான் புரியாமல்.
“இது உங்க ஏரியால ரிஜிஸ்டர் ஆகாத கேஸ். நிவி மாதிரி ஒரு பொண்ணு அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க அவன்கிட்ட காசு வாங்கிட்டு அந்த பொண்ணு குடுத்த ஆதாரத்தை எல்லாம் அழிச்சுட்டு கடைசியில அந்த பொண்ணு தான் இவனோட பணத்துக்காக போய் இவனை மிரட்டினான்னு ஊரோட அசிங்கப்படுத்தி கடைசில அந்த குடும்பமே தற்கொலை பண்ணினது தான் மிச்சம்…”
மனைவியின் குற்றச்சாட்டில் வாய் பேச முடியாத ஊமையாய் திகைத்து போய் நின்றான் வாசுதேவகிருஷ்ணன். ஓய்ந்து போய் அப்படியே சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள் அபூர்வா.
“போலீஸ் கேஸ். ஈஸியா சொல்லுவீங்க. இந்த மாதிரி ஆளுங்களை கம்ப்ளைண்ட் குடுத்து முட்டிக்கு முட்டி தட்டி உலகத்துக்கு காண்பிக்கனும். பொண்ணுங்க தைரியமா துணிச்சலா இதை எதிர்க்கொண்டு நடவடிக்கை எடுக்கனும் அப்படின்னு. வெளில வந்து கம்ப்ளைண்ட் குடுத்த பொண்ணுங்களுக்கும், அவங்க குடும்பத்துக்கும் அதுக்கப்பறம் என்ன நடக்கும்னு உங்க போலீஸ்காரங்க யாருக்காச்சும் தெரியுமா? இல்லை அக்கறை தான் இருக்கா?…”
“சுத்தமா இல்லை. இல்லவே இல்லை. விழுப்புரத்துல எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அக்கா இருந்தாங்க. ரொம்ப அழகு. என்னோட தான் அங்க ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சாங்க. வழக்கம் போல தான். லவ் பன்றேன் அது இதுன்னு ப்ரெண்டா பழகினவனே ப்ரபோஸ் பண்ண அக்கா முடியாதுன்னு சொல்லிட்டாங்க…”
“அவங்களை மிரட்டி வரவச்சு கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டு விடவே இல்லை. அடைச்சு வச்சுட்டாங்க. எப்படியோ தப்பிச்சு வந்தவங்கட்ட அவங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் ஒருத்தர் கம்ளைன்ட் குடுக்க சொல்லி தான் பார்த்துக்கறதா சொல்லி கூட்டிட்டு போயிருக்காங்க. அவனை சும்மா விட கூடாது அப்படின்னு…”
“அவன் மேல கம்ப்ளைன்ட் குடுக்க போலீஸ் விசாரணை அது இதுன்னு வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் இழுத்தடிக்க அதுக்குள்ளே ஊர்ல உள்ளவங்க எல்லாம் கடத்தினவன் அப்படியேவா விட்டான்னு கதை பேசி ஊர் மொத்தமும் சேர்ந்து அவங்களை களங்கப்படுத்திருச்சு…”
“அப்படி எல்லாம் இல்லைன்னு நிரூபிக்கவே கோர்ட்டுக்கு ஏறி இறங்கி அவனுக்கு தண்டனை வாங்கி குடுக்க படாத பாடு பட்டுட்டாங்க. ஆனா அத்தனையும் வேஸ்ட். கடைசில அவன் கம்ப்ளைண்ட் குடுத்தான்னு சொல்லி அந்தக்காவை அரஸ்ட் பன்ற அளவுக்கு வந்து ஊர்க்காரங்களை வச்சு பேசி முடிச்சாங்க. போகுற போக்கில போலீஸ்காரர் சொன்னாரு பொண்ணை ஒழுக்கமா வளர்க்க துப்பில்லை கம்ப்ளைண்ட் குடுக்க வந்துட்டான்னு. அதுவும் அத்தனை பேர் முன்னாடி…”
“ஏன் அவர் மனசாட்சிக்கு தெரியாதா உண்மை என்னன்னு? அவர் நினைச்சிருந்தா குறைஞ்சபட்சம் அந்தக்கா குடும்ப மானம் போகாம கூட காப்பாத்திருக்கலாம். ஆனா அதை செய்யலை. விசுவாசத்துக்கு நல்ல வாசம், கெட்ட வாசம்னு வித்தியாசம் இல்லை போல? அவங்கவாங்க குடும்பத்துக்குள்ள நடக்காத வரைக்கும் இதெல்லாம் அவங்களுக்கு பொருட்டே இல்லை…”
“போலீஸ், அவங்க வேலை அவ்வளவு தான் போல. கம்ப்ளைன்ட் குடுக்க வச்சவரும் அடுத்து அந்த குடும்பத்தை கவனிக்கலை. சுத்திலும் இருக்கறவங்க ஏச்சும் பேச்சும் கேட்டுட்டு எத்தனை நாள் இருப்பாங்க. அதிலும் அந்தக்கா மனநிலை பாதிக்கப்பட்டு, இப்ப அந்த குடும்பமே ஊர விட்டு போயாச்சு…” என சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழ அமைதியாக பார்த்தபடி நின்றான் அவன்.
“வருவீங்க, கேஸ் எழுதுவீங்கே. விசாரணை நடத்துவீங்க. அவ்வளோ தான. வந்து போன பின்னால அந்த குடும்பமும் அதுல இருக்கறவங்களும் அதுக்கப்பறம் அனுபவிக்கிற வேதனை என்னன்னு உங்களுக்கு தெரியுமா?…” என்று வேகமாய் எழுந்து அவனின் முன்னால் வீறுகொண்டு கேட்க,
“அப்போ இப்படி பன்றவங்களை சமூகத்துக்கு பயந்து அப்படியே விடனும்னு சொல்றியா?. அவன் இன்னும் தப்பு செய்யத்தான் செய்வான்…” என்றான் அவன் கோபமாக.
“அவன் மேல புகார் குடுத்ததுக்கே மதிப்பில்லைன்னு ஆனா பின்னால எதை நம்பி இன்னொரு குடும்பத்தை அதே தப்பை செய்ய சொல்றீங்க? இத்தனைக்கும் நிவி அவனோட நெருக்கமா கூட பழகலை. பக்கத்துல நடக்கற அவங்க பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் அப்போ நாலு தடவை பார்த்திருக்கா. ஹாய் ஹலோ தான்…”
“ஆனா அதையே வச்சு அவளோட போட்டோஸ் மார்பிங் பண்ணி அவளை கார்னர் பன்றான். என்ன செய்வா அந்த பொண்ணு? வீட்டுல சொல்ல பயந்து என்கிட்டே சொன்னா. உங்கட்ட சொல்லி ஹெல்ப் கேட்கனும்னு. ஆமா நான் தான் சொல்ல கூடாதுன்னு சொன்னேன்…”
“நீங்களும் தான் கம்ப்ளைண்ட் குடுக்க சொல்லுவீங்க. அந்த போட்டோஸ் வாங்கி நீங்களே வைரல் ஆக்குவீங்க. நீங்கன்ன நீங்கன்னு மட்டும் சொல்லலை. யாரை நம்பறது யாரை நம்ப கூடாதுன்னு கூட தெரியலை. எனக்கு இதுதான் சரின்னு பட்டது. எந்த ஆதரவும் இல்லாத குடும்பம். இப்ப இந்த சிக்கலுக்கு ஆளாகி பலியாகனுமா?…”
“அப்போ அவன் மிரட்டறதை செய்யனுமா?…” வாசுதேவகிருஷ்ணன் பல்லை கடித்துக்கொண்டு ஆத்திரத்துடன் கேட்க,
“நிவி சூஸைட் அட்டன் பண்ணினதுலையே அவன் கொஞ்சம் பயந்துட்டான். இப்ப போன் எதுவும் வரலை. ஆனா இப்படியே இருப்பானன்னு தெரியலை…” என தலையை பிடித்துக்கொண்டு சொல்ல,
“அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லியிருக்கலாமேடி. என்கிட்டே மறக்கிற அளவுக்கு உனக்கு நான் அந்நியமா போய்ட்டேனா?…”
“சத்தியமா இல்லைங்க. சத்தியமா இல்லை. அவங்க பாவம். பாஸ்கரன் அங்கிள் வேலை பார்த்து தான் அவங்க குடும்பமே வாழறாங்க. ரெண்டு நாளா அவர் பட கஷ்டம். இப்பவே இந்த பில்டிங்கல பாதிபேர் பேச ஆரம்பிச்சுட்டாங்க அவளோட சூசைட் அட்டம்ப்ட் ஏன்னு…”
“அவங்க குடும்பம் இல்லையே இது. ஆளாளுக்கு ஒவ்வொரு யூகம். அந்த பொண்ணை அவங்கவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி அவ உடம்புல ஆணி அடிக்கறாங்க. தங்களுக்குள்ள முணுமுணுத்தவங்க இப்ப அங்கிள் க்ராஸ் பண்ணி போனாலே என்னவோன்னு பேசறாங்க. ரொம்பவே உடைஞ்சு போய்ட்டார்…”
“திட்டினார்ன்றதையே நம்பாம லவ் பெயிலியரோ என்னமோன்னு பேசறவங்க இப்படி ஒரு விஷயம்னு தெரிஞ்சா அந்த பொண்ணை வார்த்தையால கொத்தி கொன்னுடமாட்டாங்க? இங்க மனுஷங்களுக்கு மனுஷங்க தான் எதிரி. போலீஸ் கூட மனுஷங்க தான். காசு வரவும் கம்ளைன்ட் எல்லாம் வெறும் காகிதமாகிடுது…”
“அவங்களுக்கு எல்லாம் தெரியலை அவங்க காகிதத்துல எழுதி குடுத்து வெறும் எழுத்து இல்லை. அவங்களோட எதிர்காலம், மானம், மரியாதை, கௌரவம் இதெல்லாம் தான்னு. நீதி தேவதை எங்கையும் கண்ணுக்கு தெரியமாட்டாங்க. கண்ணுக்கு தெரிஞ்சு தண்டிக்கிற கடவுள் போலீஸ்….”
“ஆனா அவங்க தான் கண்ணை திறந்துட்டே இருட்டுல இருக்காங்களே. கௌரவம் எல்லாருக்குமே பொதுவானது. எல்லா குடும்பத்துக்குமே இருக்க கூடிய அழியாத சொத்து. அதை பணக்காரங்க பணத்தால விலைக்கு வாங்கிடறாங்க. தப்பை நடக்கவே இல்லைன்னு மறைச்சு சாதிச்சுடுவாங்க. ஆனா சாதாரண மக்கள்? எங்க போவாங்க?…”
“பொண்ணு மேல தப்பே இல்லைன்னு தீர்ப்பு வந்தா கூட அது முழுசா நம்பறதுக்கு ஜனங்களுக்கும் ஈரமில்லை. அட போங்க. என்னால இதுக்கு மேல முடியலை. எனக்கு நான் செஞ்சதுல எந்த தப்பும் தெரியலை. இப்போதைக்கு நிவி குடும்பத்துக்கு பிரச்சனை இல்ல. தற்காலிகம் தான்னாலும் யோசிக்க நேரம் இருக்கும்…”
“அப்போ நிவியை விட்டுட்டு அவன் இன்னொரு பொண்ணையும் இப்படி ட்ராப் பண்ணினா தப்பில்லைன்றியா? உனக்கு நிவி மட்டும் தான் தெரியறா இல்லை?…”
“ஆமா இப்போதைக்கு நிவி மட்டும் தான் எனக்கு தெரியறா. ஏன் அவனை பெத்தவங்களுக்கு அவன் என்ன பன்றான்னு தெரியாதா? முதல்ல கம்ப்ளைண்ட் வந்தப்பவே அவனை ரவரவயா(மேல் தோலை) உரிச்சிருந்தா அடுத்து தப்பு பண்ண யோசிப்பானா? இல்லை அந்த தைரியம் தான் வருமா? கொட்டி குடுத்து மகனை மீட்டதோட இல்லாம ஒரு குடும்பத்தையே அழிச்சாங்க…”
“போலீஸ் உங்களால என்ன முடிஞ்சது? அவங்களுக்கு சாதகமா கேஸை திருப்பி விடவும் அந்த பொண்ணு குடுத்த ஆதாரத்த நெட்ல விடவும் தானே? இனி எந்த பொண்ணு வருவா?…” என்று பேசி பேசியே களைத்தவள் அப்படியே சோர்ந்துபோய் அமர்ந்து கொண்டாள்.
“போலீஸ்க்கு எல்லாம் இது ஒரு கேஸ். ஆனா நடுத்தர குடும்பங்களுக்கு எல்லாம் இது வாழ்க்கை. அது யாருக்குமே புரியறதில்லை…” என்றவளை தீவிரமாக பார்த்தவன் எதுவும் பேசவும் இல்லை. பேச முயற்சிக்கவும் இல்லை.