“ரொம்ப மிஸ் பண்ணிட்டியா பூர்வி?…” என்றான் மெல்லிய குரலில்.
“ஹ்ம்ம்….” என அவனின் விரல்களை ஆராய்ந்துகொண்டே அவள் சொல்ல,
“நானும் மிஸ் பண்ணிருப்பேன்னு உனக்கு தோணலை?…” என கேள்வியாய் கேட்க அவளுக்கு எதையும் கேட்கவோ மீண்டும் சண்டையிடவோ விருப்பமும் இல்லை. திடமும் இல்லை.
“ப்ளீஸ், அந்த பேச்சை விடுங்க…” என்றாள்.
எதையும் தெரிந்துகொள்ளவோ அறிந்துகொள்ளவோ விரும்பவில்லை. முதலில் தன் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று நினைப்பு மட்டுமே மனது முழுவதும் வியாப்பித்திருக்க,
“எப்போ கிளம்பினீங்க? பேசறப்போ கூட சொல்லவே இல்லை…” என்றாள் பேச்சை மாற்றி.
“பொண்டாட்டி ஒன்னு சொல்லி அதை செய்யாம இருந்தா புருஷனா எனக்கு எத்தனை அவமானம்? அன்னைக்கு நீயெல்லாம் என்னடா போலீஸ்ன்னு என் மூஞ்சி மேல உன் லெஃப்ட் ஹேண்டை வச்சதுல ரொம்ப ஷையா போச்சு தெரியுமா?…” என்று சொல்ல,
“என்னது நானா? என்ன சொல்றீங்க?…” என கேட்டவளிடம் தனது மொபைலில் பிரவீனின் வழக்கு பற்றிய விவரங்களை அவளுக்கு காண்பிக்க எழுந்து அமர்ந்துகொண்டாள் அபூர்வா.
“இது இதெப்படி?…” என்று திகைப்பாய் பார்க்க,
“ஹேப்பி?…” என்றான் சிரித்துக்கொண்டே.
“ரொம்ப ரொம்பவே ஹேப்பி…” என அவன் மீது சாய்ந்தவள்,
“ஏன் அப்பவே சொல்லலை? இவ்வளோ நேரம் கழிச்சு சொல்றீங்க…”
“நியூஸ் எதாச்சும் பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். நீ தான என் நினைப்பிலையே இருந்தா?…” என கேலி பேச,
“ஆமா கண்டீங்க உங்க நினைப்புன்னு…” என அவளும் பழிப்பு காட்ட,
“நம்பிட்டேன்…” என்றவன்,
“வந்தப்பவே சொல்லியிருந்தா இப்ப நடந்தது எல்லாம் இந்த கேஸ்ல அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்ததுக்கான பரிசா இருந்திருக்கும். அது எதுக்கு எனக்கு? என் மனைவி எந்த பரிசு குடுக்கறதா இருந்தாலும் அது இந்த வாசுதேவனுக்காக மட்டுமா தான் இருக்கனும். அதான் சொல்லலை…” என்றவன்,
“நான் சரியா தூங்கியே பலநாள் ஆச்சுடி. உன்னோட பேசவும் முடியாம, கோபமாவும் இருக்க முடியாம அந்த கேஸ்ல கவனத்தை செலுத்தவும் முடியாம. இப்படிலாம் நான் இருந்ததே இல்லை தெரியுமா?…”
கண்ணை மூடியபடி தலைக்கு மேல் கையை வைத்துக்கொண்டு அவன் சொல்லியவிதமே எத்தனை அயர்ந்துபோய் உள்ளான் என்பதை தெளிவாக காட்டியது.
“அதுக்காகவா என்னை அனுப்பினீங்க?…” என கேட்க அவளுக்கு முதுகுகாட்டி திரும்பிக்கொண்டான்.
“ப்ச், பூர்வி. அதுக்காக மட்டுமில்லை. உன்னை அனுப்ப வேற சான்ஸ் இல்லை. உண்மையா அந்த கேஸ் முடியாம என்னால எங்கயும் நகர முடியாது. அதான் உன்னை முன்னாடியே அனுப்பிட்டேன். இப்போ என்ன? இங்க நல்லா தான இருந்த…” என்று சொல்ல அவனின் இடுப்பில் கை கோர்த்து அவனுடன் ஒண்டிக்கொள்ள அவளின் கைகளை எடுத்து தான் கன்னத்தோடு வைத்தபடி அவன் கண் மூட,
“கையை விடுங்க. தூங்கலாம். நானுமே…” என்று சொல்லவும் வேகமாய் தலையை மட்டும் திருப்பி திரும்பி அவளை பார்த்தபடி,
“நான் கூட உன்னை என்னமோ நினைச்சுட்டேன் கண்மணி…” என சிரித்தபடி திரும்ப போக அவனின் முதுகில் அடித்தவள்,
“டயர்டா இருக்குன்னு சொன்னீங்கள்ள. பேசாம தூங்குங்க. மூச்…”
“பூர்வி…” என்றான் மீண்டும் கிசுகிசுப்பாக.
“ஹ்ம்ம்…” என கண்ணை மூடிக்கொண்டே கேட்க,
“தூங்கறது, தெரியும், நிஜமா தூங்கறதுவும் தெரியும். அதென்னடி புதுசா பேசாம தூங்கறது…” என்று கேட்டுவிட்டு சிரிக்க அவனின் உடல் அடக்கமாட்டாத சிரிப்பில் குலுங்கியது.
“நீங்கல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா. வாய் வாய்…” என அவனின் வாயிலேயே அடிக்க,
“டவுட் கேட்டா சொல்லி குடுங்க கண்மணி…” என்றான் உல்லாசமான குரலில்.
“ம்ஹூம். நான் பதில் சொல்லமாட்டேன். வாயை திறக்க கூடாது…” என்று மிரட்ட,
“புருஷனை மதிக்கிறதே இல்லை. எவ்வளவு பெரிய சாதனை பண்ணிட்டு வந்திருக்கேன். பட்டுக்கம்பளம் விரிக்காட்டிலும் பரவாயில்லை. பகுமானம் பன்றியே…” என்று வம்பிழுக்க,
“ஆமா, நீங்க பெரிய மன்னர் பாருங்க. பட்டுக்கம்பளம் விரிக்காங்க…” என்று விடாமல் பூர்வியும் வம்பு பேச,
“மன்னன் தான் என்னன்ற?…” என்றான் மிதப்பாய்.
“மன்னா?….” என்றால் சிரிப்போடு.
“என்னா?…” என்றவன்,
“உனக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா கண்மணி…” என கேட்க,
“நீங்க எந்த நாட்டுக்கு மன்னன்னு தான் கேள்வி…”
“நம்ம நாட்டுக்கு காவல் மன்னன். வீட்டுக்கு என் மனைவிக்கு காதல் மன்னன்…” என்று சொல்ல,
“ஆமாமா, சொல்லிக்கிட்டாங்க…” என்றால் நொடிப்புடன்.
“ஏன்டி படுத்தற? என்னை காவல் மன்னன்னாலும் ஒத்துக்கமாட்டேன்ற. காதல் மன்னனாவும் இருக்க விடமாட்டேன்ற. உன்னை…” என்று திரும்புவதற்குள் அவனின் வாயை பொத்தியவள்,
“போதும், பேசாம…”
“பேசாம?…”
“குட்நைட்…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“ஹா ஹா ஹா அவ்வளோ உஷாரா நீ?…” என்றவனின் முதுகில் முகத்தை மறைத்தவள்,
“காலைல எழுந்துக்கனும். ப்ளீஸ்…” என்றதும் தான் அமைதியானான். இருவரின் முகத்திலும் புன்னகை உறைந்து போனது.
“ஆமா இந்நேரம் உங்களை உள்ள விட்டா?…”
“அடிப்பாவி, என்னமோ கைதியை உள்ள விட்ட மாதிரி கேள்வி கேட்கற…”
“அச்சோ அப்படி இல்லை. யார் கதவு திறந்தான்னு கேட்க வந்தேன்…” என்று சமாளிக்க,
“எல்லாம் என் மச்சான் தான். அவன் துணையிருந்தா கல்யாணத்தை முடிக்கலாம். பொண்டாட்டியை அனுப்பாலாம். அர்த்தராத்திரில கதவை திறக்கவும் வைக்கலாம்…” என்று முணுமுணுப்பாக சொல்ல அபூர்வா அதற்குள் உறங்கியிருந்தாள்.
அவளின் சீரான மூச்சுக்காற்ற உணர்ந்தவனும் புன்னகையுடன் அவளின் கையை பிடித்துக்கொண்டே உறங்கி போனான். காலை அவனை தாண்டிக்கொண்டு அவள் இறங்கும் நேரம் தான் விழித்து பார்த்தான்.
“என்னை எழுப்பாதன்னு சொன்னா கேட்கவே மாட்டியா பூர்வி? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நானே வரேன். கிளம்பிட்டா நீ போ…” என்று புரண்டு படுக்க,
“நான் எங்க எழுப்பினேன்? உங்களை தாண்டி கீழே இறங்கும் போது நீங்க முழிச்சுட்டீங்க…” என்றவள் குளிக்க சென்றுவிட அதற்கு மேல் உறக்கம் வராமல் அப்படியே படுத்திருந்தவன் அபூர்வா புடவை மாற்றி வரவும் பார்த்துவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டான்.
கிளம்பி கீழே செல்லும் பொழுது அவனை பார்த்தவள் அவனுக்கு குளிக்க டவல் இல்லாமல் இருக்க,
“ஈரமாகிடுச்சே, எந்திச்சா குளிக்க தேடுவாங்க. எடுத்து வச்சிட்டு போவோம்…” என அவனை பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டு மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் டவலை எடுக்க கதவை திறந்து கொண்டு செல்ல சத்தமில்லாமல் எழுந்தவன் அவள் வருவதற்காக கதவருகே ஒளிந்து நின்றான்.
“வரட்டும் வரட்டும்…” என்று இருக்க கதவு திறந்ததும் சட்டென திறந்த கதவின் முன்னால ‘பே’ என்று கத்த திடுப்பென்று கலைந்த தலையுடன் லுங்கியும் பனியனுமாய் எகிறி குதித்து நின்றவனை பார்த்து அரண்டு ‘ஆ’வென்று எதிரே நின்ற பூங்கோதையும், முத்துவேலும் பதறி கத்திவிட்டார்கள்.
என்னவோ ஏதோவென கீழே இருந்து தாமோதரனும், அன்புக்கரசியும் வந்துவிட உடனே அபூர்வாவும் மாடியில் இருந்து இறங்கி தன்னறைக்கு வந்தாள்.
முத்துவேலுக்கு கோபமென்றால் பூங்கோதைக்கு படபடவென்று வந்துவிட்டது. அப்படியே நெஞ்சை பிடித்துக்கொண்டு பின்னால் சென்று சாய்ந்து அமர்ந்துவிட வாசுதேவகிருஷ்ணன் வேகமாய் தன் சட்டைஎடுத்து போட்டு வெளியே வந்து நின்றான்.
“நீ எப்படா வந்த?…” என அன்புக்கரசி கேட்க,
“ஒரு மூணு மணி இருக்கும். தினேஷ் தான் கதவை திறந்துவிட்டாப்ல…” என கூடுதலாக சொல்லியவன் மாமியாரிடம் சென்று,
“தண்ணி குடிங்க அத்தை. ஒண்ணுமில்லையே…” என கேட்க முத்துவேலுவுக்கு அத்தனை எரிச்சல்.
“அப்பன் நானு நெஞ்சை பிடிச்சு விழுந்தா கூட கண்டுக்கமாட்டான் போல. மாமியாரை தங்கறான்” என உள்ளுக்குள் மண்டை சூட்டுடன் நிற்க,
“பூர்வா தண்ணி கொண்டா…” என்றான் மனைவியிடம்.
“வாங்க மாமா, வாங்க அத்தை…” என அந்த நேரத்திலும் அவர்களை வரவேற்றுவிட்டு தன்னறையில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து நீட்ட வாங்கி குடித்த பூங்கோதை,
“நீங்க வந்தது தெரியாதுங்க மாப்பிள்ளை…” என்று இன்னும் பதட்டம் தணியாமல் சொல்ல,
“எந்தி நீ, சின்ன பிள்ளை மாதிரி பயந்து அலறிட்டு. நல்ல வேளை இன்னும் ஆளுங்க வரலை. பார்த்தா என்ன நினைப்பாங்க?…” என சத்தம் போட்ட தாமோதரன்,
“நீங்க வாங்க சம்பந்தி…” என கீழே அழைத்து செல்ல,
“அப்ப நான் கத்தினது இங்க யாருக்குமே கேட்கலையா? அன்பு நீயுமா?” என்ற சந்தேகத்துடன் அன்புக்கரசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே இறங்கி சென்றார் முத்துவேல். அவர்களின் பின்னால் பூங்கோதையும் சென்றுவிட,
“என்னடா உங்கப்பாவை இப்படி பயங்காட்டிட்ட?…” என அன்புக்கரசி வந்து கேட்க,
“நான் இவன்னு நினைச்சு தான் விளையாண்டேன். அவங்க வருவாங்கன்னு யார் கண்டா? ரொம்ப பயந்துட்டாரா?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஆமா. அலறிட்டாரு….” என்று சொல்லி வாய் பொத்தி சிரித்த அன்புக்கரசி,
“வெறும் மூஞ்சிக்கே இந்த பாடுன்னா. என்னத்தையாவது பூசிட்டு வந்து நின்னிருந்தா அம்புட்டு தான்…” என்று சொல்லி சிரிக்க,
“என்ன இவ்வளவு சீக்கிரம்?…” என கேட்டவன் அபூர்வாவின் கையில் இருந்து டவலை வாங்கிக்கொண்டு,
“ஸ்ட்ராங்கா ஒரு டீ வேணும் பூர்வா…” என அவளை கீழே அனுப்பினான்.
“எங்க உன் அண்ணனை தான் கூட்டிட்டு போக சொன்னார் உங்கப்பா. அவன் விமலாவை விட்டு நகருவேனானனுட்டான். அதுவும் சம்பந்தி வீட்டுக்கு முதல் நாளே வர சொல்லி முடியாதுன்னு சொல்ல முடியாதுல. அதான் விடியறதுக்குள்ள கிளம்பி வந்தோம்…”
“ஹ்ம்ம்…” என சொல்லிக்கொண்டே தனக்கு உடையை எடுக்க பேக்கை திறந்துகொண்டிருந்தான்.
“விமலாவுக்கு வரனும்னு ஆசை. ஆனா அவளை சுத்தமா அலையவோ, அதிகமா நடக்கவோ கூட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கூட்டிட்டும் வர முடியாது. இங்க வராம இருக்கவும் முடியாது. அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்…” என அன்புக்கரசி பேசிக்கொண்டே இருக்க அதற்குள் ப்ரெஷ் செய்து முகத்தை கழுவிவிட்டு வந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அபூர்வாவும் டீயுடன் வந்துவிட வாங்கிக்கொண்டவன் குளித்துவிட்டு வருவதாக சொல்லி இருவரையும் கீழே அனுப்பிவைத்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் வேஷ்டி சட்டையுடன் வந்தவனை மெய்மறந்து பார்த்தபடி அவள் நிற்க அவளிடம் புன்னகை சிந்திவிட்டு முத்துவேல் அருகே சென்று அமர்ந்தான்.
அப்பொழுதுதான் மகிழ்தினி குடும்பமும் பஸில் வந்து இறங்கி இருந்தார்கள் சொந்தங்களுடன்.
“அப்பா எப்போ வந்தீங்க…” என்று வேறு வம்பாக கேட்டு வைக்க அவருக்கு வந்த கோபத்தை அடக்கவும் முடியவில்லை. அவனிடம் பேசாமல் இருக்கவும் முடியவில்லை.
“ஹ்ம்ம் முந்தாநாள்…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல,
“இது தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேனே?…” என்று சிரிப்புடன் சொல்ல,
“என்ன பழக்கம்டா இது? போலீஸ்காரன் மாதிரியா நீ நடந்துக்கறது? சம்பந்தி வீட்டுல என்ன நினைப்பாங்க? ச்சே…” என சொல்ல,
“அப்போ நம்ம வீட்டுல இப்படி நடந்தா தப்பில்லையா? அப்போ ஓகே…”
“உன்னை எல்லாம் திருத்த முடியாது. பெரியவனுக்கு என்ன சொக்குப்பொடி போட்டியோ, வர வர அவனும் உன்னைய மாதிரியே நடந்துட்டு வரான்…” என அதற்கும் திட்ட அவர் சொல்லியதை காதிலேயே வாங்கவில்லை.
“வந்து நிக்கறேன் என் மருமக என்னை பார்த்ததும் வாங்கன்னு கேட்டுட்டு தான் தண்ணி எடுக்கவே போனா. உனக்கு சல்லைடையா சலிச்சு தேடி தேடி பார்த்து அப்படி ஒரு நல்ல பொண்ணை கட்டி வச்சிருக்கேன். அந்த வீட்டுல நீ எம்புட்டு மதிப்பா இருக்கனும்?…” என கேட்டதும் அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த நாயகம் திருதிருவென விழித்தார்.
வாசுதேவகிருஷ்ணன் தந்தையின் பேச்சில் வந்த சிரிப்பை வாய்க்குள் அதக்கியபடி நாயகத்தை பார்த்து கண்ணடிக்க,
“எதுக்குடா கண்ணடிக்கிற?…” என எகிறியவர்,
“இங்க வச்சு வேண்டாம். நீ ஊருக்கு வா. பேசிக்கறேன்…” என கடுகடுவென அமர்ந்திருந்தார்.
“வந்துட்டா போச்சு…” என்று சொல்லிவிட்டு விசேஷத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
தினேஷிற்கு ஏற்கனவே திட்டு விழுந்திருந்தது. ஏன் வாசுதேவகிருஷ்ணன் வந்ததை பற்றி சொல்லவில்லை என்று. அவனும் வாசுதேவகிருஷ்ணன் அருகில் வந்தமர இருவருமாக பேசிக்கொண்டு அமர்ந்திட இருவருமாக பேசியபடி இருந்தனர்.
விசேஷம் முடிந்ததும் முத்துவேலும் அன்புக்கரசியும் நாயகம் குடும்பத்தினருடன் மகிழை அழைத்துக்கொண்டு பஸில் சென்றுவிட மாலை நேரம் வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
கிளம்பும் வரை பூங்கோதை அவனை கண்டாலே ஓடி ஒழியத்தான் செய்தார். வம்படியாக அவரை அழைத்து அப்பொழுதும் நலம் விசாரித்து விடைபெற்று தான் சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு அலும்பு ஆகாது. போட்டு படுத்தறீங்க எங்கம்மாவை…” என சென்றுகொண்டிருக்கும் பொழுது அவனிடம் கேட்க,
“பொண்ணு தான் கொஞ்சமும் அசரமாட்டிக்கு. அம்மாவாச்சு பயப்படறாங்களே…” என்று காலரை தூக்கிவிட்டபடி காரை ஓட்டிக்கொண்டே,
“கொஞ்சம் விட்டிருந்தா பின்னால விழுந்திருப்பாங்க. எப்படி நின்னாங்க…” என சொல்லி சொல்லி நினைத்து சிரிக்க அவனை முறைத்தாள் அபூர்வா.
இருவரும் பேசிக்கொண்டே சென்னையை நெருங்கிய நேரம் அந்த அசம்பாவிதம் நடந்தது. பேச்சுக்கள் பேச்சுக்களாக இருந்தாலும் பார்வையில் கூர்மையுடன் பாதையில் கவனத்தை வைத்திருந்தவனின் உள்ளுணர்வு எதையோ எச்சரிக்க சட்டென காரை ஒடித்து திருப்பவும் அவனை கடந்துகொண்டு சென்றது அந்த லாரி.
இருவரின் அலறலுடன் லேசான உராய்வுடன் ஆட்டங்கண்டு நின்றது கார். அதன் பின்னரே சுதாரித்தவன் அபூர்வாவை பார்க்க அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அவள்.
“பூர்வி பூர்வி ஆர் யூ ஓகே…” என அவளின் கன்னம் பற்றி அவளின் பத்திரத்தை ஆராய்ந்தவன் உறுதிப்படுத்திக்கொள்ள மிதமான தலையாட்டுடன் அவனின் தோளில் சாய்ந்துகொண்டவளின் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.
“நத்திங்டா. ஒண்ணுமே இல்லை. சரியாகிடுச்சு…” என்று அவளை அரவணைத்து வருடிக்கொண்டுத்தவன் மூளையோ வேகமாய் சிந்தித்தது.