காதல் – 3
அவனின் திடீர் வருகையும், வாசலில் நின்ற விதமும், பேசிய பேச்சையும் பார்த்து தான் பேசியதை கேட்டிருப்பானோ என்னும் ஐயத்தில் பூங்கோதை அரண்டு நிற்க மகிழ்க்கு மாமியாரின் அச்சம் கூடிய முகம் சந்தோஷத்தை அளித்தது.
“வேணும், வேணும். இப்படி ஒரு ஆள் தான் வேணும். நல்ல வேளை மாப்பிள்ளையை என்னை மாதிரி பார்க்காம விட்டாங்க. இல்லைன்னா வருஷம் முழுக்க பெரிய கிரைண்டர் தான் லட்சுமிக்கு…” என மனதினுள் குதூகலித்து நிற்க,
“என்னை வீட்டுக்குள்ள கூப்பிட கூட இத்தனை யோசனை? மொத்தமா குடும்பமா வந்தா தான் மாப்பிள்ளையா? தனியா வந்தா மதிப்பில்லையா?…” என்று வேறு இடக்காய் கேட்டு வைத்து அனைவரையும் அழுத்தமாய் அவன் பார்த்த விதம்.
தினேஷ் தான் முதலில் சுதாரித்தது. தன் தந்தையின் கையை பிடித்து நகர்த்தியவன் அவனை தன்னுணர்வுக்கு கொண்டு வந்தான்.
“அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க மாப்பிள்ளை. திடுத்திப்புன்னு வந்து நிக்கவும் என்ன செய்யன்னு தெரியலை…” என்று சொல்லி,
“வாங்க, உள்ள வாங்க…” என அழைத்தார்.
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் போனால் போகிறதென்பதை போல உள்ளே வந்தவன் லட்சுமியை பார்த்துக்கொண்டே வர அதனை பார்த்த பூங்கோதை,
“லட்சுமி உள்ள போம்மா…” என்று சொல்ல,
“பேசலாம்னு வந்தது உங்க பொண்ணுகிட்ட தான். உள்ள போக சொன்னா எப்படி?…” என்று தடாலடியாக சொல்ல அவருக்கு ஒரே அவஸ்தையாக போனது.
மகளிடம் பேச என்ன இருக்கிறது என்று யோசனை வேறு. அதிலும் நிச்சயத்திற்கு வந்ததில் இருந்து அவனை பார்த்துக்கொண்டு தான் இருந்தாரே.
[the_ad id=”6605″]
மருந்திற்கும் சிரிப்பில்லாமல், வேடிக்கை பார்ப்பவனை போல தள்ளி அமர்ந்திருந்த விதம். மாப்பிள்ளையை போலவா இருந்தது? செல்லும் பொழுது சொல்லிக்கொள்ளாமல் சென்றதோடு இல்லாமல் இப்பொழுது மீண்டும் வந்து பேச வேண்டும் என்கிறான்.
திருமணம் வேண்டாம் என சொல்ல வந்திப்பானோ? குடும்பம் பிடிக்கவில்லையோ? சொத்துபத்து இருக்காது என்று நினைத்திருப்பானோ? இப்படித்தான் நினைப்பு ஓடியது அவருக்கு.
பூங்கோதை தன்பாட்டிற்கு கற்பனையில் நிற்க அவரின் அசைவற்ற தன்மையும், பயம் கவலை கலந்த முகமும் வாசுதேவகிருஷ்ணனை சற்று இலகுவாக்கியது.
“சும்மா தான் பேசிட்டு போகலாம்னு வந்தேன். நீங்க பயப்பட வேண்டாம். அப்போ கூட்டமா எல்லாரும் இருந்தாங்க. அதனால பேச முடியலை…” என்றவன் மீண்டும் லட்சுமியை பார்க்க அவள் நிமிரவே இல்லை.
“எல்லாரும் வந்திருக்கப்ப பேசினாலே ஊர்ல இதென்ன பொண்ணு மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு முன்ன பேச விடறதுன்னு எகத்தாளம் பேசுவாங்க. இப்ப மாப்பிள்ளை வீட்டாளுங்க போன பின்னால இவர் மட்டும் வந்திருக்கறதை பார்த்தா சுத்தம்…” என மாமியே சொல்லியது மகிழின் காதில் விழ,
“அத சொல்லுங்க. வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரில மென்னு துப்பிருவாளுங்க…” என்று அவளும் இணக்கத்துடன் முணுமுணுக்க,
“அதை இந்த தம்பிட்ட எப்படி சொல்ல?…” என்று பூங்கோதை புலம்ப,
“உங்களுக்கும் தம்பியா?…” என்றாள் மகிழ்.
“என்னடி சொல்லுற?…” என புரியாமல் அவர் பார்க்க மகிழின் கையை கிள்ளிய லட்சுமி முறைப்புடன் பார்த்தாள்.
அவர்களின் முணுமுணுப்பை பார்த்தபடியே வாசுதேவன் அமர்ந்திருந்தான். பார்வை மொத்தமும் மூன்று பெண்களிடம் தான் இருந்தது. அவனுக்கு தெரிந்தது தன்னை பற்றிதான் பேச்சு என்று.
அதிலும் லட்சுமியின் முறைப்பும் படபடப்பும். அவளிடம் தன் பார்வையை ஆழமாய் செலுத்தினான்.
தங்களிடம் எதுவும் பேசாமல் அவன் மகளை பார்ப்பதை உணர்ந்த தாமோதரன் சற்று சங்கடமாக அவனை தங்கள் பக்கம் திருப்ப பார்த்தார்.
“அவ்வளவு தானா? அதுக்கென்னங்க மாப்பிள்ளை. நல்லா பேசலாம்…” என்ற தாமோதரன்,
“என்ன தினேஷ், வா வந்து உட்கார். அவரோட பேசிட்டிரு…” என்று மகனை மருமகனின் அருகில் அமர்த்தியவர்,
“கோதை போய் மாப்பிள்ளைக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா…” என மனைவியை அனுப்பியவர்,
“மகிழு, லட்சுமியை கூட்டிட்டு போய்…” என சொல்லி முடிக்கும் முன்,
“லட்சுமிட்ட தனியா பேசனும் நான். சொன்னேன் தானே?…” என்றான் மீண்டும் அடாவடியாய்.
“என்ன? என்ன?…” என்று ஆளாளுக்கு ஒவ்வொரு என்ன என்று கேட்டு அதிர்ச்சி பார்வை பார்க்க லட்சுமியோ “போச்சு” என்று கண்களை இறுக்கமாய் மூடி திறந்து உதடுகளை அழுந்த மூடினாள் பேசமாட்டேன் என்பதை போல.
“என்ன இத்தனை என்ன? நான் கட்டிக்க போற பொண்ணுக்கிட்ட பேசனும். இதுல ஷாக் ஆக என்ன இருக்கு?…” என அவன் கேட்க பதில் சொல்லவே அத்தனை யோசனை தாமோதரனுக்கு.
வெட்டு ஒன்று என பேசும் அவனிடம் சமாளிக்கும் விதமாய் எதுவும் பேச முடியாததே கஷ்டமாய் போனது.
இதில் இவன் வந்தது அவனின் குடும்பத்திற்கு தெரியுமா என்றே தெரியாது. வாசுதேவகிருஷ்ணன் வரமாட்டான் என்று முத்துவேல் சொல்லியிருக்க காலையில் பேசும் பொழுது கூட அவனும் வருகிறான் என்று அவர் குறிப்பிடவே இல்லை.
அனைத்திற்கும் மேலாக மாப்பிள்ளை வந்ததும் முத்துவேலின் குடும்பமே அவனை அதிர்வுடன் பார்த்ததை தாமோதரன் கண்டுவிட்டார். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.
இப்பொழுது அவன் வந்து நின்றதும், பேசுவதும் மறுத்தாலும் பிரச்சனை தான். பேசினாலும் என்ன பேசுவானோ என்று யோசனை. மகளை திரும்பி பார்த்தார்.
அவளோ வேண்டாம் என்பதை போல பார்வையால் கெஞ்சிக்கொண்டிருக்க தினேஷ் பேசட்டும் என கிசுகிசுக்க எழுந்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் கிளம்பறேன். உங்க பொண்ணு பத்திரமா இருக்கட்டும். கல்யாணம் ஆனா பின்னால பேசிக்கறேன்…” என்று சொல்லி வாசலுக்கு திரும்ப அனைவரும் பதறிவிட்டனர்.
“ஐயோ என்ன மாப்பிள்ளை இது? பேசறது எங்க வச்சுன்னு தான் யோசிச்சோம். வேற ஒண்ணுமில்லை. லட்சுமி கொஞ்சம் பயந்து சுபாவம் வேற. நீங்க உட்காருங்க…” என்று பூங்கோதை தான் பேசினார்.
“பயந்த சுபாவமா?…” என்றவன் “அப்படியா” என அவளிடம் பார்வையால் கேட்க ஐயோ என்றானது லட்சுமிக்கு.
“அண்ணி நான் மாட்டேன். என்னால பேச முடியாது. அவர் பார்வையே சரியில்லை. முறைக்கிறார். வேண்டாம் சொல்லுங்க…” என்று மகிழின் காதில் முணுமுணுக்க,
“மாமா சொல்லிருந்தா கூட பரவாயில்லை. பேசினது உங்கம்மா. இதுக்கு மேல எதுவும் இல்லை. நான் சொல்ல மாட்டேன். வாங்கி கட்டனுமா என்ன? போய் பேசிட்டு வா. அதான் தம்பின்னு தோளை எல்லாம் தட்டி கூப்பிட்டிருக்கியே…” என்று மகிழ் கிண்டலாய் சொல்ல,
“என்னை நம்பி உங்க பொண்ணையே வாழ்க்கை முழுக்க வாழ என்னோட அனுப்ப போறேங்க. ரெண்டு நிமிஷம் உங்க முன்னாடி பேச அனுப்பமாட்டேன்னு சொல்றீங்களே. அவ்வளோ கஷ்டம் எதுக்கு? நான் வந்திருக்க கூடாது தான்…” என்றவனின் பேச்சில் இருந்த இறுக்கத்தில் பெண்ணை பெற்றவர்களாய் பதறித்தான் போயினர்.
“அப்படியெல்லாம் இல்லைங்க மாப்பிள்ளை, நீங்க உட்காருங்க…” என்ற தினேஷ்,
“லட்சுமி வந்து உட்கார்…” என்ற தினேஷ்,
“அம்மா, குடிக்க எதாச்சும் கொண்டு வந்து வச்சுட்டு நீங்க போங்க. நானும் அப்பாவும் வெளில இருக்கோம்…” என்று சொல்லி வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்தனர். வாசு, லட்சுமி இருவருவம் தெரியும் விதமாய்.
மகிழும், பூங்கோதையும் இருவருக்கும் குடிக்க டீ கொண்டு வந்து வைத்துவிட்டு அடுப்படியில் ஆளுக்கொரு புறமாய் நின்றுகொண்டனர்.
வாசுதேவகிருஷ்ணனுக்கு சிரிப்புதான் வந்தது அவர்களின் செயலில். இப்படி சுற்றி வளைத்து காவலுக்கு அமர்ந்திருப்பதை போல இருப்பதை கண்டு.
“என்ன தாமு, மாப்பிள்ளை வந்த காரு திரும்ப இங்க நிக்குதே…” என கேட்டபடி அந்த ஊர் பெரியவர் வந்தார்.
மெதுவாய் தலையை உயர்த்தி ஜன்னலுக்கு வெளியே பார்க்க அவர் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தார் போலும். கேட்டுக்கொண்டே சென்றுவிட்டார்.
மீண்டும் திரும்பி லட்சுமியை பார்க்க அவளோ மிக தீவிரமாய் தன் கை விரல்களையும் நகத்தையும் ஆராய்ந்துகொண்டிருந்தாள்.
“ஹ்ம்ம், அப்பறம் சொல்லுங்க அக்கா…” என்று அவன் ஆரம்பிக்க,
[the_ad id=”6605″]
“அக்காவா?” என்று லட்சுமி சட்டென நிமிர்ந்து பார்த்ததும்,
“என்னை தம்பின்னு சொல்றப்போ அக்கான்னு சொல்லனும் தானே?…” என கேட்கவும் அவளின் முகம் அசடு வழிந்தது. அவனிடம் காட்டிக்கொள்ளாமல் குனிந்தவள்,
“வேணும்னு ஒன்னும் சொல்லலை. நீங்கன்னு தெரியாது. அதான்…” என்றால் மெதுவாய், மெல்லிய குரலில்.
“பார்ர வாய்ஸ் இவ்வளோ மைல்டா வருது. என்ன ஒரு அதிகாரம்? என்னையே கலாய்ச்ச தான நீ? பாக்கிஸ்தான் பாடரான்னு. உன்னை பார்த்தா அப்பாவி மாதிரி லுக். ஆனா செஞ்சது…” என்று கிண்டலாய் சொல்லியவன்,
“எவ்வளோ தைரியம் உனக்கு. ஹ்ம்ம்…” என்றான் சற்று மிரட்டாலாய்.
“ப்ளீஸ் கோவப்படாதீங்க. எல்லாரும் பார்க்காங்க…” என்று நிமிராமல் குனிந்தபடி அவள் சொல்ல அவனும் சுற்றி பார்த்தான்.
நால்வரின் பார்வையும் இங்கே இவர்களை பார்த்தபடி தான் பட்டும் படாமல் பார்த்தும் பாராமல் இருந்தது.
“நானே போலீஸ்க்காரன். ஆனா உன் குடும்பமே என்னை டவுட்டா பார்க்குது. எல்லாம் என் நேரம்…” என வாய்விட்டு சொல்லியவன்,
“உன்னை இன்னைக்கே தூக்கிட்டா போய்ட போறேன். இல்ல என்ன பண்ணிடுவேனாம்? இப்படி பார்க்கறாங்க. இப்ப இந்தளவுக்கு என்கிட்டே உன்னை தனியா விட பயப்படறவங்க எப்படி கட்டிக்குடுக்க சம்மதிச்சாங்க?…” என அவளிடம் கேட்க,
“எனக்கு தெரியாது…” என்றாள் ஒரே பதிலாய்.
திரும்பவும் அடுக்களையில் இரண்டு தூண்களோடு தூணாய் நின்ற மாமியாரையும் அவரின் மருமகளையும் பார்த்தவன் சட்டென தனக்கு எதிரே இருந்த லட்சுமியை நெருங்கி குனிந்தபடி அமர பூங்கோதை நெஞ்சில் கை வைத்துவிட்டார்.
“ஏய் இவளே என்னடி இது?…” என்று மருமகளிடம் கேட்க,
“ஹ்ம்ம், இப்படி பார்த்துட்டே இருந்தா அவருக்கும் பேச தோணாதுல. பொண்ணு மாப்பிள்ளையை இப்படி நடு கூடத்துல தனியா பேசுங்கன்னு உட்கார வச்சுட்டு சுத்தி நாம நின்னா அவரு என்ன தான் செய்வாரு. அவருக்கும் லட்சுமிக்கிட்ட பேச ஆசை இருக்கும்ல…”
மகிழ் வேண்டுமென்றே மாமியாருக்கு இடித்துரைக்க அவர் வருங்கால மருமகனை விட்டுவிட்டு மகிழை முறைத்தார்.
“ஏன்டி பேச மாட்ட? நானே எப்படா இவர் கிளம்புவருன்னு நெருப்பை கட்டிட்டு இருக்கேன். நீ வேற…” என்று புகைய,
“அடடா இது ஊர் உலகத்துல இல்லாத மாதிரி. இப்படி எங்கயுமே பேச மாட்டாங்களா? சும்மா இருங்க…” என்று மகிழ் சொல்ல,
“எந்த ஊரு உலகத்தில என்ன நடந்தா எனக்கென்ன? என் வீட்டுல ஏன்டி நடக்கனும்? வாய மூடு. என்னைய கிண்டாத பாத்துக்க…” என்று அவளை உஷ்ணத்துடன் எச்சரிக்க அபாயக்கோட்டில் நிற்பதை அறிந்து மகிழும் தன் வாய்க்கு பூட்டுப்போட்டுக்கொண்டாள்.
“நான் உள்ள போறேன். இதை வேடிக்கை பார்த்து எனக்கென்ன?…” என சொல்லி சென்றுவிட துணைக்கு ஆள் இல்லாமல் பூங்கோதை இப்பொழுது மகளை பார்க்கவும் முடியாமல் மருமகளை திட்டிக்கொண்டு தானும் சற்று உள்ளடங்கி நின்றார்.
மகிழ் இருந்தாலாவது பேசிக்கொண்டிருந்தோம் என்று சொல்லலாம். அவளும் இல்லாமல் தான் மட்டும் நின்றால்? அதனால் பூங்கோதை அப்படி நிற்க வேண்டியதாகிற்று.
இவர்களை கவனித்துக்கொண்டே லட்சுமியை பார்வையால் துளைத்தபடி அவளிடம் பேசினான் வாசுதேவகிருஷ்ணன்.
“உன் பேர் என்ன?…” என்றான்.
“உனக்கு தெரியாதா?” என்பதை போல நொடி பொழுதில் வியந்த பார்வை பார்த்துவிட்டு அவனுக்கு பதில் கூறினாள்.
“லட்சுமி…”
“உன் முழு பேர் என்னன்னு கேட்டேன்? லக்கன பத்திரிக்கை வாசிச்சப்போ வேற பேர் சொன்னாங்களே?…” என்றதும்,
“அபூர்வலட்சுமி…” என்றாள்.
“நிமிர்ந்து பார்த்து, என்னை நிமிர்ந்து பார்த்து பேசு. பதில் சொல்லு. நானும் உன் முகத்த பார்க்க குனிச்சுட்டே இருக்க முடியாது பாரு. இல்லை நானே வந்து முகத்தை நிமிர்த்தனுமா?..” என சொல்ல ஒரு அதிர்வுடன்,
“அபூர்வலட்சுமி…” என்றாள் மீண்டும் அவனை பார்த்து.
“குட்…” என்று மெச்சிக்கொண்டவன்,
“உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?…” என்றான்.
சிரித்த முகமாய் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தால் லட்சுமியும் வெட்கப்பட்டுக்கொண்டே பதில் சொல்லியிருப்பாளோ என்னவோ?
அவன் ஏதோ விசாரணை கைதியை கேட்பதை போல கேட்க அவனின் குணமே இது தானோ என முதன் முதலாய் லேசாய் அச்சம் கொண்டாள். கொஞ்சமும் திருமணம் செய்யபோகும் பெண்ணிடம் பேசுவதை போலவே இல்லை அவனின் பேச்சு.
“உன்கிட்ட தான் கேட்டேன் பூர்வா…” என்றான் ஞாபகப்படுத்தும் விதமாய்.
“லட்சுமி…” என்றாள் அவனுக்கு தன் பெயரை உணர்த்துவதை போல.
“அபூர்வலட்சுமி தானே உன் பேர்…”
“ஹ்ம்ம், ஆனா இங்க எல்லாருமே என்னை லட்சுமின்னு தான் கூப்பிடுவாங்க…”
[the_ad id=”6605″]
“அப்போ எல்லாரும் கூப்பிடற மாதிரியே நானும் உன்னை கூப்பிடனும்னு சொல்றியா?…” என்று அவன் கேட்டதற்கு திருதிருவென்று அவள் விழிக்க அதில் விரும்பியே லயித்தவன்,
“உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு. பெருசா குண்டுகுண்டா…” ரசனையிலும் வராத ஒருவகை ரசனையில் அவன் சொல்ல இன்னும் விழி விரித்து அவள் பார்க்க,
“இந்த பேர்க்கு பதில் உனக்கு கண்மணின்னு வச்சிருக்கலாம். உன் கண்ணுக்குள்ள இருக்கிற அந்த கருவிழி பெரிய சைஸ் கோலிக்குண்டு இங்கயும் அங்கையும் உருண்டுட்டு இருக்கற மாதிரி. தண்ணிக்குள்ள மீன் மிதக்கற மாதிரி. ப்ச், ஏன் இந்த பேர் உனக்கு வைக்கலை?…”
அவன் சொல்ல சொல்ல என்னமாதிரி உணர்ந்தாள் என்றே பிரித்தறியமுடியாத வகையில் அவள் அமர்ந்திருந்தாள். ஆராய்ச்சி பார்வையாக இருந்தவனின் குரல் இன்னும் அதே விசாரணை தன்மை தான்.
ஆனாலும் குழப்பினான். அவன் என்ன மாதிரி மனிதன் என்று அறியவிடாமல். கண்களில் ரசனையோ ஆசையோ தெரியவில்லை. மறைத்தானா வரவில்லையா என்று புரியாமல் அவனின் முகத்தை அப்படி பார்த்து வைக்க அவளின் பார்வையில் வாசுதேவன் மெலிதாய் புன்னகைத்தான்.
“என்ன என் கண்ணுக்குள்ள உன்னை தேடுறியா?…” என்றதும் தான் தன்னுணர்வு வந்தவளுக்கு தூக்கிவாரி போட்டது.
“என்ன இவரை இப்படி பார்த்திட்டு இருக்கேன்?” என நொந்துகொண்டவள் அடிவயிற்றுக்குள் நொடியில் பறந்த லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகளின் படபடப்பை மறைத்து சட்டென பேச்சை மாற்ற,
“உங்களுக்கு என்னை எப்படி கூப்பிடனுமோ கூப்பிடுங்க…” என்றாள் உடனடியாக. அவளின் முயற்சி புரிந்தவன்,
“இங்க நீ தாமோதரன் பொண்ணு. சோ லட்சுமியகவே இருந்துக்கோ. எனக்கு பூர்வா தான். ஐ மீன் வாசுதேவகிருஷ்ணன் வொய்பை எப்படி கூப்பிடனும்னு அவன் தான் டிஸைட் பண்ணனும். காட் இட்…” என்று சொல்ல பொதுவாய் தலையசைத்து வைத்தாள் அவள்.
குழப்பமும், அவனின் பேச்சும், பார்வையும் பெண்ணவளின் மனதை அலைகழித்துக்கொண்டு இருந்தது. அதில் அவன் தன்னை மனைவி என்று வலியுறுத்தியதை கவனிக்க மறந்தாள்.