அவனுக்கு தன்னை பிடிக்கிறதா? பிடிக்கலையா? என்ற குழப்பத்திலேயே அவனை பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தாள். தெளிவாய் இருந்தவளை தன் பேச்சால் நன்றாக குழப்பினான்.
“இப்ப சொல்லு, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா? உன்கிட்ட கேட்டாங்களா?…” என்று கேட்டவன் மனசாட்சி,
“உன்னை மட்டும் கேட்டாரா அந்த வேலு?” என்று எள்ளல் பாடியது.
“எங்க வீட்டில எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான். அவங்க என்ன சொன்னாலும் எனக்கு சரி….” என பொத்தாம் பொதுவாய் பதில் சொல்ல,
“அப்போ உனக்கு புடிக்கலைன்னு சொல்றியா?…” என்று அவன் அமர்த்தலாக கேட்கவும்,
“அச்சோ அப்படியெல்லாம் இல்லை. எனக்கும்…” என்று வார்த்தையை நிறுத்தி இதழ்களை அழுத்தமாய் மூடியவளின் முகம் முத்துமுத்தாய் வியர்க்க ஆரம்பித்தது.
அவளின் திடீர் மாற்றத்தை அடக்கப்பட்ட புன்னகையுடன் சுவாரஸியமாய் பார்த்தவன் பார்வை ஒரு நொடிக்கும் அதிகமாய் அவளின் இதழ்களில் நிலைத்து மீள ஒரு உல்லாச மனநிலையுடன்,
“உனக்கும்?…” என்றான் மீண்டும் அவளின் முகம் நோக்கி குனிந்து மீண்டும் கேட்க அவனின் அருகாமையில் விரல்களை அழுத்தமாய் நெறித்தவள் அமர்ந்திருந்த இருக்கையுடன் ஒட்டிக்கொண்டு,
“எனக்கும் தான்…” என சொன்னதை மீண்டும் சொல்லியவள் அந்த வார்த்தையை நேரடியாக அவனிடம் சொல்ல வெகுவாய் தயங்கினாள்.
“பூர்வா, உன்கிட்ட கேட்க தான் திரும்பி இவ்வளவு தூரம் வந்திருக்கேன். சொல்லு. உனக்கு என்னை கல்யாணாம் செய்ய விருப்பம் தானே?…” என கனிவாய் கேட்டவனின் குரலில் இருந்த குழைவில் நிமிர்ந்து பார்த்தவள் அவனின் பார்வை வேறுபாட்டில் பேச மறந்தவளாய் பார்க்க,
“பூர்வா…” என்றான் மீண்டும் அழுத்தமாய்.
[the_ad id=”6605″]
“சம்மதம். எனக்கு சம்மதம்…” என்று வேகமாய் சொல்லிவிட்டு அதற்கு அங்கே அவனின் முன் அமர முடியாமல் எழுந்து ஓடிவிட்டாள்.
அவள் செல்லும் திசையையே பார்த்தபடி இருந்தவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றதும் வேகமாய் வந்தார் பூங்கோதை.
அவருக்கு அவன் கிளம்பிவிட்டான் என்பதிலேயே பலத்த நிம்மதி. “ஹப்பா” என்னும் ஆசுவாச மூச்சுடன் வெளியே இருந்த கணவரையும், பிள்ளையையும் அழைத்துவிட்டார். ஆனாலும் ஒரு மரியாதைக்காக அவனிடம் வார்த்தையை விட்டார்.
“அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க? சாப்பிட்டு போகலாங்களே மாப்பிள்ளை…” என்று நின்றவரை பார்த்ததும் வழக்கமான அவனின் குணம் தலைதூக்க மீண்டும் அமர்ந்துவிட்டான்.
“சரிதான் அத்தை. லஞ்ச், ரெடி பண்ணுங்க. சாப்பிட்டே போறேன். நீங்க இத்தனை சொல்லி நான் மறுத்தா நல்லா இருக்காது பாருங்க….” என்று அமர்ந்தவன் அந்த மரசோபாவில் நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“வெயில் வேற பயங்கரமா இருக்குது. அப்படியே குடிக்க மோர் குடுங்க. நான் இங்கயே கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்…” என்று வேறு சொல்லிவிட பூங்கோதை செயலற்று போனார்.
“மார்னிங் ப்ரேக்பாஸ்ட் சூப்பரா இருந்தது. நீங்க பண்ணினதாமே? அதுவும் அந்த வடை, கேசரி அமிர்தம்…” என்று வேறு சொல்லி பூங்கோதைக்கு கிடுக்கிப்பிடி போட,
“ஹ்ம்ம், ஆமா ஆமா…” என்று சொல்லியவர் தாமோதரனை பார்க்க அவர் மனைவியை முறைத்தார்.
“அப்பறம் மாமா, சொல்லுங்க உட்காருங்க ஏன் நிக்கறீங்க?…” என்று அவர்கள் வீட்டில் அவர்களை அவனே உபசரிக்க வேறு வழியின்றி அமர்ந்தனர்.
“போ, போயி மோர் எடுத்துட்டு வா…” என பல்லை கடித்துக்கொண்டு பூங்கோதையை சொல்லியவர் அவனருகே அமர்ந்தார்.
அவர் அமரவும் சிரிப்புடன் அவர்களை பார்த்தவன் அதற்கு மேலும் சோதிக்காமல் கிளம்ப நினைக்க அவனின் மொபைல் அழைத்தது.
“சொல்லுங்க துரை…” என பேச மறுபுறம் என்ன பேசினார்களோ அவனின் முகமே கடுகடுவென கடுமையை பூசியது.
“நீங்க நம்ம கஸ்டடில எடுத்து கவனிங்க. வந்து இன்னைக்கு அவனை புழிஞ்சிடறேன்…” என்று உறுமிவிட்டு மொபைலை பாக்கெட்டில் போட்டவன் அங்கிருந்தவர்களை அப்பொழுதுதான் கவனித்தான்.
பேயறைந்த முகம் போல அனைவரின் முகமும் வெளுத்திருந்தது. அசையாமல் அப்படி அப்படியே சிலை போல நிற்க “சுத்தம்” என நினைத்துக்கொண்டவன் தொண்டையை செருமிக்கொண்டு,
“ஓகே, நான் கிளம்பறேன். ஒரு முக்கியமான வேலை ஆகிடுச்சு. இன்னொரு நாள் வரேன்…” என்றவன் இன்னொருநாள் வரேன் என்பதை பூங்கோதையை பார்த்து சொல்ல சட்டென தெளிந்து,
“திரும்பவுமா?” என்னும் பாவனைக்கு மாறினார் மாமியார்.
அதை பார்த்து நமுட்டு சிரிப்புடன் திரும்பி மாமனாரையும், மச்சினரையும் பார்த்து சொல்லிவிட்டு பின் சத்தமாய்,
“பூர்வா…” என்று அழைக்க பூங்கோதைக்கு தன் மகளைத்தான் என்று விளங்கவே இல்லை. யாரையோ போல நினைத்து அவனையே பார்க்க அடித்து பிடித்து மாடியில் இருந்து ஓடி வந்தாள் லட்சுமி.
அவன் அழைத்த சத்தம் அப்படி. வேகமாய் வந்தவள் குடும்பத்தினரை பார்த்துவிட்டு பின்தங்கி நின்று அவனை பார்க்க,
“பை பூர்வா, ஸீ யூ லேட்டர்…” என கை ஆட்டிவிட்டு கிளம்பிவிட மகிழ்தினி ஆவென்று பார்த்தாள்.
“என்னங்க இது?…” என பூங்கோதை கேட்க,
“கொஞ்சம் வாய மூடு, இல்லைன்னா திரும்ப வந்து நிக்க போறாரு. வா அவரை வழியனுப்புவோம். அப்பத்தான் கிளம்பினாறான்னே தெரியும்…” என்று மகனையும் கூட்டிக்கொண்டு வெளியே அவனின் பின்னால் சென்றார்கள்.
“என்ன சொல்லு லட்சுமி, ஆனாலும் உங்கண்ணனுக்கு இம்புட்டு சமத்து போதாது…” என மகிழ்தினி லட்சுமியை கிண்டலாய் பேச அதை எல்லாம் கவனிக்கும் நிலையிலா இருந்தாள்?
நினைப்பு மொத்தமும் அவன் பேசி சென்றதிலேயே இருக்க என்ன பேசினான் என ஓட்டி பார்த்துக்கொண்டே இருந்தாள்.
வெளியே வாசுதேவகிருஷ்ணன் வந்து காரை கிளப்பும் நேரம் அக்கம்பக்கத்தினர் அனைவரும் எட்டி பார்க்க அதற்கே பூங்கோதை நொந்துபோனார்.
“இனி இவளுங்களுக்கு பதில் சொல்லனுமே?” என்றபடி பார்க்க, மருமகனோ தன் பின்னே வந்தவர்களை பார்த்தவன்,
“நான் நிஜமாவே கிளம்பிடுவேன், நீங்க பயப்பட வேண்டாம்…” என அடக்கப்பட்ட புன்னகையுடன் சொல்லிவிட்டு காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
“நாம பயப்படறோமா? என்ன சொல்றாரு இவரு?…” என தாமோதரன் மகனிடம் கேட்க,
“பின்ன மூஞ்சியில எழுதி ஒட்டிவச்சது மாதிரியே நின்னு பாத்தா? அதான் கண்டுபிடிச்சுட்டாரு. தப்பா நினைப்பாரோ?…” என பூங்கோதை சொல்லிக்கொண்டே உள்ளே சென்றுவிட தாமோதரனும் தினேஷும் அப்பொழுதே திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்.
காரில் சென்று கொண்டிருந்த வாசுதேவகிருஷ்ணன் ஒரு ஆலமரத்தடி டீக்கடையை பார்த்ததும் காரை மெதுவாய் நகர்த்திவிட்டு நிறுத்தியேவிட்டான் அங்கிருந்த மனிதரை பார்த்து.
லட்சுமியின் வீட்டில் தன்னை பச்சைப்பிள்ளை என்று சொல்லிய அந்த மனிதர் தன் நண்பர்களுடன் சேர்ந்து டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்தார்.
காரை விட்டு அவன் இறங்கி அதில் சாய்ந்து நின்றுகொண்டே அவரை பார்க்க அவரோ இவனின் காரை பார்த்ததுமே அவனை பார்க்காதது போல டீயை குடித்தவரிடம்,
“உங்களைத்தான் தம்பி பாக்குறாரு. போய் என்னன்னு கேளுங்க…” என உடன் அமர்ந்திருந்தவர் சத்தமாய் சொல்லிவிட வேறு வழியின்றி அவனை நோக்கி சென்றார்.
“வாங்க மாப்பிள்ளை, என்ன எதையாவது விட்டுட்டு போய்ட்டீங்களா?…” என அந்த பெரியவர் கேட்க,
“ஆமா, உங்களை தான் கூட்டிட்டு போகத்தான் வந்தேன். என்னை சென்னையில் யாரும் பச்சைப்பிள்ளைன்னு நம்பமாட்டேன்னு சொல்றாங்க. அதான் நீங்க வந்து அடிச்சு சொன்னா நம்புவாங்க. உங்களுக்குத்தான் என்னை பார்த்ததும் தெரிஞ்சதே…” என்றான் சிரிக்காமல்.
“நானா? நான் என்ன வந்து?…” என்று திகைக்க,
“உங்களை பார்த்தா எங்கப்பாவ பார்க்கற மாதிரியே இருக்கு…” என்றான் கூடுதலாய் அதே முகபாவனையில் சிரிக்காமல்.
“இவனை பார்த்தா பாசமா சொல்ற மாதிரியே தெரியலையே” என்று அவனின் முகத்தையே பார்க்க,
“உங்க பேர் என்ன?…” என்றான்.
“சுந்தரம்…”
“சுந்தரம், பத்திரம்…” என சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுவிட எதற்கு வந்தான், என்ன பேசினான் என்று நினைத்துக்கொண்டே மீண்டும் டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தார் அவர்.
காரில் சென்று கொண்டிருந்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு நடந்தவற்றை நினைக்க நினைக்க.
[the_ad id=”6605″]
“யார்க்கிட்ட” என தன் மீசையை முறுக்கிக்கொண்டவனின் மொபைல் மீண்டும் சிணுங்க எடுத்து பார்க்க தன் அண்ணன் மருதவேல்.
“டேய் போலீஸ்க்கார்…” என்று நக்கலாய் அவன் கேட்க,
“சொல்லுடா மாருதிக்கார்…” என்றான் இவனும் நக்கலாய்.
“சென்னை ரீச் ஆகிட்டியா?…” என்று சந்தேகமாய் கேட்க,
“தெரிஞ்சு என்ன பண்ண போற? யாரு உங்கப்பா கேட்க சொன்னாரா?…” என சரியாக கேட்டுவிட,
“உன் போலீஸ் புத்தியை குடும்பத்துக்குள்ளையும் காண்பிக்கற. ஏன் அம்மா கேட்க மாட்டாங்களா?…” என மருதவேல் வம்பு பேச,
“அம்மா கேட்கனும்னா என் கிட்ட நேரடியா கால் பண்ணி தான் கேட்பாங்க. உங்கப்பா மாதிரி இல்லை…” என சொல்ல,
“ட்ரைவிங்ல இருக்கியா நீ? இன்னுமா சென்னை போகலை?…” என கேட்க,
“ரொம்ப திங்க் பண்ணாதே. பொண்ணு பார்த்தீங்களே அவளோட பையனை பேச வைக்கனும்னு யாருக்காச்சும் தோணுச்சா? வயசு பையன், நானா வாய் விட்டு கேட்பேன்…”
“என்னடா சொல்ற?…” மருதவேலுக்கு பதட்டமாகியது.
“கேட்க வெக்கப்பட்டு பேசாம இருந்தா அப்படியே விட்டுட்டு போய்ட்டீங்க. அதான் உங்க கடமையை நான் செஞ்சுட்டு வந்துருக்கேன்…”
“என்ன?…”
“பொண்ணை பார்த்துட்டு, தனியா பேசிட்டு, அவங்க வீட்ல லஞ்ச் முடிச்சுட்டு, நைட்க்கு பேக்கும் பண்ணிக்கிட்டேன். இதை உன் அப்பாவுக்கு சொல்லிடு…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட மீண்டும் மீண்டும் அழைத்த அண்ணனின் அழைப்பை எடுக்காமல் சாலையில் கவனத்தை செலுத்த சற்று நேரத்திற்கெல்லாம் அன்புக்கரசி அழைத்துவிட்டார்.
அவரின் அழைப்பை எடுக்காமல் இருக்க முடியாதே. இதை எதிர்பார்த்தே இருந்ததால் அட்டன் செய்ய இவன் எடுத்ததுமே படபடத்தார் அவர்.
[the_ad id=”6605″]
“என்னடா பண்ணி வச்சிருக்க? ஏன் அங்க திரும்ப போன? நீ வந்ததே உங்கப்பாவுக்கு புடிக்கலை. உன்மேல ஏகப்பட்ட கோபம் ஏற்கனவே. திரும்பவும் இப்படி பண்ணி வச்சிருக்க. இது உங்கப்பாவுக்கு தெரிஞ்சா?…”
“எல்லாம் தெரிஞ்சதால தான் பண்ணேன். அவர் சொன்னா நான் சரின்னு வந்து சரின்னு போகனுமா? நான் அவ்வளோ ஈஸியா? ஏதோ பேசி முடிச்சுட்டீங்கன்னு தான் சரின்னு இருக்கேன். இல்லைன்னா அங்கவே பொண்ணை புடிக்கலைன்னு சொல்லிருப்பேன்…”
மகனும் அவரின் படபடப்பிற்கு கொஞ்சமும் சளைக்காமல் பதில் கொடுக்க அன்புக்கரசிக்குத்தான் மூச்சு வாங்கியது. தாயின் அமைதியில் சற்று இறங்கி வந்தவன்,
“தப்பா எதுவும் பேசலைம்மா. இந்த கல்யாணம் நடக்கும். உங்களுக்கு இப்ப நிம்மதி தானே?…” என்று அவரின் மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தையை சொல்ல,
“இப்பத்தான் எனக்கு சந்தோஷம் வாசு…” என நிம்மதியான குரலில் சொல்ல,
“உங்க புருஷனையும் அமைதியா இருக்க சொல்லுங்க. ரொம்ப பண்ணினாருன்னா நீங்களுமாச்சு உங்க கல்யாணமும் ஆச்சுன்னு போய்ட்டே இருப்பேன்…” என்று வேறு பேச,
“அடேய்…” என்ற தாயின் அலறலில்,
“நைட் பேசறேன்…” என வைத்துவிட்டு சென்னையை நோக்கி சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
மனதெல்லாம் கலவையான எண்ணங்கள். கவலைக்கு இடமளிக்காத பக்குவப்பட்ட எண்ணங்கள்.