நிஜம் – 31
அந்த மத்திய சிறைச்சாலையில் அந்த சிறைக்கம்பிகளுக்கு அப்பால் முடி இல்லாத சொட்டை தலையை கோபத்துடன் சொறிந்தபடி இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தார் அந்த முன்னாள் அமைச்சர். இந்நாள் கைதி ஆதிமூலம்.
“யோவ் நிஜமாவே நான் பண்ணலையா. சொன்னா புரியாம திரும்ப திரும்ப பேசிட்டு இருக்க. நான் தான் சொன்னேன்ல. கேனைத்தனமா என் மருமகன் என்னத்தையோ செஞ்சி இப்படி ஒரு சிக்கலை இழுத்துவிட்டிருக்கான். நானே என்னைக்குடா இதுல இருந்து வெளில வரன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…”
“ஆனா அது அவருக்கு தெரியுமா ஸார்? இப்ப லாரி ட்ரைவர் மாட்டிக்கிட்டான். உங்க மருமகனே பண்ணினாலும் வாசு ஸார் உங்களை தான் நினைப்பாரு…” என்று ஜெயிலர் முருகன் அவரிடம் வாதிட,
“சும்மா இல்லாம நாலு நாளைக்கு முன்னாடி கொஞ்சம் கோவமா பேசிட்டேன். அந்த போலீஸ்காரனை எதாச்சும் பண்ணினா தான் மனசாரும்னு. இப்படி சிக்கலை இழுத்துவிடுவான்னு நினைக்கவே இல்லை…” என சொல்லிக்கொண்டிருந்தார்.
“கூப்பிட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாலும் நம்ப மாட்டான் கிறுக்குப்பையன். இப்ப என்ன பண்ண?…” என யோசிக்கும் பொழுதே முருகனின் மொபைல் சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகம் பேயறைந்ததை போல மாற,
“என்னய்யா? என் மூஞ்சில என்ன எழுதியா ஒட்டிருக்கு? முதல்ல யாருன்னு பார்த்து தொலை…” என ஆதிமூலம் எரிந்துவிழ,
“ஸார் வாசுதேவகிருஷ்ணன் ஸார்…” என்று பயத்துடன் சொல்ல,
“நினைச்சேன், அவனுக்கு மூக்கு வேர்த்துடுமே. என்னத்தையாச்சும் சொல்லி சாமாளி…” என சொல்ல முருகன் அட்டன் செய்து காதில் வைக்க,
“என் போன் எடுக்க கூட அந்தாளு பர்மிஷன் வேணுமாய்ய்யா உனக்கு?…” என்றான் எடுத்த எடுப்பில். ஆள் எதுவும் வைத்து கண்காணிக்கிறானோ என்ற சந்தேகத்துடன்,
“ஸார், இல்லை வேலையா விசாரிச்சுட்டு இருந்தேன்…” என முருகன் சொல்ல,
“விசாரணை முடிஞ்சு தண்டனைல கம்பி எண்ணிட்டு இருக்கற கைதிக்கிட்ட உனக்கு என்ன விசாரணை?…” என கிடுக்கிபிடி போட பதில் சொல்லமுடியாமல் திணறினான் அவன்.
“போனை மூலத்துக்கிட்ட குடு…” என கட்டளையாய் வந்த குரலில்,
“ஸார் அதெப்படி அவர்கிட்ட…”
“இன்னைக்கு காலையில ஒம்பது மணிக்கு எப்படி குடுத்தியோ அப்படித்தான் குடுன்றேன்…” என சொல்ல அவன் வேவு பார்க்கபடுவது தன் போனிலும் கூட என்பது அப்பொழுதுதான் முருகனுக்கு புரிந்தது.
“என்னய்யா இன்னும் உனக்கு யோசனை? சரி விடு அந்தாளுக்கு ஒரு போன் குடுத்து வச்சிருக்கல, அதுக்கு கூப்பிட்டுக்கறேன்…” என சொல்ல,
“ஸார் அப்படிலாம் நான் வாங்கி குடுக்கலை. என் போன்ல தான் எப்பவும் பேசுவாரு. நம்புங்க ஸார்…” என படபடக்க,
“அதான் சொல்லிட்டியே உன் போன்ல தான் பேசுவாருன்னு. அப்ப அந்த போனை குடு…” என சொல்லவும் ஆதிமூலம் மறுக்க மறுக்க போனை கையில் தந்துவிட்டு தான் உளறியதை நினைத்து எரிச்சலுடன் நின்றான் முருகன்.
“என்னய்யா மூலம் உனக்கு மோளம் அடிச்சது பத்தாது போல இருக்கேன்? இன்னும் அடங்கமாட்டாம சுத்திட்டு இருக்கியே?…” என்று வாசுதேவகிருஷ்ணன் எள்ளலாக சொன்னாலும் அதில் இருந்த கோபத்தை ஆதிமூலம் நன்றாகவே உணர்ந்தார்.
செல்வாக்குடன் இருந்தவரை செல்லாக்காசாக்கி இன்று இப்படி நிர்கதியாக நிற்க வைத்தவனின் மீது கொலைவெறிதான். ஆனாலும் என்ன பிரயோஜனம்? தனக்கு இப்பொழுது அரசியல் வட்டாரத்தில் கூட மதிப்பில்லை. உதவவும் யாருமில்லை. பல்லை கடித்துக்கொண்டு,
“இங்க பாருங்க தம்பி, அந்த ஆக்ஸிடென்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஏதோ என் மருமகன் விவரம் புரியாம பண்ணின வேலை…” என சொல்ல,
“இதுக்குத்தான் கால் பண்ணினதா நான் சொல்லாமலே கரெக்ட்டா சொல்லிட்ட. மூலம் மூளை நாலு மூலைக்குள்ளயே நல்லா வேலை பண்ணுது போல…” என சிரிக்க,
“ஸார் அதான் நான் சொல்லிட்டேனே…” என ஆதிமூலம் பயத்துடன் பேச,
“அதெப்படி ஆக்ஸிடென்ட் பண்ணினா உடனே நான் மனோகரனை டவுட் பண்ணுவேன்னு நினைச்ச நீ? கிரிமினல்ய்யா…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட,
“யோவ் என்னய்யா இது போனை வச்சிட்டான். என்ன பண்ண போறானோ? என் மருமகனுக்கு போனை போடுய்யா…” என சொல்லும் பொழுதே மீண்டும் அழைத்த வாசுதேவகிருஷ்ணன்,
“முருகன், உங்க போஸ்ட்டிங் மாத்தலாம்னு ஒரு ஐடியா? நாகர்கோவில் போறீங்களா?…” என கேட்க,
“ஸார் நான் என் சீட்டுக்கு போறேன்…” என சொல்லிவிட்டு ஆதிமூலம் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் முருகன் வெளியேறிவிட ஆதிமூலத்துக்கு புரிந்துபோனது இனி தன் பேச்சு எடுபடாது என்று.
கோபத்துடன் போனை வைத்துவிட்டு இன்னும் குறையாத உஷ்ணத்துடன் லத்தியை சுழற்றியபடி கண்ணை மூடி அமர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“துரை அந்த மூலத்தோட மருமகன் இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருக்கனும்…” என்று உத்தரவிட்டு அவனின் அடுத்த வேலையை ஆரம்பித்தான்.
அவனுடைய உத்தியோகத்தில் நித்தமும் இப்படியான ஆட்களை சமாளித்துதான் ஆகவேண்டும். அதிலும் அதனை திறம்பட சமாளிப்பதில் வல்லவன் வாசுதேவகிருஷ்ணன்.
நாட்கள் மாதங்களாக கடக்க மகிழ்தினிக்கு பெண் குழந்தை பிறக்க பூங்கோதைக்கு மகள் உண்டாகியிருப்பதும் பேத்தி பிறந்திருப்பதும் ரெட்டிப்பு மகிழ்ச்சி. என்ன ஒன்று வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை மசக்கைக்கு அனுப்ப முடியாதென சொல்லிவிட்டதில் சிறு மனத்தாங்கல் தான். ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.
அன்று முத்துவேல் வீட்டில் ராணியும், செல்வமும் வந்திருந்தார்கள். அவர்களுடன் முத்துவேல் பேசிக்கொண்டு இருக்க மருதவேலும், அன்புக்கரசியும் இறுக்கமாக நின்றுகொண்டு இருந்தார்கள்.
“இது என்னம்மா ராணி? லவ்வு அது இதுன்னு? நம்ம குடும்பத்துக்கு சரிவருமா சொல்லு? பவானிட்ட நான் பேசறேன். நான் சொன்னா கேட்பா. நைட்டு அவளை வீட்டுல வந்து பார்க்கறேன்…” என தன்மையாக பேசிக்கொண்டு இருக்க,
“அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை. எங்களுக்கு எங்க பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். அவ விருப்பம் என்னவோ அதுப்படிதான் நாங்க நடந்துப்போம். அவ விருப்பப்படி கல்யாணத்தை முடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்…” என செல்வம் சொல்ல முத்துவேல் விக்கித்து போய் அமர்ந்திருந்தார். ஆனாலும் சமாளித்து,
“ஹ்ம்ம், சரி முடிவு பண்ணிட்டீங்க? மாப்பிள்ளை வீட்டுக்கு எப்ப போயி பேசனும்?…” என தாய்மாமனாக கேட்க,
“அது எதுவும் அவசியமில்லைன்னு மருமகன் சொல்லிட்டார். பவானியும் தான். பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. நேரா கல்யாணம் தான். கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும்…” என்று எழுந்து திருமண அழைப்பிதழை நீட்ட வாங்க மறந்தவராக அப்படி நின்றிந்தார் முத்துவேல்.
“என்னம்மா இது? இவரு என்ன சொல்றாரு?…” என நம்பமுடியாத பார்வையுடன் தங்கையை பார்த்து கேட்க ராணியோ,
“அவர் என்ன சொல்றாரோ அதை மீற என்னால முடியாதுண்ணே. அவரே உன்கிட்ட பேசறேன்னு சொல்லவும் நான் சொன்னா நல்லா இருக்காதுல. அதான் எதுவும் சொல்லலை. கண்டிப்பா வந்திரனும் எல்லாரும்…” என ராணியும் சொல்ல மருதவேலுவுக்கு தந்தையின் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது.
“பவானி…” என முத்துவேல் கேட்க,
“அவ பர்ச்சேஸ்ல பிசியா இருக்கா. இங்க வர நேரமில்லைன்னு சொல்லிட்டா. இப்ப கூட கூப்பிட்டோம். மாப்பிள்ளை கூட வெளில கிளம்பிட்டா…” என்று பெருமையாக செல்வம் சொல்ல வேகமாய் அந்த பத்திரிக்கையை வாங்கிக்கொண்ட அன்புக்கரசி,
“ரொம்ப சந்தோஷம், கண்டிப்பா வந்திடறோம். நீங்க புறப்படுங்க. இன்னும் அழைக்க வேண்டிய சனங்க ஏகப்பட்டவங்க இருப்பாங்க தானே?…” என கத்திரிப்பதை போல பேசிவிட்டார். ராணிக்கு முகமே விழுந்துவிட்டது. செல்வம் அசட்டையாக பார்க்க,
“அண்ணி எதுவும் நினைக்காதீங்க, வாசுவுக்கு தனியா வைக்கலை. அவனும் இந்த வீட்டு பையன் தானே? நாங்களே பிரிச்சு குடுத்த மாதிரி ஆகிட கூடாதேன்னு…”
“நீ வச்சாலும் அவன் வரமாட்டான். எதுக்கு ராணி இந்த சப்பைக்கட்டு? விடு. இதெல்லாம் எவ்வளவோ பார்த்தாச்சு…” என சிரித்துக்கொண்டே முகத்திலறைவதை போல பேசிவிட்டார் அன்புக்கரசி.
இப்படி பேசுவார் என எதிர்பாராத ராணி அதிர்ந்து போய் பார்க்க செல்வத்திற்கு புரிந்துபோனது அன்புக்கரசியின் கோபம் ஏனென.
“சரிம்மா கிளம்புறோம். வந்துருங்க…” என சொல்லவும் தலையசைத்து அனுப்பி வைத்தார் அன்புக்கரசி.
“என்ன அன்பு…” என பாவமாய் கேட்டவரை பார்த்தவருக்கு மனதே கலங்கி போனது அன்புக்கரசிக்கு.
“அப்பா இப்பவாச்சும் புரியுதா? பாருங்க அவங்களை. இதுதான் அவங்க புத்தி. நீங்க தான் தலையில தூக்கிவச்சு கொண்டாடினீங்க. பாருங்க அவங்க எங்க வச்சிருக்காங்கன்னு…”
“பெரியவனே நீ பேசாம இரு. அந்த மனுஷனே நொந்து போய் இருக்காரு. இனி எவளுக்கும் இங்க மரியாதை இல்லை. இவருக்காக தான் நானும் பொருத்து போனேன். இந்த மனுஷனையே தூக்கி போட்டுட்டாங்க…” என கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தவர்,
“இன்னும் எவளாச்சும் மாமான்னு வாசல்ல காலை வைக்கட்டும். கொழுக்கட்டை குடுக்கனுமாம் கொழுக்கட்டை. குடுத்தா பாருங்க கொழுக்கட்டை…” என்று திட்டிக்கொண்டே அங்கும் அங்குமாக நடந்தவர்,
“போயி வேலையை பாருங்க. நாம உழைச்சாத்தான் நமக்கு சோறு. யாரையும் சீராட்டினா அள்ளி குடுத்துட மாட்டாங்க. நமக்கும் நிறைஞ்சிடாது…” என்று அன்றைக்கு வைத்து தீட்டு தீட்டென்று தீட்டியவர் பவானியின் திருமணத்திற்கு கூட சபைக்கு தாய்மாமன் என சென்று நின்றுவிட்டு அன்புக்கரசி அழைக்கவும் உடனே வந்துவிட்டார்.
பவானியிடம் பேச கூட தோன்றவில்லை. அத்தனை வேகத்தில் அவரை இருக்க விடாமல் அன்புக்கரசி கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
அடுத்து சில நாட்கள் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு சுற்றி வந்தவர் அடுத்து குதிக்க ஆரம்பித்தது விமலாவின் வளைகாப்பை ஒட்டி.
“புரியாம பேசாதீங்க. அங்க அவளை யார் பார்த்துப்பா? நாம தான பார்த்துக்கனும்…” அன்புக்கரசி சொல்ல,
“அன்பு, உனக்கு தெரியாதா? இது என்ன பேச்சு முறை தெரிஞ்சும்? வளைக்காப்பு போட்டு அனுப்பினா அடுத்து புள்ளையை பெத்துட்டு தான் கூட்டிட்டு வரனும்…” என்று பிடிவாதமாக சொல்ல விமலாவிற்கு மனதே சரியில்லை.
“அத்தை விடுங்கத்தை, நான் அங்க சமாளிச்சுப்பேன். அப்பாவுக்கு சமைக்க வர ஆச்சி ஒருத்தவங்க வருவாங்க. பார்த்துக்கலாம்…” என்று விமலா சமாளிக்க,
“நீ சும்மா இருடி. என்னைய விட யாரு உன்னை நல்லா பார்த்துப்பா? பேசாம இரு…” என அன்புக்கரசி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே,
“அன்பு நீ பேசாம இரு. இது முறை கிடையாது…” என முத்துவேல் சொல்ல,
“அம்மா அதான் அப்பா சொல்றார்ல. பேசாம இருங்க. அவர் சொன்னது சரிதான்….” என்று மருதவேல் சொல்லவும் அன்புக்கரசி அவனை முறைக்க விமலாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“கேட்டுக்கோ? அவனே சரின்னுட்டான்…” என முத்துவேல் பெரிய மகனை பெருமிதமாக பார்க்க,
“ஆமாப்பா, விமலா அவங்கப்பா வீட்டுக்கே போகட்டும்…” என்று சொல்லியவன்,
“மறுநாள் நான் அவ கூட போய் அங்க தங்கிக்கறேன். அங்க இருந்து நான் அவளை பார்த்துப்பேன். அம்மா இங்க இருந்தே என்ன செய்யனும்னு சொல்லட்டும். முடியும் போது அப்பப்ப கடைக்கு வந்து போறேன்…” என்று சொல்லவும் முத்துவேல் நெஞ்சை பிடிக்காதது தான் குறை.
“பெரியவனே…” என முத்துவேலும், அன்புக்கரசியும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.
அதிர்ச்சியுடன் முத்துவேல் அழைத்தார் என்றால் ஆச்சர்யத்துடன் அன்புக்கரசி அழைத்தார்.
“ஆமாம்ப்பா, அதான் சொல்றேன். நீங்க சொல்ற மாதிரி முறையும் மாறாது. உங்க பேச்சும் மீறாம நடந்துக்குவோம்…” என சொல்ல,
“என்ன விளையாடுறியா? இதெல்லாம் நல்லா இல்லை…” என்று சொல்ல,
“அப்பா ஒன்னு விமலா இங்கயே தான் இருப்பா. இல்லையா நான் அவ கூட போய் இருக்கேன். எது சரின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ஆனா இந்த ரெண்டுல ஒன்னு நடக்கனும்…” என சொல்லவும் முத்துவேல் அவர்களை முறைத்துவிட்டு கோபத்துடன் எழுந்து வெளியே சென்றுவிட,
“அட அட அட, என் மகன் பேசறதை கேட்க இன்னும் ஒரு பத்து காது குடுத்திருக்க கூடாது அந்த கடவுள். சரியான கஞ்சத்தனம் பண்ணின கடவுள்…” என மருதவேலின் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தவர்,
“இப்பத்தான்டா மனசு குளிர்ந்து போச்சு. உன்னை பெத்ததுக்கு எனக்கு பெருமை சேர்த்துட்ட. அன்னைக்கு சொன்னேன் நீ இப்படி இருப்பன்னு தெரிஞ்சா இவளை கட்டிவச்சிருக்கவே மாட்டேன்னு சொன்னேன். இப்ப நீ இப்படி பேசறது தெரிஞ்சா…”
“இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா அத்தை?…” என விமலா கிண்டலாக கேட்க,
“செஞ்சிட்டாலும். இதை பேசவே இவனுக்கு இத்தனை வருஷம் ஆகிருக்கு. இதுல இன்னொன்னு. போயி பொழைப்பை பாருங்க புருஷனும் பொண்டாட்டியும்…” என சொல்லிவிட்டு அவர் செல்ல மருதவேலின் தோளில் சாய்ந்துகொண்டாள் விமலா.
“ஏய் அப்பா வந்துற போறாருடி. இப்ப பார்த்து மேல சாயிற?…” என கேட்டுக்கொண்டே விமலாவின் தோளில் ஒரு ஆகியும் வயிற்றில் ஒரு கையுமாக அணைத்து பிடித்தபடி லிப்டில் ஏறி மாடிக்கு செல்ல விமலாவின் மனது சொல்லொண்ணா ஆனந்தத்தில் தத்தளித்தது.
கீழே உள்ள அறைகள் சற்று சிறியதாக வசதி கம்மியாக இருந்ததென்பதால் முத்துவேல் உடனடியாக லிப்ட் அமைக்கும் வேலையில் இறங்கி செய்தும் முடித்துவிட்டார்.
ஏற்கனவே விமலா தாயான போதே செய்ய வேண்டும் என இருந்தவர் அன்புக்கரசி தான் தடுத்து வைத்திருந்தார் இப்போதைக்கு வேண்டாம் என்று. அபூர்வாவும் உண்டாகவும் யார் பேச்சையும் கேட்காமல் உடனடியாக போட்டுவிட்டார்.
“சின்ன மருமக என்னைக்கோ வந்தாலும் அவங்கவங்களுக்கு அவங்கவங்களுக்கு கட்டின அறையில இருக்கட்டும். அவங்களுக்கு போகத்தான் எதுவும்…” என்று முடித்துவிட்டார்.
இரவு உணவிற்கு கூட வராமல் கடைக்கும் வராமல் இருக்க அன்புக்கரசி மருதவேலிடம் கேட்க,
“எனக்கும் தெரியலைம்மா. போன் பண்ணினா எடுக்கமாட்டேன்னு இருக்காரு…” என்று சொல்லவும்,
“இதை சொல்ல உனக்கு இம்புட்டு நேரமா? முதல்லையே சொல்லவேண்டியது தான?…” என்று பதைபதைப்புடன் இருக்க வாசுதேவகிருஷ்ணன் அழைத்துவிட்டான்.
“ஒரு பெரிய மனுஷனை குடும்பத்தோட வீட்டை விடு அனுப்பிருக்கீங்களே? இது நியாயமா?…” என வேகமாய் சிரிப்புடன் கேட்டதும்,
“அந்த மனுஷன் அங்க வந்து உன்கிட்ட புகார் பாடுனாராக்கும்? குடுடா போனை அவர்கிட்ட…” என்று சொல்லியவர் முத்துவேல் “ம்ம்ம்” எனவும்,
“இப்படி காலம் போன கடைசியில என்னை விட்டு தனிக்குடித்தனம் போகனும்னு நினைப்பீங்களா? இதுக்கா நானு இம்புட்டு நாலு எம்புருஷன் எம்புருஷன்னு சிலுத்துக்கிட்டு திரிஞ்சேன். ஒத்த பேச்சுக்கு வெளி நடப்புல காட்டிடீங்கள்ள….”
“அன்பு, நான்…”
“பேசாதீங்க. இனி அங்கேயே இருந்துக்கங்க. அன்பாம் அன்பு. நான் வைக்கறேன்…” என்று சொல்லி போனை வைத்துவிட,
“இப்ப இங்க வந்தேன்னு ஏன்டா நீ சொன்ன?…” என வாசுவிடம் எகிற,
“இல்லைப்பா நீங்க ரொம்ப சங்கடப்பட்டு பேசினீங்க. அதான் என்னன்னு கேட்போம்னு தான் போன் பண்ணினேன்…” என கிண்டலை மறைத்து ஆதங்கத்துடன் பேசுவதை போல அவன் பேச,
“எப்பா இது உலகமகா நடிப்புடா சாமி” என பார்த்தாள் அபூர்வா.