“என்னாச்சுப்பா…” என கேட்க,
“தாத்தா தும்த்தத்தா ப்ளே…” என ஆராதனா முன்வந்து சொல்ல,
“என்னடாம்மா? புரியலையே…” என கேட்க,
“என்னை குத்திட்டாங்கடா ரெண்டுபேரும் சேர்ந்து…” என்று சிறுபிள்ளை போல புகார் சொல்ல,
“அப்படியாடா? ஏன் அப்படி பண்ணுனீங்க? தப்பு…” என சொல்ல,
“நீ கேளேன் எப்படி அடிச்சாங்கன்னு…” என முத்துவேலும் எடுத்து கொடுத்தார்.
“அப்பா, விடுங்கப்பா குழந்தைங்கட்ட நான் சொல்லி வைக்கறேன்…” என வாசுதேவகிருஷ்ணன் கண்களை மூடிக்கொண்டே சொல்ல,
“பார்த்தியா? என்ன ரெண்டு வாண்டும் அடிச்சுச்சுன்னு சொல்றேன். இங்க ஒருத்தரும் என்னன்னு கேட்கலை….”என சொல்ல,
“அப்பா சின்ன பிள்ளைங்க விளையாடிருப்பாங்க. வேணும்னா சொன்னாங்க?…”
“இங்க வாடாய்யா. தாத்தாவை என்ன பண்ணுனீங்க? உன் அப்பனுக்கு காமி…” என்று கேட்க குடுகுடுவென ஓடிய வருணேஷ் உடனே,
“தும்த்தத்தா…” என்று கையை வைத்து குனிந்து சொல்லி உடனே அவரின் கன்னத்தில் குத்திவிட்டான்.
“ஆஹ்….” என கத்தியவர்,
“பார்த்தியா இப்படித்தான்…” என சொல்ல,
“நானு, நானு….” என ஆராதனாவும் வர,
“புள்ளைங்களை கெடுத்து வச்சிருக்கான். என்னத்தை எல்லாம் சொல்லி குடுத்துருக்கான் பாரு…” என சொல்ல அதற்குள் பெண்கள் மூவரும் ஆளுக்கொரு தட்டுடன் வெளியே வந்தனர்.
“முதல்ல இதை சாப்பிடுங்க. வலி போயிரும்…” என்று கொண்டு வந்து வைக்கவும்,
“அம்மா, முதல்ல டீயை குடுங்க. குடிச்சுட்டு சாப்பிடறேன்….” என வாசுதேவகிருஷ்ணன் புருவம் சுருக்கி சொல்ல,
“உனக்கு லட்சுமி சுக்குமல்லி டீ போட்டிருக்கா. தலையை புடிச்சுட்டு உட்கார்ந்திருக்கன்னு…” என்று அவனிடம் நீட்ட வாங்கிக்கொண்டவன் அபூர்வாவை பார்த்து கண்சிமிட்டிவிட்டு புன்னகையுடன் குடிக்க ஆரம்பித்தான்.
“நீங்களும் எடுத்துக்கோங்க…” என முத்துவேலுவுக்கு நீட்ட விமலா மருதுவின் அருகே அமர்ந்துகொண்டாள். இரு பிள்ளைகளுக்கும் பாலை ஆற்றி குடுக்க ஆரம்பிக்க,
“தும்த்தத்தான்னா என்னய்யா? எனக்கு செஞ்சு காமியேன்….” என இப்பொழுது அன்புக்கரசி கேட்க,
“அம்மா அது கராத்தேக்கு வணக்கம் சொல்லுறது. ஆமா கராத்தேயா குங்க்பூவா?…” என யோசிக்க,
“ரொம்ப முக்கியம்…” என முத்துவேல் முறைக்க,
“ஐயோ அப்பா அது சும்மா விளையாட பூர்வாவுக்காக சொல்லி குடுத்தது…” என வாசுதேவகிருஷ்ணன் அலுப்புடன் சொல்ல,
“எது தும்தும்னு துப்பற மாதிரியா?…” என கேட்க அவரை தவிர அனைவருமே சிரித்துவிட பேரன், பேத்திகளும் சேர்ந்து கை தட்டி சிரிக்க முத்துவேலுவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“வாய்யா, வாம்மா…” என்று இருவரையும் அமர்த்தி கொஞ்சினார்.
இப்பொழுதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் கோபம் வருகிறதோ அதே அளவுக்கு சென்றுவிடும் குழந்தைகளை பார்க்கும் பொழுது.
பேத்தியை அன்பு அன்பு என கொண்டாடியவர் பேரன் அப்படியே தன் இளையமகனை கொண்டு பிறந்திருக்க,
“புள்ளையை கூட அவனை மாதிரியே பெத்துருக்கான் உன் மவன். அப்படியே அவனோட அறிவு. சிரிப்பு எல்லாம் வாசு தான்…” என அன்புக்கரசியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போவார் முத்துவேல். அதில் பெருமையே மிதமிஞ்சி இருக்கும்.
டீ குடித்துவிட்டு மாடிக்கு உறங்க சென்ற வாசுதேவகிருஷ்ணன் இரவு உணவிற்கு தான் எழுந்து வந்தான். அவனை பார்த்ததுமே அபூர்வா,
“இப்ப தலைவலி பரவாயில்லையாங்க?…” என்றவளிடம் தலையசத்தவன்,
“எங்க குட்டீஸை?…” என தேட,
“மாமாவும், அத்தையும் கோவிலுக்கு போயிருக்காங்க. புள்ளைங்களோட விமலாக்காவும், மாமாவும் கடைக்கு போய்ட்டாங்க…” என சொல்லியபடி உணவை எடுத்து டேபிளில் வைத்துக்கொண்டு இருக்க இரு கைகளையும் மேலே தூக்கியபடி நெட்டிமுறித்தவன்,
“கண்மணி மட்டும் தனியா இருக்கீங்களா?…” என்று பின்னால் வந்து கட்டிக்கொண்டான்.
“இது கூட நல்லா இருக்குல பூர்வி. பொண்டாட்டி பக்கத்துல உட்கார கூட பெரியவங்க இருக்காங்களா இல்லையான்னு பார்த்து பார்த்து பதறி விலகி ப்ச், அது ஒரு தனி பீல். கொஞ்சம் நாள் இங்கயே கூட இருக்கலாம்னு தோணுது…”
“கேடி நீங்க, அப்ப கூட கொஞ்சம் நாள் தானா?…” என சிரித்தவள்,
“ஆமா தான். இங்க ஒரு கட்டுப்பாடு இருக்கும். வரைமுறை இருக்கும். கூட்டு குடும்பத்தோட இருக்கும் போது குழந்தைகளுக்கு இன்னும் நல்லது கேட்டது தெரியும். அவங்க நாம பெரியவங்களை எப்படி பார்க்கறோம்னு பார்த்து வளருவாங்க. நாம சொல்லி தரனும்னு அவசியமில்லாம புரிஞ்சு உணர்ந்து வளருவாங்க…”
“போதும் பூர்வி, சும்மா போட்டு படுத்தாத. ஒரு பேச்சுக்கு சொன்னா?…” என்றவன் கண்கள் லேசாய் சிவந்து போய் இருக்க,
“எண்ணை வச்சு குளிங்கன்னா கேட்கறதே இல்லை….” என்றவள் மீண்டும் அடுக்களைக்குள் செல்ல,
“உன்னை வச்சு குளிக்கன்னா நான் எப்ப வேண்டாம்னு சொன்னேன்?…” என சத்தமாய் கேட்டுக்கொண்டே சோபாவில் அமர ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டவள்,
“உங்களை…. எப்பா சாமி, என்னமும் பண்ணுங்க. இனி நான் கேட்கலை. கேட்கவும் மாட்டேன்…” என்று அவளும் உள்ளிருந்தே குரல் கொடுக்க,
“அவன் என்ன சொல்லி கேட்கமாட்டேன்னு சொல்றமா?…” என்றபடி உள்ளே வந்தார் முத்துவேல்.
“மாமா…” என அவரை திடுக்கிட்டு பார்க்க வாயில் கையை வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தவன் கண்கள் சிரிக்க,
“வேணும்னே மாட்டி விட்டீங்களா நீங்க?…” என்று அவனை பார்த்து பார்வையால் முறைத்தவள்,
“ஒண்ணுமில்லையே மாமா. சாப்பிடறாங்களான்னு கேட்டேன், அதுக்கு…”
“எல்லாரும் வரட்டும்னு சொல்லிருப்பான். சரின்னு சொல்லேன்ம்மா. என்னைக்கோ வரீங்க, வரப்ப சேர்ந்து சாப்பிடறது நல்லது தான?…” என சொல்லி,
“ஆளு தான் முரட்டுப்பய. ஆனா சொல்லுற யோசனையெல்லாம் உசத்தியா தான் இருக்கும்…” என்று அப்பாவியாய் சொல்லி செல்ல,
“இவர் வேற என்ன பேசினார்ன்னு தெரியாம பாதில கேட்டுட்டு…” என திருதிருவென விழித்தவள் கணவனை முறைக்க அவனோ கண்ணடித்து சிரித்து வைத்தான்.
“இப்ப என்ன? அவனுக்கு தலை வலி வேற. அதான் சாப்பிட்டு தூங்க சொல்லியிருப்பா. இது ஒரு தப்பா?…” என அன்புக்கரசி சொல்ல,
“அதுக்கில்ல அன்பு…” என்றவரை,
“முதல்ல சாப்பிடுவோம். வாங்க…” என சொல்ல,
“இரு துணியை மாத்திட்டு வரேன். பெரியவனுக்கு போனை போடு…” என சொல்லி உள்ளே செல்ல,
“ஏன் லட்சுமி, எல்லாத்தையும் ஒத்தையா செஞ்சியாக்கும். நான் தான் வரேன்னு சொன்னேன்ல…” என கேட்டுக்கொண்டே சமைத்ததை பார்த்துவிட்டு,
“சரி நீ போய் உட்காரு…” என அனுப்ப,
“இதோ விமலாக்காவே வந்துட்டாங்க…” என சொல்லி வாசலை பார்க்க குழந்தைகளுடன் உள்ளே வந்தார்கள்.
“இவ்வளோ நேரம் சாப்பிடாம கடையில என்னடா ஆட்டம் உங்களுக்கு?…” என இருவரையும் கூட்டிக்கொண்டு சென்ற அபூர்வா குழந்தைகளை கை கால் கழுவி உடை மாற்றிக்கொண்டு அழைத்து வந்து டேபிளில் அமர்த்தி சாப்பாட்டை ஊட்ட மருதுவும் விமலாவும் வாசுவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“அப்பா வந்தாச்சு. வாங்க சாப்பிடலாம்….” என அன்புக்கரசி அழைக்கவும் அனைவருமாக அமர்ந்து சாப்பிட்டு முடிக்க,
“ம்மா, டீ…” என்றான் இளைய மகன்.
“இவன் ஒருத்தன் ஆவுனா கருப்பு காபியை கேட்டுக்கிட்டு…” என்று சொல்லி போட போக,
“நீங்க இருங்கத்தை நான் போடறேன்….” என்று அபூர்வா எழுந்து செல்ல பிள்ளைகள் முத்துவேலுவுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
“நாளைக்கு உன் மாமியார் வீட்டுல வரவும் சாயங்காலமே கிளம்பிருவோம் வாசு. அப்பத்தான் காலையில நித்திய கல்யாணத்தை பார்க்க முடியும். முடிச்சுட்டு கிளம்பி வருவோம்…” என அன்புக்கரசி திட்டங்களை சொல்ல வண்டிக்கு சொல்லியது சாப்பிட என பேச ஆரம்பித்தனர்.
அதற்குள் டீ வந்துவிட ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொள்ள விமலாவின் அப்பாவையும் விரைவிலேயே வர சொல்ல வேண்டும் என்பதை அவளுக்கு அபூர்வா நினைவுப்படுத்தினாள்.
அவர்களுடன் நாயகம் குடும்பமும் வர இருப்பதால் பெரிய வண்டியையே பிடித்திருந்தார்கள்.
“சரி சரி பேசுனதையே எத்தனைவாட்டி பேசுவீங்க? போயி எல்லாரும் தூங்குங்க…” என முத்துவேல் சொல்ல புரையேறியது அபூர்வாவுக்கு.
“என்னம்மா? மெதுவா, மெதுவா…”என சொல்ல வாசுதேவகிருஷ்ணன்,
“ஆமா ஆமா…” என்று சொல்லி கண்கள் பளிச்சிட சிரித்தான்.
“அப்பா எப்பவும் பன்றது தானே? இன்னைக்குத்தான் இவன் வந்திருக்கான். ரெண்டுமாசமாச்சு இவன் இங்க வந்து. கொஞ்சம் நேரம் பேசிட்டு தான் இருப்போமே…” என மருது சொல்ல,
“நீங்க போய் படுங்க மாமா. நாங்க அப்பறமா போறோம்…” என விமலாவும் சொல்ல வாசுதேவகிருஷ்ணன் முகத்தில் கள்ளப்புன்னகை. அவனின் பார்வை அபூர்வாவை மொய்க்க அவளோ யாரையும் பார்க்காமல் அமைதியாய் டீயை குடித்துக்கொண்டு இருந்தாள்.
“ப்ச், அப்பா நல்லதுக்குத்தேன் சொல்லுவேன். நேரத்துக்கு தூங்கி நேரத்துக்கு எந்திக்கனும். அப்பத்தான நல்லது. சொல்லுறத கேளுங்க…” என மீண்டும் சொல்லிவிட்டு செல்ல,
“அம்மா, இவன் சும்மாவே போற இடமெல்லாம் தூங்குவான். இப்ப அப்பா சொன்னா மட்டும். ஹனிமூனுக்கு போன இடத்துலயே தூங்கினவங்க. சரி காலையில பார்ப்போம்…” என்று சொல்லி ஆராதனாவை தூக்க,
“இன்னைக்கு தாத்தா கூட தூங்கறோம்…” என பிள்ளைகள் குதிக்க,
“தாராளமா போங்க. ஆனா தாத்தாக்கூட தும்த்தத்தா விளையாட கூடாது. அது அப்பாட்டையும், அம்மாட்டயும் மட்டும் தான். சரியா…” என வாசுதேவகிருஷ்ணன் எச்சரித்தே அனுப்ப இரண்டும் குதூகலத்துடன் ஓடிவிட்டது.
“சரிடா காலையில பார்ப்போம்…” என மருதுவும் கிளம்பிவிட அன்புக்கரசி கதவடைக்க சென்றுவிட்டார். ஹாலில் யாருமில்லாமல் இருக்க,
“யக்கா…” என்று உல்லாச குரலில் அழைத்து உடல் குலுங்க அவன் சிரித்ததில் அவனை முறைத்தவள் அங்கேயே அமர்ந்திருக்க,
“லட்சுமி என்னம்மா போகலையா?…” என அன்புக்கரசி வரவும்,
“பாருங்கம்மா வான்னு சொன்னா அத்தை கூட பேசிட்டு இருக்கேன்னு சொல்றா. எனக்கு வேற தலை வலிக்குது…” என்று தலையை பிடிக்க,
“இப்ப அவ வரனும். அதை சொல்ல வேண்டியது தானேடா?…” என்றவர்,
“எல்லாரும் போயாச்சு. நானும் போறேன். ரெண்டும் உள்ள ஆடிட்டு இருக்கும்ங்க…” என சொல்லிவிட்டு ஹாலில் லைட்டை அமர்த்திவிட்டு மெல்லிய விளக்கை ஒளிரவிட்டு செல்ல,
“வா…” என அழைத்தபடி அவளுடன் லிப்டில் ஏறியவன் நேராக மொட்டை மாடிக்கு தான் சென்றான்.
“என்ன இங்க வந்தாச்சு?…” என கேட்டுக்கொண்டே சிலுசிலுவென வீசும் காற்றை அனுபவித்தபடி நின்றிருந்தாள் அபூர்வா.
“எங்கயும் போக விடாம நீ தான் என் ப்ளானுக்கு தண்ணி ஊத்தி மூடிட்டியே…” என சிரித்து,
“சும்மா கொஞ்சம் நேரம் இங்க இருப்போம்…” என்று அங்கே விரித்திருந்த பாயில் அமர்ந்தவன் சாய்ந்து அவளையும் தன் மீது சாய்த்துக்கொண்டான்.
“கண்மணி…”
“ஹ்ம்ம்…”
“அன்னைக்கு ஆக்ஸிடன்ட் நடந்த இடத்துல உன்னை பார்க்காம இருந்தா என்ன பண்ணிருப்பேன்?…”
“பவானி ஆறு தான் உங்களுக்கு…” என கிளுக்கி சிரித்தவளின் கேலியில் அவளின் கையை பிடித்து பின்பக்கமாக முறுக்கியவன்,
“உனக்கு மட்டும் வாய் இல்லையா? நான் பத்து வார்த்தை பேசினா ஒத்தை வார்த்தையில் என்னை மடக்கிடற. இதுக்கு பேர் என்னவாம்?…” என்றவன் அடுத்து பேசியதெல்லாம் ஸ்வீட் நத்திங்ஸ்.
இரவு நேரம் செல்ல செல்ல நடுநிசிவரை அங்கேயே இருந்தவர்கள் அதன் பின்னர் தான் உறங்கவே சென்றார்கள்.
மறுநாள் பூங்கோதை குடும்பம் சகிதமாக வந்துவிட மீண்டும் கண்ணாம்பூச்சி ஆட்டம் மாமியார் மருமகனுக்கிடையில். அவன் அமைதியாக இருந்தாலும் பூங்கோதை அவனை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. சிரித்தபடி வாசுதேவகிருஷ்ணனும் கடந்துவிடுவான்.
குடும்பமாக கிளம்பி திருப்பதி செல்ல திரும்பி வரும் பொழுது வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை சந்தித்த இடத்தை அன்புக்கரசிக்கு ரகசியமாய் காண்பிக்க,
“அங்க என்னடா தெரியுது?…” என எட்டிக்கொண்டு வந்து பார்த்தார் முத்துவேல்.
“வெள்ளை காக்கா பறக்குதாம். என்னையே ஏமாத்த பாக்குறான். இதுல நீங்க வேற எட்டிக்கிட்டு வந்து பாக்கறீங்க. போங்க போங்க. போயி இடத்துல உட்காருங்க. புள்ளைங்க கூட தனியா ஒன்னு பேசிற கூடாது…” என சொல்ல,
“என்ன அன்பு இதெல்லாம்?…” என முத்துவேல் கேட்க,”ஆரம்பிச்சுட்டாரு” என நினைத்தவர்,
“நான் தூங்கிட்டேன்…” என கண்ணை மூடி தலையை சாய்த்துக்கொண்டார் அன்புக்கரசி.
கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து ஒரு வாரம் ஆகிற்று. நள்ளிரவில் அவசரமாக இவன் கிளம்பிக்கொண்டு இருக்க குழந்தை வருணேஷ் நன்றாக உறக்கத்தில் இருந்தான்.
“நீ போய் படு பூர்வி. வருண் முழிச்சுக்க போறான். நானே கிளம்பிப்பேன் தானே?…” என உடையை மாற்றிவிட்டு வந்து சொல்லியவன்,
“என்ன அர்ஜன்ட்ன்னு தெரியலை கமிஷனர் ஸார் உடனே வர சொல்லிட்டார். சீக்கிரம் வந்துட்டா நாளைக்கு விழுப்புரம் போகலாம்…” என சொல்ல,
“அதெல்லாம் இருக்கட்டும், பார்த்துக்கலாம். இப்ப நீங்க டீயை குடிச்சுட்டு போனா இன்னும் கொஞ்சம் ப்ரெஷா இருப்பீங்க…” என அவனுக்கு கொண்டு வந்து தர வாங்கிக்கொண்டவன்,
“நான் வந்து கதவை திறந்துப்பேன். நீ எழுந்துக்க வேண்டாம். வெய்ட் பண்ணவும் வேண்டாம். புரியுதா? சொல்றதை கேளு…” என அவளுக்கு சொல்லிக்கொண்டு இருக்க அவனின் மொபைல் சிணுங்கியது.
“யார்ன்னு பாரு…” என்றதும் புது எண்ணாக இருக்க எடுத்து அட்டன் செய்தவள்,
“ஹலோ…” என்றதும்,
“வாசு சம்சாரமா?…” என மறுபக்கம் கட்டை குரலில் பேச,
“ஆமாங்க. நீங்க…” என கேட்டவள் ஸ்பீக்கரில் போட நிமிர்ந்து அமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“அது எதுக்கும்மா உனக்கு? இங்க பாரு, உன் புருஷன் வேணும்னா ஒழுங்கா இருக்கற வேலையை பார்த்துட்டு வந்தமா சேரை தேச்சோமா போனோமான்னு இருக்கனும். அதை விட்டுட்டு எல்லாத்தையும் நோண்டிடே தான் இருப்பானா?…” என மிரட்ட,
“சரிங்க, அதுக்கு இப்ப என்ன பண்ணனும்?…” என்றாள் சாவாகாசமாக.
“எம்மா, நான் சொல்லுறது புரியுதா உனக்கு?…” என்று மிரட்ட,
“சரிங்க, நீங்க சொன்னதை சொல்லிடறேன். உங்க பேர் சொன்னா அவர்கிட்ட சொல்ல வசதியா இருக்கும்…” என்று கேட்க மனைவி பேசுவதை புன்னகையுடன் பார்த்தபடி இருந்தவன் விரல்கள் அவளின் கன்னத்தில் கோலமிட்டபடியே இருந்தன.
“என்னது பேரா? அதெல்லாம் சொல்ல முடியாது. என்ன மாட்டிவிட பாக்குறியா?…”
“பேரை கூட சொல்லாம இருந்தா யார் பேசினாங்கன்னு கேட்ட நான் என்ன பதில் சொல்லுவேன்?…” என்று கிண்டலாய் பேச,
“நான் சொன்னதை மட்டும் சொல்லும்மா. போதும். ஒழுங்கா புருஷன் புள்ளைன்னு வாழ பாரு…” என்று சொல்லி வைத்துவிட மீண்டும் தன் போனில் இருந்து யாருக்கோ அழைத்தவன்,
“இப்ப என்னோட நம்பருக்கு லாஸ்ட்டா வந்த நம்பர். ஹ்ம்ம் டிரேஸ் பண்ணி சொல்லு. ஆள் மட்டுமில்லை. மொத்த டீட்டெய்ல்ஸ் வேணும். ஓகே…” என்று சொல்லி வைத்துவிட்டு,
“ஹ்ம்ம், தேறிட்ட பூர்வி…” என்று சில்லாகித்து கை தட்டியவன்,
“பேசாம எனக்கு அஸிஸ்ட் பண்ண வந்துடேன் என் கூடவே…” என அழைக்க,
“அங்கயும் வந்து…”
“வந்து…”
“அட கிளம்புங்க. நேரமாகுது…” என்று அவனை எழுப்ப,
“இன்னைக்காவது உன் கனவை முழுசா பார்த்து என்ன நடந்ததுன்னு சொல்லு…” என்று சொல்லி எழுந்து கொண்டவன்,
“என் கனவு தான் நிஜமாகிடுச்சே. அப்பறம் என்ன?…” என புருவம் உயர்த்தியவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன் அதை தன் உதட்டில் பதித்துக்கொண்டு,
“கண்மணி நானுன் நிஜம்ன்னு இப்போவாச்சும் புரியுதா?…” என அவளை அணைத்து விடுத்தவன்,
“பை பூர்வி…” என்று சொல்லி கடமையை காக்க கிளம்பினான் காவலன் அவன் வாசுதேவகிருஷ்ணன்.
காதலின் தனிமையையும் இனிமையையும் ஒரே சேர ரசித்தவனின் கனவு இதோ நிஜமென அவனின் கண்மணியை தர தான் கொண்ட வாழ்க்கையை கவிதையாய் அனுபவித்து வாழ்ந்து அவனின் கண்மணியும் தன் கண்மணிக்குள் வைத்து வாழவைத்தான்.
நேசித்த நெஞ்சம் கண்ட கனவு கனவாகி போகாமல் கண்மணியின் நிஜமானவனின் காதலும் சுகம்தானே.
நிறைவுற்றது