காதல் – 4
கமிஷனர் ஆபீஸ். வாசுதேவகிருஷ்ணன் அதிகபட்ச கோபத்துடன் ஆணையருக்கு முன் அமர்ந்து இருந்தான்.
“என்ன பண்ணிருக்கீங்க வாசு? மனுஷனுக்கு கோபம் வர வேண்டியது தான். அதுக்கு இப்படியா? இப்ப அவன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்…”
“சோ வாட்?…” என்றான் சற்று அலட்சியத்துடன்.
“இதென்ன இரெஸ்பான்சிபில் பிஹேவியர். தப்பு பன்றீங்க. உங்க கெரியரை நீங்க ஸ்பாயில் பண்ணிக்காதீங்க. ஒரு வெல்விஷரா சொல்றேன்…” என கமிஷனர் அவனிடம் பேச,
“அவன் என்ன பண்ணான்னு தெரியும் தானே? சின்ன சின்ன குழந்தைங்களை கடத்தி விக்கறான். அவனை சும்மா விட சொல்றீங்களா? போதா குறைக்கு இன்னும்…”
“வாசு…” என அவனை கை நீட்டி அமர்த்தியவர்,
“இதுல பெரிய தலைங்க எல்லாம் தலையிட்டு இருக்காங்க. சோ நாம தான்…”
“ஒளிஞ்சுக்கனும். அதானே?…” எரிமலையை உள்ளடக்கிய குரலில்.
“வாசு…” என்றவரின் அதிகபட்ச உஷ்ணம் அவனை அமைதிப்படுத்த,
“இந்த கேஸ்ல இருந்து உங்களை ரிலீவ் பண்ண சொல்லி ப்ரஷர். சோ யூ…”
“ஓகே ஸார், நான் கிளம்பறேன்…” என எழுந்துகொள்ள,
“இதென்ன வாசு பேசறப்போவே எழுந்து…”
“அடுத்து நீங்க சொல்ல போறது இது தான். அதான் அட்லீஸ்ட் உங்ககிட்டையாவது என்னோட நேச்சர் மாறாம இருக்கனும் இல்லையா?…” என்றவனின் பேச்சில் தன் நிலையை நினைத்தவர் அவனுக்காக மனம் வருந்தி,
“ஐம் ஹெல்ப்லெஸ் வாசு…”
“இட்ஸ் ஓகே. நான் அதை எதிர்பார்க்கலை…” அவன் இலகுவாய் வழக்கம் போல தோளை குலுக்கி முகம் மாறாமல் பேச சட்டென சுதாரித்தார் அவர்.
“வாசு எதாச்சும் ப்ளான் பன்றியா நீ?…” தனது வேலை, அவன் யார் என்பதை எல்லாம் விட்டுவிட்டு அவனின் நலம்விரும்பியாக அவனை முழுதாய் அறிந்தவராக அவனை பார்த்து சந்தேகிக்க மர்மமான புன்னகையுடன் தலையில் தொப்பியை வைத்தவன் நிமிர்வாய் ஒரு சல்யூட்டை அடித்துவிட்டு அவன் கதவின் பக்கம் திரும்ப,
“வாசு, நான் சொல்றதை கேளு. வாசு…” என்றவரை திரும்பி பார்க்காமல் கதவை திறந்து கொண்டு சென்றவனின் மேல் கவலை பிறந்தது.
“இளரத்தம், புரிஞ்சுக்க மாட்டேன்றானே?…” என நினைத்தவர்,
“புத்திசாலி சமாளிப்பான்” என்றும் சில்லாகித்துக்கொண்டார்.
வெளியே வந்த வாசுதேவகிருஷ்ணன் தனது ஷர்ட் பட்டனை கழற்றி மீண்டும் மாட்டிக்கொண்டே நடந்தான். கோபமான நேரங்களில் அவன் அதில் தான் காண்பிப்பான். வழக்கமாக அன்றும் செய்ய அவனுடன் வந்திருந்த துரை,
“என்ன ஸார்? என்ன சொல்றாங்க?…” என அவனின் பின்னால் ஓட்டமும் நாடியுமாய் அவனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க பார்க்க,
“கமிஷனர் தானே? வீட்டுக்கு போய் பொங்கலும், பாயாசமும் வச்சு சாப்பிட்டு சாமி கும்பிடனுமாம்…” என்றான் குறையாத கோபத்துடன்.
“ஸார்…” என்று பார்க்க,
“பின்ன என்ன? வழக்கமா இந்த மாதிரி பெரிய கேஸ்ல என்ன பண்ணுவாங்க? அதத்தான் இதுலயும் செஞ்சிருக்காங்க. இதுல அந்த நாய்க்கு சப்போர்ட்டா பெரிய இடமாம். ஆல் மாமாஸ் கேங். இதுவரை கேதர்பண்ணின எவிடன்சை எல்லாம் ஒப்படைச்சுட்டு ஓரமா போய் நில்லுன்னு துரத்தறாங்க….” என பல்லை கடித்து வாய்க்குள் இருந்து வரவிருந்த கெட்ட வார்த்தைகளை இருக்கும் இடம் உணர்ந்து உதட்டை கடித்து அடக்கினான்.
“இப்ப என்ன ஸார் பன்றது? ஆல்மோஸ்ட் கேஸ் ஓவர். ஆக்ஷன் எடுக்கறது ஒன்னு தான் பாக்கி…”
“அந்த பாக்கியை தான் வசூல் பண்ண விடமாட்டேன்றாங்களே துரை? சரின்னு மட்டும் சொல்லட்டும் உள்ள வச்சு புழிஞ்சிடறேன். நான் குடுக்கற ட்ரீட்மென்ட்ல அவனவன் பொண்டாட்டி, கிண்டாட்டியை எல்லாம் பாக்க முடியாதோன்னு கதறனும்…”
“கிண்டாட்டி?…” அதிமுக்கிய சந்தேகமாய் அவன் கேட்க,
“கட்டினவ பொண்டாட்டி…” என்றவனின் கிண்டாட்டிக்கான அர்த்தத்தை புரிந்துக்கொண்ட துரை வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான். “ஆனாலும் இவருக்கு லொள்ளுதான்” என நினைத்தவனாக,
“இனி இதுல நாம ஒண்ணுமே பண்ண முடியாதா ஸார்?…” என துரை கவலையாய் சொல்ல யோசித்தபடி ஒரு நொடி பார்த்தவன்,
“ஏன் பண்ண முடியாது? பச்சையப்பனை கூப்பிடுங்க துரை…” என்று அவன் சொல்லியதும்,
“என் மேல நம்பிக்கை வச்சு பொறுப்பை குடுங்க ஸார்…” என்று துரை உடனே பரபரக்க,
“அந்த தும்பிக்கை எல்லாம் எங்களுக்கும் தெரியும். எதுக்கு யாரை போடனும்னு. துரை சொல்றதை செய்ங்க நீங்க…” என்று சொல்லி வெளியேற துரையும் தனது மொபைலை எடுத்து பச்சையப்பன் என்பவனுக்கு அழைத்தான்.
[the_ad id=”6605″]
“பச்சை, ஹ்ம்ம், நம்ம ஸார் தான்…” என்று பேசியவன் சில சங்கேத வார்த்தைகளுடன் நண்பனிடம் பேசுவதை போல பேசிவிட்டு ஜீப்பை நோக்கி வந்தான்.
“என்ன பச்சை என்ன சொன்னான்?…” என்று வாசுதேவன் கேட்க,
“பேசியாச்சு ஸார். பக்கா…” என சொல்லவும் தான் துரையின் முகத்தில் ஒரு நிம்மதி.
“ஓகே கிளம்புவோமா?…” என்று சொல்லவும் அவன் பின்னால் ஏறிக்கொள்ள ஜீப் கிளம்பியது.
அடுத்த இரண்டாம் நாள் அனைத்து வலைதளங்களிலும், செய்திகளிலும் முழுக்க முழுக்க அந்த செய்தி தான்.
தன்னுடைய ப்ளாட்டில் தோசையை பிய்த்து சாப்பிட்டபடியே டிவியில் பார்வையை பதித்திருந்தான்.
அதில் ஒருவன் வாக்குமூலம் போல அனைத்தையும் பத்திரிக்கையாளர்களிடம் ஒப்புவித்துக்கொண்டிருந்தான். அவன் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த வாசுவின் எண்ணிற்கு கமிஷனரிடம் இருந்து அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவன்,
“குட்மார்னிங் ஸார்…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன். அவனின் குரலை அடையாளம் கண்டுகொண்ட கமிஷனர்,
“கேட்கவே மாட்ட தானே? எத்தனை தடவை சொன்னேன். இதை விடுன்னு. இப்ப பாரு பிரச்சனை பெருசாகிடுச்சு. யாரை கேட்டு பென்டிரைவ்வை லீக் பண்ணின? தப்பு வாசு…”
“நான் லீக் பண்ணலையே. ஆக்சுவலி என்கிட்டே இருந்தது ஒரே ஒரு காப்பி தான். அதை அப்படியே உங்கட்ட குடுத்துட்டேன். அதோட என் வேலை முடிஞ்சது. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…” என விட்டேற்றியாக அவன் பேசினாலும் அவருக்கு தெரியும் இது முழுக்க முழுக்க வாசுதேவகிருஷ்ணன் லீலை என்று.
“ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல செத்திருக்கான். அவன் கூட்டாளி இப்ப அப்ரூவர். இதை வச்சு கேஸை மூவ் பண்ணி முடிக்க பார்க்கறதை விட்டுட்டு என்னை கேட்கறீங்க…” என்று வேறு அவருக்கு யோசனை சொல்ல,
“ரொம்ப க்ளவர் நீ. செத்துருவான்னு தெரிஞ்சு அவனை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி அதுக்கொரு அட்டம்ட் பண்ணி கொன்னது அவனோட பாஸ்ன்னு எல்லாரையும் நம்ப வச்சு இப்ப அவங்க ஆள் ஒருத்தனையே அப்ரூவர் ஆக்கிட்டியே…” என்றவரின் பேச்சில் மௌனமாய் அவன் இருக்க,
“சில ரிஸ்க் நாம எடுக்க கூடாது வாசு. இப்போ நமக்கு பெருசா தெரியாது. இதே எல்லா நேரமும் நமக்கு நேரம் கை குடுக்காது. சில நேரம் சறுக்கலாம். பார்த்துக்கோ. நீ அந்த கேஸை அப்படியே விட்டிருக்கலாம். அந்த ஆளுங்கட்சி ஆளோட பர்சனல் எல்லாம் ஏன் வெட்டவெளிச்சம் ஆக்கின?…”
“இந்த கேஸை அப்படியே என்கிட்டே விட்டிருந்தா கூட நான் வெறும் கேஸை மட்டும் பார்த்திருப்பேன். இப்ப பாருங்க, எல்லாத்தையும் ஒருத்தன் கிழிச்சு அலங்காரமா ஊர் பார்க்க தொங்க விட்டுட்டான். தேவையா இது? இதுவே நான் ஹேண்டில் பண்ணிருந்தா எவனுக்கு இந்த தைரியம் வரும்?…”
“வாசு போதுமப்பா, நீ யாருன்னு எனக்கு தெரியும். உன்னோட முடியல சாமி…” என்று சிரித்தவர்,
“இதை கூட அந்த தலைவர் ஒண்ணுமில்லாம ஆக்கி வெளில வந்திருவார். தெரியும் தானே?…” என்று நிதர்சனம் உணர்ந்தவராக கேக்க,
“எஸ் ஸார்…” என்றான் புரிந்தவனாய்.
“இன்னும் பிப்டீன் டேய்ஸ்ல மேரேஜ். இன்னைக்கு நீ லீவ் தானே?…” என கேட்டதும்,
“ஹ்ம்ம், எஸ் ஸார், ஒரு பர்சனல் வொர்க்…”
“கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது வாசு? நீ அதுல கவனம் செலுத்தினா நான் ஹேப்பியா பீல் பண்ணுவேன்….” என்றதும் இதழ் பிரியாமல் சிரித்தவன்,
“எல்லாமே பக்காவா போகுது ஸார்…”
“உன் முரட்டு சுபாவத்தை எல்லாம் வர பொண்ணுட்ட காண்பிக்காத. தன்மையா பேசு…” என்று அவனை தெரிந்தவராக அவர் சொல்லவும்,
“மென்மையா கூட பேசுவேன். ஆனா பொண்ணு பேசனுமே…” என்றவனின் பேச்சில் அடக்கமாட்டாமல் சிரித்தவர்,
“என்ன பண்ணி வச்ச பேச கூட பயப்படற மாதிரி?…” என்று கேட்டு இன்னும் சிரிக்க,
“சொல்லவே இல்லை. அதுக்குள்ளே சிரிப்பா? ஹ்ம்ம்…” என்றவன்,
“கொஞ்சம் பயப்படறா. பார்த்துக்கலாம். இன்னும் பதினைஞ்சே நாள்…” என சொல்லி இவனும் சிரித்துவிட்டு மொபைலை வைத்தவன் நினைவு லட்சுமியிடம் சென்றது.
“பூர்வா…” என சொல்லிக்கொண்டவன் முகம் மென்மையை தத்தெடுக்க மிதமான புன்னகையுடன் கிளம்ப ஆரம்பித்தான்.
இந்த பதினைந்து நாளில் அவளிடம் பேச இரண்டு முறை முயன்றுவிட்டான். ஆனால் முடியவே முடியாது என்னும் விதமாய் அவள் மறுத்துவிட அதன் பின்னர் இவனாய் அவளை அழைக்கவும் இல்லை. அவளும் பேசவில்லை.
“தேடி போனா ரொம்ப பன்ற? போடி. எப்படியும் என்கிட்டே தான் வந்தாகனும் நீ…” என வீம்பாய் நினைத்துக்கொண்டான்.
வீட்டினர் மட்டும் அவ்வப்போது என்ன நடக்கிறதென தகவலை இவனிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
அன்று முகூர்த்த பட்டுப்புடவையும், சொந்தபந்தங்களுக்கு பட்டு உடுப்புகளும் எடுக்கவேண்டி காஞ்சிபுரத்திற்கு கிளம்புவதாக முதல் நாளே சொல்லியிருந்தார் அன்புக்கரசி.
கூடுதல் தகவலாய் பெண் வீட்டினரும் வருவதாக சொல்ல அப்பொழுதே முடிவெடுத்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“பேசவா மாட்டேன்ற, நேர்ல என்ன பன்றன்னு பார்க்கறேன்” என நினைத்து கொண்டு இதோ கிளம்பிவிட்டான் காஞ்சிபுரம் நோக்கி அந்த வீம்பு பிடித்தவனாம் வாசுதேவகிருஷ்ணன்.
[the_ad id=”6605″]
காஞ்சிபுரத்தில் அந்த பட்டு மாளிகையில் ஒரு புறம் வாசுதேவகிருஷ்ணன் குடும்பமும் அபூர்வலட்சுமி குடும்பமும் புடவை எடுத்துக்கொண்டிருக்க கடையின் முதலாளியாய் அவர்களை கேட்ட தளத்தில் கேட்ட விதத்தில் ரகங்களை எடுத்து போட பணித்துக்கொண்டு தாமோதரனுடன் நின்றார் முனீஸ்வரன்.
“கல்யாணம் என்னைக்கு?…” என்று அவரிடம் முனீஸ்வரன் கேட்க,
“இன்னும் பதினைந்து நாள் இருக்குங்க. போன வாரமே வரவேண்டியது, சூழ்நிலை இடம் கொடுக்கலை…” என தாமோதரன் சொல்ல முத்துவேல் இவர்கள் அருகே வரவில்லை.
ஒரு இடத்தில் சென்று தனியாய் அமர்ந்துகொண்டார் மகன் மருதவேலுவுடன். ஆனாலும் பார்வை இங்கே தான் இருந்தது.
“இங்க பட்டு நல்லா இருக்கும்னு சொல்லிருக்காங்க ஊர்ல. அதான் சரின்னு மொத்தமா எடுக்கறோம், இங்கயே எடுப்போம்னு வந்துட்டோம்…” என்றவர் தன் ஊரையும், பெண் கொடுக்கும் ஊரையும் சொல்ல,
“மாப்பிள்ளை சென்னையா?…” என்றார் முனீஸ்வரன்.
“ஆமாங்க, போலீஸ்க்காரர். பெரிய பதவி…” என பெருமையாய் சொல்ல,
“போலீஸா?…” என்று முனீஸ்வரன் அஷ்டகோணலாய் முகத்தை வைத்து பக்கவாட்டில் திரும்பி பார்க்க அங்கே இன்னொரு பக்கம் சந்தியா புடவைகளை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஆமாங்க, போலீஸ் தான். ரொம்ப கண்டிப்பானவர்…” என்று வேறு தாமோதரன் சொல்ல,
“ஆமாமா, போலீஸ்னாலே குடைச்சல் தான்…” என்றார் இருபொருள்பட,
“வேலை அப்படிங்க. நாம என்ன செய்ய முடியும். பாதுகாக்கற வேலைன்னா சும்மாவா?…” என்று விட்டாள் மருமகனுக்கு கோவிலே கட்டிவிடுபவர் போல தாமோதரன் பேச,
“மருமகனை இம்புட்டு புகழ்றாரு. நமக்கும் வாச்சிருக்காங்களே. ஆனாலும் போலீஸ்க்காரனை நம்பக்கூடாதுன்னு இவர்ட்ட நான் எப்படி சொல்ல?…” என்று நினைத்துக்கொண்டு மீண்டும் மகள் பக்கம் திரும்பி பார்க்க வசீகரனும், விஷ்வேஸ்வரனும் அவரைத்தான் பார்த்துக்கொண்டு நின்றனர்.
“இவனுங்களுக்கு என்னை கவனிக்கிறதே வேலையா போச்சு. எப்ப பாத்தாலும் என்னை நோட்டம் விட்டுட்டே சுத்தறது. இதுக்கா என் பொண்ணுங்களை கட்டி வச்சேன். அவங்களை கவனிக்காம என்னையவே பார்க்கறது.” என்று நொந்துகொண்டவர்,
“சரிங்க நீங்க பாருங்க. எதுவானலும் பையன்ட்ட கேளுங்க. தேவைனா கூப்பிடுங்க…” என சொல்லி முனீஸ்வரன் நகர்ந்து வர அங்கே தன் மகளிடம் பேசிக்கொண்டிருந்தான் விஸ்வேஸ்வரன்.
“இன்னும் என்ன தான் பார்க்கற தியா? பார்த்தது போதும் எடுத்துட்டு வா…” என்று அவளை கடிந்து கொண்டு இருக்க,
“ப்ச் இருங்க அத்தான், பெரியம்மா பெரியப்பா சதாபிஷேகம். வரவங்களுக்கு கிப்ட் சேரி இன்னும் பார்க்கனும். எங்களுக்கு கேங் சேரி ஒரு செட். அப்பறம் முகூர்த்தத்துக்கு கிராண்டா ஒரு பட்டு. அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும், சித்திக்கும், அத்தைங்களுக்கும் சேர்த்து ஒன்னு போல ஒரு டிஸைன். இன்னும் எவ்வளவு இருக்கு?…”
சந்நிதி படபடவென வரிசையாய் தங்கள் லிஸ்ட்டை அடுக்க அவளின் பேச்ச ரசித்தபடி இருந்த வசீகரன் விஷ்வாவிடம்,
“இருப்பா, ஏன் அவசரப்படற? அதான் நிதி சொல்றாள. பார்க்கட்டும்…” என்று சொல்ல சரியாக அந்நேரம் அவர்கள் அருகே வந்தார் முனீஸ்வரன். அவரை பார்த்ததும் வசீகரனை பார்த்து கண்ணடித்த விஷ்வேஷ்வரன்,
“புடவை எடுக்க உங்களுக்கு வேற கடையே கிடைக்கலை. சென்னை போயிருந்தா இந்நேரம் கடல்ல விழுந்த மாதிரி சும்மா அள்ளிருக்கலாம். இங்க இவ்வளோ தான் இருக்கு. நல்ல டேஸ்ட் உங்களோடது…” என வேண்டுமென்றே நக்கலாய் சொல்ல,
[the_ad id=”6605″]
“இங்க பாருங்க மாப்பிள்ளை…” என கோபத்துடன் அவனின் முன்னே வந்து நின்ற முனீஸ்வரன் விஷ்வேஸ்வரனுடன் சேர்ந்து வசீகரனும் அவனருகே எழுந்து நெருங்கி நிற்கவும் வந்த கோபத்தை முடிந்தளவு பல்லை கடித்துக்கொண்டு அடக்கியவர்,
“பெருசு அதான் உன் வீட்டுக்காரர் சொல்றாருல. கடல்ல எடுங்கன்னு. அங்கயே போய் எடு…” என்று மகளிடம் பாய,
“சொந்த கடையில மகளுகளுக்கு துணி எடுக்க கூட குடுப்பினை இல்லை பாரு விஷ்வா. நீ சொன்னது சரிதான்…” என்று இப்பொழுது வசீகரன் பேச,
“நானா? நான் எப்ப சொன்னேன்? எடுக்க கூடாதுன்னு…” என்று அவர் வேகமாய் திரும்பி பார்க்க,
“இதோ இப்ப சொன்னீங்களே? விளையாட்டுக்கு ஒரு வார்த்தை விஷ்வா பேசினா உடனே வேற இடத்துல எடுங்கன்னு சொல்லுவீங்களா? இதுவே புகழ் கடைக்கு போனா நாங்க வேண்டாம்னு சொன்னா கூட அவன் அங்க தான் எடுக்கனும்னு பிடிவாதம் பிடிப்பான்…” என்று வசீகரன் கதையளக்க,
“ப்ச், என்னங்க இது?…” என்ற நிதியின் முறைப்பில் அடங்கினான் வசீகரன். ஆனாலும் முனீஸ்வரனை பார்த்துக்கொண்டே தான் நின்றான்.