“நாங்க எடுத்துட்டு வரோம்ப்பா. நீங்க போய் உட்காருங்க…” என அவரை அனுப்ப பார்க்க,
“ஹ்ம்ம், ரெண்டு மருமகனும் ரொம்ப நேரமா நிக்கறாங்கலேன்னு வந்தா தேவை தான் எனக்கு…” என புலம்பியபடி வாசலுக்கு விரைந்தவர் அங்கே கோபம் தாளாமல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார் முனீஸ்வரன்.
அவருக்கு நன்றாக தெரிந்தது வேண்டுமென்றே தன்னை வம்பிழுக்கின்றார்கள் என்று. ஆனாலும் பொறுக்க முடியவில்லை. வழக்கமாக நடப்பதுதான் என்றாலும் வழக்கமாகவே வரும் கோபம் இன்றும் கொளுந்துவிட்டு எரிந்தது.
“நான் அவ்வளவு ஈஸியா போயிட்டேனா? இதுவே பழைய முனீஸ்வரனா இருந்தா?…” என நினைத்து நினைத்து குமைந்தார்.
அந்த நேரம் அங்கே வந்து சேர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன். பட்டு மாளிகைக்குள் நுழைய போக முனீஸ்வரன் மறிப்பதை போல இங்குமங்கும் நகர்ந்துகொண்டே இருந்தார்.
வலது பக்கம் போனால் அவரும் அங்கே செல்ல இடதுபக்கம் போனால் அங்கும் திரும்பி நடந்தார். அவர் வாசுதேவகிருஷ்ணனை கவனிக்கவில்லை. நினைப்பு மொத்தமும் மருமகன்கள் மீதே இருந்தது.
ஆனால் அவரின் நடையிலும் வேகத்திலும் வாசுதேவகிருஷ்ணனுக்கு கோபம் கிளர்ந்தெழ ஒரு கையால் பிடித்து நிறுத்தியேவிட்டான்.
“அட நில்லுங்க, என்ன இது?…” என்று அவன் கேட்கவும்,
“என்ன என்ன இது? எதுக்கு என் கையை பிடிச்ச?…” என முனீஸ்வரனும் கோபமாய் பார்க்க,
“ஹ்ம்ம் எல்லாம் உங்களை பார்த்ததும் கையை பிடிச்சு இழுக்கனும்னு ஒரு ஆசை தான். ஆளை பாரு. ஓரமா போய் உட்காரும். வயசான காலத்துல நீள அகலத்தை நோட்டம் விட்டுட்டு விழுந்து வைக்காம…” என்று வாசுதேவகிருஷ்ணன் சத்தம் போட,
“நான் யாருன்னு தெரியுமா? என்ன நடந்துச்சு, ஏன் நடக்கேன்னு தெரியாம எகத்தாளமா பேசற? ஏன் கண்ணு இருக்குல. நான் அங்கிட்டு போனா நீ இங்கிட்டு போறது. கூடவே வார?…” என முனீஸ்வரனும் ஏக வசனத்தில் எகிற,
“யாரா இருந்தா எனக்கென்ன? வயசான காலத்துல வாக்கிங் போகனும்னா பார்க்ல நட. இல்ல ரோட்ல நட. அதெதுக்கு கடை வாசலை மறிச்சுட்டு இப்படி குறுக்க நெடுக்க நடந்தா எப்படி உள்ள போறதாம்? இதுல கூடவே வாராங்களாம். நினைப்பை பாரு…” என்றதும் முனீஸ்வரன் முகம் ஜிவுஜிவுவென கொதிக்க ஆரம்பித்தது.
“ஏன்டா என் கடைக்கே வந்து நான் எங்க நடக்கனும்னு பாடம் எடுப்பியோ? அதுவும் நீ கூட வரனும்னு நான் நினைச்சேனா? நீ எதுக்குடா இங்க வர?…”
“ஹ்ம்ம், ஒனரா நீ? நீ இங்கும் அங்கும் நடக்கறதை பார்த்தா உனக்கு எடுத்து கட்டி விடலாம்னு தான். கடைக்காரன்னா கல்லாவுல உட்காராம நடைகல்லுல நடந்தா கேட்க தான் செய்யுவேன்…” என சொல்ல,
“என் கடைக்குள்ள போன பார்த்துக்கோ. உனக்கெல்லாம் புடவை கிடையாது…” என்று மருமகன்கள் மேல் இருக்கும் கோபத்தை காண்பிக்க முடியாமல் அவனின் மீது காண்பிக்க பார்க்க,
“எனக்கு புடவை இல்லைன்னா எதுக்கு கடைன்னு விளம்பரம் போட்டு வச்சிருக்க? வீட்டுக்குள்ள அடுக்கிக்க வேண்டியது தானே? போயா…” என்று அவனை தள்ளிக்கொண்டு வாசுதேவகிருஷ்ணன் உள்ளே சென்றுவிட,
“டேய் டேய்…” என இவர் பின்னால் சென்று தடுக்க பார்க்க நொடிப்பொழுதில் வேகமாய் தன்னிடம் தன் பாதுகாப்பிற்கென இருந்த கையடக்க பிஸ்டலை எடுத்து முனீஸ்வரனின் பக்கம் காண்பித்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
வாயடைத்து போனவருக்கு கால்கள் நடுங்கியே போனது. அப்படியே இரண்டு படி பின்னால் இறங்கியவர்,
“யார்ரா நீ?…” என்றார் அப்போதும் அவனிடம்.
“யாரா? பார்த்த தெரியலை. போலீஸ்க்காரன்…”
“டேய் நீ போலீஸா?…” என்று பீதியை அவனை பார்த்த முனீஸ்வரன் அடுத்து பேசும் முன்,
“என்னது டேயா? போலீஸ்ன்னு சொல்லியும் டேய்ன்னு சொல்ற? ஏன் தாத்தா என்ன ஒரு துணிச்சல் உனக்கு?…”
“தாத்தாவா?…” என்று வாய்விட்டவர்,
“இல்ல வந்து நான்…” என திணறினார். அவர் வேண்டுமென்றா டேய் என பேசியது? அவரின் பேச்சே அப்படித்தான் என வாசுதேவகிருஷ்ணனுக்கு தெரியுமா? அவனின் கோபத்தில் முனீஸ்வரன் மிரண்டு நிற்க அதிலும் அந்த துப்பாக்கியை பார்த்ததும் தொண்டை குழியில் உருவமில்லாத உருண்டைகள் உருண்டது.
“ஒரு வார்த்தை பேசின. பார்த்துக்கோ. சத்தமில்லாம போய் கல்லாவுல உட்கார்ந்து காச வாங்கி போடனும். புரியுதா?. சும்மா இரிட்டேட் பண்ணிட்டு…” என்றவன் மிகவும் சாவகாசமாய் பிஸ்டலை மறைவாய் சொருகியவன்,
“வந்து பட்டு செக்ஷன் எங்க இருக்குன்னு காண்பிச்சு நல்ல ஒரிஜினல் பட்டா எடுத்து போட சொல்லு…” என்றவன் மீண்டும்,
“ஆமா, பட்டு எல்லாமே ஒரிஜினல் தான?…” என்று வேறு கேட்க பல்லை கடித்தார் முனீஸ்வரன். எதிர்த்து பேச முடியாதபடி துப்பாக்கி அவரின் வாய்க்கு பூட்டு போட்டிருந்தது.
இதற்கு மருமகன்களை அழைப்போமா என நினைத்தவர் நொடியில் அதனை உதறினார்.
[the_ad id=”6605″]
“வந்து இவன் கூடவே கூட்டணி போட்டு என்னை துப்பாக்கி முனையில நிக்கவச்சாலும் வைப்பானுங்க” என்ற நினைப்பில் தூரப்போட்டவர்,
“ஒரிஜினல் தான்…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல அவரின் மனமோ,
“அப்படி ஒன்னும் நீ இங்க எடுத்து கிழிக்க வேண்டாம். சோலி கழுதையை பாரு” என அவனை விரட்டிவிடு என்று கூப்பாடு போட்டது.
“கம் பாஸ்ட்…” என்று வாசுதேவகிருஷ்ணன் முன்னால் நடக்க உதறிய உடலுடன் முனீஸ்வரன் அவனுடன் நடந்தார்.
தூரத்தில் வசீகரனும் விஷ்வேஸ்வரனும் பேசி சிரித்துக்கொண்டு நிற்பதை பார்த்தவருக்கு “எல்லாம் இவங்களால்” என்று தோன்றாமல் இல்லை.
மாமனார் வருவதை பார்த்ததும் திரும்பி பார்த்தவர்கள் அவரின் முன்னால் தோரணையுடன் நடந்து வருபவனை பார்த்து புருவம் உயர்த்தினர்.
“என்னவாம் நம்ம டார்லிங் கப்சிப்ன்னு வராரு. நம்ப முடியலையே…” என வசீகரன் சொல்ல,
“இதை மட்டும் சூர்யா பார்க்கனும், அடக்க ஒடுக்கத்துல மயங்கி முனீஸ், மினீஸ், பனீஸ்ன்னு கவிதை மழையை பொழிய ஆரம்பிச்சுடுவான்…” என்று விஷ்வாவும் கிண்டல் பேசிவிட்டு பின்,
“அவரை எங்கையோ பார்த்த மாதிரியே இருக்கு வசீ…” என யோசனையான விஷ்வேஷ்வரன் முகம் பளிச்சிட்டது.
“ஹேய் இவர் வாசுதேவகிருஷ்ணன். ASP. சென்னை. உனக்கு தெரியுதா வசீ?…” என்று கேட்க,
“ஐ திங்க் சோ. நான் இவரை ட்விட்டர்ல பாலோ பன்றேன். சட்டுன்னு நியாபகம் வரலை…” என்று அவனும் முகம் மலர்ந்து சொல்ல,
“இவர் எங்க இங்க?…” என விஷ்வா யோசிக்க,
“மாமனார் எதாச்சும் அவர்கிட்ட வம்பிழுத்திருப்பாரா இருக்கும். வாய் தகராறை வாய்க்கா தகறாரா மாத்தற ஒரே ஆள் ஆல் இன் ஆல் அழகுராஜா நம்ம மாமனார் ஆச்சே. வா போய் பார்ப்போம்…” என்று வசீகரன் சொல்ல,
“அடங்குடா. நீ வேற…” என சிரித்தபடி விஷ்வாவும் உடன் சென்றான்.
“ஹலோ ஸார்…” என்று விஷ்வா வாசுதேவகிருஷ்ணனிடம் கை நீட்ட அவனை பார்த்ததுமே காவல் துறையை சேர்ந்தவன் என்று புரிந்த வாசுதேவகிருஷ்ணனும் கை நீட்டினான்.
இதனை பார்த்த உடனே முனீஸ்வரனுக்கு விஷ்வா தான் வாசுதேவகிருஷ்ணனை இங்கே வரவழைத்தது என்று நினைத்து மனதிற்குள் கொந்தளித்தார்.
“வேணும்னு தான் வர வச்சு என்னை செய்யறானுங்க போல?” என பார்க்க,
“நான் விஸ்வேஸ்வரன், நாகர்கோவில் ஜெயில்ல ஜெயிலர்…” என்று தன்னை பற்றி அறிமுப்படுத்தியவன் வசீகரனையும் சேர்த்து அறிமுகப்படுத்தி வைத்தான்.
அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த வாசுதேவகிருஷ்ணனை நோக்கி தாமோதரன் வர முத்துவேலோ முறைத்துக்கொண்டு இருந்தார்.
அவருக்கு தெரிந்திருந்தது எப்படியும் வேண்டுமென்றே தன்னை வெறுப்பேற்ற அவன் வருவான் என்று.
பெண்ணை பார்க்கவே வரமாட்டான் என்று நினைத்திருக்க அவன் வந்து நின்றது ஆச்சர்யமாய் இருந்தது.
அவன் வர வேண்டாம் நினைத்ததன் காரணம் எங்கே வந்து ஏதேனும் பேசி இந்த திருமணத்தை நிறுத்த தானோ? என நினைத்து உள்ளிருக்கும் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் மிதப்பாய் இருந்தார்.
ஆனாலும் நொடிக்கு நொடி என்ன செய்வானோ என்று தோன்றாமல் இல்லை. அன்புக்கரசியை வைத்து இதில் இறங்கியாகிற்று.
தாய்க்கேனும் பார்த்து எதுவும் செய்யாமல் இருப்பான் தான். ஆனால் சில விஷயங்களில் அந்த தாய் கூட அவனுக்கு அணை போட முடியாதே? கொஞ்சமாகவா தன்னிடம் பேசினான்.
[the_ad id=”6605″]
நினைக்க நினைக்க இங்கு வந்ததன் காரணம் எதுவாக இருந்தாலும் செல்லும் வரை தானும் எதுவும் பேசாமல் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
“அண்ணே வாசு வராதுன்னு சொன்னீங்க. இப்ப நான் வந்ததை பார்த்தா?…” என ராணி பதட்டத்துடன் சொல்ல,
“அதெல்லாம் பார்த்துக்கலாம் விடும்மா…” என்று தங்கையை சமாதானம் செய்தவர் மகனையே பார்த்தபடி இருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை…” என தாமோதரன் வரவும் வசீகரன், விஷ்வாவிடமிருந்து பார்வையை திருப்பியவன்,
“ஓகே கைய்ஸ், நான் என் ரிலேட்டிவ்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிட்டு வரேன். பேசலாம்…” என சிரித்த முகமாக சொல்லி தன் மாமனாரை நோக்கி சென்றான்.
“இந்த இஞ்சி மூஞ்சிக்கு சிரிப்பு ஒண்ணுதான் குறை. வெளியில கடுகடுன்னு நின்னுட்டு இங்க சிரிப்பா பாரு?” என முனீஸ்வரன் உள்ளுக்குள் கடுகடுத்து தன்னை போல விஷ்வாவை பார்த்தார்.
“இவனும் இப்படி சிரிச்சு தான என்னை மயக்கி என் பொண்ணை கல்யாணம் செஞ்சுட்டான்” என்ற எண்ணத்துடன் பார்க்க அவனோ,
“என்ன மாமா? எதாச்சும் சொல்லனுமா? ஸார் வேண்டப்பட்டவர் தான்…” என்று முனீஸ்வரனின் பிபியை வேறு விஷ்வா ஏற்ற வசீகரன் அதற்கு வந்த புன்னகையை அடக்க வேகமாய் முறைப்புடன் சென்று தன்னுடைய முதலாளி இருக்கையில் அமர்ந்தார்.
அந்த நேரம் சரியாய் அவருக்கு புகழ் அழைத்தான். மதிய உணவிற்கு தங்கள் வீட்டிற்கு வந்துவிடுமாறு கோமதி சொல்ல சொன்னதாய் சொல்வதற்கு.
“டேய் புகழு, வந்து இவங்கள கூட்டிட்டு போடா…” என்று அவனிடம் எகிற,
“என்னாச்சு சித்தப்பா?…” என பதறினான். இன்னும் வசீகரன், விஷ்வா செய்வதற்கு எல்லாம் சேர்த்து வாங்கிக்கட்டுவது புகழ் தான்.
“வீட்டுக்கே புடவைகளை கொண்டு வர சொல்றேன்னு சொன்னேனே? இந்த சிறுசும், பெருசும் கேட்டுச்சா? கடைக்கு வந்தா எல்லா டிஸைனையும் பார்க்கலாம்னு சொல்லுச்சுங்கன்னு சரின்னேன். புருஷனுங்களா வீட்டுல இருந்து புள்ளைகளை பார்த்துட்டு இருக்கறதை விட்டுட்டு இங்க வந்து உசுரை வாங்கறாங்க. கூட்டிட்டு போறியா இல்லையா?…” என்று மொத்த கோபத்தையும் அவனிடம் இறக்க,
“இதோ இதோ வந்திடறேன் சித்தப்பா…” என்று அடித்து பிடித்து பைக் சாவியுடன் கிளம்ப அவனின் மனைவி வந்துவிட்டாள்.
“என்னங்க சூப், உங்களுக்கு பிடிக்குமேன்னு ஆட்டுக்கால் சூப் செஞ்சேன்…” என்று சுட சுட கொண்டு வந்து அவனிடம் தர மீண்டும் முனீஸ்வரன் போன்.
“கிளம்பிட்டியா?…” என்று.
“வரேன் சித்தப்பா…” என பல்லை கடித்துகொண்டு சொல்லியவன்,
“மனுஷனை ஒரு சூப் கூட குடிக்க விடமாட்டறாரே?. இவனுங்க வேற என்னைய வாழ்வே விடமாட்டானுங்க. உன்னை கூட்டிட்டு இவங்க யாருமே இல்லாத இடத்துக்கு தனிக்குடித்தனம் போனா தான் உண்டு. உன் மூஞ்சியை கூட முழுசா பார்க்க விடறானுங்களா?….” என போகிற போக்கில் புகழ் புலம்பி செல்ல அவனின் புலம்பல் ஏன் என புரியாமல் அவள் நிற்க,
“என்னது தனி குடித்தனமா? என்னம்மா இதெல்லாம்?…” என கோமதி அதிர்ந்து கேட்க குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டனர் புகழின் தனிக்குடித்தனம் பேச்சை கேட்டு விசாரணைக்கு அவனின் மனைவியிடம்.
கடைக்கு செல்லும் வழியில் என்னவென வசீகரனுக்கு அழைத்து என்ன விவரம் என்று கேட்க அவனும் நடந்ததை சொல்ல,
“அடேய்களா அவர் எப்பேர்ப்பட்ட வில்லன். ஏன்டா வச்சு செய்யறீங்க?…” என கடுப்படிக்க,
“கலாய்க்க ஆள் குறையுது மச்சான் வந்து சேரு…” என்ற வசீகரன் சிரித்தபடி மொபைலை வைத்துவிட்டான்.
கடையிலோ வாசுதேவகிருஷ்ணன் அனைவரிடமும் பேசிவிட்டு அபூர்வாவை தேடிக்கொண்டு சுற்றி பார்த்தான்.
“அண்ணா, அவ ஒரு சேரி செலெக்ட் பண்ணிருந்தா. கட்டி பார்க்க போய்ருக்கா. மாடில தான் ட்ரையல் ரூம். கூட உங்க அண்ணியும் இருக்காங்க….” என ரகசிய தகவல் தர மகிழிற்கு ஒரு சிநேகமான புன்னகையை கொடுத்தவன் மாடிக்கு சென்றான்.
“எங்கடா போற?…” என மருதவேல் கேட்க அவனை முறைத்தவன் தனது மொபைலை எடுத்து,
“ஹ்ம்ம் ஒருத்தனுக்கு லாடம் கட்டனும். எங்கெங்க, எப்படி எப்படின்னு கிளாஸ் எடுக்க போறேன். வரியா நீயும்?…” என்று நக்கலாக கேட்க,
“அதை இங்கயே பேசேன்…” என அண்ணன் திரும்பவும் அவனிடம் நிற்க,
“அப்ப மொத்த கூட்டத்தையும் கூட்டிட்டு நீ மாடிக்கு போயேன்…” என்று நறநறவென பல்லை கடித்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“நீ சும்மா இரு வேலு…” என சொல்லியது சாட்சாத் முத்துவேலே. அவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு செல்ல அவன் செல்வதை பார்த்த பூங்கோதை என்னவென்று தெரியாமல் பார்த்தபடி இருந்தார்.
மகள் மேலே சென்றிருக்கிறாளே? அன்றைக்கே அந்த பேச்சு பேசி தங்களை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தவன். பதக் பதக்கென்று இருக்க அவனை பார்த்தபடியே இவர் அமர்ந்திருக்க மாடி ஏறிக்கொண்டிருந்தவன் சட்டென திரும்பி மாமியாரை பார்த்துவிட்டான்.
[the_ad id=”6605″]
ஐயோ என்று அவன் பார்த்ததும் பார்வையை திருப்ப கூட முடியாமல் பதறி இருக்க அவனோ அங்கிருந்து,
“ஹாய் அத்தை…” என்று கை காட்டி சிரிக்காமல் சொல்லி செல்ல பூங்கோதை அசையவில்லை.
மாடிக்கு சென்றவன் அங்கே மொத்தமே நான்கு பேர் தான் இருந்தனர். தன் அண்ணி ஓரிடத்தில் கையில் புடவையை வைத்துக்கொண்டு ஒரு சேரில் அமர்ந்திருக்க அவரை நெருங்கினான்.
“எங்க அண்ணி பூர்வா?…” என கேட்க இவனை எதிர்பாராதவள் அவனின் கேள்வியில் பதில் தெரியாமல்,
“அது யாரு பூர்வா?…” என கேட்க அவனின் முறைப்பில் சட்டென முழு பெயரும் ஞாபகம் வந்தவளாக கையை நீட்டி ட்ரையல் ரூமை காண்பித்தாள்.
“ஓகே, நீங்க கிளம்புங்க…” என சொல்ல,
“அதெல்லாம் முடியாது, நான் கீழே போனா எல்லாரும் இங்க வந்திருவாங்க. வேணும்னா இங்கயே ஓரமா இப்படி உட்கார்ந்திருக்கேன்…” என சொல்லவும் சிரிப்புடன் ட்ரையல் ரூம் நோக்கி சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
அங்கே மூன்று கதவுகள் இருக்க எந்த அறை என கேட்டு அதன் முன்னால் இவன் நின்றுகொள்ள உள்ளிருந்து சில நொடிகளில் புடவையை சரிசெய்தபடி வெளியே வந்தாள் லட்சுமி.
“அக்கா இந்த சேரி நல்ல இருக்கா? எனக்கு ஓகே தானே? உங்க கொழுந்தனுக்கு இந்த கலர் புடிக்கும்னு சொன்னீங்கன்னு தான் எடுத்தேன்…” என்று விமலாதான் இருக்கிறாள் என நினைத்து அவள் பேச,
“யக்கா…” என்றான் புன்னகை முகமாய்.
திடீரென கேட்ட குரலில் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தவள் பேசுவதற்கு வார்த்தைகளை தேடினாள். அவளையும் அவள் கட்டியிருந்த புடவையையும் மேலும் கீழுமாய் பார்வையில் நிரப்பியவன்,
“எனக்கு புடிச்ச கலர் எல்லாம் வாங்குவ, கட்டிப்ப. ஆனா என்கிட்டே புடிச்சதான்னு சொல்ல மாட்ட? கால் பண்ணா பேச மாட்ட? அப்படி தான?…” சட்டென உண்டான படபடப்பில் ஒரு நொடி ஸ்தம்பித்து பின் எதையும் யோசிக்காமல் கதவை சட்டென அடைத்துக்கொண்டாள் அவள்.
“நீயா திரும்பி வெளில வந்து எனக்கு பதில் சொல்ற வரைக்கும் நீயும் இங்க இருந்து போக முடியாது. நானும் போக மாட்டேன்…” என சொல்லியவன் அப்படியே நின்றுகொண்டான் அங்கேயே சுவற்றில் சாய்ந்துகொண்டு.