திடீரென அவன் வந்து நிற்பான் என எதிர்பார்க்காதவர் திகைத்து போக வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின. பார்வை தன்னை போல அவனின் பிஸ்டல் பதுங்கியிருந்த இடுப்பில் படிய,
“நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே. உன் கட்டழகு மீசையில கிறங்கி போனேனே” என்ற பாடல் வெளியில் எங்கோ சத்தமாய் கேட்க சட்டென அவசரமாய் பார்வையை அவனிடமிருந்து திருப்பினார் முனீஸ்வரன்.
“செம்ம சாங்ல…” என வசீகரன் சொல்ல கொலைவெறியில் மருமகனை பார்த்தார். அதற்குள் புகழ் சமாளித்தான்.
“இல்லை ஸார், ஒரு வேலை. அதான் சீக்கிரம் அடைக்கனும்னு சொல்லிட்டு இருந்தார். நீங்க பாருங்க…” என புகழ் அவனிடம் தன்மையாய் சொல்ல,
“ஆல்மோஸ்ட் ஓவர்…” என்ற வாசுதேவகிருஷ்ணன் தனது மொபைலுடன் வாசலுக்கு சென்றான்.
“இதோ நான் கூட்டிட்டு போய்டறேன் சித்தப்பா…” என்ற புகழ் வசீகரனையும், விஷ்வாவையும் நோக்கி செல்ல,
“புண்ணியமா போகும், கிளம்புங்க ராசா. கிளம்புங்க. தேடி தேடி என் தங்கச்சிக்கு உங்களை கட்டி வச்சேன்ல…”
“ஏதே?…” இருவரும் ஒரே சேர சொல்ல,
“தப்புத்தான் தப்புத்தான். வீட்டுக்கு போயி அலகு வேணாலும் குத்திக்கறேன். கிளம்புங்கடா…” என அழமாட்டாத குறையாய் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.
செல்லும் நேரம் விஷ்வாவும், வசீகரனும் வாசுதேவகிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு தான் கிளம்பினார்கள் தங்கள் மனைவிகளுடன்.
அதன் பின்னர் சில நிமிடங்களில் வாசுதேவகிருஷ்ணன் குடும்பமும் கிளம்ப வேக வேகமாய் அவர்கள் வாங்கிய உடைகளுக்கு பில்லை போட்டவர் வியாபாரத்தை முடித்துவிட்டு தான் நிம்மதியானார்.
போகிற போக்கில் தாமோதரன் ஒரு பத்திரிக்கையை கொடுத்து கல்யாணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்று சொல்ல இவன் இருக்குமிடத்திலா? என்பதை போல ஓரவிழியால் அவனை பார்த்துவைக்க அவரின் பார்வையின் விதத்தில் வாசுதேவகிருஷ்ணன் சட்டென கண்ணடித்துவிட்டான்.
“இவனோட” என நொந்துபோனார் அவர். கிளம்பினால்போதும் என்று பத்திரிகையை வாங்கி வைத்து அனுப்பவும் தான் உண்மைக்கும் நிம்மதியானது அவருக்கு.
“என்ன மிஸ்டர் பட்டு ஓனர்…” என திடீரென அவனின் குரல் கேட்டதும் இன்னும் கிளம்பலையா என அதிர்ந்து பார்க்க அவரையும் மீறி முறைத்துவிட்டார்.
“என்ன முறைப்பெல்லாம் பலமா இருக்குது? இருக்கட்டும் இருக்கட்டும். எடுத்துட்டு போன பட்டுல ஒன்னு சரியில்லனாலும் நான் திரும்பி வருவேன்…” என்று வேறு முனீஸ்வரன் கோபத்தை கிளற தஸுபுஸு என மூச்சை இழுத்துவிட மட்டுமே முடிந்தது அவரால்.
“என் துப்பாக்கியை பார்த்ததும் பயந்துட்டீங்க போல? அது சும்மா பொம்மை துப்பாக்கி. லுளுலாய்க்கு கொண்டு வந்தேன். இனி வாசல்ல நின்னு சும்மா சும்மா குதிக்க கூடாது சரியா? வர கஸ்டமரை மரியாதையா கவனிக்க பழகுங்க…” என கூட்டுதலாய் அறிவுரை சொல்லி சென்றான்.
அவனிடம் கோபத்தை காட்ட முடியாமல் மீண்டும் புகழை அழைத்தவர் கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
“என்னங்க காஞ்சிபுரம் வரை வந்துட்டு கோவிலுக்கு போகாம இருந்தா எப்படி? அப்படியே புடவையை வச்சு சாமி கும்பிட்ட மாதிரியும் ஆச்சு…” என அம்புக்கரசி சொல்ல அதன் படி அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள்.
வாசுதேவகிருஷ்ணன், அபூர்வா இருவரின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட அதன் பின்பு சாப்பிட கிளம்பினார்கள்.
“சாப்பிட்டு ஊருக்கு கிளம்புவோம்…” என முத்துவேல் தான் பேச அடுத்த விசிட் ஹோட்டல் தான். அனைவருக்கும் சேர்ந்தார் போல ஒரு டேபிளை பார்த்து அமர வாஷ்ரூம் போகிறவர்கள் சென்றுவிட்டு கை கழுவிவிட்டு வந்து அமர்ந்தனர்.
[the_ad id=”6605″]
“நான் இங்க உட்கார்ந்துக்கறேன்…” என சொல்லி கை கழுவ செல்ல சென்றவன் திரும்பி வரும் நேரம் மருதவேல் தான் அமர்ந்த சேரில் இருந்து எழுத்து இன்னொன்றில் அமர்ந்து பார்த்தான்.
“என்னடா டிக்கிலோனா விளையாடிட்டு இருக்க? ஒரு இடத்துல உட்காரேன்…”
“சேர்ல என்னமோ இருக்குடா வாசு. குத்திருச்சு. அதான். மாத்தி உட்கார்ந்தேன். திரும்ப உட்கார்ந்து பார்த்தேன்…”
“என்னமோ இருக்கா? எங்க?…” என்று எட்டி பார்க்க சின்ன சின்னதாய் கூழாங்கற்கள் அதில் இருக்க எடுத்து பார்த்தவன் அனைவரையும் பார்வையிட அபூர்வா சட்டென கண்களை மூடிக்கொண்டாள்.
அவளை பார்த்ததும் கண்டுகொண்டவன் உதட்டை மடித்து “நீதானே?” என பார்வையால் புருவம் உயர்த்த தட்டில் கவிழ்ந்தவள் தான். சாப்பிட்டு முடிக்கும் வரை நிமிரவே இல்லை.
“சாப்பிட்டு அப்படியே சென்னை போய் பாத்திர பண்டம் எடுத்திரலாம் சம்பந்தி. உங்களுக்கு எங்க வசதிப்படும்னு சொல்லுங்க. அங்கயே போய் எல்லாமே வாங்கிடலாம்….” என தாமோதரன் சொல்ல முத்துவேல் பதில் சொல்லும் முன்பு வாசு,
“என்ன வாங்கனும் மாமா? தெளிவா சொல்லுங்க…” என்றவன் சர்வரை அழைத்து,
“ரசம் போடுப்பா…” என்றான்.
அன்புக்கரசியை பார்த்த முத்துவேல் முகம் கடுகடுத்து இருந்தது. “அவனை அமைதியாக இருக்க சொல்” என்னும் செய்தி அந்த கடுமையில் பொதிந்திருந்தது.
“வாசு….” என அன்புக்கரசி கணவரின் பார்வையில் செயல்பட ஆரம்பிக்க,
“இருங்கம்மா, மாமா பேசட்டும்…” என்றான் சற்று இறுக்கமான குரலில்,
அனைவருமே ஒரு நிமிடம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை பார்க்க அவனோ முகத்தை வெகு இலகுவாக வைத்திருந்தான். குரலில் இருந்த இறுக்கம் பொய்யோ என்னும் விதமாக,
“ஏன் மாமா, நான் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்களா? என்னோட தான் உங்க பொண்ணு வாழ போறா. அப்போ என்ன வேணும், வேண்டாம்னு நானும் தெரிஞ்சுக்கனும் தானே?…” என்று சொல்லவும் தாமோதரன் வாய்ப்பூட்டு தானே திறந்தது.
“அது வந்துங்க மாப்பிள்ளை. சீர்வரிசை தான். எல்லா குடும்பத்திலும் நடக்கறது தான். நாங்க பொண்ணுக்கு செய்யற முறை. அதுக்காக தான்…”
“அதுதான் என்ன வாங்க போறீங்கன்னு கேட்கறேன். இன்னும் எத்தனை தடவை கேட்கனும்?…” இப்பொழுது முகமும் இறுக்கமாய் தெரிய,
“வீட்டுக்கு தேவையான சமைக்கிற பாத்திரபண்டங்கள், ப்ரிட்ஜ், வாஷிங்மேஷின், மிக்ஸி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ, உங்களுக்கு ஒரு கார்…” என வரிசையாக அவன் கேட்காதவற்றையும் சேர்த்து அவர் கடகடவென ஒப்பிப்பதை போல மொத்தமாய் போட்டுடைத்தார்.
“வாவ், இவ்வளவுமா?…” என்று பளிச்சென்று புன்னகைத்தவன்,
“ஆனா பாருங்க மாமா, எங்க வீட்டில அதாவது என் அம்மா, அண்ணி இருக்கற வீட்டில் ஏற்கனவே நிறைய பண்டபாத்திரங்கள் தூங்குது. அண்ணி கொண்டுவந்த இதே சீர்வரிசை எல்லாம் இப்ப அவங்க ரூம்ல நிறைஞ்சு கிடக்குது. வீட்டை அடைச்சு இருக்கறது தான் மிச்சம்…”
அவன் என்ன சொல்ல வருகிறான் என அனைவரும் அவனின் வாய் பார்த்து இருக்க அவன் அபூர்வாவை பார்த்தான்.
“ஆனா நான் இருக்கற வீடு எனக்காக நான் வாங்கினது. உங்க பொண்ணு அங்க தான் என் கூட வாழ போறா…”
“அதுக்கென்னங்க மாப்பிள்ளை, அங்கயே கொண்டு வந்து இறக்கிடறோம். சரிதானுங்களே?…” என்று வெள்ளந்தியாய் சொல்ல,
“அதான் பாய்ண்ட். அங்க தான் வரேன். ஏற்கனவே நீங்க சொன்னது எல்லாமே அந்த வீட்டுல இருக்கறப்போ எதுக்காக நான் இன்னொரு செட் வாங்கனும்?…”
“மாப்பிள்ளை என் பொண்ணுக்கு செய்யவேண்டியது செய்யனும் தானே?…” என தாமோதரன் சொல்ல,
“தாராளமா செய்ங்க. அது உங்க கடமை. அவளோட உரிமை. வேண்டாம்னு சொல்ல எனக்கே ரைட்ஸ் கிடையாது. அதனால இது எல்லாம வாங்கறதுக்கு உங்களுக்கு செலவாகற அமௌண்டை பூர்வா பேர்ல டெப்பாஸிட் பண்ணிடுங்க. தட்ஸ் ஆல்…” என்றவன் சாப்பிட்டு முடித்ததற்கு அடையாளமாய் எழுந்து செல்ல தாமோதரன் முத்துவேலை பார்த்தார்.
அவர் இனி அதில் சொல்ல என்ன இருக்கிறது. அங்கே மறுத்து பேசினால் தேவையில்லாமல் பிரச்சனை ஆக வேண்டியது வருமே, தன்னை தவறாக நினைப்பார்களே என்ற எண்ணத்தில் முத்துவேலும் ஒட்டவைத்த சிரிப்புடன்,
“நான் சொல்லலை என் மகன் தெளிவா யோசிப்பான்னு…” என்று ஒப்புக்கு சொல்ல,
“பிறகென்ன சம்பந்தி நீங்களே சொல்லிட்டீங்க. அப்படியே பண்ணிடுவோம். சரிதானுங்களே…” என்று நிம்மதியாய் தாமோதரன் சிரிக்க முத்துவேலும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
அதன் பின்னர் உணவை மீண்டும் சாப்பிட ஆரம்பிக்க வேறு பேச வாசுதேவகிருஷ்ணன் கை கழுவ சென்றது ஞாபகம் இல்லாமல் சற்றும் முன் பேச்சுவார்த்தையை நினைத்துக்கொண்டு சென்றவள் கையை கழுவிவிட்டு தன் முகத்தை பார்த்தாள்.
வியர்வையில் நெற்றியில் இருந்த குங்குமம் எல்லாம் கலைந்து வடியவிருந்தது. அங்கேயே தண்ணீரை விட்டு முகத்தை அலம்பியவள் கை குட்டையால் துடைத்துவிட்டு கண்ணாடி பார்க்க இப்பொழுது பளிச்சென்று ஆனது.
ஒரு திருப்தியுடன் திரும்பி சென்றவளை மறிப்பதை போல வந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன். வந்ததும்,
“நெத்தியில பொட்டு எங்க?…” என கேட்க மீண்டும் கண்ணாடி பார்த்தவள்,
“முகம் கழுவினேன். விழுந்திருச்சு போல…” என்று சொல்ல,
“வேற வச்சிருக்கியா?…” என்றான்.
இல்லை என்ற தலையசைப்பில் வேறு யாரும் வருகிறார்களா என அவன் திரும்பி பார்த்துவிட்டு கோவிலில் தனக்கு நெற்றியில் வைத்துவிட்டிருந்த குங்குமத்தை எடுத்து அவளுக்கு இட்டவன்,
“போ…” என சொல்ல அவனின் செயலில் அசையாமல் நின்றதென்னவோ அபூர்வா தான்.
“பூர்வா, கேட்குதா நான் சொல்றது? உன்னை போன்னு சொன்னேன்…” என லேசாய் அவளின் கை பிடித்து சொல்லவும் லேசான தலையசைப்புடன் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் அபூர்வா.
அவளின் பார்வையில் கட்டுண்டு நின்றவன் போல சற்று பொருத்து அவளின் பின்னால் வர அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.
“கை கழுவ உனக்கு இவ்வளவு நேரமா?…” என பூங்கோதை கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் திணற,
“எங்கடி பொட்டு?…” என்றார் மகளை கவனித்தவராய்.
[the_ad id=”6605″]
“முகத்தை கழுவினேன்ம்மா. அதான் தண்ணில போய்டுச்சு…”
“குங்குமம் அப்படியே இருக்கு, பொட்டு மட்டும் போச்சோ?…” என்றவரிடம் என்ன பதில் சொல்வது என அவள் யோசிக்க,
“லட்சுமி…” என கண்டித்து கேட்டார் பூங்கோதை.
“அவங்க தான் பொட்டு வச்சு…” என்று சொல்வதற்குள் தாயின் பார்வையில் லேசாய் கண்கள் கூட கலங்கியது.
மகளை அவருக்கு தெரியும் தான். என்னதான் பதினைந்து நாளில் திருமணம் என்றாலும் இவற்றை ஏற்க தாயாய் அவரால் முடியவில்லை.
“இங்க பாரு லட்சுமி, இனி இப்படி நடக்காம பார்த்துக்கோ. கல்யாணத்துக்கு பின்னால யாரும் எதுவும் கேட்க போறதில்லை. ஆனா இப்ப இதெல்லாம் பாக்கறவங்க பார்வைல தப்பாகிடும். புரியுதாத்தா?…”
பூங்கோதை என்னவோ தன்மையாக தான் பேசினார். ஆனால் அபூர்வாவிற்கு தான் தவறு செய்துவிட்ட மனப்பான்மை வந்து ஒட்டிக்கொண்டது.
சற்றுமுன் வாசுதேவகிருஷ்ணன் செய்த செயலின் குளுமை மறந்து தாயின் கண்டிப்பில் கவலை பரவியது. அதன்பொருட்டு அவளின் முகம் வாட்டம் கொள்ள அவளை வந்ததிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தவன் கண்களில் இதுவும் தப்பவில்லை.
அனைவருமே கிளம்பி வாசலுக்கு வர அபூர்வாவின் வீட்டினர் வந்த வண்டியில் அவர்கள் ஏற செல்ல அவளோ இவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவளை அழைப்போமா என இவன் யோசிப்பதற்குள் அவளை உள்ளே அமரச்செய்து அவளருகே தான் அமர்ந்துகொண்டார் பூங்கோதை. மருமகனின் முகத்தை பார்க்கவே தயங்கியவராய் மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளவும் அவர்கள் கிளம்பியதும் முத்துவேல் குதிக்க ஆரம்பித்தார்.
“என்ன நினைச்சுட்டு உன் மகன் இந்த மாதிரி விஷயத்துல தலையிடறான். இது கௌரவம் சம்பந்தப்பட்டது. அத நான் யாருக்ககாவும் விட்டுக்குடுக்க மாட்டேன். வார பொண்ணு வீசின கையும் வெறுங்கையுமா வந்தா நாளைப்பின்ன நம்ம சொந்தபந்தம் மதிப்பானுங்களா?…” என கத்த,
[the_ad id=”6605″]
“அப்ப சொந்தக்காரனுங்க எவனுக்காச்சும் கல்யாணம் பண்ணனும். எனக்கில்லை…” வாசுதேவகிருஷ்ணனும் பதிலுக்கு பேச,
“இவனை பேசாம இருக்க சொல்லு அன்பு…” என்று அதற்கும் அவர் எகிற,
“தவிக்கிறாங்க, அட போக சொல்லுங்கம்மா…” என்றான் தெனாவெட்டாக.
“வர மருமக லட்சுமி கடாட்சம். கொண்டுவர மகாலட்சுமி தான் வீட்டை நிறைக்கனும். அதை விட்டுட்டு இவன் என்னடான்னா…”
“ப்ச், வீடு முழுக்க சீர்வரிசையா நிறைச்சுட்டு ரோட்லையா பொங்கி சாப்பிட முடியும்….” என்று வாசுவும் எரிச்சல் மிகுதியில் கத்தியிருக்க,
“வாயை மூடு வாசு…” மருதவேல் தம்பியிடம் சொல்ல,
“ஏன் எனக்கு பதில் நீ பேச போறியா?…” என்றான் அவன் மேலும் கடுப்பாகி,
“அன்பு…” என்ற முத்துவேலை மேலும் பேசவிடாமல்,
“அம்மா, இவர் இப்படியே பேசிட்டு இருந்தார்ன்னா நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போக வேண்டியது வரும் சொல்லிட்டேன். இதுதான் இதை பத்தி பேசறது கடைசி. இங்கயே வச்சு பஞ்சாயத்து பண்ணாம ஊருக்கு கிளம்பற வழியை பாருங்க…” என்று வாசுதேவகிருஷ்ணன் போகிற போக்கில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் வேகமாய்.
“என்ன அன்பு உன் புள்ளை என்ன பேசறான்? நம்ம குடும்பத்துலயே இல்லாத பேச்சா இருக்கே? தனிக்குடித்தனம் அது இதுன்னு? அப்படி ஒரு நினைப்பு இருந்தா அதை அழிச்சுடனும். அவ்வளோ தான் சொல்லி வை…” என முத்துவேல் மனைவியிடம் எகிற,
“ஐயோ அப்பா அவன் வேணும்னே உங்களை சீண்டி விடறான். அவன் தான் முன்னாடி இருந்தே தனியா தான தங்கி இருக்கான். புதுசா என்ன தனிக்குடித்தனம் போக?…” என மருதவேல் சொல்ல முத்துவேலுக்கு முகத்தை எங்கே கொண்டு வைப்பதென்று தெரியாமல் திருதிருத்தார்.