“பின்ன மருமகன்கிட்ட ஒத்த வார்த்தை நீங்களும் சொல்லாம, புள்ளையையும் சொல்லவிடாம கூட்டிட்டு போய்ட்டா கோபம் வரும் தானே? அவர் இருக்கற வேலைக்கு புடவை எடுக்க வரனும்னு என்ன இருக்கு?…”
“நீ அப்படி சொல்லுறியா? கோவமா இருப்பாரா?…”
“பின்ன? நம்ம லட்சுமியை பார்க்க, பேசத்தான வராரு. நீங்க அந்த புள்ளைக்கு ஒரு போனை கூட வாங்கி குடுக்காம வச்சிருக்கீங்க. பேசனும்னு போன் பன்னிருப்பாரா இருக்கும். நீங்க எடுக்கவும் சமாளிச்சிருப்பாரு…”
“கல்யாணம் முடியிற வரைக்கும் எனக்கு ஒரு நிலையா இல்லடி. இப்ப பேச வச்சா எப்புடி?. நேத்து என்னடான்னா…” என்று மருமகளிடம் முதல் நாள் அவன் பொட்டு வைத்ததை சொல்ல வந்தவர் உடனே வாயை கப்பென்று மூடிக்கொண்டார்.
“என்னமோ சொல்ல வந்தீங்க?…” என மகிழ் கேட்க,
“ஹ்ம்ம், வந்துட்டா விடிஞ்சும் விடாத பொழுதுல கதை கேட்க. போடி வேலையத்தவளே. ஆகற சோலிய பாரு. என்னன்னு கேட்டா உடனே பாய விரிச்சு பலகாரத்த பரப்பிருவ….” என்று சொல்லிவிட்டு வேகமாய் சேலையை இழுத்து சொருகியபடி சென்றவர் பின்,
“இந்தா இவளே, உன் போனுல இருந்து போட்டு பேசிக்கிட்டு இருக்காத. என்னதேன் நல்ல மனுஷனா இருந்தாலும் நாம பொண்ணை நிறைஞ்ச சபையில அவர் கையில மரியாதையா குடுக்கற வரைக்கும் கொஞ்சம் கெட்டியா தான் இருக்கனும். விளங்குதா?…” என்று மருமகளை எச்சரிக்கவும் தயங்கவில்லை.
“ம்க்கும், அவருக்கிட்ட பேசறப்ப உதறும். என்கிட்டே மட்டும் எகிறும். எனக்கென்ன வேற வேலை இல்லையா?…” என சிலிர்த்துக்கொண்டு சென்றாள் மகிழ்.
மாடியில் இதனை கேட்டுக்கொண்டு இருந்த லட்சுமி மனதில் அவன் தன்னை ஏன் அழைக்கவில்லை என்ற எண்ணமும், இப்போதைக்கு அழைக்கவே வேண்டாம் என்ற எண்ணமும் பிறந்தது.
அழைத்து பேசமுடியாமல் போனால் அவனுக்கும், பேசினால் தாய்க்கும் மனத்தாங்கல் உண்டாகுமே என யோசித்து யோசித்து குழம்பினாள்.
ஆனாலும் அவனின் குரலை கேட்கவேண்டுமே என்ற ஏக்கம் நிரம்பிய மனது அவனை எதிர்பார்த்தது.
——————————————————-
வாசுதேவகிருஷ்ணன் கமிஷனர் ஜெயபாலுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒரு முக்கியமான கேஸ் விஷயமாக.
“ஸார் முகேஷ் உங்களை பார்க்கனும்னு வந்திருக்கார்…” என தொலைபேசியில் தகவல் வர,
“அனுப்பிவிடுங்க…” என்று வைத்தவர் கதவு திறக்கும் ஓசையில் திரும்பி பார்த்தார்.
உள்ளே வந்தவன் ஜெயபாலை பார்த்து விரைப்பாய் சல்யூட் வைத்தவன் அங்கே வாசுதேவகிருஷ்ணன் பார்த்ததும் முகம் மாறினான். உடனே முகத்தை திருப்பி கமிஷனரை பார்க்க,
“நான் கேட்ட டீட்டைல்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா முகேஷ்?…” என்று கேட்க,
“எஸ் ஸார்…” என தன் கையில் இருந்த பைலை நீட்ட,
“வாசுக்கிட்ட குடுங்க…” என்று சொன்னதும் பல்லை கடித்தவன் அவனிடம் கோப்பை நீட்ட அதை சிரிப்புடன் வாங்கியவன் பிரித்து பார்க்க ஆரம்பித்தான்.
பார்வை தீவிரமாய் அதில் இருந்த தொகுப்புகளை ஆராய ஜெயபாலும் அவனின் முகத்தை பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
“இந்த விவரம் கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க முகேஷ்…” என்றான் அதிகாரமாய் அவனிடம்.
அவனின் அதிகாரத்தில் வெகுண்டான் முகேஷ். இப்பொழுது வாசுதேவகிருஷ்ணனை அப்பட்டமாய் அவன் முறைக்க,
“முகேஷ்…” என்ற ஜெயபாலின் குரலில் லேசாய் கலைந்தவனை பார்த்த வாசுதேவகிருஷ்ணன்,
“இந்த ரிப்போர்ட் பத்தி கேட்டா பதில் சொல்லனும். அதை விட்டுட்டு அடுத்தவன் வீட்டு பீரோவை திறக்கக் சொல்ற மாதிரி இது என்ன திருதிரு லுக் முகேஷ்? சொல்லுங்க…” என்றவனின் குரலில் இருந்த அதிகபட்ச நக்கலில்,
“வாசு…” என்றார் கமிஷனர்.
“பின்ன என்ன ஸார், வேலை சம்பந்தமா கேட்டா பர்ஸனல் ரீசனை காரணம் வச்சு முறைக்கறான். பெரிய இவன் இவன்…” என்று மேலும் பேச ஜெயபாலுக்கு புன்னகை.
“வாய் உனக்கு ஜாஸ்தி. முத்துவேல் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆகாறார்ன்னு இப்பதான் புரியுது…” என சொல்லியவர்,
“முகேஷ் கோபத்தில் நியாயம் இருக்குது தானே? அவனுக்காக பேசி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டு கல்யாணத்துக்கு போகாம இருந்தா கோபம் வரத்தான செய்யும்…”
“அப்ப அதுக்கு காரணம் நான் இல்லை. நீங்க தான். உங்களைத்தான் சொல்லனும்…” என்று அவரை போட்டுவிட,
“நான் என்ன பண்ணேன்?…” என ஜெயபால் திகைக்க,
“ஆமா அந்த ராபரி கேஸ் சம்பந்தமா என்னை அனுப்பினது நீங்க. இவன் கல்யாணம் இருக்குன்னு தெரிஞ்சு தான போக சொன்னீங்க. இப்ப அப்படியே பிளேட்டை திருப்பி போடறீங்க?…” என்று போட்டு கொடுக்க,
“அடப்பாவி, உங்களை சமாதானம் செய்ய கூப்பிட்டா எனக்கே வேட்டு வைக்கிற நீ. உன்னை போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு…” என்ற ஜெயபாலின் முகத்தில் சிரிப்பே வீற்றிருக்க,
“ஸார் நான் போலாமா?…” என்றான் முகேஷ்.
“அட இருடா முறைச்சிங் முகேஷ். இந்தா இன்விடேஷன். எனக்கு கல்யாணம். உனக்கும் ஸார்க்கும் தான் முதல்ல வைக்கனும்னு உன்னை வரவழைச்சோம். வேணும்னா நீ என் கல்யாணத்துக்கு வராம என்னை பழி வாங்கிக்கோ மேன்…” என்று கண்ணடிக்க அதுவரை விரைப்பாய் நின்று கொண்டிருந்தவன்,
“பார்த்தீங்களா ஸார், இவன் கூப்பிடற லட்சணத்தை?…” என கமிஷனரிடம் புகார் பாடிவிட்டு வாசுதேவகிருஷ்ணன் பக்கம் திரும்பியவன்,
“என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியாடா? நீயெல்லாம் ஒரு ப்ரெண்டா? பொண்ணு பார்க்க போகறப்போ கூட என்னை கூட்டிட்டு போக தோணலை உனக்கு…”
“உன்னை ஏன்டா கூட்டிட்டு போகனும்? கல்யாணம் எனக்கு. நான் தான பொண்ணு பாக்கனும். உனக்கு தான் அல்ரெடி ஓவர் ஆகிடுச்சுல. ரொம்ப தான் ஆசை…”
“நான் மட்டும் உன்னை கூட்டிட்டு போனேன்…”
“உன்னை மாதிரி என்னையும் அப்பாவியா இருக்க சொல்றியா? உன்னைலாம் எவன்டா போலீஸ்ல சேர சொன்னது?…” என்று சிரிக்க,
“சொல்லுவடா கெத்து காண்பிக்கறேன்னு என் மண்டையை கழுவி மனசளவுல போலீஸா நினைக்க வச்சு இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி பேசற?…” என்று பேச இருவரின் சண்டையை பார்த்துக்கொண்டு இருந்தவர்,
“போதும் பசங்களா? உங்க பொஷிஷனுக்கும் சண்டைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. முதல்ல போய் வேலையை பாருங்க. போங்க…” என்று சிரித்தபடி அவர்களை கிளம்ப சொல்லி பின்,
“வாசு என்னைல இருந்து லீவ்?…” என்றதும்,
“கல்யாணத்துக்கு முதல் நாள்ல இருந்து தான் ஸார்…” என சொல்லிவிட்டு,
“இந்த பைல் என்கிட்டே இருக்கட்டும். இந்த கேஸ் நானும் முகேஷும் சேர்ந்தே பன்றோம். ஓகே தானே?…” என்று கேட்க,
“குட்லக்…” என சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.
“அப்பறம்டா, ஹனிமூனுக்கு எங்க போறதா ப்ளான்?…” என்று முகேஷ் இன்விடேஷனை பார்த்துக்கொண்டே கேட்க,
“இன்னும் ஒரு ப்ளானும் இல்லை. கல்யாணம் முடியட்டும். பிளான் எல்லாம் பக்காவா பண்ணலாம்…” என்று சிரிக்க,
“ஹ்ம்ம், உன்னை நம்ப முடியாது. ப்ளான் வச்சிருந்தா கூட சொல்லிடுவியாக்கும்?…” என்றான் முகேஷ் அவனை அறிந்தவனாய்.
“இன்னும் அஞ்சு நாள் தான் இருக்குது கல்யாணத்துக்கு. முதலையே இன்விடேஷன் குடுத்து முடிச்சிருக்கலாம் தானே?…” என பேசிக்கொண்டே வாசுதேவகிருஷ்ணன் அறைக்குள் வந்துவிட்டனர்.
“துரை டீ சொல்லுங்க…” என்றவன்,
“குடுத்திருக்கலாம் முகேஷ். வேற ஒரு டென்ஷன்ல இருந்துட்டேன். சரி விடு. இப்ப உன் கோபம் எல்லாம் போச்சா? நீ கூல் தானே?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், அப்படியும் சொல்ல முடியாது. பட் ஓகே. உன்னை ரொம்ப எதிர்பார்த்தேன்…” என்ற முகேஷ் அடுத்து அந்த பைல் பற்றிய விபரங்களை விளக்கிகொண்டிருந்தான்.
நாட்கள் கிடுகிடுவென ஒடி கடைசியில் மறுநாள் திருமணம் என்று வந்து நின்றது. விழுப்புரம் வந்து சேர்ந்துவிட்டனர் மாப்பிள்ளை வீட்டினர்.
ஆனால் வாசுதேவகிருஷ்ணன் காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டதால் முத்துவேலுக்கு இருப்புக்கொள்ளவில்லை.
உண்மையில் வருவானா மாட்டானா என்னும் பயமே அவரின் மனம் முழுவதும் வியாப்பித்திருந்தது.
பெண்ணின் ஊருக்கு வந்து சேர்ந்த பின்னர் மாப்பிள்ளை எங்கே என கேட்காதவர்கள் பாக்கி இல்லை. அத்தனை பேரும் வந்து கேட்டுவிட்டு அவன் இன்னும் வரவில்லை என்றதும் லேசாய் முகம் வாடித்தான் சென்றனர்.
“சொன்னேன்ல பாரு உன் புள்ளை பன்ற காரியத்தை. ஏன் இங்க வந்து தங்க மாட்டானா அவன்?…” என்று படபடப்புடன் இருந்தார் முத்துவேல்.
உண்மைக்கும் வேண்டுமென்றே வராமல் போய்விடுவானோ என்று பயந்துதான் போயிருந்தார் உள்ளுக்குள். ஆனால் வெளியில் அதனை காட்டிக்கொள்ள முடியாதே.
அன்புக்கரசியிடமும், மருதவேலிடமும் மாற்றி மாற்றி அவனை விசாரித்துக்கொண்டே தான் இருந்தார்.
எத்தனை போன் செய்தும் யாருக்கும் பதில் அளிக்காமல் இருக்க அன்புக்கரசிக்கே கோபம் வந்துவிட்டது.
“விமலா அவனை போன் அட்டன் பண்ண சொல்லி மெசேஜ் போடு…” என்று சொல்ல அதையும் பார்த்தவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இரவு வெகுநேரம் கழித்து அன்புக்கரசிக்கு அழைத்தவன் பேசும் முன்னே அழுகையுடன் பேசினார் அவர்.
“என்ன நினைக்கிற நீ வாசு? ஏன் இப்படி எல்லாம் பன்ற? இங்க உன்னை எல்லாருமே கேட்கறாங்க. எங்களால பதில் சொல்ல முடியலை. அசிங்கமா இருக்கு. அம்மாவுக்கு பயமா இருக்கு வாசு…”
“என்னம்மா நீங்க? என்னை பேச விடுங்க…” என்றவனுக்கு பேச வாய்ப்பே குடுக்கவில்லை அவர்.
“என்ன பேச போற? யாருக்கும் நிம்மதி இல்லை. பொண்ணு வீட்டுல எல்லாரும் கேட்கறாங்க. அவங்க என்ன நினைப்பாங்க? உண்மையை சொல்லு வாசு நீ உன் அப்பாவை கோபப்படுத்த இதெல்லாம் பன்றியா?…” என கேட்க,
“அம்மா, அம்மா, கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க. ப்ளீஸ்…” என்று அவன் கத்திய கத்தலில் அவரே விதிர்விதிர்த்து போனார்.
“வாசு…” என்றவரின் குரல் உள்ளே சென்றிருந்தது.
“ப்ச், புரியாம பேசாதீங்க. இன்னைக்கு வரத்தான் முயற்சி பண்ணேன். ஆனா முடியலை. வேற ஒரு முக்கியமான வேலையில் மாட்டிட்டேன். இப்ப தான் வீட்டுக்கே வந்தேன். இப்ப குளிச்சு கிளம்பிருவேன் நான். நீங்க கவலை படவேண்டாம்…” என்றவனின் நம்பிக்கையில்,
“அம்மா உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன் வாசு…”
“நீங்க தூங்குங்க வருவேன்…” என்றான் மீண்டும்.
அதன் பின்னர் தான் முத்துவேலுவுக்கும் நிம்மதியானது. அனைவரும் உறங்க சென்றுவிட அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தர வந்த மகிழ் அன்புக்கரசி பேசியதை கேட்டுவிட்டு அதே வேகத்தில் அதனை அபூர்வாவிடமும் சேர்ப்பித்திருந்தாள்.
“அண்ணி எனக்கு பயமா இருக்கு. நீங்க சொல்றதை கேட்கறப்போ எனக்கு ரொம்ப கவலையா இருக்கு அண்ணி….” என்று அவளின் கை பிடித்து அபூர்வா சொல்லியிருக்க,
“இங்க பாரு லட்சுமி, விடிஞ்சா கல்யாணம். என்ன பிரச்சனைன்னு தெரியலை. என் போன்ல இருந்து நீ பேசேன் அவர்க்கிட்ட…” என்று சொல்ல,
“எனக்கு அம்மாவ நினைச்சா?…”
“நாளைக்கு நீ அவர் பொண்டாட்டி. அதுக்கு பின்னால அம்மா கூட ரெண்டாவது தான். ஒழுங்கா பேசு. என்னன்னு கேளு…” என்று பேசி பேசி சம்மதிக்க வைத்திருந்தாள் மகிழ்.
அவளின் மொபைலில் இருந்து அழைத்தும் விட ஏற்கனவே அவர்கள் நம்பர்களை எல்லாம் வாசுதேவகிருஷ்ணன் தன் மொபைலில் சேமித்து வைத்திருந்தான்.
அப்பொழுது தான் குளித்து முடித்து கிளம்பி கதவை பூட்டிக்கொண்டு கீழே பார்க்கிங் வந்து காரை கிளப்பியிருந்தான்.
நடு ஜாமம் ஆகியிருந்த அந்த நேரத்தில் மகிழ் எண்ணிலிருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் எடுத்தவன்,
“சொல்லும்மா…” என்றதும் அவனின் இலகுவான குரலில் மறுபுறம் பதிலின்றி போக,
“பூர்வா…” என்றான். அவன் தன்னை கண்டுகொண்டதில் மகிழ்ந்து போனவள்,
“நீங்க வருவீங்க தானே? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?…” என்றாள் கலங்கிய குரலுடன்.
அவளின் எதிர்பார்ப்பும், தேடலும் ஒட்டுமொத்தமாய் அவள் பேசிய வார்த்தைகளில் பிரதிபலிக்க ஒருகணம் அமைதியாய் அதனை உள்வாங்கியவன்,
“பூர்வி அழறியா?…” என்றவனின் கேள்வியில்,
“ம்ஹூம், இல்லையே…” என்று சொல்லவும் லேசாய் சிரித்தவன்,
“நான் கண்டிப்பா வருவேன். என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? இப்ப கிளம்பிட்டேன் அங்க வரதுக்கு தான்…” என்று கேட்டு,
“பூர்வி நாளைக்கு மீட் பண்ணலாம் மிசஸ் வாசுதேவகிருஷ்ணன் ஆகறதுக்காக வெய்ட் பண்ணு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும். இந்த ஒரு ராத்திரி மட்டும்…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட அப்படியே அந்த மொபைலை பிடித்துக்கொண்டே சாய்ந்துவிட்டாள் படுக்கையில்.