நிஜம் – 7
விடியற்காலை முகூர்த்தம். வாசுதேவகிருஷ்ணனிடம் பேசிவிட்டு எப்பொழுது உறங்க ஆரம்பித்தாளோ மகிழ் எழுப்பும் வரை ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள்.
அத்தனை நம்பிக்கையாக அவன் வருவேன் என்று சொல்லிய பின்பு மனதில் இருந்த சஞ்சலம் எல்லாம் கரைந்தே போயின. அதனால் அந்த தூக்கம்.
“லட்சுமி எழுந்து குளிச்சுட்டு வா. இப்ப மண்டபத்துக்கு கிளம்பனும். சீக்கிரம்…” என சத்தமாய் அவளை எழுப்பவும் தனது கைகளுக்குள் இருந்த மொபைல் நழுவி விழுந்தது.
“இதை பிடிச்சுட்டே தூங்கினயாக்கும்? நல்ல பொண்ணு போ…” என தனது மொபைலை எடுத்து சார்ஜில் போட்டவள் கண்ணை கசக்கிக்கொண்டு அமர்ந்திருந்த அபூர்வாவை பார்த்து,
“கிளம்பு லட்சுமி. உங்கம்மா அப்பவே ஆரம்பிச்சுட்டாங்க. கீழே எல்லாரும் எந்திச்சு குளிக்கறாங்க…” என பெட்ஷீட்டை எடுத்து மடித்து போட்டவள் தனது தலையை உலர்த்த ஆரம்பித்தாள்.
“அவங்க வந்தாச்சா அண்ணி?…” என்றாள் எடுத்ததும்.
“வந்திட்டதா தான் சொன்னாங்க. உன் அண்ணனை தேடி கீழே போனப்போ மாப்பிள்ளையை பார்க்க போயிருக்கறதா மாமா சொன்னாங்க. வந்திருப்பாங்க தானே?…” என்றவள் தனக்கு எடுத்து வைத்த புடவையை பிரித்து கட்டுவதற்கு ஆயத்தமானாள்.
“லட்சுமி, இன்னும் கொஞ்சம் நேரத்துல மிச்சம் இருக்கறவங்களும் குளிக்க மேல வந்தாலும் வந்திருவாங்க…” என்று அவளை துரிதப்படுத்த,
“எனக்கு புடவை எடுத்துக்கறேன் அண்ணி…” என்றவள் தனது பீரோவை திறக்க போக,
“அடியேய், எல்லாம் நான் எடுத்து வச்சுட்டேன். உன்னோட பரிசப்பட்டைத்தான் நீ கட்டனும். மறந்துட்டியா? என்னாச்சு உனக்கு? முகமே இத்தனை டல்லா இருக்கு?…” என கவலையாய் கேட்க,
“ஹ்ம்ம், தெரியலை….” என்று புரியாமல் அவள் விழித்தாள்.
[the_ad id=”6605″]
முதல் நாள் வரை வாசுதேவகிருஷ்ணன் வரவில்லையே என்ற கவலை. இன்று பிறந்த வீட்டை பிரியப்போகிறோம் என்ற வருத்தம்.
“எதை பத்தியும் நினைக்காத. இந்த நாள் திரும்ப நீ நினைச்சா கூட திரும்ப கிடைக்காத நாள். உன்னோட குழப்பம் எல்லாத்தையும் தூக்கி போட்டு கிளம்புற வழியை பாரு. இப்பவே மூணு மணி ஆகிருச்சு…”
அபூர்வா மகிழ் சொல்லியதை கேட்டாலும் மனதில் ஓரம் சிறு வலி இருக்கத்தான் செய்தது. மெதுவாய் தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு தனது அறையை மீண்டும் சுற்றி பார்த்தாள்.
கண்ணாடி வழியே புடவை கட்டிக்கொண்டே அபூர்வாவை பார்த்த மகிழ் அவளின் உணர்வுகளை இப்பொழுது புரிந்துகொண்டாள்.
“என்ன லட்சுமி, இன்னைக்கு இந்த வீட்டை விட்டு கிளம்பனுமேன்னு கவலையா இருக்கியா?…” என கேட்கும் பொழுதே முணுக்கென்று கண்ணீர் தழும்பிவிட்டது.
“அட லூசாடி நீ? இதுக்கு போய் அழுதுட்டு…” என அபூர்வாவை அணைத்துக்கொண்ட மகிழ்,
“இது எப்பவும் உன் வீடு தான். இந்தா இருக்கற ஊருக்கு தான போக போற? நினைச்சா வந்துற போற. அவ்வளோ தான்…” என்று அவளை தேற்றியவள்,
“கிளம்பு முதல்ல. நீ அழறது உங்கம்மாவுக்கு தெரிஞ்சா தாங்கமாட்டாங்க. நேத்து ராத்திரில இருந்தே மூஞ்சி வாடி போச்சு அவங்களுக்கு. நீயும் இப்படி இருந்தா உடைஞ்சு போயிருவாங்க…” என்று சொல்லி அப்படி இப்படி தேற்றி அவளை குளிக்க அனுப்பிவைத்தாள் மகிழ்.
அவளுக்கே இனி அபூர்வா இங்கிருக்கமாட்டாள் என்பதில் சொல்லொண்ணா வருத்தம் தான். ஆனாலும் திருமணம் என்பது வாழ்க்கையில் வந்து தானே தீரும். ஒரு பெருமூச்சுடன் உலர்ந்துவிட்ட முடியை வகிடெடுத்து பின்னல் போட ஆரம்பித்தாள்.
“இந்தா இவளே…” என அறைக்கு வெளியே பூங்கோதை குரல் கேட்க,
“கதவு திறந்துதான் இருக்குது…” என்று உள்ளிருந்து இவள் சொல்ல,
“வந்து கதவ திறந்தா உன் கோரு(கர்வம்) கொறையுதாக்கும்?…” என்று திட்டிக்கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தவர் கையில் ஒரு பெட்டி இருந்தது.
“நகையெல்லாம் போட்டியா?…” என கேட்க,
“கட்டில்ல எடுத்து வச்சிருக்கேன் பாருங்க நீங்களே?…” என்றதும் அவற்றை எல்லாம் பார்த்தவர் முகம் சுளித்து நிற்க மகிழுக்கு கோபம் கனன்றது.
“இதையா போட போற?…” என முகத்தை தூக்கிவைத்து கேட்க,
“இதத்தான எங்க வீட்டில எனக்கு போட்டாங்க. அப்ப அதைத்தான போடுவேன்…” என்றாள் மகிழும்.
“விளங்குச்சு, அதுக்குத்தான வந்தேன். இந்தா இதை போடு…” என்று அந்த பெட்டியை கொடுக்க வாங்கி பார்த்தவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
அவை எல்லாம பெரிய பெரிய நகைகளாய் இருந்தது. அத்தனையும் பழமை வாய்ந்த நகைகள். ஆனால் புதிது போல மின்னியது.
“இது லட்சுமிக்கா?…” என்று மகிழ் கேட்க,
“அட கூறுகெட்டவளே? அவ நகைய எதுக்கு உனக்கு தர போறேன். இது என்னோடது. லட்சுமி கல்யாணத்துக்கு தான் உனக்கு குடுக்கனுமின்னு வச்சிருந்தேன். உன் நகைய போட வேணாமின்னு சொல்லலை. அது மறுவீடு, விருந்துன்னு போட்டுக்க…”
“இல்ல எனக்கு…” என மகிழ் இன்னமும் நம்பமுடியாமல் பார்க்க,
“வாயில போடுவேன் பார்த்துக்க. ஒழுங்கா அம்புட்டையும் கழுத்துல கையில பூட்டிட்டு உன் நாத்தியை கிளப்பிட்டு வந்து சேரு. புல்லுப்போல இருக்கறதா சபையில போட்டுட்டு நிப்பாளாம். நான் என்னத்துக்கு இருக்கேன்?…” என மருமகளை திட்டிக்கொண்டே கீழே செல்ல மகிழின் முகத்தில் குறுஞ்சிரிப்பு படர்ந்தது.
“கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொன்னா குறைஞ்சு போவாங்களாக்கும்…” என்று சொல்லியபடி அவர் கொடுத்ததில் ஒன்றை எடுத்து தனது கழுத்தில் மாட்ட,
“குடுத்தா வாங்கி உடனே போடனும். கையில வச்சுக்கிட்டு வேடிக்க பாப்பாளாம், நானு பல்லை காட்டிட்டு குடுக்கனுமாம். கிளம்புவியா…” என சொல்லிக்கொண்டு மீண்டும் பூங்கோதை வந்துவிட்டார்.
“நீங்க இன்னும் போகலையாக்கும்?…” என உதட்டை சுளித்துக்கொண்டு அவள் கேட்க கையில் வைத்திருந்த தட்டிய கட்டிலில் வைத்தவர்,
“வெறும் வயித்துல எம்புட்டு நேரம் இருப்பீங்க? அதான் சாப்பிட கொண்டு வந்தேன். இந்த டீயை குடிச்சுட்டு இந்த வடையை சாப்பிடுங்க. இப்ப மேக்கப்பு பண்ண வரதன் பொண்டாட்டி வந்துருவா. அவள வச்சிக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்காம வெரசா சாப்பிட்டு முடிங்க…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,
“யப்பா இந்தம்மாவை புரிஞ்சுக்க நாலு ஜென்மம் வேணும் எனக்கு…” என புலம்பலுடன் கதவை சாற்றியவள் டீயை குடிக்க அபூர்வா வந்துவிட்டாள்.
“இந்த டீயை முதல்ல குடி. நான் ரெடி ஆகிட்டேன். பூ மட்டும் தான் வைக்கனும். கிளம்பறப்ப வச்சுப்போம். இல்லைன்னா கசங்கிரும்…” என்று அபூர்வாவிற்கு டீயை எடுத்து கொடுத்தவள்,
“உங்கம்மா இந்த நகை எல்லாம் எனக்கு குடுத்துருக்காங்க லட்சுமி…” என அவளாக சொல்ல,
“இது எல்லாமே உங்களுக்கு தான் அண்ணி. பாலீஷ் பண்ண போறன்னைக்கு நான் தான் எடுத்து குடுத்தேன். அம்மா உங்களுக்குன்னு எப்பவோ எனக்கு சொல்லிட்டாங்க. உங்களுக்கு இன்னைக்கு தான் சொல்லிருக்காங்க…” என்று சொல்லவும் லேசாய் மகிழ் சிரிக்க,
“என்ன அண்ணி நம்ப முடியலையா? அம்மா ரொம்ப நல்லவங்க. கொஞ்சம் படபடன்னு துடுக்கா பேசுவாங்க. அவ்வளோ தான்…” என்றவளை சேரில் கண்ணாடி முன்பு அமர்த்தி தலையை உலர்த்தினாள் மகிழ்.
[the_ad id=”6605″]
“உங்க மேல பாசம் தான். காண்பிக்க தான் தெரியலை. உங்களுக்காக தான் உங்களையும் அண்ணாவையும் தனிக்குடித்தனம் போக சொல்லி சொன்னாங்க. ஒரு பிரைவேசி இருக்கும்னு. அண்ணன் தான் மாட்டேன்னு சொல்லிட்டான்…”
“எனக்கு தெரியாதாக்கும்? எனக்கே அப்படி தனியா போக விருப்பமில்லை. குடும்பம்னா இதெல்லாம் தான் இருக்கும். அவங்களை எனக்கு நல்லாவே தெரியும். நீ சொல்லியா தெரியனும்…” என்று மகிழ் சொல்ல,
“பின்ன ஏன் தான் சண்டை போடறீங்களோ?…”
“அதெல்லாம் இல்லைன்னா போர் அடிச்சுடும்…” என்று சிரித்தபடி மகிழ் பேசிக்கொண்டிருக்க அபூர்வா அதை கேட்டுக்கொண்டே தன் அறையில் தனெக்கென பேக் செய்யப்பட உடமைகளை பார்த்தபடி இருந்தாள்.
அவளுக்கு தெரியும் தாயும், அண்ணியும் வெளியில் தான் சண்டை என்று முறுக்கி திரிவார்களே தவிர இருவருக்குமே மனதினுள் ஒருவர் மீது ஒருவருக்கு அத்தனை பாசம். புரிதல் எல்லாம் இருக்கும்.
தனக்கும் இதை போல அமையுமா என நினைத்தவள் கண்களுக்குள் வாசுதேவகிருஷ்ணனுக்கு அடுத்து அன்புக்கரசியும், விமலாவும் தெரிய அதற்கடுத்து முத்துவேல் தான் தெரிந்தார் முரட்டுத்தனமான பார்வையுடன். லேசாய் உடல் தூக்கி போட,
“என் மாமனார் ரொம்ப கோவக்காரர் போல அண்ணி. கொஞ்சம் பயமா இருக்கு…” என்று மகிழின் கை பிடித்து சொல்ல,
“புருஷன் சரியா இருந்தா குடும்பத்துல யார் எப்படி இருந்தாலும் சமாளிச்சுடலாம். உனக்கு அதுல எந்த பிரச்சனையும் வராது. ஏனா உன் புருஷன் ரொம்ப சரியா இருக்கார்…” என்று சொல்லவும் மகிழ் சொல்லிய உன் புருஷன் என்ற வார்த்தையில் நாணியவள்,
“இன்னும் கல்யாணமே முடியலை அண்ணி. அதுக்குள்ளே இப்படி பேசாதீங்க…” என்று வெட்கத்துடன் சொல்ல,
“நேத்து நைட் அப்படி தெரியலையே லட்சுமி…” என மகிழும் சிரிக்க,
“இன்னுமாடி ரெடியாகறீங்க?…” என வந்துவிட்டார் பூங்கோதை. அவருடன் அழகுநிலைய பெண்ணும் வந்துவிட்டாள்.
“உங்கம்மா வந்துட்டாங்க. போய் வாங்கன்னு கேட்டுட்டு வா. நான் இங்க ஒத்தாசைக்கு இருக்கேன்…” என சொல்ல,
“இல்லை நீங்க போங்க, இல்லைன்னா அம்மாவை வர சொல்லுங்க. நான் லட்சுமி கூட இருக்கேன்…” என்று மகிழ் சொல்லவும் மருமகளின் நகைகளை திருப்தியுடன் பார்த்தவர்,
“சரி சரி, பூவை குடுத்து விடறேன்….”
“நிறையவே வச்சுக்கறேன். அதான சொல்ல வந்தீங்க…” என்று அவரை பேச விடாமல் சிரித்தபடி சொல்ல,
“இந்த வாய் மட்டும் இல்லைன்னா உன்னை…” என்று அவளின் கன்னத்தில் இடித்தவர் மகளை பார்த்துவிட்டு,
“ஏத்தா டீயை குடிச்சியா?…” என கனிவாக கேட்டார்.
“ஆச்சும்மா, நீங்க ஏதாவது சாப்புடுங்க…”
“அதெல்லாம் பார்த்துக்குறேன். கொஞ்சம் கழிச்சு இட்லி கொண்டு வர சொல்லிருக்கேன் உன் அண்ணன்ட்ட…”
“இப்ப வேண்டாம்மா. பசிக்காது…” என்று அபூர்வா சொல்ல,
“ப்ச் கம்முன்னு இரு. தாலிக்கட்டி எம்புட்டு சடங்கு இருக்கு. எல்லாம் முடிஞ்ச பின்னால தான் சாப்பிட முடியும். எவ்வளவு நேரம் ஆகுமோ? ஒழுங்கா சாப்பிடு…” என சொல்ல,
“ம்மா, கீழ குளிக்க நேரமாச்சுன்னா இங்க வர சொல்லுங்க. பாத்ரூம் ப்ரீயா தான் இருக்கு…” என அபூர்வா சொல்ல,
“அது எனக்கு தெரியாதாக்கும்? எல்லாரையும் மண்டபத்துக்கு அனுப்பியாச்சு. அங்கயும் ரூம் இருக்குல. அங்க குளிப்பாங்க. கீழ இருக்கறவங்க எல்லாரும் குளிச்சாச்சு…” என்று சொல்லிய பூங்கோதை,
“நான் பார்த்துக்கிடுறேன் லட்சுமி…” என்றவர்,
“எம்மா பொண்ணே போட்டோவுக்கு எம்மவ சொலிக்கனும் பார்த்துக்க. அங்கன இங்கன மூஞ்சியில பவுடரு வழிஞ்சு பெருக்கெடுத்து ஓடுச்சு ஒத்த பைசா நவட்டிக்க மாட்ட சொல்லிட்டேன்…”
“அட தெரியும் பெரியம்மா, நான் பார்த்துக்குவேன். கல்யாணாம் முடிஞ்சு கிளம்பற வரைக்கும் கூடவே இருந்து டச்சப் செஞ்சிவிடுவேன் போதுமா? ஒன்னும் கலையாது…” என்று அவரை சமாதானம் செய்தவளாக அந்த அலங்கார பெண் சொல்லவும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் கீழே இறங்கினார்.
மகிழ் சின்ன சின்ன மாற்றங்கள் சொல்லி மேக்கப் ஒரு வழியாக செய்து முடித்ததும் பார்க்க அத்தனை அழகாய் களையாய் இருந்தது அந்த அலங்காரம் அபூர்வாவிற்கு.
“உங்களுக்கு ரொம்ப மெனக்கெட வேண்டியதே இல்லாம அழகா செட் ஆகிடுச்சு…” என்ற அப்பெண்,
“நீங்க உட்காருங்க…” என மகிழிடம் சொல்ல,
“கல்யாண பொண்ணு அவ தான். எனக்கு வேண்டாம்…” என மகிழ் மறுக்க,
“உட்காருங்க அண்ணி, நேரமாகுதுன்னு சொன்னீங்கள்ள. சீக்கிரம் அவங்க போடட்டும்…” என்று அபூர்வாவும் சொல்ல,
“உங்க மாமியார் தான் உங்களுக்கும் போட்டுவிட சொன்னாங்க…” என்றதும் தான் மறுக்காமல் அமர்ந்தாள்.
“ஆனாலும் இன்னைக்கு மாத்தி மாத்தி ரொம்ப பொழியுறீங்க அம்மாவும், மருமகளும்…” என்று அபூர்வா சிரிக்க,
“போ லட்சுமி…” என்ற சிணுங்கலுடன் அமர்ந்தவளுக்கும் மேக்கப்பை முடிக்க பெண் அழைக்க வந்துவிட்டனர் மாப்பிள்ளை வீட்டினர்.
நேரம் காலை ஐந்து ஆகிவிட்டது. கிளம்பும் முன்னர் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வந்தவர்கள் வீட்டினர் அனைவருக்கும் சக்கரை பொங்கலை இலையில் வைத்து கையில் கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருந்தவர்கள் உடனே கிளம்பிவிட்டனர் பெண்ணை அழைத்துக்கொண்டு.
[the_ad id=”6605″]
மாப்பிள்ளையை தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்திருப்பதால் அங்கே சென்று அழைத்து மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஆறிலிருந்து ஏழு முகூர்த்த நேரம். ஆனாலும் மண்டபத்தில் கூட்டம் அலைமோதியது.
சற்று நேரத்திற்கெல்லாம் முகூர்த்த புடவை சபையில் மூத்தோர்கள் மத்தியில் குடுக்கப்பட்டு மாற்றி அழைத்து வரப்பட்டாள் அபூர்வலட்சுமி.
நடந்து வரும் பொழுதே லேசாய் விழி உயர்த்தி மேடையை பார்க்க யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். இவளை பார்ப்பான் என்று நினைத்திருக்க அவனோ போனில் மும்மரமாய் இருந்தான்.
அவள் வந்து அமரும் வரை அப்படித்தான் பேசிக்கொண்டே இருக்க லேசாய் மனம் சுணங்கினாலும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தாள்.
“உன் மகனுக்கு மேடையில உட்கார்ந்தும் பேச்சு கேட்குது. எப்ப பார்த்தாலும் போலீசாவே இருக்கான். இந்த மேள சத்தத்துலையும் யார்ட்ட இப்படி பேசறான்…”
“நீங்க கேட்கறீங்கன்னு நான் வேணும்னா கேட்டுட்டு வரேங்க…” என்றான் அன்புக்கரசி அவருக்காக கேட்பதாய்ஸ் ஒள்ள,
“எதுக்கு? நீ போய் சொல்லி அவன் அங்க இருந்து எந்திச்சு வந்து என் கிட்ட சவடாலா பேசனும். அதை எல்லாரும் பார்க்கனும். அதான உனக்கு வேணும். பேசாம வாயை மூடிட்டு அப்படியே நில்லு…” என்று எரிந்துவிழ,
“இம்புட்டு நேரமும் அப்படித்தான் இருந்தேன். நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லலைன்னா உங்களுக்கு கோபம் வருமேன்னு உங்களுக்காக தான் பேசினேன்…” என சொல்லிவிட்டு மேடையை பார்க்க அப்பொழுதுதான் பேசி முடித்து மொபைலை வைத்தவன் பார்வை தாயிடம் படிய,
“அங்க பாரு…” என அபூர்வாவை பார்க்க சொல்லி சைகை செய்ய திரும்பி பார்த்த வாசுதேவகிருஷ்ணன் முகம் கனிந்தது. அழகோவியமாய் அமர்ந்திருந்த பதுமை அவளின் அருகே குனிந்து,
“ஹாய் யக்கா, நைட் ரொம்ப பயந்துட்டீங்க போல? இப்ப நீ ஓகே தானே?…” என கேட்க தான் வரும் நேரம் போனில் பேசி தன்னை கவனிக்காமல் இருந்ததால் அபூர்வா பதில் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருக்க,
“ஒஹ் பதில் சொல்ல மாட்டீங்களோ?…” என கேலியாய் பேசியவன்,
“கல்யாணம் முடிஞ்சு என்னோட வா, உன்கிட்ட எப்படி பதில் வாங்கறேன்னு மட்டும் பாரு…” என்றவனிடம் கவனத்தை வைக்காமல் பார்வையை எதிரே எரிந்து கொண்டிருந்த ஜுவாலையின் மீது வைத்திருந்தாள்.
“பூர்வா…” என்றான் மீண்டும்.
“எல்லாரும் பார்க்கறாங்க…” என்றாள் முணுமுணுப்பாய்,