“பார்க்கத்தான வந்திருக்காங்க. பார்க்காம இருந்தா எப்படி?…” என்று சிரித்தவன் அவளின் படபடப்பில் சற்று நிதானித்து பின் மந்திரங்களில் கவனத்தை செலுத்தினான்.
சற்று நேரத்திற்கெல்லாம் திருமாங்கல்யம் அவனின் கைக்கு வரவும் அதனை வாங்கியவன் ஒரு நொடி தன் தாயை பார்த்துவிட்டு பின் அபூர்வாவின் கழுத்தில் கட்டினான்.
அவளின் முகம் சரியாய் தெரியவில்லை என்றாலும் பார்த்துக்கொண்டே தான் மூன்று முடிச்சையும் தானே போட்டுவிட்டான். அவனின் பின்னே மகிழும் விமலாவும் நின்றிருந்தனர்.
“வெல்கம் டூ அவர் லைப் மை வொய்ப் மிசஸ் அபூர்வா வாசுதேவகிருஷ்ணன்…”
“லட்சுமி…” என்றாள் அப்போதும் விடாமல்.
“பூர்வா…” என்றான் மீண்டும். சட்டென அவனை நிமிர்ந்து பார்க்க,
“என் கண்ணுக்குள்ள உன்னை தேடிட்டியா பூர்வா? எப்போ கண்டுபிடிப்ப?…” என்றான் இன்றும் அதே கேள்வியை.
இத்துடன் எத்தனை முறை கேட்டுவிட்டான். அதுவும் அவளை பார்த்த நாளில் இருந்து பார்க்கும் பொழுதெல்லாம் கேட்டுவிட்டான்.
ஏன் என்று தான் விளங்கவில்லை அவளுக்கு. அந்த வார்த்தைகளின் பின்னால் ஏதேனும் ஒளிந்துள்ளதா என்று அவனை பார்க்க அவளின் மாலையை சரி செய்வதை போல குனிந்த மகிழ்,
“போதும், போதும். தனியா எவ்வளவு நேரம் வேணும்னாலும் அண்ணாவை பாரு. இப்ப கொஞ்சம் குனிஞ்சு உட்கார். உங்கம்மா தான் சொல்ல சொன்னாங்க…” என்று சொல்லவும் விழிகளை தாழ்த்திக்கொள்ள பூங்கோதையும், தாமோதரனும் ஆனந்த கண்ணீருடன் மகளின் மணக்கோலத்தில் திளைத்து இருந்தனர்.
அடுத்ததாய் அவளின் வகிற்றில் குங்குமம் வைக்க அவளின் கழுத்தை சுற்றிக்கொண்டு அணைத்தார் போல வைத்தவன் தன் மீது சாய்த்து விட்டுவிட்டான்.
லேசாய் அவன் மீது சரிந்து நிமிர்ந்தவள் அவனின் நொடி நேர செயலில் உடல் அதிர்ந்தாள்.
“வேணும்னு ஒன்னும் பண்ணலை. லேசா பேலன்ஸ் மிஸ் ஆகிடுச்சு. நீ நம்பலைன்னாலும் அதுதான் நிஜம் பூர்வி…” என்றான் நமுட்டு சிரிப்புடன் அவளிடம்.
அவன் என்னவோ முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு தான் அவனிடத்தில் பேசினான். அவளுக்குத்தான் அப்படி இருக்கமுடியவில்லை.
உணர்வுகள் மொத்தமும் முகத்தில் பிரதிபலிக்க மறைக்க படாதபாடுபாட வேண்டியதானது. லேசாய் அவனறியாமல் நகர்ந்து அமர,
“நகர்ந்துட்டே இரு. அப்படியே ஐயர் மடியில நீ உட்கார, உன் மடியில நான் உட்கார வாசுதேவகிருஷ்ணன் கல்யாணத்தின் திடுக்கிடும் புதுமையான சுவாரஸியங்கள் அப்படின்னு நாளைக்கு ஹெட்லைன்ல நியூஸா வரட்டும்…” என்று மூக்கிற்கும் முழங்காலிற்கும் முடிச்சிட்டான்.
அவனை எந்த வகையிலும் அடக்கத்தான் வழிவகை தெரியாது திணறினாள் அவனின் மனைவி.
அதன் பின்னர் சடங்குகள் முடிவடைந்து மாலை மாற்றி ஒவ்வொன்றிக்கும் அவளை திணறடித்து பாடாய் படுத்தினான் என்றுதான் சொல்லவேண்டும்.
அதன் பின்னர் பெரியவர்கள் குடும்பத்தினர் என்று ஒவ்வொருவரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
வீட்டினர் வந்து ஆசிர்வாதம் செய்து முடித்த பின்னர் ராணியும், அவரின் கணவர் செல்வமும் வர வாசுதேவகிருஷ்ணன் முகம் இறுகியது. காலில் விழாமல் சட்டமாய் அவன் நின்ற விதம் செல்வத்தை எரிச்சல் மூட்ட,
“உன் அண்ணன் மகன் கோபத்துல நியாயமே இல்லை ராணி. உனக்காக தான் வந்தேன். இவன் ரொம்ப பன்றான்…” என்று மனைவியிடம் முணுமுணுக்க,
“விபூதி குங்குமம் பூசிட்டு முறையை செஞ்சிட்டு நகலுவோம். வாங்க…” என சொல்ல,
[the_ad id=”6605″]
“இவனால என் பொண்ணு கல்யாணத்துக்கு வரலை…” என்றவரை சமாதானம் செய்த ராணி இருவருக்கும் விபூதி குங்குமம் பூசிவிட அபூர்வா மட்டும் அவர்களின் காலில் விழுந்து எழுந்தாள்.
முத்துவேலும் இதனை பார்த்துகொண்டு தான் இருந்தார். ராணியிடம் ஆறுதலாய் கண்ணை மூடி திறந்தவர்,
“அன்பு இனி யார் கால்லயும் விழ வேண்டாம் உன் புள்ளை. அடுத்தடுத்து எத்தனை பேர் கால்ல விழறதாம்? போதும்…” என்று சொல்ல தாமோதரனும் அதனை ஆமோதித்தார்.
அவனின் பதவி வேறு அந்த முடிவெடுக்க செய்ய அதன் பின்னர் சொந்தங்கள் வந்து தனி தனியாக ஆசிர்வதித்து சென்றனர். அடுத்து வந்தவரை பார்த்ததுமே வாசுதேவகிருஷ்ணன் இதழ்களில் புன்முறுவல் உதித்தது.
சுந்தரம் தான். தினேஷிடம் வேண்டாம் என்று சொல்ல அவன் விடாமல் மாட்டேன் மாட்டேன் என்ற சுந்தரத்தை இழுத்துக்கொண்டே வந்துவிட்டான் தினேஷ்.
“இந்த ஊர்ல நீங்க எவ்வளோ பெரிய மனுஷர். நீங்க ஆசிர்வாதம் செய்யலைன்னா எப்படி அய்யா? நீங்க பண்ணுங்க. உங்க தலைமையில தான நிச்சயதார்த்தமே நடந்துச்சு…” என்று வேறு சொல்ல “அப்படியா?” என்று பார்க்க,
“இல்லை மாப்பிள்ளை, நம்ம பிள்ளை, எப்ப வேணும்னாலும் ஆசிர்வாதம் பண்ணலாம். வந்தவங்க முடிக்கட்டுமேன்னு உட்கார்ந்து இருந்தேன்….” என்று சொல்லி சிரிக்க,
“தினேஷு, இங்க வந்து விபூதி பூசினாதானா? மனசுக்குள்ளயே நான் தான் ஆசிர்வாதம் செஞ்சுட்டேனே?…” என்றுவேறு சொல்ல,
“அதெப்படிங்க இங்கயே பூசுங்க. வந்துட்டீங்களே?…” என்று வாசுதேவகிருஷ்ணன் சொல்லிய விதத்தில் சற்று மனம் மகிழ்ந்தவர் பின் உடலில் ஒரு தோரணையுடன் கூட்டத்தினரை பார்த்துவிட்டு விபூதி குங்குமத்தை வைத்தவர் பாக்கெட்டில் இருந்து ரூபாய் தாள்களில் ஆளுக்கொன்றாய் மணமக்கள் கைகளில் திணிக்க,
“லட்சுமி கால்ல விழுந்து கும்பிடு…” என்றார் பூங்கோதை. அபூர்வாவும் தாய் சொல்லியதை செய்தவள் எழுந்து நின்றதும் அவளின் தலையில் கை வைத்த சுந்தரம்,
“மங்களம் உண்டாகட்டும்…” என்று வாய்கொள்ளா சிரிப்புடன் சொல்ல அவரை உச்சு கொட்டி பார்த்த வாசுதேவகிருஷ்ணன்,
“அட கடவுளே, இத மங்களம் புருஷன்கிட்ட தான் சொல்லனும் சுந்தரம். நான் பூர்வா புருஷன். ஜோகங்கள் சுந்தரம்…” என்றவனின் நக்கலில் முகத்தை சுருக்கியவர் தினேஷை முறைத்தார்.
“வரேங்க…” என சொல்லிவிட்டு அவனை முறைத்தபடி செல்ல திடீரென முகம் மாறி செல்லும் அவரை,
“சாப்பிட்டு போங்க….” என விடாமல் மீண்டும் சாப்பிட அழைத்து சென்றான் தினேஷ்.
“படுத்துறானே” என்ற கோபத்துடன் அதனை காண்பிக்க முடியாமல் அவனுடன் சென்றார் சுந்தரம்.
“என்ன சொன்னீங்க தாத்தாட்ட? அவர் முகமே மாறிடுச்சு…”
“நம்மளை வாழ்த்தினாரு தானே? அதான் நம்ம வாழ்க்கையில் மங்களம் எப்படி உண்டாகும்னு கேட்டேன். வாய்ப்பில்லையேன்னு கேட்டேன், அதுக்கு கோச்சுக்கிட்டாரு. நான் என்ன தப்பாவா கேட்டேன்?…” என்று வேறு அவளிடம் கேட்டு வைக்க அவனை திகைப்பாய் பார்க்க,
“இப்படி பார்க்கற உங்கம்மா இதுக்கு ஒன்னும் சொல்லமாட்டாங்களா?…” என்று கேட்கவும் சட்டென பார்வையால் தாயை தேட ஆரம்பித்தாள் அபூர்வா.
“என் அம்மாவோட பேசிட்டு இருக்காங்க அங்க பாரு…” என்ற காண்பிக்க யாரோ உறவினரை அன்புக்கரசிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு நின்றார் பூங்கோதை.
அதன் பின்னர் மணமக்களை சாப்பிட அழைத்து செல்ல சாப்பிட்டு முடித்து வரவும் முகேஷ் வந்துவிட்டான்.
வந்தவன் அவர்களை வாழ்த்திவிட்டு பேசிக்கொண்டிருந்தவன் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினான்.
“அதுக்குள்ளே கிளம்பற முமு…” என்று வாசுதேவகிருஷ்ணன் கேலி செய்ய அவனின் முமு விளிப்பில் கடுப்பானவன்,
“வந்திருக்கவே கூடாது. ஜெயபால் ஸார் தான் போக சொன்னார். இல்லைன்னா நான் ஏன் வர போறேன்?…” என்று அவனும் மல்லுக்கு நிற்க,
“இரு, ஷாலினி கூட வரலை. நீ மட்டும் வந்துட்டு உடனே கிளம்பற. உன்னை என்ன செய்யலாம்?…”
“என்ன வேணா செய். ஊருக்கு வந்துட்டு செய். இப்ப நான் கிளம்பறேன். இங்க தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்க வீட்டுக்கு போய்ட்டு வர சொல்லி ஷாலினி சொல்லிருக்கா. சோ போய்ட்டு அப்படியே நான் சென்னை கிளம்பறேன்…” என்றவன் விடைபெற்று செல்ல அதன் பின்னர் மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
வீட்டிற்கு சென்றதும் பாலும் பழமும் சாப்பிடும் வரை நன்றாகத்தான் சென்றது. அதன் பின்னர் தான் அபூர்வாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டினரை பார்த்து பார்த்து வாட ஆரம்பித்தது.
அன்றே மாப்பிள்ளையின் வீட்டிற்கு கிளம்பவேண்டும் என்ற முடிவாகையால் தான் இருக்கும் நேரம் குறைந்துகொண்டே வருவதை நினைத்து தாயை தேடினாள்.
வாசுதேவகிருஷ்ணன் ஒரு போன் வருகிறதென எழுந்து சென்றதும் அபூர்வாவும் எழுந்து பூங்கோதையை தேடி வந்துவிட்டாள்.
மகளின் பரிதவிப்பு புரிந்து அவளை பிரியப்போகும் வலியை தானும் அனுபவித்தவர் அதனை காட்டிக்கொள்ளாமல்,
“என்ன லட்சுமி இப்படி என் பின்னாடியே வந்துட்டு. போயி மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு. அவருக்கு என்ன வேணும்னு கேட்டு குடு. இங்க எங்களை விட நீ தான பார்த்துக்கனும்…” என மகளுக்கு இப்பொழுதே குடும்பத்தின் ஆரம்பக்கட்டத்தினை வலியுறுத்த,
“இப்ப கிளம்பிடுவேன்ம்மா. நீ ஏன் விரட்டற?…” என்றாள் ஆதங்கத்துடன்.
“புரியுதுத்தா. ஆனா இப்ப அவருதான் முக்கியம். போ போயி சோடியா அவரோட உட்காரு. உனக்கு பலகார பானை, அரிசிப்பெட்டி எல்லாம் கட்டனும்…” என்று மகளை அங்கிருந்து நகர்த்த பார்க்க,
“திரும்ப என்னைக்கு கூப்பிட வருவ? அங்க எத்தனை நாள் இருக்கனும்?…” என்று கேட்க,
“இங்க மறுவிருந்துக்கு அழைக்க வருவோம்த்தா. நீ அங்க சந்தோசமா இருக்கனும். பொறுப்பா இருக்கனும். உனக்கு சொல்லனும்னு இல்லை. ஆனாலும் சொல்றேன். புரியுதாத்தா?…” என்றார் மகளின் முகத்தினை வருடி.
“அம்மா…” என அவரை கட்டிக்கொள்ள அவருக்கும் கலங்கி போனது.
“லட்சுமி, என்னை பாரு. அழாதம்மா, அம்மாவுக்கு தாங்காது…” என்றவர்,
“இந்தா இவளே, இங்க வா…” மகிழை அழைத்து,
“உன் அண்ணியை பாரு, இங்க நல்லா தான இருக்கா. அவளும் உன்னைய மாதிரி அவங்க வீட்டுல இருந்து நம்ம வீட்டுக்கு வாழ வந்தவ தான். இது எல்லாம் காலங்காலமா நடக்கிறது தான். கண்ணை கசக்காம போயி உட்காரு…” என சொல்லி முகத்தை கழுவ வைத்து அனுப்பிவிட அவளின் கலங்கிய முகத்தை கவனிக்க முடியாமல் அவனுக்கு வந்த போன் அவனை திசை திருப்பி இருந்தது.
அப்பொழுது தான் மதிய உணவு முடிந்து அனைவரும் அமர்ந்திருந்தனர். சில சொந்தங்கள் கிளம்பியிருக்க சிலர் மணமக்களை அனுப்பிவிட்டு கிளம்ப ஆயத்தமாக இருந்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும். அபூர்வாவிடம் ஒவ்வொருவராக வந்து புகுந்த வீட்டில் எப்படி நடக்கவேண்டும் என வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள் உறவுப்பெண்கள்.
[the_ad id=”6605″]
அவர்களுக்கு தலையாட்டிக்கொண்டு இருந்தாலும் பார்வை மொத்தமும் வாசுதேவகிருஷ்ணனின் டென்ஷனான முகத்தில் தான் நினைத்து இருந்தது.
“என்ன பிரச்சனை? ரொம்ப கோபமா இருக்கற மாதிரி இருக்காங்க?” என பார்த்தபடியே நின்றவளின் பார்வை உணர்ந்தவன் திரும்பி பார்த்ததும் அவளை கை நீட்டி தன்னருகே அழைத்தான்.
“அவங்க கூப்பிடறாங்க…” என குழுமியிருந்த பெண்களிடம் சொல்லிக்கொண்டு விலகி செல்ல தன்னருகே வந்தவளின் அலுத்து சிவந்திருந்த முகத்தை பார்த்ததும் கண்டுகொண்டான்.
“என்ன சென்டிமென்ட்டா?…” என்றான் லேசான கேலி இழையோடிய குரலில்.
“ஹ்ம்ம்…” என தலையை அசைக்க பின் ஒரு பெருமூச்சுடன் ஜன்னல் புறம் பார்வையை திருப்பியவன்,
“பூர்வி இப்ப நான் கிளம்பனும். அர்ஜன்ட்…” என்றான்.
“என்ன சொல்றீங்க? எங்க போகனும்?…” என கேட்க,
“இப்ப இப்பவே போகனும்…” என அழுத்தமாய் அவள் முகத்தில் பார்வையை பதித்து சொல்ல,
“அதான் இப்போ கிளம்பறோம் தானே? எனக்கு தெரியும். அம்மா சொன்னாங்க…” என்றாள் மீண்டும் அவன் என்ன சொல்ல வருகிறான் என புரியாமல்.
“கிளம்பறோம் தான். ஆனா இப்ப நான் மட்டும் தான் கிளம்பறேன்…”
“என்ன… என்ன?…” என்றாள் சட்டென்று கலக்கமுற்று.
“ஒரு முக்கியமான வேலை. நான் போயி ஆகனும். இப்பவே. போகாம இருக்க முடியாது…” என சொல்லி,
“அபிஷியல்….” என்று சொல்லவும் நெஞ்சம் திடுக்கென்று ஆனது.
முதல் நாள் கூட என்னவோ பிரச்சனை என்று உணர்ந்தாள் இதே போன்று. இப்பொழுதும் அவன் சொல்லவும் அதே உணர்வு ஓடி வந்து ஒட்டிக்கொள்ள வார்த்தை வரவில்லை.
“உன் ரூம்க்கு கூட்டிட்டு போ…” என்றவனின் பேச்சில் ஜெர்க் ஆகியவள்,
“அம்மாக்கிட்ட கேட்டுட்டு…” என சொல்லவும் அவளின் தயக்கத்தில் இதழ்களுக்குள் புன்னகைத்தவன்,
“இப்ப நான் அந்த மூட்ல இல்லை. நீ என்னை நம்பி வரலாம்…” என்றான் குறும்பாய்.
முதலில் அவன் கேலி புரியாமல் பார்த்தவள் பின் அதன் அர்த்தம் உணர்ந்ததும் முகத்தில் குப்பென்று பாய்ந்த உணர்வுகளின் வர்ணஜாலம் அவனின் பார்வைக்கு விருந்தானது. ரசனையுடன் அதனை உள்வாங்கியவன்,
“இப்ப கூட்டிட்டு போ. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்…” என்றவனுடன் சேர்ந்து நடந்தாள்.
அவள் மாடிப்படியை நோக்கி செல்லும் பொழுதே கவனித்துவிட்ட பூங்கோதை பதட்டத்துடன் மருமகளை அழைத்து,
“மகிழு அவங்க எங்க போறாங்கன்னு பாருடி. அம்புட்டு சனமும் கூடி இருக்க இந்த மனுஷன் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டார் போல. போடி போயி என்னன்னு கேளு…” என்று அவளை அனுப்பியவர் மகனை தேடிக்கொண்டு வந்தார்.
“அறிவிருக்கா தினேசு, வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை கவனிக்காம என்ன பண்ணுற? மாடிக்கு போறாரு. செத்த தல சாய்க்கனும்னா கூட இருந்து வசதி பண்ணி குடு. முதல்ல உன் தங்கச்சியை கீழே அனுப்பு…” என்று படபடக்க தினேஷும் ஓடினான்.
அறையை அடைவதற்குள் மகிழ் வந்ததுமே அவனின் பின்னோடு வந்த தினேஷ் என்னவென்று கேட்க,
[the_ad id=”6605″]
“நீங்க என்னன்னு கேளுங்க, நாங்க இதோ வந்திடறோம்…” என்ற மகிழ்,
“லட்சுமி வந்து அண்ணனுக்கு குடிக்க ஏதாவது வாங்கிக்க…” என்று இழுத்துக்கொண்டே சென்றுவிட்டாள் மகிழ்.
அவர்களின் பதட்டத்தை கவனித்தாலும் அதற்கெல்லாம் ரியாக்ட் பண்ண தனக்கு நேரமில்லை என்று நினைத்தவன்,
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ண வந்தேன் தினேஷ்…” என சொல்ல மருதவேல் ஒரு பேக்குடன் வந்துவிட்டான்.
“உன் ட்ரெஸ். ஏன் மாப்பிள்ளைக்கு இந்த வேஷ்டி ஷர்ட் கம்பர்டபிளா இல்லையாமா?…” என முறைத்துக்கொண்டே தர,
“அம்மாவை வர சொல்லுடா…” என்றவன் முகம் இறுக்கமாய் இருக்க தினேஷை பார்த்தவன்,
“போய் கூட்டிட்டு வரேன்…” என சொல்லி கீழே சென்றான்.
அடுத்த பத்தாவது நிமிடம் உடையை மாற்றிக்கொண்டு கிளம்பியிருந்தான் கல்யாண வீட்டில் இருந்தவர்களின் கலவரத்தை பொருட்படுத்தாமல்.