“சரிங்க வாங்க சொந்தக்காரங்க இருக்கறப்ப நாமளா கூடி கூடி பேசினா இன்னும் எதாச்சும் கதை கட்டிருவாங்க. இங்க என்ன பேசினோம்னு ஒருத்தருக்கும் தெரியாது. அவங்களா கை கால் முளைக்க வச்சு கடை தெருவுக்கு அனுப்பிருவாளுங்க…” என்று சொல்லிக்கொண்டு எழுந்து கொள்ள,
“நானும் வரேன்…” என்றவர் மகிழிடம் கண்ணை காண்பித்துவிட்டு கீழே இறங்கினார்.
“இப்ப நாம என்ன பன்றது விமலா?…” என கேட்க,
“பொறு அவங்களா பேசட்டும். அப்ப நாம அத்தைக்கு துணையா பேசுவோம். அதுவரைக்கும் பேசாம இருப்போம்…” என சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருக்க சற்று நேரத்திற்கெல்லாம் கீழே சத்தம் கேட்டது.
இருவரும் அபூர்வாவை விட்டுவிட்டு கீழே இறங்கி சென்றார்கள். முத்துவேல் கோபமாக இருக்க அன்புக்கரசி நடுக்கத்துடன் நின்றார்.
சொந்தங்கள் அனைவரும் கிளம்பியிருக்க ஓரிருவர் மட்டுமே அங்கே இருந்தனர். விமலா வேகமாய் இறங்கி வந்து மகிழுடன் அன்புக்கரசி பக்கத்தில் நின்றுகொண்டாள்.
“நீங்களா ஆளாளுக்கு முடிவெடுத்தா குடும்ப தலைவன்னு நான் எதுக்கு இருக்கேன்? கூடிப்போச்சு எல்லாருக்கும். இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்…” என்று எகிற அன்புக்கரசி அமைதியாய் நின்றார்.
“அப்பா என்ன இது இங்க வச்சு?…” என மருதவேல் சொல்ல,
“நீ சும்மா இருடா, என்ன உன் தம்பியை பார்த்து உனக்கும் துளிர்விட்டு போச்சோ?…” என்று மூத்த மகனை வார்த்ததைகளால் காயப்படுத்த யாரும் அவனிடத்தில் பேச அஞ்சினர்.
———————————————-
வாசுதேவகிருஷ்ணன் முகம் இறுகிக்கிடந்தது. அந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவனுக்கு தேவையான அனைத்து விளக்கங்களையும் தந்துவிட்டனர். சரியான நேரத்திற்கு கொண்டு வந்ததனால் காப்பாற்ற முடிந்தது. உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் என்றும் சொல்லியிருந்தனர்.
“ஏன்டா இன்னும் முகத்தை உர்ருன்னு வச்சிட்டு உட்கார்ந்திருக்க? அதான் இப்ப பரவாயில்லைன்னு சொல்லிட்டாங்களே?…”
உயிர் போகும் வலியை முகத்தில் காண்பிக்காமல் அப்பொழுதுதான் மயக்கம் தெளிந்திருந்த முகேஷ் அவனிடம் பேச அவனை பார்க்க பார்க்க நாடி நரம்பெல்லாம் துடித்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு.
“உன் வாயை மூடு, எப்ப பாரு எதாச்சும் வந்து மாட்டிக்கறது. இப்ப ஹாசினிக்கு யார் பதில் சொல்றது?…”
“அதான் வந்துட்ட தானே? நீயே சொல்லிக்க. சொல்லிட்டு கிளம்பற வழியை பாரு…” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் கண்களை மூடிக்கொண்டான் சோர்வுடன்.
அவனின் கட்டுப்பாடின்றி லேசாய் கண்ணீர் கசிந்தது. வலி தான் அத்தனை வலி. எரிச்சல். ஆனாலும் அதனை காட்டிக்கொண்டால் வாசுதேவகிருஷ்ணன் இன்னும் மூர்க்கமாகிவிடுவான் என்று பல்லை கடித்துக்கொண்டான்.
முகேஷின் கண்களில் இருந்து வெளி வந்த கண்ணீரை விரல் கொண்டு வந்த துடைத்ததும் திடுக்கிட்டு முழித்தவன்,
“அப்ப இருந்து என்னவோ கண்ணை உறுத்துது வாசு. அதான் கண்ணீர் வந்துட்டே இருக்கு….” என சமாளிக்க,
“ரொம்ப வலிக்குதாடா முகேஷ்…” என்றான் சஞ்சலத்துடன்.
“நீ வழக்கம் போல முமுன்னு கூப்பிடுடா. எனக்கே இப்படி கூப்பிடறது சகிக்கலை. வலி இல்லாமலா இருக்கும்? நம்ம ட்ரெய்னிங்ல பார்க்காத வலியா? போடா டேய்…” என கையை லேசாய் அசைத்துவிட அங்கே மரண வலி.
“அவனுங்களை சும்மா விடமாட்டேன்…” என்று பல்லை கடித்து கர்ஜித்தவன் வன் எழுந்து சென்று ஜெயபாலுக்கு அழைத்தான். அவரிடம் பேசியவனை சமாளிக்க முடியாமல்,
“எல்லாம் ஓகே வாசு, ஆனா உனக்கு கல்யாணம் இன்னைக்குத்தான் முடிஞ்சிருக்கு. இதுக்கு நான் ஆக்ஷன் எடுக்கறேன். நீ கிளம்பு…” என சொல்ல,
“நான் கேட்டதை மட்டும் செய்ங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்…” என்றான் இவனும் முடிவாக,
“வாசு நீ எனக்கு ஆடர் போடறியா? நான் சொல்றதை நீ கேளு மேன்…” என்று அவரும் அவனுக்கு இணையாக கத்த,
“அப்போ நானே பார்த்துக்கறேன். உங்கக்கிட்ட கேட்கலை…” என்று வைத்ததும் மீண்டும் அவனுக்கு அழைத்தவர்,
“ஓகே ஓகே, நான் பன்றேன். நீ கவனம்…” என சொல்லி வைத்ததும் ஹாசினிக்கு அழைத்து தகவல் தன்மையாக விஷயத்தை சொல்லியவன் பயப்படாமல் கிளம்பி வா என்றும் சொல்லி ஆறுதல் சொன்னான்.
மீண்டும் துரைக்கு அழைத்தவன் சில உத்தரவுகளை பிறப்பிக்க உடனடியாக களத்தில் இறங்கினார்கள்.
“வாசு, டேய்…” என்ற முகேஷை திரும்பி பார்த்து,
“மூச், வாயை திறந்த அதையும் கிழிச்சு விட்டு தையல் போட சொல்லிடுவேன் ராஸ்கல்….”
[the_ad id=”6605″]
“இதென்னடா வம்பா இருக்கு? போலீஸ்க்காரன் நீ மட்டுமில்லை. நானும் தான். என்னை ஒளிஞ்சுக்க சொல்றியா? போடா…” என்று முகேஷ் கோபமாய் பேச சட்டென நிதானித்தவன்,
“ஹாசினி வந்திட்டு இருக்கா. டேக் கேர். நான் கிளம்பறேன். சீக்கிரம் ரெக்கவர் ஆகிடு…” என சொல்லிவிட்டு சென்றவனை அழைக்க அழைக்க திரும்பவே இல்லை.
அங்கிருந்து கிளம்பியவன் நேராக கன்ட்ரோல் ரூமிற்கு சென்றான். தனக்கு சந்தேகமான எண்களை சொல்லி அவற்றை ட்ராக் செய்ய அவனின் கணிப்பு சிறிதும் பிசகவில்லை.
“மவனுங்களா கூண்டோட புழிஞ்சிடறேன் உங்களை…” என்று கையை முறுக்கிக்கொண்டு தனது படைபலத்துடன் அவ்விடம் நோக்கி சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமணத்திற்கென காலை உணவை முடித்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்று அங்கிருந்து கிளம்புவதாக தான் திட்டம். ஆனால் கிளம்பும் நேரம் பச்சயப்பனிடமிருந்து ஒரு ரகசிய தகவல்.
தான் கண்காணிக்க சொல்லியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவனின் பிறந்தநாள் விழாவை மிக சிறப்புடன் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதனை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கிடைக்கப்பெற இப்பொழுது விட்டால் அவனை கைது செய்ய வாய்ப்புகள் மிக குறைவென்பதால் உடனடியாக தனது நம்பிக்கைக்குரியவர்களை திரட்டினான். அதில் முகேஷும் ஒருவன்.
கைதான குற்றவாளிக்கு பக்கபலமாக இருந்த சில ரவுடிகளையும் சேர்த்து கைது செய்ய அவ்விடமே கலவரமனாது. சில தப்பித்தும் சென்றனர். அதனால் வாசுதேவகிருஷ்ணன் இரவு தாமதமாக வந்து சேர்ந்தான்.
அந்த தாக்குதலில் பக்கபலமாய் இருந்த முகேஷை ஆள் வைத்து விபத்து போல சித்தரிக்க நடந்த விளைவில் அதிர்ஷ்டவசமாக முகேஷ் பிழைத்துக்கொண்டான்.
ஆனால் காலும் கையும் உடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. காரின் முகப்புகள் நசுக்கப்பட்டு வெகு தூரம் காரை இழுத்து சென்றதால் முகமும் உடலும் உராய்ந்து தோல்கள் சேதாரம் அடைந்திருந்தது. கண்ணை மூடியபடி நிகழ்ந்தவற்றை அசைபோட்டுக்கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஸார் ரீச் ஆகிட்டோம்….” என்ற துரையின் அழைப்பில் கண்ணை திறந்தவன்,
“வண்டி இங்கயே இருக்கட்டும் துரை. எல்லாரும் பொசிஷன்ல இருங்க. நான் சிக்னல் கொடுத்ததும் அட்டாக் பண்ணனும்…”
“ஸார் அட்டாக்…” என்று தயங்க,
“அவனுங்க என்ன தியாகிகளா? சுட்டுட்டு கேஸை முடிக்கறதை விட்டுட்டு கூட்டிட்டு போய் சோறு ஊட்டி கொஞ்சி குடும்பம் நடத்த சொல்றீங்களா? சொல்றதை செய்யுங்க துரை…” என்றான் கடுப்புடன்.
வந்திருக்கும் இடம் குற்றவாளியுனுடையது. யாரின் உயிருக்கு வேண்டுமென்றாலும் ஆபத்து நேரலாம். இவர்களானால் அறிவுரை சொல்லிக்கொண்டு இருக்க அவனின் கோபம் இன்னும் பலமடங்கானது.
“நாங்க வாட்ச் பண்ணினதுல ரெண்டு பேர் தான் இருக்காங்க. கைல வெப்பன் இருக்குது…” என்றொருவன் சொல்ல அடுத்த ஐந்து நிமிடங்களில் குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டனர்.
தனது தனிப்பட்ட கண்காணிப்பில் உள்ள லாக்கப்பில் வைத்து நய்யப்புடைத்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன். ஆத்திரம் தீருமட்டும் அவர்களை தன் பாணியில் பிழிந்தெடுத்தான்.
“ஏன்டா பரதேசிங்களா பன்றது களவாணித்தனமும், காவாலித்தனமும் புள்ளைங்களை கடத்தி சம்பாதிக்கிற நாயிங்க உங்களுக்கு ரிவென்ச் கேட்குதோ?…” என்று கதற கதற வைத்து செய்தான் என்று தான் சொல்லவேண்டும்.
அவர்கள் கைதான தகவல் எங்கும் கசிந்துவிடாமல் ரகசிய கண்காணிப்பில் வைத்துவிட்டு அதனை பற்றி கமிஷனரிடம் ரிப்போர்ட் செய்ய கிளம்பினான்.
ஜெயபாலிடம் சொல்லவேண்டியதை மட்டும் தெரிவிக்க அவர் அதிருப்தியுடன் பார்த்தார் வாசுதேவகிருஷ்ணனை.
[the_ad id=”6605″]
“நீ திரும்ப திரும்ப ரிஸ்க் எடுக்கற வாசு. இப்ப புடிச்ச குற்றவாளிகளை லீகலா ப்ரசீட் பன்றதை விட்டுட்டு…”
“அந்த வாளிங்களால கொஞ்சம் சாக்கடையை அள்ள வேண்டியிருக்கு ஸார். அதுக்காக தான் என்னோட கஸ்டடில வச்சிருக்கேன். சமயம் வரப்போ நானே லீகலா அவனுங்களை கோர்ட்ல சரண்டர் பன்றேன்….”
“இருந்தாலும் இது சரிவராது வாசு. கோர்ட்ல அவனுங்க வெளி வரமுடியாதபடி பண்ணுவோம்…” என சொல்ல,
“ப்ச், கோர்ட்ல நாம அவனுங்களை ஒப்படைக்க எவனாச்சும் வண்டுமுருகனுங்க வந்து அவனுங்களை ஜாமீன் எடுத்துட்டு போகறதுக்கா? போலீஸ் நாம இத்தனை யோசிக்கும் போது கிரிமினல்ஸ் எத்தனை யோசிப்பானுங்க. அவனுங்களை வச்சு இன்னும் எனக்கு நிறைய ஆக வேண்டியது இருக்குது. சோ…” என்றவனின் பதிலில் இனி இதை பற்றி கேட்பதற்கு எதுவும் இல்லை என்பதை போல தோளை குலுக்கிக்கொண்ட ஜெயபால்,
“வீட்டுக்கு பேசிட்டியா?…” என்றார் அவனுக்கு ஞாபகப்படுத்தும் பொருட்டு.
அப்பொழுதுதான் தனது கைகளை பார்த்தான். காலையில் திருமணத்தின் பொழுது பூசப்பட்ட சந்தனம் இன்னும் உதிராமல் கை முடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொக்கி நிற்பதை பார்த்தவனின் முகம் மென்மையுற்றது.
“இப்ப டைம் என்னன்னு தெரியுமா? நைன் தர்ட்டி…” என்றார் கண்டன குரலில்.
“பார்த்துக்கலாம் ஸார். நான் கிளம்பறேன்…” என சொல்ல,
“உனக்கு காலையில இருந்து இதை சொல்லனும்னு முயற்சி பன்றேன். ஆனாலும் முடியலை. எல்லாம் உன்னால தான்…” என்று கடிந்தவர்,
“கங்க்ராட்ஸ் வாசு. ஹேப்பி மேரீட் லைப் மேன்…” என்று வாழ்த்தியதும் வாசுதேவகிருஷ்ணன் முகம் பூரித்தது.
“தேங்க் யூ ஸார்…”
“இருக்கட்டும், முதல்ல பொண்டாட்டிக்கு நல்ல புருஷனாவும் இருக்க பாரு. பர்ஸ்ட் இம்ப்ரெஷன் தி பெஸ்ட் இம்ப்ரேஷன்னு சொல்லுவாங்க. அது திருமணம் ஆனா அன்றைய நாளுக்கும் பொருந்தும். முதல் நாளே நல்லா சொதப்பிருக்க…” என்று சொல்லவும் சிரித்தவன்,
“சமாளிச்சுடுவோம்…” என்றான் நம்பிக்கையாக.
“ஓகே பார்த்துக்கோ. ரொம்ப டயர்டா வேற இருக்க. முதல்ல மொபைலை ஆன் பண்ணி வீட்டுக்கு பேசு…”
“அம்மாக்கிட்ட பேசிட்டேன். நேத்தே பயந்துட்டாங்க. அதான்…” என்றான் அவரின் கோபத்தை கண்டு சிரித்தபடி,
“இதில் எல்லாம் விவரம் தான். குட். முக்கியமா நாளைக்கு இங்க வந்து நின்ன பார்த்துக்க. போய் வொய்ப் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு…” என்றவர் ஒரு கவரை நீட்டினார்.
“என்ன இது?…” என்று வாங்கி பார்க்க அது ஹனிமூன் பேக்கேஜ்.
“த்ரீடேய்ஸ் ஹனிமூன் பேக்கேஜ். வயநாடு. நெக்ஸ்ட் வீக் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா. மண்டை சூடு குறையும்…” என்றார் கேலியும், கண்டிப்புமாக.
“ஹ்ம்ம் அசத்துறீங்க போங்க…” என்று வாங்கிக்கொண்டவன்,
“தேங்க் யூ ஸார். கிளம்பறேன்…” என்றவன்,
“முகேஷ்…”
“ஐ ல் டேக் கேர். இப்போ நீ ட்ரைவர் வச்சுக்க. நான் சொல்லிருக்கேன். இப்ப கிளம்பு…” என்றார் புன்னகை முகமாய்.
அங்கிருந்து கிளம்பியவன் தாய்க்கு அழைக்க அன்புக்கரசி எடுக்கவே இல்லை. அதன் பின் அனைத்தையும் மனதில் ஒதுக்கி வைத்துவிட்டு நேராக தன்னுடைய அப்பார்மென்ட்டிற்கு தான் சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
மேலே வந்தவன் மெதுவாய் நடந்து லிப்டில் ஏறி வீட்டை திறக்க அது வெறுமனே சாற்றி இருந்தது.
[the_ad id=”6605″]
முகத்தில் சிரிப்பு படர கதவை திறந்தவன் கண்களில் முதலில் பட்டது முத்துவேல் தான். அவர் அமர்ந்திருந்த தோரணையை பார்த்த வாசுதேவகிருஷ்ணன் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை படர்ந்தது.
அங்கே முத்துவேலுடன், மகிழ், தினேஷ், பூங்கோதை, விமலா, மருதவேல் அனைவரும் வந்திருக்க கலவரமாக அன்புக்கரசி நின்றிருந்தார்.
“வாங்க, வாங்க எல்லாரும் வாங்க…” என்றான் சிரித்த முகமாய்.
அவனின் சிரிப்பு தன்னை கேலி செய்வதை போல நினைத்த முத்துவேல் அவனை நெருங்கி,
“நினைச்சதை சாதிச்சுட்ட தான?…” என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“வாழ்த்த வந்துட்டு இப்படி கடிச்சு குதறினா எப்படி? இது என்னவோ சாபம் குடுக்கற மாதிரி இருக்கு…” என்றான் தன்மையாக.
ஏனோ அவரை நோகடிக்க அப்போதிருந்த மனநிலை உடன்படவில்லை. தன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதனால் அவன் பொறுமையாக பேச பேச முத்துவேலுவுக்கு தான் அதனை பார்க்க முடியவில்லை.