நிஜம் – 9
அன்புக்கரசி பதில் பேசாமல் அமைதியாக நிற்பதை பார்த்த வாசுதேவகிருஷ்ணன் பார்வை மீண்டும் வீட்டை பார்வையால் அலசி,
“பூர்வா எங்கம்மா?… என கேட்டபடி ஷூவை கழற்ற கை கொண்டு போக,
“அவ இங்க இல்லை….” என்றார் அன்புக்கரசி.
எதுவும் பிரச்சனையோ? என நினைத்து தந்தையை பார்த்துவிட்டு என்னவென்று தாயிடம் பார்வையால் வினவினான்.
“இரு வாசு ஷூவை கழட்டாதே. கொஞ்சம் வெளில இரு….” என்று உள்ளே வந்து கதவருகே வந்திருந்தவனை நிறுத்தி,
“முதல் முதல்ல வரப்போ ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரனும். அதனால பக்கத்து வீட்டுல மருமகளை இருக்க வச்சிருக்கோம்…” என சொல்ல,
“என்னம்மா இது? இப்ப டைம் என்ன? இப்ப போய் இன்னொரு வீட்டில?…” என வாசுதேவகிருஷ்ணன் கோபமாய் பார்க்க,
“நாங்க வரும் போது அவங்க வெளில வந்து எட்டி பார்த்தாங்க. சேர்ந்து கூட்டிட்டு போங்க, தனி தனியா வேண்டாம். அப்ப தான் நல்ல சகுனம்னு சொல்லிட்டாங்க…” என்றவரின் பதிலில் ஆட்சேபிக்கும் பார்வை பார்க்க,
“இவரு சொல்றதை எல்லாம் செய்யனுமாம். ஆனா நாம சம்பிரதாயம்னு சொன்னா மவராசனுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருமாம்…” என முத்துவேல் மீண்டும் வாயை திறக்க,
“ஐயோ கொஞ்சம் சும்மா இருங்க. இல்லைன்னா மருமகளை கூட்டிட்டு வேற எங்கையாச்சும் போய்ட போறான்…” என்று அன்புக்கரசி கணவரின் காதை கடித்ததும் தீயாய் அவரை எரிக்கும் பார்வை பார்த்த முத்துவேல்,
“வாயை திறக்க கூடாதே அம்மாவுக்கும், புள்ளைக்கும். அப்ப அப்பன்னு நான் எதுக்கு இருக்கேன்? நல்லது கெட்டது சொல்றதுக்கு கூட பொல்லாப்பு. நல்ல குடும்பம் இது…”
“குடும்ப தலைவர் நீங்களாச்சே. அப்படித்தான் இருக்கும்…” என்றான் நேரடியாக.
“ப்ச், நீயும் பேசாம இருடா. படுத்தாத. கொஞ்சம் நில்லு…” என்ற அன்புக்கரசி,
“மகிழ், விமலா ரெண்டு பேரும் போய் லட்சுமியை கூட்டிட்டு வாங்க…” என சொல்ல,
“எதுக்கு? வெளில தானே நிக்கறேன். நானே போறேன்…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“இன்னைக்கு இந்த வீட்ட ரெண்டாக்காம விடமாட்ட. அடங்கி நில்லுடா…” என்று கோபமாகவே சொல்லிவிட்டார் அன்புக்கரசி.
“இவ்வளோ நாளும் உங்க வீட்டுக்காரர் சொல்லுவாரு. இன்னைக்கு நீங்க சொல்றீங்க…” என அவன் சொல்லும் பொழுதே மகிழும், விமலாவும் அவனை தாண்டிக்கொண்டு சென்றனர்.
“நீ பன்றது எல்லாம் அப்படி இருக்குது. கொஞ்சமாச்சும் வளைஞ்சு குடுக்கனும். இதை குடும்பம்னு நினைச்சியா உன் போலீஸ் ஸ்டேஷன்னு நினைச்சியா?…” என்று சரமாரியாக கண்டிக்க,
“கேளு, அப்பவாச்சும் உரைக்குதான்னு பார்ப்போம்…” என முத்துவேலும் அன்புக்கரசி உடன் சேர்ந்து பேச வாசுதேவகிருஷ்ணன் குறும்பாய் புன்னகைத்தான்.
அவனுக்கு தெரியும் தாய் பேசும் காரணம். அவர் பேசவில்லை என்றால் முத்துவேல் பேசி பிரச்சனை பெரிதாய் மாறிவிடும் என்பதால் அப்படி ஆகாமல் பொறுப்பை கையில் எடுக்க அது புரியாத முத்துவேல் அமைதியாக சந்தோஷத்துடன் மனைவியை பார்த்தார்.
வாசுதேவகிருஷ்ணன் அன்புக்கரசியை பார்த்து தந்தையை காண்பித்து கண் சிமிட்ட அவரோ “அடக்கி வாசி” என்பதை போல முறைத்து பார்த்தார்.
மருதவேலும், தினேஷும் கையை கட்டிக்கொண்டு நிற்க பூங்கோதை வாய்வார்த்தை பெரும் பிரச்சனையாகி போகுமோ என்று பயத்துடன் பார்த்தார்.
கொலுசொலியில் தலையை திருப்பி தனது இடதுபக்கம் பார்க்க விமலாவும், மகிழும் ஆளுக்கொரு பக்கமாய் அபூர்வாவுடன் நடந்து வர அபூர்வாவின் கண்கள் தன் கணவனை பார்வையால் அலசி ஆராய்ந்தது.
ஏதேனும் அடிபட்டிருக்குமோ என்னும் அச்சம் அவளின் கண்களில் பிரதிபலிக்க அவனருகே வந்ததும் விழிகளை தாழ்த்தி தலையை கவிழ்ந்துகொள்ள,
“வெல்கம் மிசஸ் யக்கா வாசுதேவகிருஷ்ணன்…” என்றான் அவளின் காதருகே அவள் உயரத்திற்கு குனிந்து.
“இவன் அழிச்சாட்டியம் தாங்க முடியலையே?…” என மருதவேல் முணங்க தினேஷ் சிரித்தான்.
“வாசு…” என்றார் அன்புக்கரசி,
“எப்படி இருக்க? நல்லா இருக்கியான்னு கேட்டேன்ம்மா. இது ஒரு தப்பா?…” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்.
அவனை முறைத்துக்கொண்டு மகிழ்தினி கையில் ஆரத்தி தட்டை கொடுக்க வாங்கி ஆலம் சுற்றி பொட்டு வைத்தவள் அதை ஊற்றுவதற்கு கீழே சென்றாள்.
“மச்சான், தங்கச்சி கூட போங்க, தனியா போகுதுல…” என்று தினேஷை இழுத்துவிட அவன் போவோமா? வேண்டாமா என யோசித்து பின் மாப்பிள்ளை சொன்னதற்காக மனைவியுடன் சேர்ந்து நிற்க,
“இங்கயே அந்த சுவரோரமா ஊத்தேன்ம்மா…” என்றார் அன்புக்கரசி.
“இல்லைங்க சம்பந்தியம்மா கீழே தான் ஊத்தனும். போய்ட்டு வரட்டும்…” என்று பூங்கோதை சொல்ல,
“ஹாய் அத்தை, உங்களை கவனிக்கலை…” என்று கை ஆட்ட அவனுக்கு என்ன பதில் சொல்வதென திகைத்த பூங்கோதை விழிக்க,
“அடங்குடா, முதல்ல ஷூவை கழட்டு. போய் ப்ரெஷ் ஆகிட்டு வா…” என்று மருதவேல் பல்லை கடித்துக்கொண்டு பேசினான்.
“நீ போய்ட்டு வா, நாங்க இருக்கோம்…” என்று மகனை அனுப்பிவிட்டு ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்தனர்.
அபூர்வா உள்ளே அவனுடன் செல்வதா வேண்டாமா என யோசித்து பின் தாயருகே சென்று நின்றுகொண்டாள். அதை பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.
“அம்மா…” என்றவனின் அழைப்பில் அன்புக்கரசியும் எழுந்து உள்ளே செல்ல,
“தேங்க்ஸ்ம்மா…” என்று அவரின் கன்னம் கிள்ள,
“ஒன்னும் தேவையில்லை. சொல்லிட்டு போய்ட்ட. அங்க உங்கப்பா சாமி ஆடிட்டார். சமாளிக்கறதுக்குள்ள எனக்கு இன்னொரு சுகர் மாத்திரை போட வேண்டியதாகிட்டு. அப்பறம் தான் மனுஷன் கம்முன்னு இருந்தார்…” என திட்டி,
“சும்மா உதார் மட்டும் விட தெரியும். இவ்வளவு வீம்பு பிடிக்கிறவன் உன் அப்பாட்ட நேரடியா என் பொண்டாட்டியை கொண்டு வந்து என் வீட்டுல விடுங்கன்னு சொல்ல தெரிஞ்சதா? பயமில்லாத மாதிரியே நடிக்கிறது…” என்று விளாச,
“அவ்வளோ தான? இப்ப பாருங்க என் பெர்பாமென்ஸ் எப்படின்னு?…” என்று தோளில் கிடந்த துண்டை விசிறிவிட்டு செல்ல போக,
“அடேய் நில்லுடா. ஏன்டா படுத்துற? நீ ஒன்னும் அந்த மனுஷன்ட்ட கேட்கவும் வேண்டாம். உன் வீரத்தை காண்பிக்கவும் வேண்டாம். ஆளை விடு. முதல்ல குளிச்சு கிளம்பி வெளில வா. நாங்க கிளம்பனும்…”
“என்னம்மா கிளம்பறீங்களா?…” என கேட்க,
“பின்ன இங்க எல்லாரும் வெளிலயா படுக்க முடியும்? இத்தனை பேரும் தங்கனும்னா…” என்றவர்,
“நீ சிங்கிள் பிளாட் எடுத்தது கூட எனக்கு டவுட்டா இருக்கு. எங்க தொந்தரவு எதுவும் இல்லாம இருக்கனும்னு தான?…” என்றபடி அன்புக்கரசி வெளியேற சிரித்தபடி குளிக்க சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
வேகமாய் குளித்து முடித்து இலகுவான இரவு உடையுடன் வெளியே வர அங்கே முத்துவேலும் மருதவேலும் எதுவோ பேசிக்கொண்டிருக்க பூங்கோதை மகளுக்கு மெல்லிய குரலில் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தார்.
தினேஷ் மொபைலுடன் இருக்க அன்புக்கரசி, விமலா, மகிழ் மூவரும் பேசிக்கொண்டு கீழே அமர்ந்திருந்தனர். மகனை பார்த்த அன்புக்கரசி,
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா வாசு? உனக்கு டிபன் கொண்டு வந்திருக்கோம். சாப்பிடேன்…” என சொல்ல,
“இப்போ வேண்டாம்மா, கொஞ்சம் நேரமாகட்டும். அப்பறமா சாப்பிடறேன்…” என்றதும் இவனை கண்ட தினேஷ் எழுந்து வந்து கையை பிடித்துக்கொண்டவன்,
“நீங்க போனீங்களே யாருக்கோ பிரச்சனைன்னு, அவர் இப்ப நல்லா இருக்காரா? பிரச்சனை இல்லை தானே?…” என கேட்க,
“இல்லை தான். ஆனா ரெக்கவர் ஆக நாள் ஆகும்…” என்று சொல்லிவிட்டு,
“எல்லாரும் சாப்ட்டாச்சா? காபி ஏதாவது குடிக்கறீங்களா?…” என்று கிட்சனிற்குள் நுழைய போக,
“லட்சுமி, நீ போயி கலக்கு. ஓடு…” என மகளை முடுக்கினார் பூங்கோதை.
“இல்லைங்க சம்பந்தியம்மா அவன் பால் பவுடர் தான் வச்சிருப்பான். பால் வச்சிருந்தா கெட்டுடும்னு வாங்கவும் மாட்டான். எப்போவாச்சும் நாங்க வந்தா தான் வரும் போது வாங்கிட்டு வருவோம். பவுடர் அவனுக்கு சரி. நமக்கு தான் சரிப்பட்டு வராது. அதான் அவனே கலக்குறேன்னு சொன்னான்…” என்ற அன்புக்கரசி,
“நீ ஒன்னும் கலக்க வேண்டாம் வாசு. நாங்க வரும் போதே பாலை வாங்கிட்டு வந்து காய்ச்சி குடிச்சாச்சு. நீ இப்படி வந்து உட்கார்…” என்றார்.
வாசுதேவகிருஷ்ணன் வந்து தன் பக்கம் அமர தான் போகிறான் என நினைத்து முத்துவேல் நகர்ந்து அமர அவனோ மருதவேலின் அருகே சென்று அமர்ந்துகொள்ள பல்லை கடித்து கோபத்தை கட்டுப்படுத்தினார்.
“வேணும்னே பன்றான்…” என்று மருதவேலிடம் முணுமுணுக்க,
“ஆமான்னு சொல்லு…” என அண்ணனிடம் தானும் அதே போல முணுமுணுக்க,
“என்னை பார்த்தா ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது?…” என்று கடுப்பானான்.
“அப்ப இதை அவர்ட்டயும் சொல்லு….” என வாசுதேவகிருஷ்ணன் சொல்ல,
“உனக்கு இந்த பேர் வைக்கறதுக்கு பதிலா சகுனின்னு வச்சிருக்கலாம். ஏன்டா ஏன்?…” என நொந்துபோன குரலில் கேட்க,
“ப்ச், பேசனும்னு சொல்லும் போது அங்க என்னடா பெரியவனே?…” என்றார் அன்புக்கரசி.
“இவ இங்க வந்ததுல இருந்து எல்லாத்தையும் இவளே அதிகாரம் பண்ணி பேசறாளே?” என்னும் பார்வையுடன் மனைவியை பார்த்தார் முத்துவேல்.
“கண்டுபிடிச்சிருவாரோ?” என சற்று திடுக்கிட்ட அன்புக்கரசி,
“விஷயத்தை நீங்க சொல்லுங்களேன்…” என கணவரை குளிர்விக்க, “அது” என்று பார்த்தவர்,
“தப்பா புரிஞ்சிக்கிட்டோம். அன்பு அப்படியெல்லாம் இல்லை” என்று சில்லாகித்துக்கொண்டு,
“அதான் பேசினது தானே? நீயே சொல்லு. இதை எல்லாம் என்னத்த நான் பேசிக்கிட்டு…” என்று பெருந்தன்மையான குரலில் சொல்ல,
“அடடா…” என்றான் வாசுதேவகிருஷ்ணன் சத்தமாய்.
“இவர் பேசாம இருந்தாலும் இவன் விடமாட்டான்” என நினைத்து சட்டென அவனருகே இருந்து மருதவேல் எழுந்து நின்று,
“நான் தண்ணி குடிச்சுட்டு வரேன்…” என்று நகர்ந்துவிட்டான்.
விமலாவும் வாசுதேவகிருஷ்ணனனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க அன்புக்கரசி அதற்கு முறைத்தார்.
“பேசவிடேன்…” என சொல்லியவர்,
“நாளைக்கு நம்ம வீட்டு சார்பா பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாருக்கும் விருந்து நம்ம வீட்டுல வச்சு. இப்ப இங்க இருந்து உங்களை அங்க கூட்டிட்டு போக முடியாததால…” என்றவரின் பேச்சில் வாயில் கையை வைத்து கண்கள் சிரிக்க மகன் பார்க்க மீண்டும் “பேசவிடேன்” என்று தாய் கெஞ்சலாய் பார்த்தார்.
“சொல்லுங்கம்மா, ஏன் நிறுத்திட்டீங்க?…” என்று ஒரு செருமலுடன் நிமிர்ந்து அவன் அமர,
“அதான். இப்ப அங்க வர முடியாது நீங்க. அதனால நாளைக்கு காலையில கிளம்பி வந்திருங்க. நாங்க இப்ப கிளம்பறோம்…” என்று சொல்லிய அன்புக்கரசி “சரியா” என்பதை போல முத்துவேலை பார்க்க அவரும் தலையை அசைத்து வைத்தார்.
கிளம்புகிறோம் என்றதுமே பூங்கோதையின் கைகளை பிடித்துக்கொண்டாள் அபூர்வா. அதை பார்த்தும் பாராமல் கண்டு கொண்டவன் அமைதியாக இருந்தான்.
“லட்சுமி, அம்மா சொன்னது எல்லாம் மனசுல வச்சுக்கம்மா. அவரு மனசு கோணாம நடந்துக்க…” என மெல்லிய குரலில் சொல்லி எழுந்து கொள்ள,
“அம்மா, இங்க இரேன். ப்ளீஸ். எனக்கு என்னவோ போல இருக்கு. சொல்றதை கேளும்மா. இன்னைக்கு ஒரு நாள் இரு. நாளைக்கு எல்லாரும் சேர்ந்து போவோம்…” என்று சிறு குரலில் அவள் கெஞ்ச,
“அதான் உங்க பொண்ணு சொல்றாளே அத்தை. இருங்கன்னு. இருங்க…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.
அவன் சொல்லாமல் இருந்தால் கூட யோசித்திருப்பாரோ என்னவோ? சொல்லிய பின் இருக்கவேண்டும் என்ற நினைப்பு கூட தூர ஓடியது.
“இல்லை, அவ சின்ன பொண்ணு, விவரம் புரியாம பேசறா. அதான் நாளைக்கு பார்ப்போமே…” என்றவர் மகளின் தவிப்பில் பனியாய் உருகிக்கொண்டிருந்தார்.
அபூர்வாவின் நிலை மதில்மேல் பூனையின் நிலை. இரண்டு பக்கமும் வேண்டும் என்று தோன்றியது.
அதையும் விட கணவனுடன் இன்றைய சடங்கு நிகழ்ந்தாக வேண்டிய ஒன்றாக இருந்தாலும் யாருமில்ல வீட்டில் அவனுடன் தான் மட்டும் நினைக்கவே உடலெல்லாம் சில்லிட்டது.
“லட்சுமி, அம்மா சொல்றதை கேளு. எல்லாம் தெரிஞ்ச பொண்ணு நீயே இப்படி பயப்படலாமா?…” என மகிழ் சங்கடத்துடன் பேச அங்கே அவர்கள் பேசட்டும் என்று பால்கனி பக்கம் சென்று நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“மாப்பிள்ளை…” என்ற தினேஷின் அழைப்பில் திரும்பியவன்,
“நீங்க பேசலையா உங்க தங்கச்சிட்ட?…” என்றான் சிரிப்புடன்.
“அது கைக்குள்ளயே வளர்ந்த புள்ளை. அதான் சட்டுன்னு கல்யாணம், தனியா இருக்கனும்னதும் பயப்படுது. வேற ஒண்ணுமில்லை. நீங்க…” என்று தயங்க,
“இதுல நான் தப்பா நினைக்க என்ன இருக்கு? ஆக்சுவலி இந்த கான்சப்ட் பொண்ணுங்களுக்கு மட்டும்னு யார் சொன்னா? சப்போஸ் விழுப்புரத்துல எனக்கு போஸ்ட்டிங்னா கண்டிப்பா நான் வீட்டோட மாப்பிள்ளை தான்….” என சிரித்தவனின் கைகளை பற்றிக்கொண்டான் தினேஷ்.
“நீங்க இவ்வளவு கேஷ்வலா பேசறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கு மாப்பிள்ளை…” என பேச மருதவேலும் அங்கே வந்துவிட்டான்.
பின் அடுத்த ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆண்கள் மூவரும் பால்கனியிலும், பெண்கள் அனைவரும் பெட்ரூமிலும் பேச ஹாலில் தனியாக அமர்ந்து இருந்தது முத்துவேல் மட்டும் தான்.