முகம் முழுவது யோசனை அவருக்கு. இருவருக்கு அந்த வீடு சரி என்றாலும் நாளைப்பின் யாராவது வந்து போய் இருக்கவோ, குழந்தை என்று வந்தாலோ அங்கே தங்க வசதி வேண்டுமே என யோசித்து யோசித்து மண்டை காய்ந்தார் மகனை எப்படி வேறு வீடு பார்க்க சொல்வதென்று.
சற்று நேரத்தில் பெண்கள் அனைவரும் வெளியே வந்ததும் எழுந்து நின்ற முத்துவேல்,
“என்ன கிளம்பலாமா?…” என கேட்டதும்,
“இதோ பேசிட்டோம்…” என்ற அன்புக்கரசி,
“வாசு…” என்று அழைத்ததும் அவர்கள் மூவருமே வந்து சேர்ந்தனர்.
“அப்ப நாங்க கிளம்பறோம் வாசு. பார்த்துக்கோ….” என்றவர்,
“நாங்க நம்ம வீட்டுக்கு தான் போறோம். நாளைக்கு கிளம்பி நல்ல நேரத்துல வந்து சேரு. புரியுதா?…” என கேட்க,
“ஹ்ம்ம் ஓகே…” என்றான்.
ஒருவர் பின் ஒருவராக சொல்லிவிட்டு கிளம்ப கடைசியாய் வந்த மருதவேல் தம்பியிடம்,
“எப்படித்தான் நினைக்கிறதை சாதிக்கிறயோ? எனக்கு வரமாட்டிக்கே. வாழ்த்துக்கள்டா தம்பி…” என சிரிப்புடன் சொல்லிவிட்டு செல்ல அனைவரும் கிளம்பவும் கதவடைக்க போனவன் பின் மனைவியின் முகம் பார்த்து,
“பார்க்கிங் வரை போவோமா?…” என கேட்டதும் உடனே தலையசைத்தாள்.
“சரி வா…” என்று கதவை பூட்டிக்கொண்டு செல்ல இரண்டு லிப்ட்களில் ஒன்றில் அப்போது தான் குடும்பத்தினர் இறங்கி இருக்க அடுத்ததில் இருவரும் நுழைந்தனர்.
கீழே பார்க்கிங் சென்றதும் வாசுவும், அபூர்வாவும் வந்து நிற்பதை பார்த்ததும் மகிழ் வந்து கட்டிகொண்டாள் அவளை.
“கீழே ஏன் வந்த லட்சுமி?…” என பூங்கோதை மகளிடம் கேட்டாலும் அவளின் கையை பிடித்துக்கொண்டார் அழுத்தமாய்.
“சரி வாங்க, வண்டில ஏறுங்க. மருது வண்டியை எடுடா…” என முத்துவேல் சொல்ல மருதவேல் ட்ரைவர் சீட்டில் அமர அவனருகே முத்துவேல் அமர்ந்துகொண்டார்.
பின் விமலாவும் மகிழும் கடைசி சீட்டில் அமர இடையில் இருந்த சீட்டில் அன்புக்கரசி, பூங்கோதை, தினேஷ் அமர்ந்தனர்.
ஜன்னல் வழியே அண்ணனின் கையை பற்றிக்கொண்ட அபூர்வாவின் தலையில் கைவைத்து அழுத்தியவன்,
“நாளைக்கு பார்ப்போம்டா லட்சுமி…” என சொல்லவும் கார் நகர்ந்தது.
அந்த கார் அபூர்வாவின் கண்ணை விட்டு மறையும் வரை கண் கலங்க பார்த்தபடியே அவள் நிற்க,
“போகலாமா?…” என்றவனின் குரலில் திடுக்கிட்டவள் பின் ஒரு ஆழ்ந்த மூச்செடுப்பில் தலையசைக்க சிறு புன்முறுவல் படர அவளுடன் லிப்ட்டில் நுழைந்தான்.
இருவருமே பேசிக்கொள்ளாத தனிமை. தன்னை தீண்டும் அவனின் பார்வையிலிருந்து தப்ப முடியாத அவஸ்தையுடன் கண்களை மூடி நிற்க சிற்பமென நிற்பவளை விட்டு அவனின் பார்வை இங்கும் அங்கும் அகலவில்லை.
“இந்த அப்பார்ட்மென்ட் பிடிச்சிருக்கா?…” என்றவனின் குரலில் தலையை மட்டும் அசைத்தாள். நிமிராமல் குனிந்தபடி லிப்ட்டை விட்டு வெளியே வர,
“நம்மோடது சின்ன பிளாட் தான். அது பிடிச்சிருக்கா?…” என கேட்டபடி கதவை திறக்க போனவன்,
“நீயே திற…” என சாவியை அவளிடம் நீட்டினான்.
சாவியை வாங்கும் பொழுதே அவளின் கை லேசாய் நடுங்க அவளின் கை பிடித்து சேர்ந்து கதவை திறந்தவன்,
“குட் பீல் இல்லயா பூர்வா?…” என்றான் ஆழ்ந்த சுவாசித்தலுடன்.
“ஐயோ தயவு செய்து வாயை திறக்காமல், பேசாமல், என்னை பார்க்காமல் இரேன்” என அபூர்வாவிற்கு கத்த வேண்டும் போல் இருந்தது.
“உட்கார் லாக் பண்ணிட்டு வரேன்…” என்றவனின் பார்வையில் இருந்து எங்கும் மறைய முடியாது. அந்த வீட்டில் எங்கு நின்றாலும் அவன் கண்டுகொள்வான்.
படுக்கயறை அங்கு செல்வதை நினைக்கவே தடதடத்தது நெஞ்சம். டைனிங் டேபிள் அருகே நின்று சேரை பிடித்தபடி அவள் நிற்க,
“வாவ், நானே கேட்கனும்னு இருந்தேன். டின்னர் எடுத்து வைக்க சொல்லலாம்ன்னு…” என்று அவளருகே வந்து நிற்கவும் பதறி விலகினாள் அபூர்வா. அவளின் பதட்டத்தை பார்த்தவன்,
“ஈஸி பூர்வா…” என்றான் மென்மையாய்.
“நீ சாப்ட்டியா?…” என கேட்டுக்கொண்டே கிட்சனில் இருந்த ஹாட்பேக்கை எடுத்துக்கொண்டு வந்தான்.
தட்டு வைத்து தனக்கு தானே உணவை போட்டுக்கொண்டவன் அவளும் ஒரு தட்டை வைக்க,
“இல்லை, நான் சாப்பிட்டேன்…” என்றாள் மெதுவாய்.
“ஓஹ்ஹோ, இப்போ சாப்பிட முடியாதா? எப்பவோ சாப்பிட்டிருப்ப. இந்நேரம் திரும்ப பசிச்சிருக்காதா?…” என கேட்க,
“ம்ஹூம், வேண்டாம். அப்பறம் டயஜிஸ்ட் ஆகாது…” என்று சொல்லி பின் அவனை பார்த்து,
“இல்லை, உங்களை சொல்லலை. எனக்கு சொன்னேன்…”
“ரெண்டு பேருக்குமே இருக்கிறது வயிறு தானே? ஆனா எனக்கு ஆகிடும்…” என சொல்லிவிட்டு வேகமாய் சாப்பிட்டான்.
முதலில் தயங்கி தள்ளி நின்றவள் பின் தன்னைப்போல அவனுக்கு பரிமாற ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கிட்சனில் போட்டவன் நகர்ந்ததும் அபூர்வா அதை கழுவி வைக்க போக,
“நாளைக்கு இதை கிளீன் பண்ண வருவாங்க. நீ வா…” என்று சொல்லவுமே அவைகளை போட்டுவிட்டு அப்படியே நின்றாள்.
“வான்னு சொன்னேன் பூர்வா…” இப்பொழுது அழுத்தமான அழைப்பு.
“நைட் டீ காபி குடிக்கிற பழக்கம் இருக்கா உனக்கு?…” என கேட்க,
“ம்ஹூம், அது எல்லாம் கெட்ட பழக்கமாம்…” என்று சொல்லி இப்பொழுது வெளிப்படையாகவே நாக்கை கடிக்க,
“ஹா ஹாஹா, ஆனா பாரேன் உன் புருஷனுக்கு இந்த கெட்டபழக்கம் அத்துப்படி. எனக்கு நைட்ல ஹாட்டா ஏதாவது குடிச்சா தான் தூக்கமே வரும்….” என்று சொல்லி கருப்பட்டி டீ போட்டுக்கொண்டு வந்து அவளுக்கும் சேர்த்து தர,
“இல்லை இது…” என்று மறுக்க பார்க்க,
“குடிச்சு பாரு. லைட்டா ரெண்டு சிப். பிடிக்கலைன்னா வேண்டாம்…” என சொல்லி அவளுக்கு தர வாங்கிக்கொண்டவள் அதனை லேசாய் சுவை பார்க்க குடிக்க பிடித்திருந்தது.
“நல்லா இருக்கு…” என்றாள் அவளாகவே.
“ஈஸிட், அப்போ டெய்லி எனக்கு கம்பெனி குடுக்கனும். சரியா?…” என்றதும் இலகுவான முகத்துடன் சிரித்தபடி அவள் தலையசைக்க,
“இது அம்மா கத்து தந்தது. அவங்களோட ஸ்பெஷல்ன்னு கூட சொல்லலாம். அம்மா இன்னும் நல்லா போடுவாங்க. அப்பாவுக்கு நைட்ல இதை குடிக்காம நாள் முடியாது…” என்று இயல்பாய் அவளை தன்னுடன் பேச்சில் இழுத்தான்.
“நல்லாவே டீ போடறீங்க…” என்று சொல்லவும்,
“கொஞ்சம் சமைக்கவும் செய்வேன். வீக்லி ஒன்ஸ் அம்மா இட்லி தோசைக்கு மாவு அரைச்சு குடுத்து விட்டுருவாங்க. வாரம் ஒருதடவை நான் அங்க போய்டுவேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை எதாச்சும் சாப்பாடு. சட்னி வெரைட்டீஸ் இப்படி எல்லாமே வந்திரும். தோசை, சாதம் மட்டும் வச்சுக்கற மாதிரி இருக்கும்…”
அவனின் பேச்சை கேட்டுக்கொண்டே இருந்தவள் தானும் பேச பேச இருவருக்குமான ஒரு இடைவெளி குறைவதை போல உணர்ந்தான்.
பேச்சுகள் இயல்பாக தடுமாற்றமின்றி இருக்கும் பொழுதே அவனுக்கு ஒரு அழைப்பு வந்துவிட எடுத்து பேச ஆரம்பித்தவன் அபூர்வாவை கண்டு,
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு போய் படு பூர்வா. வரேன்…” என்று சொல்லி அவளை பார்க்காததை போல பேச்சில் ஆழ்ந்துவிட அவனின் இந்த செயலில் பிடித்தும் பிடிக்காத நிலை.
மெதுவாய் எழுந்து உள்ளே சென்றவள் தனது பெட்டியை திறந்து ஒரு புது நைட்டியை உருவிக்கொண்டு எழுந்தவள் பின் மீண்டும் அதை அப்படியே வைத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டாள்.
டீ குடித்ததனால் இருந்த களைப்பு போய் உறக்கமும் எங்கோ சென்று மறைந்து விட்டிருந்தது.
இப்போதைக்கு அவன் வரமாட்டான் என்பதனால் கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்தவள் கண்களை மட்டும் மூடி இருக்க அடுத்த ஐந்தாவது நிமிடம் அறைக்குள் அவன் நுழையவும் வேகமாய் எழுந்து நின்றாள்.
“ஹேய் என்னாச்சு? தூங்கலை?…” என்றவன் தனது மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு அவளுக்கு கட்டிலை காண்பித்து,
“தூங்கு பூர்வா…” என்றான்.
பின் மறுக்காமல் படுத்துக்கொண்டவள் ஒரு பெட்ஷீட்டையும் எடுத்து போர்த்திக்கொண்டாள்.
“காலையில சீக்கிரம் எந்திக்கனும் லட்சுமி, தூங்கிரு” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மறுநாள் தாய் தந்தையை பார்க்கும் ஆவலில் முகத்தில் மிதமான புன்னகையுடன் எழுந்ததும் என்ன, என்ன செய்யவேண்டும் என்று தாய் சொல்லியவற்றை அசைபோட்டுக்கொண்டு இருந்தவளின் இடையில் அவனின் அழுத்தமான கரம் படிந்து இழுத்துக்கொண்டது.
ஒரு நிமிடம் பதறிப்போய் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளின் முகத்திற்கு நெருக்கமாய் வாசுதேவகிருஷ்ணன் முகம்.
“என் கண்ணுக்குள்ள உன்னை தேடிட்டியா பூர்வா?…” என்றான் கிறக்கமான குரலில் அவளின் முகத்தோடு முகம் இழைத்து.
“நீ எப்போ வேணாலும் தேடு. இப்ப உனக்குள்ள என்னை நான் தேடறேன் வித் யுவர் பர்மிஷன்…” என்றவன் முத்தச்சாவியை திறவுகோலாக கொண்டு அவளுள் மூழ்க ஆரம்பித்தான்.
தாம்பத்தியம் என்னும் கடலினுள் ரசவாதத்தை நிகழ்த்தினான். ஒற்றை முத்தத்தில் அவளின் செல்களை எல்லாம் உயிர்த்தெழ செய்தவன் தன்னுடைய நேசமென்னும் விதையை துளித்துளியாய் விதைத்தான்.
விதையென அவளுள் புதைந்தவன் அவளின் மனதினுள் விருட்சமாய் கிளை பரப்பி எழுந்தான்.
பெண்ணவளின் திணறல்களை திகட்டாமல் உள்வாங்கியவன் தித்திக்க காதல் செய்து அவளுக்கும் கற்றுக்கொடுத்தான்.
அவனிடம் இத்தனை மென்மையும் இருக்ககூடும் என்று அறியாதவள் அவனிடம் தொலைந்தே போனாள்.
கண்மூடி படுத்திருந்தவளின் கைகளில் குளிர்ந்த நீரை தந்தவன் அவளுடன் சேர்ந்து தானும் சாய்ந்து அமர்ந்தான்.
“நான் கிளம்பினதும் ரொம்ப பயந்து போய்ட்டியா பூர்வி?…” என கேட்க எழுந்து அமர்ந்தவள் நீரை முழுதாய் பருகி முடிக்க அவளை தோள் சாய்த்துக்கொண்டான்.
“ஹ்ம்ம் பயம் தான். யாரோ உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்க…”
“ஹ்ம்ம், ஆமாம். நம்ம மேரேஜ்க்கு வந்தானே முகேஷ். என் ப்ரெண்ட். அவனுக்குத்தான் ஆக்ஸிடென்ட். அதுவும் நம்ம வெட்டிங்க்கு வந்துட்டு கிளம்பினப்போ…” என சொல்லி,
“இதை சொல்லத்தான் உன்னை ரூம்க்கு கூப்பிட்டேன். உன்னை அப்படியே கூட்டிட்டு போய்டுவேனோன்னு உங்கம்மா பயந்துட்டாங்க போல…” என்று சிரிக்க அவனோடு சேர்ந்து சிரித்தவள்,
“இப்ப அவங்க எப்படி இருக்காங்க?…”
“ஹ்ம்ம் ஓகே தான். ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனாலும் கை கால் ப்ராக்ச்சர்…” என்றவன் நடந்ததை சொல்லவும் நடுக்கத்துடன் அவனிடம் ஒண்டினாள்.
“பூர்வி பயப்படுறியா?…” என்றான் அவளின் முகம் திருப்பி. வாசுதேவகிருஷ்ணன் கேட்டதும் இல்லை என்று மறுக்க கூட தோன்றவில்லை.
“நீ இதுக்கு எல்லாத்துக்குமே தயாரா தான் இருக்கனும். எனக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லமாட்டேன். ஆனா…” என்றவனின் இதழ்களை தன் கரங்களால் மூட,
“ப்ளீஸ், எதுவும் எனக்கு தெரியவேண்டாம். காலையில் இருந்தே மனசு சரியில்லை…”
அவளின் கலக்கமான குரலில் வாசுதேவகிருஷ்ணன் அமைதியாய் அவளை பார்த்தான்.
“இன்னைக்கு இது எல்லாம் இப்படியே போகட்டும். புதுசா எதுவும் எதுவுமே வேண்டாம்…” என்று முனங்கலான குரலில் அவள் சொல்லவும் அவளின் மனநிலையை மாற்றவென,
“இப்படின்னா? அப்ப நாளைக்கு வீட்டுக்கு போக வேண்டாம்னு சொல்ற. எனக்கு ஓகே தான். உன் மாமனார்ட்ட நீயே பேசிக்கோ யக்கா…” என்று கிண்டல் பேச,
“பேச்சை பாரு. தெரியாம சொல்லிட்டேன் தம்பின்னு. ஏன் இப்படியே கூப்பிட்டு கலாய்க்கறீங்க. நான் அதெல்லாம் அப்படி சொல்லலை. நீங்க மாத்தி பேசாதீங்க…” என்று சிணுங்க,
“நான் மாத்தி பேசினாலும் அதை சரியா கேட்ச் பன்ற பாரேன். அங்க இருக்க நீ…” என்று சொல்ல,
“பழகனும்ல…” மெதுவான குரலில் அபூர்வா சொல்ல,
“பழகிட்டியா பூர்வி…” என்றான் தன் மடி மீது சாய்த்து. அவனுக்கு பதில் சொல்லாமல்,
“எனக்கு தூங்கனும்…” என்று விலகி படுக்க அவளை அணைத்து பிடித்தவன்,
“எனக்கும் கூட தூங்கனும்…” என்று தானும் விழி மூடினான்.
இருவருக்கும் சுகமான உறக்கம் கண்களை தழுவ அப்போதுதான் தூங்கியதை போல இருக்க அவனின் மொபைல் அடித்து ஓய்ந்தது.
“இந்நேரம் யாரு?….” என்றபடி கண் திறக்க அருகில் அபூர்வா இல்லை.
தனது மொபைலை எடுத்து நேரத்தை பார்க்க ஒன்பது என்றது.
போச்சு இவ்வளோ நேரம் தூங்கிருக்கோம்…” என்று தன்னை தானே கடிந்துகொண்டவன் மனைவியை தேட கதவை திறந்தான்.
குளித்து முடித்து மறுவீடு செல்ல தயாராய் கிளம்பி இருந்தவள் அடுப்படியில் எதுவோ செய்து கொண்டிருக்க வாசனை நாசியை துளைத்தது.
“யக்கா வெண்பொங்கல் பன்றியா?…” என்றவனை சத்தத்தில் தூக்கிவாரி போட திரும்பியவள்,
“பயந்துட்டேன்…” என்றாள் நெஞ்சில் கை வைத்து.
“போலீஸ்க்காரன் பொண்டாட்டி, பயத்தை பாரு…” என்று சிரித்துவிட்டு குளிக்க சென்றுவிட இருவருமாய் கிளம்பி முத்துவேல் வீட்டிற்கு வந்து சேர இரு குடும்பங்களும் இவர்களுக்காக காத்திருந்தது.