என்ற பாடல் அலாரத்தில் செட் செய்யப்பட்டிருக்க அது அந்த காலை வேளையில் காதில் இரைய எரிச்சலுடன் எழுந்தார்கள் சங்கவி, ஸ்ரீநிதி இருவரும். கண்ணை கசக்கியபடி அமர்ந்தவர்கள் தங்களுக்கருகே உள்ள கட்டிலை பார்த்தார்கள்.
“இவளோட இதே தொல்லையா போச்சுடி…” என்ற எரிச்சலுடன் தனது பக்கத்து படுக்கையில் இருந்தவளின் மேல் இருவரும் விழ அவள் லேசாய் புரண்டு படுத்தாளே தவிர கொஞ்சமும் அசரவில்லை.
“கும்பகர்ணி, தூங்குனா மேல தூணே விழுந்தா கூட தூசியா தட்டிவிட்டுட்டு தூங்கறா. கட்டிக்க போறவன் பாடு திண்டாட்டம் தான்…” என சங்கவி சொல்ல,
“டோன்ட் டிஸ்டர்ப் மீ சங்கு. காலாங்காத்தால காதுல ஊதாத…” என சொல்லி ஒரு தலையைணையை எடுத்து தன் முகத்தை மறைத்துக்கொண்டு அவள் மீண்டும் உறக்கத்தில் சுகமாய் அமிழ்ந்து போக,
“சுத்தம், சரி விடு. நாம முதல்ல காபிக்கு சொல்லுவோம். காபி வாசனைக்கு அவளே தானா எழுந்துக்கட்டும்…” என்ற ஸ்ரீ எழுந்து வந்து பால்கனி கதவை திறந்துகொண்டு வெளியே வந்து நின்றாள்.
கேரளாவின் செராய் பீச். பீச் ரெசார்ட்டில் தங்கியிருந்தனர் அந்த மூவரும். இன்னும் முழுதாய் விடியாத காலை நேரத்தில் மிதமான தூறல் அந்த இடத்தையே ரம்யாமாக்கி கொண்டிருந்தது. மழைத்துளி கடலில் கலக்கும் அந்த அற்புதத்தை விழிகள் அகற்றி ரசித்தபடி பார்த்தாள் ஸ்ரீ.
“ஸ்ரீ காபி வந்தாச்சு…” என சொல்லி கப்பில் ஊற்ற போர்த்தியிருந்த ப்ளாங்கெட்டை தூக்கி வீசிவிட்டு ஓடி வந்து சங்கவி ஊற்றிய முதல் கப்பை தனக்கு எடுத்துக்கொண்ட ரோஜா,
“தேங்க்ஸ் சங்கு…” என்று சொல்லிவிட்டு பால்கனியை தேடி செல்ல,
“ஊத்த வாய். பல்லை போய் விளக்குடி…” என ஸ்ரீ தலையில் அடிக்க,
“அதெல்லாம் நாலு மணிக்கு அர்ஜன்ட் வொர்க்குக்கு எழுந்தப்ப பிரஷ் பன்ற வொர்க்கையும் சேர்த்தே முடிச்சுட்டேன்…” என்று அந்த மழையில் பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டு தூரத்தே தெரிந்த கடலின் அலைகளை ரசித்தபடி துளித்துளியாய் அந்த காபியை ரசித்துக்குடித்தாள் ரோஜா.
ரோஜா ரோஜாவை போன்று மென்மையானவள் அல்ல. தளைகள் சூழப்பட்ட மலர். அந்த தளைகளுக்குள் தன்னை நுழைப்பதும் அவளே. அதை உடைத்தெறிவதும் அவளே. எதுவாக இருந்தாலும் அவள் நினைத்தால் மட்டுமே.
கடினமான எதையும் இலகுவாகவும் எடுத்துக்கொள்வாள். அதே தன்மை தான் இலகுவானதை கூட சில நேரம் கடினமாக எண்ண வைக்கும். எதுவும் அவளின் மனநிலை பொறுத்தே.
காபியுடன் பால்கனியில் அமர்ந்திருந்தவள் மனது நிர்மலமாக இருந்தது. தேவையில்லாத எதையும் தேவையில்லாமல் நினையாதே என்று தனக்குத்தானே அப்பொழுது கூட சொல்லிக்கொண்டவள் காபியின் வாசனையை ஆழ்ந்து சுவாசித்தவள் அதனை தன் நுரையீரல் வரை நிறைத்தாள்.
காபி பைத்தியம் என்றே சொல்லலாம். அப்படி ஒரு ப்ரியம். காபி அதுவும் தன் தாய் வளர்மதி போட்டு தரும் ஸ்பெஷல் காபி என்றால் அத்தனை உயிர். ஆனால் அது கிடைப்பது தான் அரிது.
இப்பொழுதும் தன் கையில் இருக்கும் காபியின் சுவையில் தாயின் தனி சுவையை தேடிப்பார்த்தவள் ஒரு புன்னகையுடன் குடிக்க ஆரம்பித்தாள்.
ரோஜாவை பார்த்த சங்கவி ஒரு பெருமூச்சுடன் தலையாட்டிவிட்டு தனக்கும் ஸ்ரீக்கும் காபியை ஊற்றிக்கொண்டே,
“சரியான விசித்திரம்டி நீ…” என்றபடி அவளுடன் வந்து அமர்ந்தாள்.
ரோஜாவிற்கும் சரி சங்கவிக்கும் சரி வேலை பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் ஸ்ரீ நடுத்தரவர்கத்தை சேர்ந்தவள். இந்த வேலை அவளுக்கு அத்தனை முக்கியம். அதனால் இதில் இருக்கிறாள்.
சங்கவி படித்த படிப்பை மறந்துவிடாது இருப்பதற்காக போனால் போகிறது என்பதை போல வேலைக்கு வந்து செல்ல ரோஜா தன் குடும்பத்தில் இருந்து, தன் தந்தையிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் இந்த வேலையின் மீதான லயிப்பிற்காகவும் மட்டுமே வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.
தந்தை சந்திரசேகரன், நினைக்கும் பொழுதே கோபமும், எரிச்சலும் ரோஜாவை தானே வலிய சென்று அள்ளிக்கொள்ளும். அந்தளவிற்கு கண்டிப்பிற்கு பேர்போனவர் என்றால் தாய் வளர்மதி தந்தை இருக்கும் நேரம் அவருக்கு ஏற்ற மனைவியாக சரிக்கு சரியாக இருப்பார்.
தன் அக்கா சொல்லவே வேண்டாம். அவளை தலையாட்டி பொம்மை என்று தான் பார்ப்பாள் ரோஜா. ஆனால் தலையை ஆட்டவைக்கும் பொம்மை. அண்ணன் ஒருவன் இருக்கிறான். அப்பட்டமாய் அப்பாவை ஜெராக்ஸ் எடுத்ததை போல.
அந்த வீட்டிலேயே முற்றிலும் மாறுப்பட்டு பிறந்திருந்தாள் ரோஜா. அதுவே அவளை அவர்களிடமிருந்து தனித்து காட்டியது.
இதை எதையும் நினைக்கவே பிடிக்கவில்லை. தாயின் காபியில் ஆரம்பித்து தங்கள் குடும்பத்தினர் அனைவரும் மூளைக்குள் வந்தமர வேகமாய் தலையை உலுக்கி அவர்களை தன் நினைவிலிருந்து விரட்டினாள்.
அவளின் குடும்பத்தை பற்றி அந்தளவிற்கு எதுவும் தெரியாது சங்கவிக்கு. இன்னார், இத்தனை பேர் என்று மட்டும் தெரியும். ரோஜாவின் அக்கா மட்டுமே இவளின் எண்ணிற்கு அவ்வப்போது அழைத்து அவளின் நலனை விசாரித்துக்கொள்வாள்.
“ஸ்ரீ எங்க?…” என்றாள் ரோஜா கடலை பார்த்துக்கொண்டே.
“வாஷ்ரூம் போய்ருக்கா. இன்னைக்கு என்ன ப்ரோக்ராம். இங்க வந்து ஒன் வீக் ஆச்சு. எப்போ இந்த வொர்க் முடியும்?…”
“வந்த வேலை இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சிரும். இதை பர்பெக்ட்டா முடிச்சுட்டா போதும். ரிப்போர்ட் நம்ம ஆபீஸ்ல போய் பண்ணனும்…”என்றாள் ரோஜா.
“இங்க வேறை யாரையாவது அனுப்பியிருக்கலாம்…” என சங்கவி சலிக்க,
“புதுசா ஒரு பில்டிங்க்கு இண்டிரியர் பன்றது பெரிய விஷயமில்லை. இப்படி ஏற்கனவே இருக்கறதை மாத்தி வேற இண்டிரியர் பன்றது தான் கொஞ்சம் சிரமமான விஷயம். லேட் ஆகத்தான செய்யும்…” என்று ஸ்ரீயும் வந்து அமர,
“வர வர இதுக்கு யோசிச்சே என் மூளை மொத்தமும் மழுங்கி போச்சு…” என சங்கவி அலுத்துக்கொள்ள,
“சங்கு ஊதுறதுக்கு நேரம் காலமே இல்ல. எப்பப்பாத்தாலும் இதே புராணம்…” என்ற ரோஜாவை முறைத்தவளை சமாதானம் செய்த ஸ்ரீ,
“போதும்டி. சின்ன ரெசார்ட். இதோ முடிஞ்சிரும். இதுக்கு போய் ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டாம இருங்க. நம்மை நம்பி இந்த பொறுப்பை குடுத்ததே பெருசு. அதுவும் இவ இருக்காளே?…” என ரோஜாவை பார்க்க,
“நா குளிக்க போறேன்…” என நைஸாக அவள் நழுவ அவள் சென்ற விதத்தில் தோழிகள் இருவருக்குமே புன்னகை.
“இவளோட முடியலை….” என்று சிரித்த சங்கவியின் போன் அலறியது.
“சுப்ரபாதம் ஆரம்பிச்சாச்சு போல?. போய் பேசு…” என்ற ஸ்ரீ அங்கேயே அமர சங்கவியின் வீட்டில் இருந்து தான் அழைப்பு.
தினமும் அந்த அழைப்பு வராவிட்டால் தான் அதிசயம். அவள் அட்டன் செய்த அடுத்த நொடி அத்தனை திட்டு திட்டினார் அவளின் தாய்.
“வெள்ளிக்கிழமை அதுவுமா என்னடி இதெல்லாம்? எழவு பாட்ட கேக்க வைக்கிற?. அவ்வளவு தூரத்துல இருந்துட்டு ஏன்டி உனக்கெல்லாம் கொஞ்சமும் பொறுப்புன்னு ஏதாவது இருக்கா?…” என்று தாறுமாறாக வசை பாடிக்கொண்டே இருக்க,
“அம்மா, ஸ்டாப், ஸ்டாப். பர்ஸ்ட் என்ன விஷயம்ன்னு சொல்லுங்க. நான் கேட்டுக்கிறேன். சொல்லாம நீங்க பாட்டுக்கு திட்டிட்டே இருந்தா திஸ் இஸ் டூ மச்…” என்று சங்கவியும் எகிற,
“ஒனக்கு போனை போட்டதும் அந்த பாட்ட கேட்டு நா துடிச்சு போனேன்டி. நீயேன்னன்னா சாவகாசமா பேசற? மொத அந்த பாட்ட மாத்து பார்த்துக்க. வேலைக்கு போக வேண்டாம்ன்னா கேட்கவா செய்யற?…” என்று திட்டுவிட்டு வைக்க கோபத்துடன் பால்கனி பக்கம் வந்த சங்கவி,
“ஸ்ரீ உன் மொபைலை தா. அம்மா ஏதோ பாட்டு அது இதுன்னு திட்டறாங்க…” என்று வாங்கியவள் அதிலிருந்து தன் எண்ணிற்கு அழைப்பு விடுக்க அதன் காலர் ட்யூனை கேட்டு அதிர்ச்சியுடன் அமர்ந்துவிட ஸ்ரீயால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“எள்ளு வய பூக்கலையே, ஏறெடுத்தும் பாக்கலையே. ஆலால ஒஞ்சிரிப்பு கொத்துதைய்யா” என்று சோகமாய் பாட, கண்கள் சிவக்க வேகமாய் சென்று பாத்ரூம் கதவை முடிந்த மட்டும் தட்ட,
“எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம் சங்கு. கதவை உடைச்சுட்டு உள்ள வந்தா உன் கண்ணுதான் ப்யூஸ் போகும்…” என்ற ரோஜாவின் அசால்ட்டான குரலில் இன்னும் கடுப்பானாள் சங்கவி.
“இவ கூட பழகினதுல இருந்து என்னை இருபத்திநாலு மணிநேரமும் அலார்ட்டாவே வச்சிருக்காடி. அந்த திட்டு திட்டறாங்க அம்மா. ஏற்கனவே பூஜை, சடங்கு, சாங்கியம், சகுனம்னு பார்ப்பாங்க. இன்னைக்கு வீட்டை ரெண்டாக்க போறாங்க. போச்சு…” என தலையில் கை வைத்து அவள் புலம்ப,
“அதான்டி என் பிரச்சனையே. போற இடத்துல எல்லாம் பிரச்சனை. கூட இருக்கற நாம தான் முழிக்கறோம்…” என்ற புலம்பிக்கொண்டே இருக்க அதற்குள் ரோஜா குளித்துவிட்டு வந்து கிளம்பி தயாராக அமர்ந்திருந்தாள்.
அதுவரையிலும் சங்கவி புலம்பிக்கொண்டே தனது மொபைலில் “குறையொன்றும் இல்லை” என மாற்றிவிட்டு தன் அம்மாவிற்கு அழைத்து சமாதானம் செய்துவிட்டு நிமிர்ந்து பார்க்க,
“என்னாச்சு சங்கு?…” என்றாள் அப்பாவியாக.
“நீ ஒண்ணுமே பண்ணலை. என்ன நடந்துச்சுன்னு கூட உனக்கு ஒன்னும் தெரியாது. இல்ல?…” என கடுப்பாக
“இப்ப தான் உன் மூஞ்சி ப்ரைட்டா இருக்கு. பேஸ் க்ரீம் மாத்திட்டியா?…” என்று கேட்டு பேச்சை மாற்ற இப்பொழுது ரோஜாவின் மொபைல் சிணுங்கியது. அதை பார்த்துவிட்டு சங்கவி குளிக்க சென்றுவிட்டாள்.
சார்ஜரில் இருந்ததை எடுத்து பார்த்தவள் முகம் சலிப்பை காட்ட மீண்டும் மூன்று முறை விடாமல் அந்த அழைப்பு வந்துகொண்டே இருக்க,
“நீ எடுக்கற வரைக்கும் உன் அக்கா கூப்பிட்டுட்டே தான் இருக்க போறாங்க. அதுக்கு எடுத்து பேசிடலாம் நீ…” என்ற ஸ்ரீ தன் உடை கலரில் ஒரு தோடை எடுத்து காதுகளில் மாட்டினாள்.
“நீ இன்னும் உன் போனை அட்டன் பண்ணலையா? இல்லைனா எங்களுக்கு போன் வரும்…” என குளித்துவிட்டு வந்த சங்கவி ரோஜாவின் மொபைலை சார்ஜரில் இருந்து எடுக்க அதில் அவள் பதிந்து வைத்திருந்த பெயரை பார்த்ததும் சிரித்துவிட்டாள்.
“என்னாச்சு?…” என ஸ்ரீ கேட்க அவளிடமும் காட்ட,
“எப்போருந்துடி நீ டெங்குல இருந்து கொரோனாவுக்கு மாறின. கொரோனா நம்பர் த்ரீ…” என்று காட்டி சிரித்தாள்.
“அடங்குங்கடி…” என தனது மொபைலை பறித்தவள் தனது வாட்ஸாப்பை ஓபன் செய்தவள்,
“என்ன சிம்ரன் இதெல்லாம்? நான் போன் எடுக்கலைன்னா பிசியா இருப்பேன்னு தெரிய வேண்டாமா? ஈவ்னிங் நானே கூப்பிடறேன். என்னை டிஸ்டர்ப் செய்யாத…” என்று சொல்லி வைத்துவிட,
“இப்ப செகெண்ட் சிம்ரன்ட்ட இருந்து அழைப்பு வரும் பாரேன்…” என சொல்லி முடிக்க ரோஜாவின் தாய் வளர்மதி அழைத்துவிட்டார்.
“கொரோனா நம்பர் டூ…” என மொபைலை எட்டிப்பார்த்து சங்கவி சொல்ல,
“அட்டன் பண்ணுவா பாரு…” என இருவருமே ஒரே நேரத்தில் ஆருடம் சொல்ல,
“சொல்லுங்க மாம்…” என்றாள் ரோஜா.
“ஹ்ம்ம். ப்ச், வேலை இருந்தது…”
“…”
“ஆபீஸ் வேலையா போக கிளம்பிட்டேன். அதான் அட்டன் பண்ண முடியலை…”
“….”
“வேலையை முடிச்சுட்டு கூப்பிடறேன்னு தானே சொன்னேன்…”
“….”
“ஓகே, ஓகே, ஓகே…” என்றவள் பல்லை கடித்துக்கொண்டு வைத்தவள் முகம் கடுகடுவென்று இருந்தது.
“போலாமா சிம்ரன்…” என்ற ஸ்ரீயின் கேலியில் முறைத்தவள் பின் தானும் புன்னகைத்து,
“போலாமே சிம்ரன்ஸ்…” என்று சிரிக்க,
“போச்சு. என்னமோ ப்ளான் பண்ணிட்டா…” என சங்கவியின் முகம் கலவரமாக வேக வேகமாய் தனது செல்போனை லாக் மோடில் மாற்றினாள். அதன் பிறகுதான் சங்கவி நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.
இதை கண்டுகொள்ளாத ரோஜா தனது அனார்கலியின் துப்பட்டாவை எடுத்து அசால்ட்டாக போட்டவள் கைப்பையை எடுத்துக்கொண்டாள்.
மூவருமாக காரிடாரில் நடக்க ஆரம்பித்தவர்கள் அந்த ரெசார்ட்டின் மேனேஜரின் அறைக்குள் நுழைந்தார்கள்.
இன்னும் தனித்தனி காட்டேஜ்கள் மட்டுமே இவர்கள் பார்வையிட பாக்கி இருக்க அதனையும் முடித்தவர்கள் மதிய உணவு முடிந்து தங்கள் அறைக்குள் வந்து முடங்கிக்கொள்ள அங்கிருந்தே தங்கள் லேப்டாப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களின் குறிப்புகளை எடுத்துக்கொண்டனர்.
“ஒருவழியா முடிஞ்சது. நாளைக்கு ஒரு சைட் சீயிங் முடிச்சுட்டு கிளம்ப வேண்டியது தான்…” என்றவள் தனது கையை நீட்டி நெட்டிமுறிக்க,
“போட் ஹவுஸ் போவோம்னா நீ வேணாங்கற. சரியான பயந்தகோழி…” என ரோஜாவை சொல்லிய ஸ்ரீ,
“கொஞ்சம் நேரம் தூங்குவோம். டயர்டா இருக்கு…” என்றவளின் தலையில் பலமாய் அடித்தவள்,
“சோம்பேறி எழுந்திச்சி வா, சன் செட் பாப்போம். எப்ப பாரு தூங்கறேன்னு…” என்று அவர்களை கிளப்பிக்கொண்டு ஒரு டி-ஷர்ட்டும் த்ரீ போர்த் பேண்டுமாய் அவர்கள் வெளியேறி கடற்கரைக்கு சென்றனர்.
கடற்கரையை ஒட்டிய கடைகளில் பொரித்த கறிமீன்களை வாங்கி சாப்பிட்டு முடித்து கடல் நீரை நோக்கி நடந்தபடி பேசிக்கொண்டே வர அங்கே சிறுவர்கள் பந்து எரிந்து விளையாட ஸ்ரீயும் ரோஜாவும் சேர்ந்துகொண்டனர்.
சங்கவி தன்னால் முடியவில்லை என சொல்லி அமர்ந்துகொள்ள அவளை விட்டு விட்டு இவர்கள் மட்டும் விளையாட ஸ்ரீயின் மெதுவான பந்து வீச்சில் கடுப்பான ரோஜா,
“என்னடி பால் போடற? லொஜக், மொஜக், பஜக்ன்னு. ஒழுங்கா வீசுடி…” என்று கத்த,
“கொரோனா நம்பர் 1…” என சங்கவி ரோஜாவின் போனை தூக்கி காண்பிக்க பந்தை போட கையை தூக்கியவள் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட,
“இப்ப எதுக்கு கூப்பிடறாரு?…” என பந்தை தூக்கி வீசிவிட்டு வேகமாய் சங்கவியிடம் வர ரோஜாவின் வேகத்தில்,
“வாடி வா, காலையில எங்கம்மாட்ட மாட்டி விட்டல. இப்ப உன் மொபைலை எப்படி வாங்கறன்னு பாக்கறேன்…” என்றவள் எழுந்து ஓட ஆரம்பிக்க அவளின் நோக்கம் புரிந்தவளுக்கு டென்ஷன் ஏறியது.
“ஐயோ சங்கு நிஜமாவே சங்கு ஊதிடாதடி. போனை குடுத்திரு…” என தாவி அவளை பிடிக்க பார்த்துக்கொண்டிருக்க சூரியன் மறைய ஆரம்பித்தான்.
இவர்கள் சற்று மக்கள் நடமாட்டமில்லாத பகுதிப்பக்கம் வந்துவிட இவர்கள் ஓடிக்கொண்டிருந்த திசையில் ஒருவன் கேமராவில் சூரியனின் அமிழ்வை அந்த கடலலையுடன் சேர்த்து தனது கேமராவில் பதிந்து கொண்டிருக்க சங்கவி அவனை தாண்டிக்கொண்டு சென்றாள்.
“இடியட், டிஸ்டர்பன்ஸ் இல்லாம வீடியோ எடுக்கலாம்னு வந்தா இம்சைங்க…” என்று சங்கவியை திட்டியபடி அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டு நின்றவனின் கால்கள் சட்டென அந்தரத்தில் சென்று மண்ணில் மண்டியிட்டது.
ஆம், ரோஜா ஓடிவந்த வேகத்தில் சங்கவியை பார்த்து கொண்டே அவன் இரண்டடி முன்னால் வந்துவிட அவனின் திடீர் இடையிடுதலில் தடுமாறியவள் அவனையும் தள்ளிவிட்டு தானும் சற்று தள்ளி சென்று விழுந்தாள்.
“மை காட்…” என்று விழுந்தவனின் கையில் இருந்த கேமராவை தேட அது கடல் நீரில் முழுவதுமாய் நனைந்து மண்ணில் புதைந்திருந்தது.
தலையில் கை வைத்து அப்படியே பார்த்தபடி அதனை எடுக்க கூட தோன்றாமல் திகைத்து நின்றுவிட்டான். அவனின் முகம் எல்லாம் மணல் அப்பியிருந்தது.
கீழே விழுந்தவள் மீண்டும் எழுந்து காலை கையை உதறியபடி ஓடியவள் போன வேகத்தில் மீண்டும் வந்த ரோஜா அந்த கேமராவை எடுத்துக்கொண்டு வந்து நின்றவனின் கையில் திணித்து விட்டு,
“ஒரு வீடியோ எடுக்க முடியலை, உனக்கெல்லாம் எதுக்குய்யா காஸ்ட்லி கேமரா? இதை தூக்க கூட ஸ்ட்ரெந்த் இல்ல. நிக்கிறான் பாரு சிலையாட்டம்…” என்று வேறு திட்டிவிட்டு மீண்டும் சங்கவியை தேடி கண் இமைக்கும் நொடியில் ஓடிவிட்டாள் ரோஜா. கோபத்துடன் அவள் புறம் திரும்பியவன்,
“ஏய் குட்டிப்பிசாசு…” என அவள் ஓடிய திசையில் இவன் கோபமாய் கத்த அவளுக்கு கேட்டால் தானே?
“என்னடா விது கேமராவை குளிக்க வச்சிட்ட போல?…” என சிரித்துக்கொண்டே அவனின் நண்பன் சக்தி வந்து நிற்க,
“எல்லாம் பார்த்துட்டு இருந்துட்டு என்னை கலாய்க்கிறியா?…” என கடுப்பாக பார்த்தான்.
“உன்னை இப்படி கலாய்ச்சாதான் உண்டு. இன்னும் என்ன அங்கயே பார்த்துட்டு நிக்கற? நான் தான் முதல்லவே சொன்னேன்ல. அலைக்கிட்ட போய் நின்னு எடுக்காதன்னு. கேட்டியா நீ?…”
“ப்ச், இந்த வேவ்ஸ்ல சன்லைட் ரிஃப்லெக்ட் ஆகுதேன்னு சேர்த்து எடுக்கலாமேனு பார்த்தேன். இதை எடுக்கத்தான் இவ்வளவு தூரம் தள்ளி வந்தேன்…” என்று எரிச்சலாக,
“இப்ப மொத்தமா போச்சா? சரி விடு. அந்த பொண்ணு போய் ரொம்ப நேரம் ஆச்சு…”
“இந்த பக்கம் தானே வரனும். வரட்டும்…” என சொல்ல,
“என்னடா நீ? போனவ இங்க தான் வருவாளா? அதுவே சின்ன பொண்ணு. அது இடிச்சு நீ கீழே விழுந்ததே அசிங்கம். இதுல திரும்ப சண்டைக்கு போவியோ? நீ கேமரா விழுந்ததுல ஷாக்ல நின்னுட்ட. போன பொண்ணு திரும்பி வந்து கேமரா எடுத்து குடுத்ததே பெருசு. பேசாம வா. இதை இப்படியே விடு…” என்ற சக்தி இழுத்துக்கொண்டு சென்றான் அவன் நண்பனை.
அவன் விதுரன். அனைத்து விஷயத்தையும் தனக்கென்று ஒரு கோணத்தில் யோசிப்பவன். அதன் படி நடப்பவன்.
தூரமாய் ரோஜா தென்படுகிறாளா என்று கோபத்துடன் கண்களால் துழாவியபடி தனது உடலில் படிந்திருந்த மணல் துகள்களை தட்டிவிட்டு சென்றான் விதுரன்.
ஒருவனின் கோபத்திற்கு ஆளானதை பொருட்படுத்தாமல் ரோஜா தன் தோழியை தேட சங்கவி ஓட முடியாமல் ஒரு படகு மறைவில் அமர்ந்திருக்க அதனை கண்டுகொண்டவள் பொத்தென அவள் மீது விழுந்து,
“மனுசங்க உயிர் என்ன அம்புட்டு கேவலமாவா போச்சு? கொலைகாரி. மொபைலை குடு. பேசிட்டு வந்து உன்னை வச்சிக்கறேன்…” என்றவளின் வேகத்தில் மொபைலை தந்த சங்கவி மூச்சு வாங்க அந்த கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டாள்.
“கும்பலாக சுத்துவோம், நாங்க ஐயோயம்மான்னு கத்துவோம். எங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்” என்ற பாடல் மீண்டும் இசைக்க தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட ரோஜா மூச்சை ஆழமாக இழுத்துக்கொண்டு,
“ஹலோ, டாட், மொபைல் சைலன்ட்ல இருந்தது. கால் வந்ததை கவனிக்கலை….” என்றாள் அமைதியாக.
ஆனாலும் அவளின் இத்தனை தூர ஓட்டத்தின் காரணமான மூச்சிரைப்பு அவளின் பேச்சில் அப்பட்டமாய் தெரிய,
“என்னாச்சு பாப்பா?…” என்றார் சேகரன். அந்த குரலில் இருந்த கடுமையில் ஐயோ என்று அலுத்துக்கொண்டவள் வரவழைக்கப்பட்ட தன்மையுடன்,
“நத்திங் டாட். பீச்ல ஜாக்கிங்…” என்று சமாளித்தாள்.
“வேலையா போன இடத்துல ஜாக்கிங் தேவையா பாப்பா?…” என்றவரின் அடுத்த கேள்வி என்ன வரும் என்று யூகித்தவள்,
“ஓகே டாட். ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கறேன்…” என்றதும்,
“ஹ்ம்ம், பார்த்து இருந்துக்கனும் பாப்பா. நாளைக்கு பேசறேன்…” என சொல்லி வைத்து விட்டார்.
“பாப்பாவாம் பாப்பா, சின்ன பாப்பா பெரிய பாப்பா” என போனை பார்த்து அவரை போலவே பழிப்புக்காட்டி கேலியாக சொல்லிப்பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் அப்படியே கீழே அமர்ந்தவள் கண்ணை மூடி திறக்க அங்கே சங்கவி சற்று தொலைவில் நின்று இவளையே பார்த்தபடி நின்றாள்.
“இங்க பாரு ரோஜா, காலையில நீ பண்ணதுக்கும் இதுக்கும் சரியாகிடுச்சு. எவ்ரித்திங் க்ளியர். விட்ருடி…” என சொல்லிக்கொண்டே மீண்டும் ஓட்டத்தை ஆரம்பிக்க அவளை விரட்டிக்கொண்டு ஓடினாள் ரோஜா.
ஸ்ரீயும் சேர்ந்துகொள்ள மூவரும் சற்று நேரம் கடலில் காலை நனைத்தபடி தங்கள் ரெசார்ட் நோக்கி சென்றனர் அசதியுடன்.
ரோஜாவிற்கு விதுரனை இடித்ததோ அவனை கீழே தள்ளிவிட்டு கேமராவை பாழ் படுத்தியதோ ஞாபகத்திலேயே இல்லை.
ஆனால் அவன் தனது அறையில் அமர்ந்து அந்த கேமராவையே பார்த்தபடி கோபத்துடன் அமர்ந்திருந்தான்.
“உன்னால தான், இல்லைனா அவளை அங்கயே நல்லா பேசிட்டு வந்திருப்பேன். இப்ப எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. இன்னொருக்க என் கண்ணுல மாட்டாமளா போய்ருவா? வச்சிக்கறேன்…” என்று சக்தியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தான்
மறுநாள் காலை அவளே வந்து தன்னிடம் பேசும் சந்தர்ப்பம் அமையவிருப்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.