“ரோஜாவுக்கு ரிலேட்டிவோ?…” என சக்தி இன்னும் யோசனையோடு கேட்க அப்போது தான் மண்டபத்திற்கு முன்னால் இருந்த ப்ளக்சில் சேகரன் இல்ல திருமணம் என்று வரவேற்பு இருந்ததை நினைவு கூர்ந்தான்.
“மேபி மேபி…” என யோசித்தவன் மேடையை பார்க்க ஹரிஷ் தன்னையே பார்ப்பதை கவனியாதவன் சங்கவியை பார்க்க அவள் இவனை பார்க்கவில்லை. விலாசினி கவனித்து இவனருகே வந்துவிட,
“சொல்லுங்க பாஸ்…” என்றாள்.
“உங்களுக்குமா?…” என சிரித்தவன்,
“ரோஜா பேரன்ட்ஸ் எங்க?…”என கேட்க நேராக அவள் சேகரனை காண்பிக்க அப்பொழுது அவரும் இவனைத்தான் ஆத்திரம் மிகுந்த பார்வையில் அனலை கக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
இவன் ஏன் வந்திருக்கிறான் என்று எதுவும் புரியவில்லை. வந்தவன் ரோஜாவை பார்த்ததை உணரவில்லை. ஹரிஷை நோக்கி விரலை உயர்த்தியதை பார்த்துவிட்டு இருவரும் நண்பர்கள் போல என நினைத்தார். அதனால் மௌனமாக இருந்தார். ஆனாலும் அவன் வந்தது பிடிக்கவில்லை என்ற பாவனையில் தான் நின்றார்.
“ஓகே தேங்க்ஸ்…” என அவளை அனுப்பிய விதுரன்,
“நம்பவே முடியலை விது, ரோஜாவுக்கும் பிரஷாந்திக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. இப்படி ஒரு அருமையான பொண்ணுக்கு நல்ல அக்கா போ…” என சக்தி நக்கலாய் சொல்ல,
“சக்தி, லெட்ஸ் கோ…” என சொல்ல,
“இன்னும் கொஞ்சம் நேரத்துல கல்யாணம் முடிஞ்சிரும். வெய்ட்…” என சொல்ல விதுரன் ரோஜாவை பார்த்தான்.
ஹரிஷின் பேச்சினால் முகம் குழப்பத்துடன் இருக்க அவளை கண்டவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. பார்வையை திருப்பும் நேரம் பிரஷாந்தியும் இவனை பார்த்துவிட உடலின் மொத்த சூடும் தலைக்கேற கோபமாய் திரும்பிய விதுரன்,
“நோ என்னால இங்க இருக்க முடியாது அவ இருக்க இடத்துல. நான் கிளம்பறேன். கார்ல இருக்கேன். நீ பார்த்துட்டு வா…” என்று எழுந்து வேகமாய் வாசலை நோக்கி நடக்க,
“மிஸ்டர் விதுரன்…” என்று கத்தினான் ஹரிஷ்.
மேள சத்தத்தில் முதலில் ஒன்றும் கேட்காமல் போக எழுந்து நின்றுவிட்டான் ஹரிஷ். அவன் எழுந்ததில் மேளச்சத்தம் நின்று போக அனைவரும் என்னவென்று பார்க்க இப்பொழுது மீண்டும்,
“மிஸ்டர் விதுரன்…” என்ற குரல் அந்த மண்டபம் முழுவதும் எதிரொலிக்க மேளச்சத்தம் திடீரென நின்றதிலேயே வேகத்தை குறைத்த விதுரன் ஹரிஷின் அழைப்பில் திரும்பி பார்த்தான்.
இவன் என்ன எழுந்து நிற்கிறான் என்று தான் பார்த்ததும் தோன்றியது. இப்பொழுது மொத்த ஆட்களும் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் அங்கேயே நின்று என்னவென்பதை போல பார்த்தான்.
“கல்யாணம் கூட முடியலை அங்க எங்க போறீங்க?…” என கேட்க,
“கல்யாணம் நடக்கறதுக்கும் நான் போறதுக்கும் என்ன சம்பந்தம் ஹரிஷ்?…” என்றான் விதுரன். உடனே மேடையை விட்டு இறங்கினான் ஹரிஷ்.
“ஹரிஷ் என்ன பன்ற? ஏன் மேடையை விட்டு இறங்கி வந்த?…” என அவனின் பெற்றோர் கண்டிக்க,
“மாப்பிள்ளை நீங்க மேடையில் உட்காருங்க, உங்க ப்ரெண்டை நான் கூட்டிட்டு வந்து உட்கார சொல்றேன்…” என தன்மையாக சேகரன் சொல்ல,
“வாட், இவன் என்னோட ப்ரெண்டா?…” என்று அந்த மண்டபமே அதிரும் வண்ணம் அவன் சிரிக்க சக்திக்கு பயம் பிடித்தது.
இங்கு வந்திருக்க கூடாதோ என எண்ணியவன் ரோஜாவை பார்க்க அவள் நடப்பது எதுவும் புரியாமல் அமர்ந்திருந்தாள்.
“விது, வா நாம போவோம்…” என சக்தி அவனின் கையை பிடித்து இழுத்தான்.
“இங்க இருந்து அவ்வளவு சுலபத்துல இவர் போய்ட முடியாது சக்தி. அதான உங்க பேர்…” என்று ஹரிஷ் சொல்ல,
“ஹரிஷ் என்னடா ஆச்சு உனக்கு?…”
“அப்பா ப்ளீஸ் இனி கல்யாணத்துக்கு பின்னால எதுவும் ஆக கூடாதுன்னு தான் இப்ப பேசறேன். இல்லைனா தப்பாகிடும். உங்க தொழில் லாபத்துக்காக உங்க ப்ரெண்ட் கூட சம்பந்தம் வச்சீங்க சரி. எனக்கும் பிடிச்சு நானும் ஏத்துகிட்டேன். இப்ப என்னை பேச விடுங்க…” என்றவன் சேகரனை பார்த்து,
“இவர் என் ப்ரெண்ட்ன்னு நினைச்சீங்களா? அப்ப உங்க பொண்ணு இவன்கிட்ட வேலை பார்த்தது கூட உங்களுக்கு தெரியாதா?…” என்று இளக்காரமாய் கேட்க,
“என்ன என் பொண்ணு போயும் போயும் இவன்ட்ட வேலை?…” என்று முகத்தை சுளித்தவர்,
“ஏன்டா ஏன்டா இப்படி வந்து என் பொண்ணு கல்யாணத்துல பிரச்சனை பன்ற?…” என விதுரனிடம் எகிற,
“லூஸாய்யா நீ?…” என்று விட்டான் விதுரன் கோபத்தில் மரியாதையின்றி.
கோபம் கோபம், பிரஷாந்தியை மீண்டும் பார்த்துவிட்ட கோபம், சேகரனுடன் பேச வேண்டி வந்து விட்டதே என்ற கோபம். ரோஜாவை மணமேடையில் விட்டுவிட்டு இறங்கி வந்து சம்பந்தமில்லாமல் தன்னிடம் வார்த்தையாடும் ஹரிஷின் மீதும் கோபம்.
இப்படி விதுரனின் கோபம் நொடிக்கு நொடி அதிகமாக அவனின் கண்கள் ரோஜாவை பார்த்தது கவலையுடன்.
“என்னடா மரியாதை இல்லாம பேசற?…” என்று சேகரன் வேஷ்டியை மடித்துக்கட்ட,
“பின்ன வேற என்ன பேசனும்? பொண்ணுக்கு நீ பார்த்திருக்கற மாப்பிள்ளை அவளை விட்டுட்டு இங்க வந்து வம்பு பேசறான். என்னடான்னு கேட்காம கல்யாணத்தை பார்த்துட்டு போக வந்தவன்ட்ட பிரச்சனை பன்றியான்னு கேட்கற உன்னை லூஸான்னு கேட்கமா வேற என்ன பேச?…” என்று சொல்ல ஹரிஷின் புறம் திரும்பிய சேகரன்,
“மாப்பிள்ளை முதல்ல தாலி கட்டுங்க. மத்ததை ரெண்டாவது பேசிப்போம்…” என்று கெஞ்ச விதுரனின் பார்வை ஹரிஷை துளைத்தது.
இல்லை இவன் இத்துடன் நிற்பவன் அல்ல என உள்மனம் அடித்து சொல்ல சக்தி இழுத்ததை உதறியவன் ஒரு தீர்மானத்தோடு கையை மார்பின் குறுக்கே கட்டியவன் கால்களை ஊன்றி அசையாமல் அங்கேயே நின்றான்.
“இவனை நான் அனுப்பிடறேன். நீங்க வந்து தாலி கட்டுங்க முதல்ல. ஊர் கூடி இருக்கற இடத்துல என்னை அசிங்கப்படுத்தாதீங்க…” என்று கெஞ்ச சேகரனுக்கு கெஞ்ச தெரியுமா என பார்த்தான் விதுரன்.
“தாலி தானே கட்டுறேன். கண்டிப்பா கல்யாணம் நடக்கும். ஆனா இவனை அனுப்பிட்டு இல்லை. இவன் வரமாட்டானோன்னு நினைச்சேன். நல்ல வேளை…” என விதுரனை பார்த்துக்கொண்டே சொல்லிய ஹரிஷ் தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி மேடையில் வைத்தான்.
“ஜேம்ஸ்…” என்று குரல் கொடுக்க தயக்கத்துடன் அவனின் தோழன் வந்து நின்றான் அங்கே. அவனிடம் கை நீட்ட கற்றையாய் சில போட்டோஸ் எடுத்து அவன் தரவும் வாங்கியவன் அதை சேகரனுக்கும் விதுரனுக்கும் காண்பிக்க அதை பார்த்த சக்தி கோபத்தில்,
“யூ ப்ளடி ராஸ்கல்…” என அவனின் கையை ஆத்திரத்தில் தட்டிவிட அனைத்தும் சிதறி காற்றில் பறந்து கீழே விழ அனைவரும் எடுத்து பார்த்து தங்களுக்குள் மாற்றி மாற்றி காண்பித்து பார்த்துக்கொண்டனர்.
அது ரோஜா விதுரனுடன் அவன் வீட்டிற்கு அழைப்பு வைக்க சென்ற அன்று எடுத்த புகைப்படங்கள்.
அந்த இருட்டிலும் அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்த விதம் சற்று தெளிவானதாயும், எடுக்கப்பட்டிருந்த கோணங்கள் அவர்களை மிகவும் நெருக்கமாகவும் காண்பித்திருந்தது. ரோஜாவும் விதுரனும் ஒருவரை ஒருவர் பார்வையில் பரிதவிப்புடன் தீண்டிக்கொள்ள,
“இப்ப சொல்லுங்க, இதுக்கு என்ன அர்த்தம்?…” என அவர்களை கலைத்தான் ஹரிஷ்.
“மனுஷனாடா நீ? ஒரு பொண்ணை இப்படி சபையில் வச்சு அசிங்கப்படுத்தற. நீயெல்லாம் என்ன பிறவி? இது எப்பவோ நடந்தது. அதுவும் அங்க தப்பா எதுவுமே நடக்கலை. ரோஜா இன்விடேஷன் குடுக்கத்தான் விதுரன் வீட்டுக்கு வந்திருந்தாங்க…” என்று சக்தி சொல்ல,
“அதை பெத்தவர் சொல்லட்டும் சக்தி. ஒரு பொண்ணை சபையில் வச்சு அசிங்கப்படுத்தினா என்ன நடக்கும்னு அவருக்கும் தெரியனும் தானே? இப்ப புரிஞ்சிருக்கும்…” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அவன் சொல்லவும் இயலாமையுடன் பார்த்தார் சேகரன்.
அவருக்கு புரிந்து போனது ஹரிஷ் ஏன் இப்படி பேசுகிறான் என்று. வருத்தம் மேலிடன் அவர் பார்த்த பார்வையை அலட்சியம் செய்தவன்,
“இங்க எந்த தப்புமே நடந்திருக்காதுன்றதுக்கு என்ன உத்தரவாதம் சொல்லுங்க. எந்த நம்பிக்கையில் நான் உங்க பொண்ணுக்கு தாலி கட்ட?…”என நாக்கை விஷமாய் சுழற்ற,
“ஐயோ அப்படி சொல்லாதீங்க மாப்பிள்ளை. என் பொண்ணு இவன்கிட்ட வேலை பார்த்ததே எனக்கு தெரியாது. அதுவும் இல்லாமா தப்பு எதுவும் நடந்திருக்காது. நீங்க எதையாவது நினைச்சு இந்த கல்யாணத்தை நிப்பாட்டிறாதீங்க…” என்று கெஞ்ச வளர்மதியோ ஆத்திரத்தில்,
“அடிப்பாவி, உன்னை இதுக்குத்தான் சென்னையில் விட்டு வச்சோமா? வேலைக்குன்னு போய்ட்டு மானத்தை வாங்கிட்டியே. உன்னையெல்லாம் என் வயித்துல தான் பெத்தேனா? இவன் கூட வீடு வரைக்கும் போனதும் இல்லாம அவனை இங்க வரைக்கும் வரவழைச்சிருக்கன்னா என்ன திமிர்டி உனக்கு? திட்டம் போட்டுதான் இதெல்லாம் செய்யறீங்களா?…”
கொஞ்சமும் யோசியாமல் ரோஜாவை கன்னம் கன்னமாய் அத்தனை பேர் மத்தியில் அறைய அறைந்ததை விட வார்த்தையால் அவளை குத்தி கொன்று கொண்டு இருந்தார்.
மறுத்து பேச வாய் திறந்தவளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு வளர்மதி வார்த்தைகளை தீயாய் கொட்டிவிட அதன்பின் ஒற்றை வார்த்தை பேச கூட வாயை திறக்கவில்லை ரோஜா.
இதை பார்த்துக்கொண்டிருந்த விதுரனுக்கு கோபம் கொந்தளிக்க இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதியானான். ஆனாலும் வலியுடன் அவளை பார்க்க ரோஜா இவன் புறம் திரும்பவே இல்லை.
வளர்மதியோ ஹரிஷின் குற்றசாட்டை உண்மையாக்கிக்கொண்டு இருந்தார். கொஞ்சமும் யோசிக்கவில்லை தன் பெண் அப்படி செய்வாளா என்று. அங்கே ரோஜாவின் மீதான நம்பிக்கை மொத்தமாய் உயிரிழந்துவிட்டிருந்தது.
“ஹரிஷ் இப்படி அபாண்டமா சேத்தை வாரி இறைக்காதீங்க. இது நல்லதுக்கில்லை…” என்று சக்தி சொல்ல,
“அண்ணே முதல இவனுங்களை இங்க இருந்து அனுப்புவோம். அப்பறமா மாப்பிள்ளையை சமாதானம் செய்வோம்…” என ஒருவன் சொல்ல,
“விது நாம போகலாம் வா…” என்றான் சக்தி.
“இருடா, இங்க என்ன தான் பன்றானுங்கன்னு பார்ப்போமே…” என தெனாவெட்டாய் அவன் நின்ற விதம் பிரஷாந்திக்கு கோபம் கோபமாய் வந்தது.
அவளுக்கு பழைய விஷயங்கள் ஞாபகம் வர விதுரனை பார்த்தபடி நின்றாள் அவன் மீண்டும் தன்னை பார்க்கிறானா என. அவனோ ஒரு முறை பார்த்ததற்கே அற்பமே என முகம் திருப்பி கொண்டானே.
“மாமா, இப்ப இந்த பிரச்சனை வேண்டாம். சுமூகமா பேசுங்க. இவங்களை விடுங்க. நம்மை மீறி என்ன நடந்துரும்?…” என நிர்மல் வர பிரபு விதுரனை தன் சகாக்களுடன் சூழ்ந்து கொள்ள,
“இவனுங்க வேற நேரம் காலமில்லாம அட்டென்ஷன் பொசிஷன்ல நிக்கறானுங்க…” என சக்தி அலுத்துக்கொண்டான்.
“உங்க பொண்ணுன்னு வரப்போ இத்தனை துடிக்குதே. இப்படித்தான மத்தவங்களுக்கும் இருக்கும்?…” என கேட்க,
“தப்புதான் மாப்பிள்ளை. தப்புதான். அதுக்காக என் பொண்ணை அம்போன்னு விட்டுடாதீங்க…” என்று சேகரன் சொல்ல,
“நான் ரோஜாவை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன். ஆனா நீங்க செஞ்ச தப்பை உங்களுக்கு எப்படி புரிய வைக்க? அதான் இப்படி பண்ணினேன். உங்களுக்கு சந்தேகம்ன்னா என்கிட்டே கேட்டிருக்கனும். அதை விட்டுட்டு…” என ஹரிஷ் சொல்ல,
“என்னடா நடக்குது இங்க?…” என ஹரிஷின் தந்தை கேட்க,
“அப்பா உங்களுக்கு தெரியும் தானே? நான் வைஷுவை லவ் பண்ணினது. அவ அவங்க பேமிலி ஒத்துக்கலைன்னதும் நாங்க ரெண்டு பேருமே பேசி தான் பிரிஞ்சோம்னு. கொஞ்சம் நாள் முன்னாடி ப்ரெண்ட்ஸ பார்க்க போன நேரத்துல அவளை மீட் பண்ணினேன். அப்பத்தான் ரோஜாவுக்கும் எனக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆனது…”