“ரோஜா வாஷ் ரூம் போக வேண்டாமா?…” என கேட்க அவள் கண்கள் கலங்கியது.
“ப்ச், இப்ப ஏன் அழற? நான் இருக்கேன் இல்லையா?…” என்று அவளின் கண்ணீரை துடைத்தவன்,
“கொஞ்சம் வெளில வா, மைண்ட் ரெப்ரெஷ் ஆகும்…” என்று வம்படியாக அவளை இறக்கி கூட்டி வந்தவன் அவள் வாஷ்ரூம் சென்று வரும் வரை அவளுக்காக காத்திருந்து மீண்டும் அழைத்து வந்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்த்தியவன் இருவருக்கும் காபி வாங்கிக்கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து தானும் அருந்தினான்.
“வேற ஏதாவது லைட்டா சாப்பிடறியா?…” என்றதற்கும் அவள் மறுக்க இப்போதைக்கு வற்புறுத்த வேண்டாம் என நினைத்து,
“சரி நீ கார்ல வெய்ட் பண்ணு. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன் வீட்டுக்கு…” என்று அமர வைத்தவன் மனது வெகுவாய் அவளின் பேச்சை கேட்க ஏங்கியது.
“என்னடா காபி குடிச்சாச்சா?…” என்று சக்தி வர,
“ஹ்ம்ம், இப்போ தான்…” என்றான் விதுரன்.
“ரோஜா…” என தேட,
“கார்ல இருக்கா…” என்றவன்,
“அங்கிள்….” என ஒரு பெண்ணின் குரல் கேட்க வேகமாய் திரும்பி பார்த்தவன் காரில் ரோஜா படுத்துவிட்டிருக்க குரல் கொடுத்த பெண்ணை பார்வையால் இவன் தேட,
“என்னடா ராட்டினம் சுத்துற?…” என்றான் சக்தி.
“இல்ல யாரோ அங்கிள்ன்னு…”
“உடனே உனக்கு ஜிவ்வுன்னு ஏறிடுச்சாக்கும்? அது யாரோ ஒரு பொண்ணு யாரோ ஒரு அங்கிளை கூப்பிடறா. உடனே கட்டையை தூக்கிட்டு போய் எப்படி கூப்பிடுவன்னு சாத்திடாத. இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையாடா?…” என்றவனை விதுரன் முறைக்க,
“கண்ணுல கொலைவெறி தாண்டவமாடுது? பொறுமை பொறுமை, அதான் என் உயிரை எடுக்க இன்னொருத்தவங்க ரெடியா இருக்காங்களே…” என கயல்விழியை மனதில் வைத்து சொல்ல,
“கூடவே வர தான. ஈவ்னிங் கால் பண்ணனும்னு சொன்னேன்ல. என்னடா நீ? நான் வரலைனாலும் பரவாயில்லைன்னு நிச்சயத்தை முடிச்சிருந்தா இன்னும் பிரச்சனை பெருசாகும்…” என சக்தியை திட்டிய விதுரன் தன் மொபைலை உயிர்ப்பிக்க அதில் ஏகப்பட்ட அழைப்புகள். உடனே சடகோபனிற்கு அழைத்தான்.
“இதுக்குன்னே எங்களை மாதிரி அப்பாவிஸை கூட வச்சுட்டு சுத்துவேங்களாடா? உங்களுக்கு ஹீரோஸ் போஸ்ட் குடுக்கறதுக்கு நீங்க பன்ற டார்ச்சரை தாங்கிக்கற எங்களுக்கு குடுக்கலாம். ஆனா யாரு இதெல்லாம கன்ஸிடர் பண்ணுவா?…” என சக்தி புலம்ப விதுரன் வாயை மூடு என்பதை போல சைகை செய்ய,
“கூட வந்தேன்ல தேவை தான். இதத்தான் பண்ணனுவ நீ. திட்டும், குட்டும் எங்களுக்கு. உங்களுக்கு லவ், வெட்டியா நாலு பஞ்ச் டயலாக், கொஞ்சம் ரொமான்ஸ். ஏன் நாங்க பண்ண மாட்டோமா?…” என “அடிவாங்கினது நானு, கப்பு எனக்குத்தான்” என்னும் விதமாய் புலம்பிக்கொண்டிருந்தான்.
அவன் பேசியதை கேட்டு சிரிப்புடன் பார்த்திருந்தவன் தன் தந்தை அழைப்பை எடுப்பதற்காக காத்துக்கொண்டே. அழைப்பு போய்க்கொண்டே தான் இருந்தது. எடுக்கத்தான் இல்லை.
“என்னடா இது? கால் அட்டன் பண்ண மாட்டிக்காங்க?…” என விதுரன் சொல்ல,
“இரு நான் சித்தப்பாவுக்கு கூப்பிடறேன்…” என்ற சக்தி தனது மொபைலில் இருந்து விதுரனின் சித்தப்பாவிற்கு அழைத்தான்.
“சக்தி உன் போனை ஏன் ஆஃப்ல இருந்தது? நீங்க எங்க இருக்கீங்க? சேஃப் தானே? விது பையன் எங்க?…” என்று கேள்விகளால் துளைக்க,
“நாங்க சேஃப் தான் அங்கிள், நாங்க இப்ப சென்னை…” என்றவனை சொல்லி முடிக்க விடவில்லை அவர்.
“இங்க ஒரே ப்ராப்ளம் சக்தி. விது பக்கத்துல இருந்தா அப்படியே ஹோல்ட் பண்ணிட்டு தள்ளி வந்து பேசு…” என்றதும் அவன் விதுரனை பார்க்க அவன் மொபைலை பார்த்துக்கொண்டு இருந்தான்.
“சொல்லுங்க அங்கிள்…” என,
“சக்தி இங்க ஒரே பிரச்சனை, நீங்க இங்க வராம இருக்கறது தான் நல்லது. அந்த பொண்ணுக்கு ஏதோ லவ் இருந்திருக்கும் போல. இந்த நிச்சயம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லிருச்சாம். பொண்ணோட அப்பா போன் பண்ணி சொல்ல நம்மாளுங்க எல்லாரும் சண்டைக்கு போய்ட்டாங்க…”
“என்ன சொல்றீங்க அங்கிள்?…” என அதிர,
“ஆமாம்ப்பா, அண்ணி மனசொடிஞ்சு இருக்காங்க. நாங்க உங்களுக்கு ட்ரை பண்ணிட்டே இருக்கோம். ரீச் பண்ணவே முடியலை. ஒருவேளை கிளம்பாம இருந்தா வரவேண்டாம்னு சொல்லத்தான் கால் பண்ணோம். விதுக்கிட்ட பக்குவமா சொல்லனும். நாளைக்கு நாங்க அங்க வந்து பேசறோம்…” என சொல்லி வைத்துவிட,
“ஆனாலும் இந்த லவ் உன் வாழ்க்கையில சும்மா சுத்தி சுத்தி விளையாடுதுடா விதுரா. ஆனா உனக்குத்தான் லவ் இல்லைன்னுற. போறவன் வாரவன் எல்லாம் இந்த லவ்வை வச்சு உன் வாழ்க்கையில் என்னமா விளையாடறாங்க. ஆனா இந்த நிச்சயம் நின்னது நல்லதுக்கான்னு நினைக்கவா ஒன்னும் புரியலையே?” என புலம்பியவன்,
“ஓகே, பாஸிட்டிவா நினைப்போம். முதல்ல இப்போதைக்கு இந்த கல்யாணத்தை பத்தி சொல்ல வேண்டாம். சென்னை போய்ட்டு நாளைக்கு பேசிப்போம். இப்ப இதை வேற வழியில கொஞ்சம் ஈஸியா டீல் பண்ணிப்போம்.” என திட்டமிட்டவனாய் விதுரன் அருகே வர அவனோ,
“ஆமாம் அப்பா, கல்யாணம் முடிச்சுட்டேன். முடிச்சுட்டேன். இன்னைக்கு காலையில் தான். நீங்க தான் அம்மாக்கிட்ட சொல்லி வீட்ல பேசனும். நாங்க சென்னைக்கு தான் போய்ட்டிருக்கோம். என் போன் ஆஃப் பண்ணிடுவேன் திரும்ப. ட்ரை பண்ணாதீங்க. எதுவானாலும் நாளைக்கு வந்து பேசலாம்…”
சக்தி அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே வந்து சொல்லாதடா என சைகை செய்ய அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. பேசி முடித்தவன்,
“ப்ராப்ளம் ஓவர் ஓவர்…” என சொல்ல,
“இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு ஓவர் ஓவர்…” என்றான் சக்தி முறைப்புடன்.
“என்னடா?…” என கேட்க விஷயத்தை சொல்லவும் அத்தனை நிம்மதி விதுரனுக்கு.
“நான் அப்பவே நினைச்சேன் அந்த பொண்ணு ஏனோ மனசுக்கு ஒத்து வரலைன்னு…” என்று சொல்ல,
“ரோஜா மட்டும் ஒத்து வந்ததா? இன்னைக்கு காலையில் வரைக்கும் நீ இப்படி இல்லையே. ரோஜாவுக்குன்னதும் உனக்கு எத்தனை கோபம். இதுவும் லவ் தான்டா…” என்ற சக்தி,
“நீ என்ன காதல் வராத அளவுக்கு அவ்வளவு உன்னை ஸ்ட்ராங் பர்ச்னாலிட்டின்னு நினைக்கிறியா? அதெல்லாம் நீ உனக்கு போட்டு வச்சிருக்க மாஸ்க். அது இன்னைக்கு கழன்று விழுந்திருச்சு விது. புரிஞ்சுக்கோ…” சக்தி சொல்ல,
“இப்ப ரோஜா என் மனைவி. அவளை மனப்பூர்வமா விரும்பறேன் நான். ஆனா முன்னாடியே லவ் அது இதுன்னு சொல்லாத. அவ மேல ஒரு தனி அன்பு. எனக்கு அவளோட நேச்சர் புடிச்சது. அதுக்கு நீ பூசற சாயம் தான்…”
“முட்டாள் டா நீ. லவ் ஒன்னும் அத்தனை மோசமில்லை. புரிஞ்சுக்கோ…”
“அந்த லவ் தான் உன் அண்ணனை நடமாட முடியாம முடமாக்கிருக்கு. ஒரு குடும்பத்தை நிலைகுலைய செஞ்சிருக்கு. ரெண்டு பேர் உயிரை பறிச்சிருக்கு…” என சொல்ல சொல்ல சக்தியின் முகம் வெளிறியது.
“ஏய் ச்சீ, என்னடா நீ? உன்னை தெரியாதா?…”என அவனை அணைத்துக்கொள்ள,
“உனக்கு தெரிஞ்சதால தான் கேட்கறேன். இப்ப ரோஜா என்னோட வொய்ப். மனசார அவளை என் மனைவியா தான் பார்க்கறேன்…” என சொல்ல,
“ஸார் கிளம்பலாம்…” என ட்ரைவர் வரவும்,
“ஓகே, அப்பறம் பேசலாம்…” என்று இருவரும் காரில் ஏறிக்கொள்ள ரோஜாவை நெருங்கி அமர்ந்தவன் அவளின் கையை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
விதுரன் என்னவோ மிக தெளிவாய் இயல்பாய் தான் இருந்தான். ரோஜாவால் தான் அப்படி இருக்க முடியவில்லை. அவனின் மனைவியாகிவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் அவனின் நெருக்கத்தில் சற்று திணறவே செய்தாள்.
“உனக்கு கம்பர்ட்டபிள் தானே?…” என அவன் கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என தயங்கி சொல்ல,
“ஆனா பார்த்தா அப்படி தெரியலையே லிட்டில் டெவில்…” என்று கண் சிமிட்டி கிசுகிசுப்பாய் அவள் காதோரம் அவன் சொல்ல அவனை இயல்பு போலே முறைத்தவள்,
“என்னை பார்த்தா எப்படி இருக்கு?…” என்று கேட்க,
“என்னோட வொய்ப், வொய்ப் மாதிரி இருக்கு…” என்றவனின் பதிலில் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவனின் வொய்ப் என்னும் விளிப்பில் மனது கவலையை மறந்து கும்மாளமிட்டது.
“தூங்கனும்னா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு. டூ ஹவர்ஸ்ல சென்னை ரீச் ஆகிடுவோம்…” என சொல்ல,
“தூக்கம் வரலை…” என்றாள் ரோஜா. அவளின் முகத்தை பார்த்தவன் பின் சக்தியிடம் திரும்பி,
“போற வழியில கோவில் ஏதாவது இருந்தா காரை நிறுத்து சக்தி…” என்று சொல்ல,
“இவன் ஒருத்தன் என்னமோ நான் கார் ட்ரைவர் மாதிரியே பேசுவான்” என்று கடுப்பாகி பதில் சொல்லாமல் இருக்க டிரைவர் அடுத்து வந்த ஒரு ஊரில் தெரிந்த கோவிலில் காரை நிறுத்த சக்தியும் இறங்கினான்.
“நீ எங்கடா வர?…” என கேட்க,
“உன் கூட யார் வந்தா? நான் சும்மா நிக்கறேன். பேசாம போயிரு. இல்ல கடுப்பாகிடுவேன்…” என்று எகிறவும் ரோஜாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்.
“லவ் இல்ல இல்லன்னு சொல்லியே கட்டம் கட்டி கல்யாணத்தை முடிச்சுட்டான். நிஜமாவே இன்னைக்கு ஹரிஷ் மட்டும் எதுவும் பேசாம இருந்திருந்தா?” என நினைத்த சக்தி, ச்சே என்ன இது என நினைப்பை மாற்றினான்.
அது சின்ன கோவிலாக இருந்தாலும் அத்தனை அமைப்பாக நிம்மதியாக இருந்தது. கூட்டமும் அதிகமில்லை. பிரகாரம் சுற்றி வந்தவர்கள் கற்பூர ஆராதனையை கண்களில் ஒற்ற ஐயர் தந்த குங்குமத்தை முதலில் வாங்கியவன் ரோஜாவின் புறம் திரும்பி அவளின் நெற்றியிலும் வகிட்டிலும் வைத்து விட்டான்.
காதல் கொண்ட மனது அவனின் செய்கையில் துள்ளினாலும் தங்கள் திருமணம் நடைபெற்ற விதம் அவளை வருத்தியது.
“வா…” என அழைத்து வந்தவன் வெளியே ஒரு இடத்தில் அமர்ந்தவன்,
“உனக்கு என்னை புடிக்குமா ரோஜா?…” என்று கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காது,
“புடிக்குமே…” என்றாள் பளிச்சென்று. உண்மை தானே, அவனை எந்தளவிற்கு பிடிக்கும் என்பது ரோஜா அறிந்த ஒன்று தானே.
“இது போதும். இன்னைக்கு நடந்ததை நினைச்சு நினைச்சு உன்னோட மனசை கஷ்டப்படுத்திக்காம இருக்கனும். எனக்கு தெரிஞ்ச என்னோட ரோஜா இப்படி மூடியா இருக்க மாட்டாளே?…” என சொல்ல,
“உங்க ரோஜா? இது எப்போ இருந்து? ஐ டோண்ட் லைக் இதுதானே உங்க டயலாக்…” என்று வேண்டுமென்றே சொல்ல,
“நிஜமாவே அன்னைக்கு உன்னை ஹர்ட் பண்ணினதுக்கு ஸாரி. அன்னைக்கு விளையாட்டுக்கு சொன்னதை இப்போ வேணா சொல்லேன். நான் லைக் பன்றேன்…” என்று கண் சிமிட்ட “என்னடா அங்கிள் இது?” என்று தான் ரோஜா பார்த்தாள்.
அவளின் திகைத்த முகத்தை கண்டவன் சிரிப்புடன் அவளின் நுனி மூக்கை பிடித்து ஆட்டி,
“எதையும் நினைச்சு குழப்பிக்காம நாம வாழப்போற வாழ்க்கையை மட்டும் பாரு. காட் இட்…” என,
“வந்து இன்னைக்கு…” என்றவளின் உதட்டில் ஒற்றை விரலை பதித்தவன்,
“மூச், எதுவும் பேச வேண்டாம். நீ ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்ண அதான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு நான் யாரு?…” என கேட்க,
“மிஸ்டர் ரோஜா…” என்றாள் அழுத்தம் திருத்தமாய் லேசான புன்னகையும் கூட அவளின் முகத்தில்.
சோர்ந்து அழுதிருந்த முகம் அவனின் பேச்சில் உரிமையில் ஆறுதலாய் உணர தனக்கே தனக்கான தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கை சேர்ந்த நிம்மதியில் சந்தோஷித்தது.
“கீப் ஸ்மைல் மை லிட்டில் டெவில்…” என்று கன்னத்தை நிமிண்ட,
“கோவில்ல வந்து டெவில்ன்னு பேசுவாங்களா?…” என,
“பேசாம என்ன? இப்ப வா கிளம்புவோம். இனி நேரா வீட்டுக்கு தான்…” என்று அவளை அணைத்தபடி அவன் நடக்க கணவனாய் அவனை உணர ஆரம்பித்தது ரோஜா அவளின் மனது.