காலை ஏழு மணிக்கு அவனின் வழமையான நேரம் விதுரனுக்கு விழிப்பு வந்தது. எழுந்தமர்ந்தவன் கண்ணை கசக்கிக்கொண்டு பார்க்க ரோஜா நன்றான உறக்கத்தில்.
“ஹேய் லிட்டில் டெவில் குட்மார்னிங்…” என்று அவளின் நாடியை பிடித்து சொல்லியவன் எழுந்து முகத்தை கழுவிவிட்டு அவர்கள் அறை கதவை சாற்றி விட்டு வெளியே சென்றான்.
வாசலில் பேப்பர், பாலுக்காக கதவை திறக்க போகும் நேரம் வாசலில் காலிங் பெல் அடிக்க கதவை திறந்தவன் முகம் புன்னகை பூத்தது.
அங்கே கயல்விழி, சடகோபன், தன் சித்தப்பா மணிவாசகம் மூவருடன் பின்னால் சக்தி வாடிய முகத்துடன் நின்றிருந்தான். அப்போது தான் வந்திறங்கி இருந்தனர்.
“செம்மையா வாங்கிருப்பான் போல” என நினைத்துக்கொண்டே அவனை கண்டுகொள்ளாமல் வேகமாய்,
“அம்மா…” என சொல்லி ஆர்ப்பாட்டமாய் அழைக்க கயல்விழிக்கு கடுகடுவென வந்தது.
விருட்டென அவனை தாண்டிக்கொண்டு முறைப்புடன் உள்ளே சென்றார். சடகோபன் மகனின் முகத்தை பார்க்கவே இல்லை. மணிவாசகம் அவனை பார்த்த நொடியில் தலையில் அடித்துக்கொண்டு உள்ளே செல்ல,
“ஏன்டா மூஞ்சியை கூட பாப்பேனான்னு போறாங்க. இன்னைக்கு வச்சு செய்வாங்க போலையே…” என விதுரன் சந்தேகமாய் சக்தியிடம் கேட்க,
“உன் மூஞ்சி, தலையை பாரு. இப்படி என்னை பார் என் அழகாய் பார்ன்னு ஹேர் கிளிப் குத்திருந்தா உன்னை பார்ப்பாங்களா?…” என்றதும் வேகமாய் தலையை தடவ அவனின் உச்சி முடியில் இரண்டு ஹேர்பின் டைப் டிஸைனிங் கிளிப்கள் மாட்டப்பட்டிருக்க,
“ஹேய் ரோஜா வேலையா இருக்கும். இதை நான் கவனிக்கவே இல்லையே?…” என்றான் சற்றும் அலட்டிக்கொள்ளாமல்.
“அடப்பாவி, டேய் உன்னால நான் தூங்க கூட முடியாம அவதிப்பட்டு அதிகாலையிலையே எந்திச்சு….”
“அதிகாலையா? அம்மா உன் வீட்டுக்கு வந்துட்டாங்களா?…” என சாவகாசமாய் வாசலில் கதை பேச,
“நல்லா வந்தாங்க, என்னைய ஆளுகளை வச்சு தூக்காதது தான் குறை. மத்தபடி சகலமும் நடந்துருச்சு. உன் தம்பி ஒருத்தன் இருக்கானே தடிமாடு. அவனை விட்டு காலையில நாலு மணிக்கே என்னை கூட்டிட்டு போய்ட்டாங்க உங்க வீட்ல…”
“ஹ்ம்ம், அப்புறம்…” என்று தாடையில் கை வைத்து சுவாரஸியம் பொங்க பார்த்த விதுரன் மேல் கொலைவெறி வர,
“இனி நீயே டீல் பண்ணிக்க நான் போறேன். நீயாச்சு உன் குடும்பமாச்சு…” என்று வேகமாய் திரும்ப,
“இதை அம்மாட்ட சொல்லிட்டு போ, நானா உன்னை கூப்பிட்டேன். கூட்டிட்டு வந்தவங்கட்ட கிளம்பறேன்னு சொல்லிடு. இல்லைனா நான் வேணா உன் சார்பா அம்மாட்ட சொல்லிடறேன் நம்ம குடும்ப விஷயத்துல அனாவசியமா தலையிட மாட்டானாம் தன்மான சிங்கம் சக்தின்னு…” என்று அசராமல் அவனின் தலையில் இடியை இறக்க,
“இதுக்கு என் தலையில இந்த பூந்தொட்டிய தூக்கி போட்டு ஆம்புலன்ஸ்ல அனுப்பிடலாம். ஏன்டா நீ இப்படி இருக்க? ம்ஹூம், உன்னை நம்ப மாட்டேன். எனக்கு சத்தியம் பண்ணு, அப்பத்தான் உள்ள வருவேன்…”
“என்ன சத்தியம்?…”
“சத்தியமா இந்த கல்யாணம் உனக்கு நீயே பண்ணிக்கிட்டதுல எந்த உள்குத்தும் இல்லைன்னு. அப்பத்தான் வருவேன்…”
“என்னை நீ நம்ப மாட்டியா சக்தி. நான் உன் நண்பேன்டா…”
“நீ முதல்ல போ, நான் பின்னால வரேன்…” என்ற சக்தியை பார்த்து இதழ்களுக்குள் புன்னகைத்த விதுரனை கண்டு கடுப்பானவன்,
“வாய்க்குள்ள சிரிக்காதடா எனக்கு பத்திக்கிட்டு வருது….” என எரிந்து விழ அதில் இன்னும் விதுரன் சிரித்தபடி வீட்டிற்குள் திரும்ப பார்க்க,
“அடச்சீ நில்லுடா, உன்னோட ரோதனையா போச்சு. அந்த ஹேர் க்ளிப்பை கழட்டி தொலை…” என தலையை சுட்டிக்காட்டி சொல்லிவிட்டு கடுப்புடன் உள்ளே சென்றான்.
விதுரனும் சிரிப்புடன் அதை கழட்டி கையில் வைத்துக்கொண்டவன் உள்ளே வர சக்தி ஒரு இடத்தில் ஓரமாய் அமர்ந்திருக்க விதுரனை பார்வையால் துளைத்தபடி அவனின் குடும்பத்தினர்.
கயல்விழி மகனிடம் பேசவே இல்லை. அவன் கிஞ்சித்தும் சங்கடமின்றி வருத்தமின்றி அவரை பார்த்து புன்னகை முகமாக நிற்க சக்தியின் அருகே அமர்ந்திருந்த சடகோபன்,
“இவன் சிரிச்சே என் பொண்டாட்டிய மலையேற வச்சிருவான். கொஞ்சமாச்சும் அம்மா தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றானா?…” என சக்தியின் காதை கடிக்க,
“அங்கிள், எதுவானாலும் அங்க போய் உங்க தம்பியோட பேசுங்க. என்கிட்டே பேசி மலையேறற சாமி போற போக்குல என் பக்கம் நாலு காட்டு காட்டிட போகுது…” என்று சொல்ல,
“குடும்பமா என்னை குத்தாலத்துல இறக்காம விடமாட்டாங்க போல?” அவரை பாவமாய் திரும்பி பார்த்தவன் முகமோ “அழுதுருவேன்” என்னும் பாவனையை காண்பிக்க,
“ப்ச், விடு பார்த்துக்கலாம். நண்பனுக்காக அழற மனசுடா உனக்கு. நீ இருக்கப்ப என் மகனை யாராலும் அசைக்க முடியாது…” என்று கிசுகிசுக்க “குடும்பமா சாவடிக்கிறீங்களே” என மனதிற்குள் புலம்பத்தான் முடிந்தது சக்தியால்.
“கயல் என்ன நினைக்கறான்னே தெரியமாட்டிக்கே?…” என மனைவியை ஆராய்ந்து கொண்டே கேட்க,
“இல்லைனாலும் உங்களுக்கு தெரிஞ்சு. தயவு செஞ்சு எந்திச்சு அங்க போய் உட்காருங்க அங்கிள். ப்ளீஸ்…” என சக்தி சொல்ல,
“ஆமா அந்த பொண்ணை எங்க சக்தி? பார்க்கனும். நேத்து தவிச்சு போயிருக்கும்ல….” என சடகோபன் சொல்ல,
“உங்களுக்கு கோவமே இல்லையா?…” என சக்தி கேட்க,
“கோபப்பட்டு என்னாகிடும்?அதான் கல்யாணம் ஆகி எல்லாம் ஆச்சே…” என்றார் இலகுவாய்.
“முடிவே பண்ணிட்டீங்களா எல்லாம் ஆச்சுன்னு?…”
“அதான் அவன் வந்து நின்ன கோலத்துல தெரியலையா?…” என சடகோபன் தன் கண்டுபிடிப்பை சொல்ல சக்தி தனது குரலை இன்னும் தளைத்துக்கொண்டு,
“அங்கிள், என்ன இருந்தாலும் இவனை நம்ப முடியாது. நீங்க நம்பனும்னு கூட அவனே க்ளிப்பை குத்திட்டு வேணும்னே வந்து நின்னுருப்பான். ஆமா…” என விதுரனை போட்டுக்கொடுக்க,
“நிஜமாவா சொல்ற? ச்சே ச்சே இருக்காது. அவன் என் மகன்…” என்றார் பெருமையாக.
“ம்க்கும், சொல்லாம கொள்ளாம கல்யாணத்தை முடிச்சு, சடங்கு அத்தனையும் செஞ்சுருக்கான். இதுல பெருமை ஒண்ணுதான் குறை…” என சக்தி நொடிக்க,
“ப்ச், பீ சீரியஸ் சக்தி…” என்றார் சட்டென பார்வையில் கூர்மையை கொண்டு வந்து.
“இப்ப நீங்க எதுக்கு கண்ண தீட்டிக்கிட்டு பார்க்கறீங்க அங்கிள்?…” என்ற சக்திக்கு பதில் சொல்லாமல் உடலில் ஒரு தோரனையை கொண்டு வர “இவரா இவ்வளவு நேரம் என்கிட்டே வம்பளந்தார்?” என யோசித்தபடி திரும்பி பார்க்க அங்கே கயல்விழி இவனை முறைத்துக்கொண்டு நின்றார்.
“ஆஹா, அதான் அங்கிள் அலார்ட் ஆகிட்டாரு” என பதட்டத்தை காண்பிக்காமல் சக்தி நிமிர்ந்து அமர விதுரன் வழக்கம் போல பீன்பேக்கை எடுத்து போட்டு தாயையும் சித்தப்பாவையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
இவன் பேசட்டும் என அவர்களும், அவர்களே கேட்கட்டும் என இவனும் பார்த்திருக்க,
“ஐயோ இந்த பஞ்சாயத்தை முடிங்கடா, பசில தலை கிறுகிறுன்னு சுத்துதே” என மயக்கமாகும் நிலைக்கே சென்றான் சக்தி.
அதிகாலை எழுப்பி குளிக்க வைத்து கூட்டி சென்ற பொழுதில் அங்கே காபி கொடுத்தும் அனைவரின் முகத்திலும் இருந்த உக்கிரத்தில் பயந்து காபியை கூட குடிக்காமல் விட்டுவிட்டான்.
இப்படி மீண்டும் இங்கே கூட்டி வந்தும் ஒன்றும் கிடைக்காமல் போக அதற்கு மேலும் முடியாமல் சக்தி அதற்கு மேலும் முடியாமல் தண்ணீரை எடுத்து குடிக்க அதை பார்த்த கயல்விழி,
“சக்தி பிரேக்பாஸ்ட்க்கு ஆடர் பண்ணிடு…” என்று சொல்லவும் விதுரனும் உடனே,
“அம்மாவுக்கு புடிச்ச பொங்கல், கேசரி ஆடர் பண்ணு சக்தி. இட்லி தோசையை விட அம்மாவுக்கு அதுதான் ரொம்ப புடிக்கும். அப்டியே அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் ஊத்தப்பம். எனக்கு இட்லி போதும். ரோஜாவுக்கு பூரி சொல்லிடு…” என வரிசையாய் சொல்ல சக்தியின் பாவனையை வரையறுக்க முடியவில்லை.
“சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம். செஞ்சு கிழிஞ்சிருச்சு எங்க முறையிடலாம்” என கண்ணாலேயே அவன் பாட மணிவாசகம் அவனின் முகத்தை பார்த்து வரவிருந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவர்,
“அண்ணி சொல்லிட்டாங்கல்ல சக்தி. ஆடர் பண்ணு. உனக்கும் சேர்த்து. இன்னைக்கு நீ இங்க தான் இருக்கனும். புரியுதா?…” என உன்னை விடுவதாய் இல்லை என்பதை போல சொல்ல விழி பிதுங்கியது.
“அதுதான் போனதுல இருந்து மகன் மண்டபத்துக்குள்ள நுழைகையில் வலதுகால் வச்சு உள்ள போனானா? இடதுகாலான்ற வரைக்கும் கற கறன்னு கறந்துட்டீங்களே இன்னுமா? மம்மி” என மனதிற்குள் அழுதவன் சரி என தலையசைக்க,
“அந்த பொண்ணு…” என கயல்விழி ஆரம்பிக்கும் பொழுது மீண்டும் காலிங் பெல் சத்தம்.
விதுரன் எழுந்து சென்று பார்க்க அங்கே ஸ்ரீநிதி, சங்கவி இருவரும் நின்றிருந்தனர். முகத்தில் அத்தனை கவலை வீட்டில் ஆட்கள் இருப்பதனால் உள்ளே செல்லாமா வேண்டாமா என்று.
“உள்ள வாங்க…” என உள்ளே அழைத்தவன் அவர்கள் வரவும்,
“அம்மா, இவங்க ரோஜா ப்ரெண்ட்ஸ்…” என்று கயல்விழிக்கு அறிமுகப்படுத்த அவரோ இவனையும் முறைத்து அவர்களையும் ஒரு பார்வை பார்க்க அதிலேயே அரண்டனர் பெண்கள்.
சக்திக்கோ இதுதான் சாக்கு, முதலில் ரோஜா வெளியே வரவேண்டும் என நினைத்தவன் அவர்களையும் காப்பாற்றும் விதமாய்,
“ஸ்ரீ உன் பிரண்டை கூட்டிட்டு உள்ள போ. ரோஜா அந்த ரூம்ல இருக்காங்க…” என்றான் ஸ்ரீயிடம் அதிகாரமாய். அதிலும் உரிமையுடன்.
“இதென்ன புதிதாய்?” என்பதை போல அவள் வியப்பான பார்வையை அவனிடம் வீசி உள்ளே செல்ல இப்பொழுது கயல்விழி சக்தியை நேரடியாக பார்த்தார்.
“என்ன சக்தி இதெல்லாம்?…” என அதட்டலாய் கேட்க “அய்யோ அவசரப்பட்டுட்டேன்” என அவன் விழிக்க,
“என்ன சக்தி அவசரப்பட்டுட்டியே…” என்று சடகோபனும் உச்சுக்கொட்ட அவரை வாய மூடுங்க என மரியாதையாக கூட திட்ட முடியாமல் பல்லை கடிக்க,
“ஸ்ரீ சக்தியோட ரிலேட்டிவ். அதான் கொஞ்சம் உரிமை எடுத்துப்பான். மத்தபடி ஆபீஸ்ல ஸ்ட்ரிக்ட் ஆபீசர் தான்…” என சக்தியை காப்பாற்றுவதை போல பேசி சக்தி புறம் திரும்பி கண்ணடிக்க,
“இவன் ஒருத்தன்” என எரிச்சலானவன்,
“அங்கிள் உங்க மகனை என்னை பார்க்க வேண்டாம்னு சொல்லுங்க. எனக்கு கோவமா வருது…” என்று சடகோபனிடம் சொல்ல,
“நீ ஏன்டா அவனை பார்க்க?…” என சடகோபன் சொல்ல இனி பார்ப்பேனா என அவரையுமே பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.
அங்கே மீண்டும் ஒரு மௌனம். கயல்விழிக்கு விதுரனிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்கவென யோசனையாக இருந்தது.
அதிலும் அவன் இப்படி நடந்தது, தான் செய்துகொண்டே என்று ஒரு தன்னிலை விளக்கம் கூட தானே கொடுக்கவில்லையே என்று ஆற்றாமையும்.
அவனோ தானாக ஆரம்பித்தால் அதை கொண்டு கயல்விழி பேசுவார் என்பதால் அவரே கேட்கட்டும், பதில் சொல்லிக்கொள்ளலாம் என இவன் இருந்தான். அதிலும் அனைத்தும் தெரிந்தே வந்து சண்டை கூட போடாமல் இப்படி இருக்கிறார்கள் என பார்த்தான்.
சண்டை போடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் கண்டிப்பு என்பது இருக்கும். பேசட்டும் அப்பொழுது தான் தன்னால் சரியாக பேச முடியும் என்று இருந்தான்.
ஆக மொத்தம், தாயும் மகனும் ஒரே போல தப்பித்து மற்றவரை பேச வைக்க பார்த்தனர்.
உள்ளே சென்ற தோழிகள் ரோஜாவை எழுப்ப ஏற்கனவே ஹாலில் விதுரன் குரலோடு இன்னொருவரும் பேசிய சத்தத்தில் லேசாய் விழித்தவள் எப்படி வெளியே செல்ல என்ற யோசனையுடன் தான் இருந்தாள்.
இப்பொழுது தோழிகள் வந்து எழுப்பியதும் சந்தோஷத்துடன் எழுந்து அவர்களை கட்டிக்கொண்டவள்,
“இவ்வளோ சீக்கிரம் வருவீங்கன்னு நினைக்கவே இல்லைடி…” என்ற உற்சாகத்தை தாண்டிய சோர்வு அவளின் முகத்தில் தெரிய சங்கவி குறும்பாய் சிரித்தாள்.
“என்னடி நைட் ஒரே ரொமான்ஸ் போல…” என்று வெளியே கேட்டுவிடாமல் ரகசியமாய் சொல்லியவளுக்கு பதில் சொல்லும் முன்னர் ரோஜாவிற்கு உமட்டிக்கொண்டு வர வேகமாய் எழுந்து பாத்ரூம் நோக்கி ஓடினாள்.