“ரோஜா என்னாச்சு?…” என்ற அவர்களின் பதட்டத்தில் விதுரன் உள்ளே செல்ல கயல்விழியும் அவனுடன் வேகமாய் என்னவோ என பதறிக்கொண்டு சென்றவர் கதவருகே நின்றுகொள்ள மற்றவர்களும் எழுந்து நின்றனர்.
வயிற்றில் இருந்தவற்றை மொத்தமாய் வாமிட் செய்து முடித்த பின்னர் முகத்தை கழுவிக்கொண்டு மெதுவாய் வந்து மீண்டும் படுக்கையில் அமர்ந்தவளிடம்,
“என்னாச்சு ரோஜா, ஏன் வாமிட் பன்ற?…” என விதுரன் வந்து அருகே அமர்ந்து கேட்டதும் ஸ்ரீயும், சங்கவியும் தள்ளி நின்றனர்.
“எல்லாம் உங்களால தான். நான் இப்ப வாமிட் பண்ண காரணமே நீங்கதான். ஏன் இப்டி பண்ணுனீங்க? வாமிட் பண்ணதுல தலை சுத்துது….” என்றவனுக்கு நெஞ்சே நின்றுவிட்டது.
மெதுவாய் திரும்பி கயல்விழி முகத்தை பார்க்க அவர் அதற்கு மேல் அதிர்ந்து நின்றார் “என்ன இதெல்லாம்?” என்பதை போல.
வெளியே மணிவாசகமும் சடகோபனும் ஒருவரை ஒருவர் பார்த்து பின் ஒரே சேர சக்தியை பார்க்க இருவரையும் கையெடுத்து கும்பிட்ட சக்தி,
“சத்தியமா தாங்கமாட்டேன் இதுக்கு மேல. எனக்கே இது ஷாக்ன்னு சொன்னா நீங்கலாம் நம்பனும் அங்கிள்ஸ். சத்தமா கூட உங்களை அங்கிள்ன்னு சொல்லவிடாம ஒருத்தன் வாயை கட்டிப்போட்டிருக்கான். இந்த கொடுமையை யார்க்கிட்ட சொல்லுவேன்?…” என மெல்லிய குரலில் கெஞ்சலாய் சொல்லிக்கொண்டிருக்க,
“ரோஜா என்ன பேசற? ஸார் என்ன கேட்கறாரு நீ என்ன சொல்ற?…” என ஸ்ரீ பல்லை கடிக்க ஸ்ரீயின் துப்பட்டாவை வாயில் வைத்து கடித்து சிரிப்பை அடக்கியபடி கயல்விழியை பார்த்தாள் சங்கவி.
“அதான் சொன்னேனே? எத்தனை கேள்வி கேட்கற? நிஜமாவே தான்….” என்று வேறு அடித்து பேச இனியும் அங்கே இருக்க முடியாமல் தன் ஹேண்ட்பேக்கில் இருந்த ரோஜாவின் மொபைலை நீட்டிய ஸ்ரீ,
“உடம்பை பார்த்துக்கோ. நாங்க இன்னொரு நாள் கால் பண்ணிட்டு வரோம். இப்ப வினியை பார்க்க போறோம்…” என்று சொல்லிவிட்டு போனை விதுரனின் கையில் கொடுத்துவிட்டு கிளம்பியவர்களுக்கு வழிவிட்டு கயல்விழி சற்று தள்ளி நின்றுகொள்ள அவர்கள் சென்றுவிட்டனர்.
“இப்ப சொல்லு, ஏன் வாமிட் பண்ணின?…” என விதுரன் அழாத குறையாக மனைவியிடம் கேட்க,
“நேத்து நைட் செம பசி. தலைவலி வேற. ஒரு காபி குடிக்கனும்னு எழுப்பினா எழுந்துக்கவே இல்லை. நானே போய் போட்டு குடிச்சேன். வ்வாக், காபி மாதிரியே இல்லை. அதான் பர்ஸ்ட் டைம் காபி போட்டிருக்கோம், வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னு சென்டிமென்ட் வேற. வேற வழி இல்லாம நாக்குல படாம குடிச்சுட்டேன். அது டயஜிஸ்ட் ஆகலை…”
கதை போல சொல்லி முடிக்கவும் கயல்விழி விட்ட பெருமூச்சில், “வேணும் நல்லா வேணும், இனி பதறிட்டே இருங்க. கதறிட்டே இருங்க, தங்கச்சி ரோஜான்னா கொக்கா.” என சக்தி குதூகலித்தான் மனதிற்குள்.
“இப்ப ஓகே தானே? பீலிங் பெட்டர்?…” என கேட்டவன் அவளின் முடியை ஒதுக்கிவிட்டு பார்க்க இன்னும் கழுத்துப்பக்கம் முடி காயாமல் ஈரத்துடன் இருக்க அதனை பார்த்த கயல்விழி மெதுவாய் வெளியே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்.
“என்ன இது தலைக்கு குளிச்சுட்டு அப்படியே தூங்கினியா நீ? பீவர்ல வச்சிருந்தா என்னவாகும்?…” என கேட்டவன்,
“ஓகே ப்ரேஷ் ஆகிட்டு வா. வெளில யார் வந்திருக்கான்னு பாரு. நீ தான் வந்து வாங்கன்னு கேட்கனும்…” என அவளின் கை பிடித்து எழுப்பியவன் அவளை மீண்டும் பாத்ரூமிற்கு கூட்டி செல்ல கதவு திறந்திருந்ததால் பேச்சுக்குரல் தெள்ள தெளிவாய் வெளியே கேட்டது.
கயல்விழிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மகனின் அணுகுமுறையும், ரோஜாவின் உரிமையும் அவரை இந்த திருமணத்தின் ஆணிவேரை ஆராய சொல்லியது. சக்தியை நிமிர்ந்து பார்க்க,
“அட்டென்ஷன்” என்பதை போல பதில் சொல்ல தயாரானான்.
“சக்தி, நீ எதுவும் என்கிட்டே மறைக்கலையே?…” என்றார் கறாரான குரலில்.
“இந்த உலகம் இன்னுமாடா என்னைய நம்புது. இல்லைன்னா நம்பவா போறீங்க? ஆனா அதுதான் நெசம்” என்று கவுன்ட்டர் கொடுத்தவன்,
“நோ, ஆன்ட்டி, நடந்ததை அப்படியே தான் உங்கக்கிட்ட சொன்னேன்? நான் எதையும் மறைக்கலை. என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? உங்க பேச்சை மீற மாட்டேன் ஆன்ட்டி…” என வரிசையாய் வசனம் பேச,
“ஆனா நீ உன் ப்ரெண்ட் பேச்சையும் மீற மாட்ட தானே? என்னை விட அவன் தான் உனக்கு முக்கியம்…” என்று கிடுக்கிப்பிடி போட சக்திக்கு எங்கே சென்று முட்டிக்கொள்ளலாம் என்பதை போல திணறலாய் பார்த்தான்.
“நீங்கள் தான் முக்கியம் என்றால் நண்பனை விட்டதை போல் ஆகிவிடும். நண்பன் தான் முக்கியம் என்றால் சிங்கத்தின் குகைக்குள் சில்லி பரோட்டாவாகும் அபாயம். என்ன பதில் சொல்ல?” என முழிக்க,
“சக்தி, கயல் கேட்கறப்போ பதில் சொல்லாம நின்னா என்ன அர்த்தம்? ம்ம்ம் சொல்லு…” என்று சடகோபன் வேறு எடுத்து கொடுக்க மனதிற்குள் டீச்சரை தொலைத்த வடிவேலுவை போல ஆஆவேன அலறி அழுது புரண்டவன்,
“எனக்கு ரெண்டு பேரும் ரெண்டு கண்ணுங்க மாதிரி ஆன்ட்டி…” என்று ஒரு வழியாய் சொல்லி முடிக்க,
“பாவம் உன் குடும்பமும், வர போற பொண்டாட்டியும்…” என சடகோபன் சொல்ல இப்பொழுது நேரடியாகவே முறைத்துவிட்டான் அவன்.
“என்ன சக்தி பார்வை முறைக்கிற மாதிரி இருக்கு?…” என்று வேறு கேட்டுவைக்க,
“உசுருக்கு உலை வைக்கிறதே இந்த மனுஷனுக்கு பொழைப்பா போச்சு” என புலம்பி,
“இல்லை அங்கிள், சும்மா தான் யோசனை…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே விதுரன் ரோஜாவுடன் வந்து விட்டான்.
உடை மாற்றி லேசாய் தலையை சீவி போனி டெய்ல் போட்டிருந்தாள். உடை நைட் பேண்டில் இருந்து சுடிதார்க்கு மாறி இருந்தது. வெளியே வந்ததும் பார்வையால் அவர்களை அளந்தவள் கயல்விழியை பார்த்து,
“இவங்கதான் உங்க வீட்டு ராஜமாதாவா? சிவகாமி தேவி…” என விதுரனிடம் கிசுகிசுக்க சோபாவில் அமர்ந்திருந்த கயல்விழிக்கு அது கேட்கவில்லை.
ஆனால் இவர்களுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த சடகோபனுக்கும், மணிவாசகத்திற்கும் நன்றாகவே கேட்டது. ஐயோவென இவர்கள் பயந்து பார்க்க விதுரனின் நிலை சொல்லவே வேண்டாம்.
“ரோஜா என்ன இது? அவங்க என் அம்மா கயல்விழி…” என்று ரகசியமாய் சொல்ல,
“அழகா இருக்காங்க. நான் சிவகாமி தேவிதான் பிக்ஸ் பண்ணிட்டேன்…” என ரோஜா சொல்ல இவள் நிறுத்தமாட்டாள் என்று விதுரனே பேச்சை மாற்ற,
“அம்மா, ரோஜா, என்னோட வொய்ப்…” என்று அறிமுகப்படுத்தி,
“ரோஜா, இது என்னோட அம்மா, இவங்க என் அப்பா, இவங்க என்னோட சித்தப்பா…” என சொல்ல அனைவருக்கும் கை கூப்பி அழகாய் சிரித்த முகத்துடன் அவள் வணக்கம் வைக்க அவர்களோ கயல்விழி அசைவை எதிர்பார்த்து அமைதியாக இருக்க விதுரனின் இடையை சுரண்டிய ரோஜா,
“அங்கிள் எல்லாரும் கோவமா இருக்காங்களா?…” என்று கேட்க இப்பொழுது சடகோபனுக்கு சிரிப்பு வந்தது.
இந்த அங்கிள் வார்த்தையால் மகன் என்னவெல்லாம் ஆட்டம் ஆடினான் என நினைத்து பார்த்து சிரித்தவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர,
“ரோஜா, என்ன இது எல்லார் முன்னாடியும் அங்கிள்ன்னு…” என்று அவளிடம் குனிந்து பேச கயல்விழி பார்வை மொத்தமும் மகனின் மீது தான்.
“அங்கிள்னா மாமா தானே? நேத்து நைட் நீங்க சொன்னீங்களே? அப்படி சொல்லி…” என்று வேறு கேட்க,
“ஐயோ வாயை மூடு…” என ஒரு வேகத்தில் அவளின் வாயை தனது கரங்களால் அடைக்க அனைவருக்குமே என்ன இது என்றானது.
அதிலும் கயல்விழி கண்களை விரித்து வேறு புறம் திரும்ப அவனின் பொத்திய கரங்களுக்குள் ரோஜா என்னவோ சொல்ல புரியாமல் மெதுவாய் கையை எடுத்தான் விதுரன்.
“அங்கிள் இப்பத்தான் எல்லாரும் பார்த்தாங்க. சிவகாமி தேவி கோவமாகிட்டாங்க….” என்று வேறு கூடுதல் தகவல் தர அசடு வழிந்தான் விதுரன்.
“அம்மா…” என கயல்விழியை பார்க்க அவர் சற்று நிதானித்துவிட்டு ரோஜாவை பார்த்து,
“யாரம்மா நீ?…” என்றார் தோரணையாக. ரோஜா விதுரனை திரும்பி பார்க்க அவனோ,
“பயப்படாம பேசு…” என்று வேறு சொல்ல,
“ஐயோ அங்கிள் சத்தியமா பயம் வரலை. நான் பேசறேன்…” என்றவளை பார்த்து அவன் வாயடைத்து நிற்க அவனை விடுத்து,
“ரோஜா…” என்றாள் மீண்டும் கயல்விழியை பார்த்து.
இந்த பொண்ணு என்ன பட்டுன்னு பயமில்லாம பார்க்குது, பேசுது என மணிவாசகம் பார்க்க கயல்விழிக்குமே அதே எண்ணம்.
“ரோஜான்னா?…” என வேண்டுமென்றே ஒரு அலட்சியத்துடன் நக்கலாய் கேட்டார். மகன் மீதான கோபத்தை மருமகளிடம் காட்டினார் கயல்விழி.
யாரையும் மதிக்காதவர் அல்ல. ஆனால் இப்பொழுது மகன் செய்து வைத்திருக்கும் வேலையால் அந்த கோபம், அதனோடு அவன் அதனை சொல்லி அவர்களை சாமாதானம் கூட செய்யவில்லை என்னும் ஆற்றாமை சேர்ந்து ரோஜாவிடம் பாய அவள் அதனை புன்னகையுடன் தான் பார்த்தாள்.
“ரோஜான்னா ரோஜா தான் ஆன்ட்டி. எனக்கும் குந்தல தேசத்து இளவரசின்னு சொல்லத்தான் ஆசை. ஆனா பாருங்க எங்கப்பா இந்தியா தாண்டலை. சொந்தமா ஒரு கைலாயம் கூட இல்லை. அதனால திருப்பூர் இளவரசின்னு சொல்லிக்கலாம்…” என்று பேசி அனைவருக்குமே தலையில் இடி தான் இறக்கினாள்.
“அதான ரோஜாட்டையா?” என்று சக்தி சந்தோஷப்படுவதற்குள் கயல்விழி சக்தியை முறைத்து பார்க்க,
“இந்தம்மா வேற கட்டிட்டு வந்த மகன் அங்க நிக்கிறான். சும்மா சும்மா நான் தான் கட்டி வச்சதாட்டம் என்னையே முறைக்கறாங்க” என்று பாவமாய் நின்றான். உடனே சூழ்நிலையை கையிலெடுத்த சடகோபன்,
“கயல், தலை வலிக்குது. ஒரு காபி போடேன்…” என்று சொல்லவும் கயல்விழி கோபத்தில் அப்படியே அமர்ந்திருந்தார். அதை பார்த்த ரோஜா,
“அங்கிள், இருங்க நான் போடறேன்…” என்று ரோஜா சொல்ல சற்று முன் சொல்லிய அவளின் காபி கதையில் ஏற்கனவே விழுந்து எழுந்திருந்தவர்களுக்கு மீண்டும் ஒரு ஹார்ட் அட்டாக் வந்தது போல் பயந்து,
“இல்லம்மா வேண்டாம். நான் சுகர் பேஷன்ட். அதனால உன் அத்தை தான் சரியா கலக்குவா எனக்கு…” என்று சத்தமில்லாமல் உன்னை ஏற்றுக்கொண்டேன் என்பதை போல சடகோபன் சொல்லிவிட்டார்.
“கலாய்க்கிறீங்க தான நீங்க? சுகர் பேஷன்ட்டுடா நானு அந்த மாதிரி?…” என்று சொல்லி சிரிக்க,
“ஹா ஹா ஹா இல்லம்மா, இல்ல. நிஜமாதான் சொல்றேன். நம்பு…” என்று அவரும் சேர்ந்து சிரிக்க மணிவாசகம் அண்ணியை பார்த்து அடக்கி வாசித்தார். மத்தபடி ரோஜாவை பிடித்தது அவருக்கும்.
“ஆனாலும் அங்கிளுக்கு தில்லுதான். பேச்சுவாக்குல மருமகளேன்னு சொல்லாதது தான் குறை.” சக்தி பார்க்க விதுரன் ரோஜாவை முறைத்தான்.
“என்ன அங்கிள்?…” என அவனின் முறைப்பை கண்டு கேட்க,
“நானும் அங்கிள், அவரும் அங்கிளா?…” என்று சண்டைக்கு வர,
“அவர் உங்கப்பான்னா எனக்கு அங்கிள் இல்லையா?…”
“ப்ச், மாமான்னு கூப்பிடு. இனி யாரையாச்சும் அங்கிள்ன்னு கூப்பிட்டு பாரு பேசிக்கறேன்…” என்று சொல்லவும் வாய் பொத்தி இவள் சிரிக்க அதை கண்டும் காணாமல் பார்த்த கயல்விழி எழுந்து காபி போட சென்றார்.
“உட்காரும்மா…” என மணிவாசகம் சொல்லவும் அவருக்கு ஒரு புன்னகையை தந்து ரோஜா டைனிங் டேபிள் சேரில் அமர சக்தி தொய்வுடன் அமர்ந்திருந்ததை பார்த்து என்னவென பார்வையால் கேட்க அவனோ ஒற்றை விரல் வாயில் வைத்து பேசாதே என்பதை போல சைகை செய்ய சரி சரி என்பதாக தலையை ஆட்டினாள்.
விதுரன் கயல்விழியுடன் கிட்சனிற்குள் செல்ல காபி போடுவதற்கு தேவையானதை ஒவ்வொன்றாய் எடுத்து நீட்டினான். அதை வாங்காமல் வேறு பாத்திரத்தை தேடி எடுத்தவர்,
“அமுக்கு டுமுக்கு அமால் டுமால்…” என்ற ரோஜாவின் போனின் சத்தத்தில் திடுக்கிட்டு அப்படியே கீழே போட்டவர் பதறி பார்க்க அனைவருக்குமே தூக்கி வாரிப்போட்டது அந்த ரிங்க்டோன்.
ரோஜா பதட்டமில்லாமல் எழுந்து யார் என பார்க்க செல்ல கயல்விழியின் கோபம் விதுரனிடம் திரும்பியது.
“நல்ல பொண்ணை கட்டிருக்க நீ?…” என்று ஆத்திரத்துடன் சொல்லியவரை எதை சொல்லி சமாளிக்கவென பார்த்த படி நின்றான் விதுரன்.
“அங்கிள் போன் உங்களுக்குத்தான். வினி…” என்று ரோஜாவும் சொல்லியபடி வர “விதுரன் அங்கிளா?” என கேட்ட கயல்விழியும், மணிவாசகமும் விதுரனை பார்வையால் துளைக்க ரோஜாவை பரிதாபமாய் பார்த்தான் அவன்.
அவன் இன்னும் சொல்லவேண்டிய அன்றைய ஐயோக்களின் எண்ணிக்கை முடிவில்லாத தொடர்கதையாக விதுரனை துரத்தியது.