“எங்கையோ தொலைஞ்சு போச்சு. கண்டுபிடிக்க முடியலை…” என்றவளின் குரலில் இருந்தது என்னவென ஆராய்ந்தவனால் கண்டுபிடிக்க முடியாமல் போக,
“ஆர் யூ ஓகே ரோஜா?…” என்றான் உடனே.
“பார்த்தா எப்படி தெரியுது?…” என கண்சிமிட்டி அவள் கேட்டாலும் அதில் குறைந்த ஒன்றை அவனால் அனுமானிக்க முடியவில்லை. அவளை போல இலகுவாகவும் முடியாமல் அவளை பார்த்தபடி நிற்க,
“விது…” என்ற அன்னையின் அழைப்பில் கலைந்தவன்,
“ஓகே தானே? புறப்படுவோமா?…” என்றதும் சரி என தலையசைத்து ரோஜாவிற்கும் தனக்குமான உடைகளை மற்ற இத்தியாதிகளை நிரப்பிய ட்ராலியுடன் வெளியே வந்தான்.
“கீ குடுத்துட்டு வரனுமா? கிளீன் பண்ண வருவாங்க இல்லையா?…” என கேட்க,
“அவங்கட்ட ஒரு ஸ்பேர் கீ இருக்கு. கால் பண்ணி சொன்னா வந்து க்ளீன் பண்ணிட்டு போவாங்க. அடுத்து நான் வரப்போ சொன்னா போதும்…” என்று கூடுதல் தகவலாய் சொல்ல கயல்விழிக்கு தெரிந்தாலும் ஞாபகமின்றி மீண்டும் கேட்டார்.
அவரை பார்த்ததுமே புரிந்தது பல டென்ஷனில் இருக்கிறார் என்று. அதனால் விதுரன் பதில் சொன்னான். வேறு நேரமென்றால் தெரியும் தானே என்றிருப்பான். இப்பொழுதோ அவனுக்கு கேட்கவும் தோன்றவில்லை.
மனைவி ஒருபுறம் எதையோ நினைத்து மருக தாய் இன்னொருபுறம் எதற்கோ தவிக்க இடையில் இவன் அல்லாடினான்.
பெரியவீடு இருப்பதும் சென்னை தான். ஆனாலும் செல்ல இரண்டுமணி நேரம் பிடித்தது அந்த போக்குவரத்து நெரிசலில்.
போகும் வழியில் ஒரு சாலையோர பூக்கடையில் மல்லிகை பூவை வாங்கி வர சொல்லிய கயல்விழி மகனிடம் கொடுத்து ரோஜாவை வைத்துக்கொள்ள சொல்ல மறுக்காமல் வாங்கி சூடிக்கொண்டாள்.
“ஹ்ம்ம் பெர்பெக்ஷன்” என மெச்சியபடி இருந்தான் சக்தி.
“அப்ப கூட ஞானோதையம் இல்லை…” என கெக்கேபிக்கேவென சிரிக்க “ஐயோ” என மானசீகமாய் தலையிலட்டித்துக்கொண்டவன் பின்,
“அதையே சொன்னா எப்படி? சக்திக்குன்னு புதுசா வேணாமா? அதான். இனி ட்ரெண்டுக்கு வாங்க அங்கிள்…” என சொல்லி அவரை பார்த்து சிரிக்க,
“டேய் டேய் நீ யாருன்னு தெரியும்டா…” என்று சிரிக்க வீடு வந்து விட்டது.
பார்த்த ரோஜாவிற்கு திக்கென்று ஆனது. மிரள மிரள விழித்தபடி அவள் கீழே இறங்க வீட்டை பார்த்து பயப்படுகிறாளோ என நினைத்தவன்,
“பயப்படாத நான் இருக்கேன்ல…” என்று கையை பிடிக்க,
“அட நீங்க வேற, இந்த வீட்ல ஒரு டாக் இருக்கும் தானே?…” என கேட்க,
“ஒன்னு இல்லை, மூணு இருக்கு. ஏன்?…”
“மூணா? ஒன்னுக்கே அவ்வளோ தூரம் ஓடினோம், மூணும்னா…” என்று மலைப்புடன் பார்த்தவள் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்த அங்கே அவளின் தோள் உயரத்திற்கு ஒரு நாயும் அதன் பாதியளவில் இரண்டு நாய்களும் மின்னல் வேகத்தில் பாய்ச்சலுடன் ஒடி வர,
“மம்மீஈஈஈஈஈஈ…” என வேகமாய் சென்று தனக்கு முன்னால் இருந்த கயல்விழியை இறுக்கமாய் கட்டிக்கொண்டவள்,
“சத்தியமா ஓட தெம்பில்லை. கேட் எகிறி குதிச்சு ஓடவே முடியாது. காப்பாத்துங்க ராஜமாதா…” என்று கண்ணை மூடிக்கொண்டு அவள் அலற கயல்விழி இதை எதிர்பார்க்கவே இல்லை.
“ரோஜா, ரோஜா இங்க பாரு. ஒண்ணுமில்லை. நம்ம வீட்டு பிள்ளைங்க தான். ரோஜா, பயப்படாதே…” என்று அவளின் நடுங்கும் உடலை தடவியபடி ஆறுதலாய் சொல்ல,
“கடிக்கும்…” என்றாள் இன்னும் கண்களை திறவாமல்.
“ஹா ஹா ஹா, எதுவும் ஒன்னும் பண்ணாது. நான் இருக்கேனில்ல. என்னை பாரு…” என்று அவளின் கை பிடித்து தன்னருகே நிறுத்தியவர் தனது வளர்ப்பு பிராணிகளை பார்த்து புன்னகைத்து தலை அசைத்ததும் ஓடிவிட்டன. ரோஜா மெதுவாய் கண் திறந்து பார்த்தாள்.
“விது பார்த்துக்கோ, கை பிடிச்சு உள்ள கூட்டிட்டு வா…” என்று புன்னகையுடன் சொல்லி கயல்விழி நகர்ந்து செல்ல,
“ரோஜா நீ ஏற்கனவே வந்திருக்கியா இங்க…” என கேட்க,
“ஹ்ம்ம் நானும் சங்கும் ஒருதடவை இந்த ஸ்ட்ரீட் டெட் என்ட்ல ஒரு புது வீட்டுக்கு இண்டீரியர்க்கு வந்தோம். வெளில நடந்து வந்திட்டிருக்கும் போது அந்த குட்டியா வெள்ளையா இருக்குல அது தலையை மட்டும் நீட்டிட்டு இருந்துச்சு…”
“பார்க்க அழகா இருக்கேன்னு பக்கத்துல போய் கன்னத்தை பிடிக்க முன்ன காதை பிடிச்சு இழுத்துட்டேன். குட்டியா இருக்குன்னு நினைச்சா அது குட்டி இல்லை. என்ன நினைச்சுச்சோ ஒரே வேகத்துல பாஞ்சு வெளில வந்துருச்சு. எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம். சங்கு சைடு வாங்கினது கூட தெரியாம ஓடினேன்….”
“ஹ்ம்ம் அப்புறம்?…” என்று சிரிப்புடன் அவன் கேட்க,
“அதுவே என்னை பார்த்து கன்ப்யூஸ் ஆகி டயர்ட்ல வீட்டுக்கு திரும்பிருச்சு போல. இன்னைக்கு தான் நாங்க திரும்ப மீட் பன்றோம்…” என்று சொல்ல,
“நாய் துரத்துச்சா? மகா மட்டமான ப்ளாஷ்பேக்கா இருக்கே தங்கச்சி…” சக்தி சொல்லவும் திரும்பி பார்த்து அவள் முறைத்ததில்.
“முக்கியமான வேலை. நான் வரேன்…” என சொல்லி வீட்டுக்குள் செல்ல அப்போது தான் திரும்பி பார்த்தாள் அங்கிருந்த கும்பலை.
“ஐயோ இத்தனை பேரா?…” என பார்த்தவளுக்கு தலைசுற்றியது.
அதற்குள் அவளை நெருங்கிய சொந்தங்கள் இருவருக்கும் ஆலம் சுற்றி பொட்டு வைத்து வரவேற்க புன்னகையுடன் அவர்களை பார்த்தவன்,
“என்னோட வொய்ப் ரோஜா…” என்று மொத்தமாய் அனைவருக்கும் சேர்த்து சொல்ல,
“நெத்தியில பச்சை ஒண்ணுதான் குத்தலை. மத்த எல்லாத்தையும் பண்ணிட்டான்…” என்று யாருக்கோ சொல்வதை போல சக்தி சத்தமாய் சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டான்.
“ஓகே கூட்டிட்டு வா, உள்ள வச்சு பேசிக்கலாம்…” என்று அவனின் சித்தி சொல்லி செல்ல மற்றவர்களும் கலைந்தனர்.
“இத்தனை பேரா?…” என கேட்டவளின் கேள்வியை கிடப்பில் போட்டவன்,
“என்னை விட்டுட்டு அம்மாவ கட்டிப்பிடிக்கற? நான் உன் பக்கத்துல தான நின்னேன்?…” என்று கேட்க,
“அத்தனை பேர் முன்னால உங்கள கட்டி பிடிச்சுட கூடாதுன்னு தான் மஹா கணம் பொருந்திய சிவகாமி தேவியை கட்டிப்பிடிச்சேன். போதுமா?…” என்று குறும்புடன் சொல்லியவளை அவனின் தங்கைகள் உள்ளே அழைத்து சென்றனர்.
ரோஜா சொல்லி சென்றதும் “வட போச்சே” என்னும் பாவனை விதுரன் முகத்தில் வந்துவிட்டிருந்தது. என்ன முயன்றும் வாங்கிய மொக்கையை மறைக்க முடியவில்லை அவனால்.
அதன் பின்னரும் குடும்பத்தினருடன் இருந்த ரோஜாவையே பார்வையால் தொடர்ந்து கொண்டே இருந்தான்.
“நீ இவ்வளோ ப்ளாட்டா விதுண்ணா? காப்பாத்த கல்யாணம் செஞ்ச மாதிரி தெரியலையே?…” என அவனின் தங்கை ஒரு பெண் கிண்டல் பேச வெட்கத்துடன் புன்னகைத்தான் அவன்.
உள்ளே நுழைந்ததும் அவனின் சித்திகள் ரோஜாவை அழைத்து சென்று விளக்கேற்ற வைத்து அழைத்து வந்து சபையில் அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க அத்தனை பேருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வெகுவாய் திணறினாள் ரோஜா.
“சத்தியமா இத்தனை பேரை நான் நினைச்சே பார்க்கலை. நீங்க பெரியவீடு, பெரியவீடுன்னு சொல்லும் போது பெர்ர்ர்ரிய்ய்ய வீடுன்னு தான் நினைச்சேன். நிஜமாவே பெரிய்ய்யய்ய்ய்ய வீடே தான்….” என மலைப்பாய் சொல்ல வாய்விட்டு சிரித்தவன்,
“இங்க எல்லாருமே ஏதாவது விசேஷம்னா ஒண்ணாகிடுவோம். மத்தபடி எல்லாருமே இங்க இருக்கமாட்டாங்க. நம்ம வீட்டுக்கு வந்தாரே மணி சித்தப்பா, அவரும் அப்பாம்மாவும் மட்டும் தான் இங்க இருக்காங்க. கூடவே சித்தப்பா பொண்ணுங்க ரெண்டு பேர்…”
“எல்லாருமே நல்லா பேசறாங்க…” என்று சிரிக்க,
“அப்படியா?…” என்றவனின் வார்த்தையில் பொதிந்திருந்த அர்த்தத்தில் மீண்டும் அனைவரையும் பார்க்க அதில் சிலரின் முகத்தில் வாட்டம் இருந்தது. கோபமோ வெறுப்போ அன்றி ஏதோ விருப்பமின்மை தெரிய,
“ரோஜா, போக போக சரியாகிடும்…” என்று அவளின் கையை பிடித்து அழுத்தம் கொடுக்க புன்னகையுடன் தன்னிடம் பேசியவர்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.
அதிலும் இளைஞர் பட்டாளம் கேட்கவே வேண்டாம். எப்போது எப்படி அண்ணன் வந்தான் பேசினான் என ரோஜாவை கேள்விகளால் துளைக்க சற்று ஒதுக்கமாய் அமர்ந்துகொண்டனர் பெரியவர்கள்.
முதலில் அதனை பேசவும் வேண்டுமா என யோசனையுடன் பிடிக்காமல் தயக்கமாய் சொல்லியவள் அதன் பின் சளைக்காமல் திருமணம் நடந்த விதத்தை சொல்ல சொல்ல விதுரனின் பேச்சை, செயலை என சில்லாகிக்க ஆரம்பிக்கவும் ரோஜாவும் குஷியாகிவிட்டாள்.
“நான் கேட்கவே இல்லை, வேலையாய் இருந்தேன், திரும்ப சொல்” என வந்து கேட்டாலும் அவர்களுக்கும் பதில் சொல்ல ஒவ்வொரு முறையும் விதுரன் தனக்காக பேசியதை ரசித்து அனுபவித்து சொல்ல சொல்ல அதை பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்த விதுரனுக்கு தானா என்பதை போல ஆச்சர்யம் அலையாய் எழுந்தது.
இப்பொழுது கயல்விழி வீட்டின் பெரியவர்களை தனியாய் அழைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தவர் அதனை சொல்ல வெளியே வந்தார்.
அவர் வந்ததும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் மெதுவாய் பேச்சுக்களை குறைத்து கயல்விழியை பார்க்க அவர் விதுரன் ரோஜாவை பார்த்தார்.