“அதுக்கென்ன அக்கா கிளம்பிடலாம்…” என்று கயல்விழியின் தங்கை முறை உறவுப்பெண் சொல்ல,
“ரிசப்ஷன் மாதிரி வைக்கலாமா?…” என மணிவாசகத்தின் தம்பி திருவேலன் கேட்க,
“இல்லை, அங்க நம்ம சொந்தங்களுக்கு கறிவிருந்து மட்டும் வச்சு கோவில்ல பூஜைக்கு சொல்லிடுவோம். ரிசப்ஷன் இங்க வந்து வச்சுப்போம். அதுக்கான நாளையும் பேசி முடிவு செஞ்சிடலாம்…” என்றவரின் பேச்சிற்கு அங்கே எதிர்பேச்சில்லை.
அனைத்தையும் ஆச்சர்யமாய் ஆவென பார்த்தபடி ரோஜா நின்றாள். அவளுக்கு இதெல்லாம் புதிது. தனது வீட்டிலும் தாயின் ஆதிக்கம் சமபங்கு இருக்கும் தான்.
ஆனால் இந்த ஆளுமை இருந்ததில்லை. தன் வீட்டில் மட்டுமல்ல தன்னை சேர்ந்த உறவுகளின் வீட்டில் கூட. இங்கானால் கயல்விழியின் பேச்சும் அதனை அப்படியே ஏற்று நடக்கும் உறவுகளும் மனதிற்குள் அற்புதமாய் உணர்ந்தாள்.
ஒரு ராணியின் கம்பீரமும் நிமிர்வும் கயல்விழியின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவதை உள்வாங்கிக்கொண்டாள். ஒன்று மட்டும் புரிந்தது. இந்த குடும்பத்தின் ஆணிவேர் கயல்விழி என்பது.
அவரை கொண்டாடும் குடும்பம். தானும் இன்று அதில் ஒருத்தி. நினைக்கவே மனதிற்குள் ஒரு இதுவரை உணராத நெகிழ்வு. அமைதியாய் அவரை பார்த்துக்கொண்டே நிற்க,
“ரோஜாவுக்கு இந்த வீட்டு சுற்றி காண்பிங்க முதல்ல. நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்கட்டும்….” என்று மிதப்பாய் அவர் சொல்லி சென்றதும் அத்தனை நேரமிருந்த ஒரு பிம்பம் லேசாய் விரிசல் விடுவதை போல தோன்றியது ரோஜாவிற்கு.
இனிப்பின் ஊடே தட்டுப்படும் சிறு கசப்பை போலே என நினைத்துக்கொண்டவள் வழக்கம் போல சிறு தோள் குலுக்களில் அதை சட்டென்று புறம் தள்ளியவள் விதுரனை தேட அவன் தன் சித்தப்பாக்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“நீங்க வாங்க அண்ணி…” என விதுரனின் சின்ன சித்தப்பாவின் மகள் அவளை அழைத்து செல்ல உடன் இன்னும் சிலர்.
பேசிக்கொண்டே வீட்டை சுற்றி வர வீட்டின் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கதை சொல்லினர். அதில் கயல்விழியின் பங்கு தான் அதிகம். தன் மாமியார் இந்த குடும்பத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களில் முதலானவர் என ஒவ்வொரு கதையிலும் உணர்ந்தாள்.
சுற்றி முடித்து மீண்டும் கீழே வரவும் ஆண்கள் அனைவரும் உணவு உண்டு கொண்டிருந்தனர். விதுரன் உட்பட.
“என்ன பெரியம்மா இது? முதல்முறையா நம்ம வீட்டுக்கு அண்ணி வந்திருக்காங்க. சேர்ந்து தானே சாப்பிட வைக்கனும்? நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா பரிமாற?…” என துடுக்காய் ஒரு பெண் பிள்ளை கேட்கவும்,
“ஹர்ஷி…” என்று அதட்டினார் வேலன்.
கயல்விழி எதுவும் பேசவில்லை. ஆனால் அவரின் முகத்தில் இருந்த பிடித்தமின்மை அப்பட்டமாய் தெரிந்ததில் மற்றவர்கள் பேசினார்கள்.
“ஸாரிப்பா…” என்று சட்டென வாயை மூடிக்கொண்டாள் ஹர்ஷினி.
“ஹர்ஷ், நான் உன்னோடவே சாப்பிடறேன். இனி லைப்லாங் உன் அண்ணாவோட தான சாப்பிடுவேன். அதனால இன்னைக்கு ஒரு நாள் சேர்ந்து சாப்பிடாம போனா ஒன்னும் ஆகிடாது…” என அவளை சமாதானம் செய்தாள் ரோஜா. அந்த பேச்சை விரும்பாத கயல்விழி,
“முதல்ல சாப்பிட்டு முடிங்க. ஊர்ல பூஜை இருக்கறதால எல்லோருக்கும் புது துணி எடுக்கனும். விது கல்யாணத்துக்கே எடுக்க வேண்டியது. அதுக்கு நமக்கு வாய்ப்பில்லை. அதனால இதுக்கு எடுக்கனும். கொஞ்சம் நேரத்தில் வந்திருவாங்க கடையில் இருந்து…”
“இதோ இப்போ சாப்பிட்டு முடிச்சுடலாம் அண்ணி…” என சடகோபனின் தங்கை சொல்ல,
“ஹ்ம்ம், வரப்பவே ரெண்டு டெய்லர்ஸ் வருவாங்க. ஸ்டிச் பண்ணிருங்க. இல்லைனா அங்க போய் பண்ண முடியாது…” என்றும் சொல்ல ஆண்கள் உண்டு எழுந்தனர்.
அதன் பின் பெண்கள் அனைவரும் கயல்விழி அமர்ந்த பின்னரே அமர அவர் சொல்லியதற்காக வேகமாய் உண்ண ரோஜா நிதானமாய் உண்டாள்.
“அண்ணி வேகமா சாப்பிடுங்க…” என்று இன்னொரு தங்கை புவனா சொல்ல,
“எனக்கு எப்பவுமே மெதுவா சாப்பிட்டு தான் பழக்கம். சீக்கிரம்னா எப்படி?…” என்றதும் அவளை பார்த்த கயல்விழி,
“பேசாம சாப்பிடுங்க. சாப்பிடறப்போ பேசக்கூடாது. தெரியும் தானே?. பேசாம சாப்பிட்டா சீக்கிரம் சாப்பிடலாம்…” என்று சொல்ல,
“நீங்க அவுட், இப்ப நீங்களும் பேசிட்டீங்க தானே?…” என சொல்லி ரோஜா சிரிக்கவும் கயல்விழி திகைக்க மற்றவர்கள் திடுக்கிட்டனர். அதை பார்த்த ரோஜா,
“எதுக்கு இவ்வளவு ஷாக்? நான் பேசினதுக்கா? இல்லை அத்தையோட விளையாட்டா பேசினதுக்கா?…” என்று கேட்டு கேலி போல சிரிக்க அவள் புரியாமல் பேசுகிறாள் என்று மற்றவர்கள் நினைக்க கயல்விழிக்கு அப்படி தெரியவில்லை.
“போதும் சாப்பிடும்மா…” என்றார் கயல்விழி. சாப்பிட்டு முடித்து அவர் எழுந்து செல்ல அவரின் பின்னே கை கழுவ எழுந்த மூன்று பேர் மெதுவாய் பேசிக்கொண்டே சென்றனர்.
“என்ன இருந்தாலும் மருமகன்னு வரப்ப சலுகை தான் அக்காவுக்கு…” என்று ஒரு மருமகள் கிசுகிசுக்க,
“பின்ன சும்மாவா? ஒரே மகனோட ஒரே மருமக. இந்த வீட்டோட மூத்த மருமக. அடுத்த கயல்விழியா ட்ரெயின் பண்ணனும் தானே?…” என்று இன்னொரு நாத்தனார் ஒத்து பாட,
“ஆனா பொண்ணை பார்த்தா விளையாட்டு பொண்ணா வெகுளியா தெரியறா. கெத்து காமிக்க மாட்டா. சின்ன பொண்ணு. நல்லவிதமா பேசறா. அண்ணியவே அவுட்ன்னு சொன்னதை பார்த்த தானே? ஜாலி டைப் போல?…” என்று சொல்ல,
“சரி சரி, போதும். யாராச்சும் கேட்டுட போறாங்க…” என்று நாத்தனார் சொல்ல,
“ரோஜா நாங்க சும்மா விளையாட்டுக்கு…” என அவர்கள் சொல்ல,
“நல்லா இருக்கே சித்தி இப்படி விளையாட்டுக்கு பேசறது கூட…” என்றவள் கையை கட்டி அவர்களை பார்த்தவள்,
“டென்ஷனாகிட்டீங்களா?…” என கேட்டு வேண்டுமென்றே டென்ஷன் படுத்தியவள்,
“ப்ச், சொல்லமாட்டேன் யார்க்கிட்டயும். என்ஜாய். பேமிலில இப்படி கூட பேசலைனா எப்படி பொழுது போகும்? சும்மாவாச்சு பேசி மனசை ஆத்திக்கலாம். நீங்க பேசுங்க. ஆனா எனக்கு கேட்க ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா இருந்துச்சு. இன்னொருக்க பேசறப்போ என்னையும் கூப்பிடுங்க சரியா?…” என்று கண்ணடித்துவிட்டு தன் கையை கழுவி செல்ல,
“இவ என்ன சொல்றா? பேசுன்னு சொல்றாளா இல்லை எனக்கு தெரியம பேசாதீங்கன்னு சொல்லிட்டு போறாளா?…” என்று ஒருவர் குழம்ப,
“எதுவோ ஒன்னு, இப்ப எதுவும் சொல்லமாட்டா போல. அது போதும். வந்தன்னைக்கே நம்மளை ஒரு ஆட்டு ஆட்டிட்டா. நாம ஜாக்கிரதையா இருக்கனும். பேசறப்போ கவனிக்காம பேசினது நம்ம தப்பு…” என்று சொல்லி மூவரும் கையை கழுவிவிட்டு திரும்ப மீண்டும் ரோஜா.
“இந்த கூட்டணில நீங்க மூணுபேர் மட்டும் தானா?…” என கேட்க,
“ஏன் கேட்கற?…”
“அத்தை தான் கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாங்க?…” என்றாள் சிரிக்காமல் முகத்தை தீவிரமாய் வைத்துக்கொண்டு.
“என்ன என்னது? அண்ணிட்ட சொல்லிட்டியா? ஏன்மா இப்படி செஞ்ச? நாங்க மூணுபேர் மட்டும் தான். சில நேரம் ஆத்தமாட்டாம எதையாவது பேசி மனசை ஆறுதல் படுத்திக்குவோம். அவ்வளவு தான். வேற எதுவும் பேச மாட்டோம். அண்ணிக்கு தெரிஞ்சா அவ்வளோ தான். ஐயோ இப்ப கேட்டாங்கனா என்ன சொல்ல?..” என்று வாக்குமூலம் போல சொல்ல,
“ஆமா ரோஜா, எப்போவாவது சின்ன அக்காவும் வருவாங்க. அவங்களுக்கு தான் அக்காவை புடிக்காது. இன்னைக்கு கூட வரலை. நாங்க பேசுவோம் தான். மத்தபடி அக்காவை பிடிக்காம இல்லை…” என்று சொல்ல,
“குட், உண்மையை சொன்னதுக்கு. ஆனா பயப்பட வேண்டாம். நான் இன்னும் அத்தைட்ட சொல்லவே இல்லை….” என்று சொல்ல,
“என்னது? பின்ன ஏன் நீ?…”
“அதுவா? அத்தை தானே குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்க சொன்னாங்க. நல்லாவே இப்போ தெரிஞ்சுட்டேன்…” என்று சிரித்தவள் அவர்களின் முகத்தில் இருந்த பீதியில் இன்னும் வாய்விட்டு சிரித்தவள்,
“ஓகே அத்தைட்ட சொல்லாம இருக்கனும்னா ஒரு கண்டிஷன்…”
“என்ன சொல்லு, சொல்லு. இப்ப நீ நம்ம வீட்டு பொண்ணுடா…” என்று மூவருமாய் அவளை குளிர வைக்க பார்க்க,
“பெருசா ஒண்ணுமில்லை. உங்க கூட்டணில நானும் ஜாயின் பண்ணிக்கறேன். சேர்த்துப்பீங்களா?…” என்று கை நீட்ட,
“சொல்லனுமா நீ?…” என்று பயம் அகன்று அவளை அணைத்துக்கொள்ள நால்வரிடையே ஒரு புது உறவு உருவானது.
அதிலும் கயல்விழியின் நாத்தனார் சரஸ்வதி ரோஜா வந்ததில் இருந்தே முறைப்புடன் இருக்க அவரையும் கவிழ்த்தாள் ரோஜா.
“ஓகே, நெக்ஸ்ட் மீட்டிங் அப்போ சொல்லுங்க. கதை கேட்க எனக்கு ரொம்ப புடிக்கும்…” என்று வேறு கூடுதல் தகவல் தந்து வெளியேற,
“பரவாயில்லை, பொண்ணு புத்திசாலி தான். நம்மோட ஜோடி போட்டுக்கிச்சு. ஆனாலும் அடக்கி வாசிக்கனும்…” என்று சொல்லி தலையாட்டிக்கொள்ள மூவருக்கும் சந்தோஷமானது. அப்போதிலிருந்தே குடும்ப அரசியலை சுவாரஸியத்துடன் பார்க்க ஆரம்பித்தாள் ரோஜா.
சற்று நேரத்திற்கெல்லாம் ஜவுளிக்கடையில் இருந்து புது துணிமணிகள் வந்திருக்க விதுரனை அழைத்த கயல்விழி ரோஜாவிற்கான புடவைகளை தேர்ந்தெடுக்க சொல்ல,
“சேரிஸ் பத்தி எனக்கு என்னம்மா தெரியும்?..” என்றவனை கண்டனப்பார்வை பார்த்தவர்,
“உனக்கு தெரியலைனாலும் தெரிஞ்சுக்க. அவ கூட சேர்ந்து ஹெல்ப் பண்ணு. பாரு சும்மா பார்த்துட்டு யாருக்கோன்ற மாதிரி உட்கார்ந்திருக்கா…” என்று ரோஜாவை காட்ட அவளும் அப்படித்தான் இருந்தாள்.
“ஹ்ம்ம், நான் பார்த்துக்கறேன்…” என்று அவனும் அவளருகே வந்தமர அவனை பார்த்தவள்,
“நீங்க புடவை எல்லாம் கட்டுவீங்களா ஹேண்ட்சம்?…” என கிண்டலாய் கேட்க,
“எல்லாம் நேரம், உனக்கு எடுக்கத்தான் வந்தேன். நீ என்னையே கலாய்க்கிற…” என சொல்லி முறைக்க,
“ஓகே நீங்களே எடுங்க…” என்றாள் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து.
“ஏன் உனக்கு புடிச்சதை நீ எடுத்துக்கோவேன். இல்லைனா என்கிட்டே சொல்லு. நான் பார்க்கறேன்…”