“அதான் பாருங்கன்னு சொன்னேன். உண்மையை சொல்லனும்னா எனக்கு புடவை எடுக்க தெரியாது. இதுல துணியோட குவாலிட்டி எல்லாம் பார்ப்பாங்களாமே? ம்ஹூம், சுத்தமா தெரியாது. ட்ரெஸ் சொல்லுங்க நல்லாவே செலெக்ட் பண்ணுவேன்…” என்றவளை பார்த்தவனுக்கு அவளின் உடைகள் என்னவென்று மனதிற்குள் தேடினான்.
அதிகமாய் அவளை பார்த்தது ஒரு லாங்க் குர்தி, ஜீன்ஸில் தான் கண்டிருக்கிறான். இருமுறை சுடிதாரில். முதல்முறை ஒரு க்ராண்டான ட்ரெஸ்ஸில் என்று அவளை கண்ட நாளிலிருந்து என்னென்ன உடைகள் போட்டிருந்தாள் என்று யோசிக்க மனக்கண்ணில் வரிசைகட்டி அவளுருவம் இதயம் நிறைக்க,
“ஹலோ, ஹேண்ட்சம்…” என்றவளின் குரலில் கூட அவன் கலையாமல் இருக்க மெதுவாய் புடவையை காண்பித்து எதுவோ சொல்லுவதை போல அவனின் காதருகே குனிந்தவள்,
“சித்தி, அத்தை, சிஸ்டர்ஸ், சிஸ்டர்-இன்-லாஸ், ரோஜாவுக்கு சேரிஸ் செலெக்ட் பண்ண முடியலையாம், அதனால எல்லாரும் அவளுக்கு பொருத்தமா இருக்கற சேரியை செலெக்ட் பண்ணுங்க பார்ப்போம். இந்த வீட்டு முதல் மருமகளோட முதல் விருப்பம். பார்த்து செய்ங்க…” என சொல்லியவன் நக்கலாய் அவளை பார்த்து பழிப்புக்காட்டி சிரிக்க,
“அடப்பாவி அங்கிள், பார்த்து பார்த்து செஞ்சிட்டானே…” என தன்னை பார்த்த கூட்டத்தினை கண்டு கண்களை விரிக்க அவரவர் இடத்திலிருந்து எழுந்து மொத்தமாய் ரோஜாவின் அருகே வர,
“அவர்கள் என்னை நோக்கி வருகிறார்கள், ஆனால் தாழ்வான பகுதிக்கு ஓட முடியலையே ரோஜா” என கண்களை மூடியது தான் தெரியும்.
ஆளாளுக்கு இது நன்றாக இருக்கும், அது நன்றாக இருக்கும் என அவள் மீது புடவைகளை அள்ளி போட்டு ஒரு வழியாக்கி கொண்டு இருந்தனர்.
அதில் சற்று மிரண்டாலும் ரோஜாவிற்கு பிடித்துதான் இருந்தது அவர்களின் உரிமையும், அண்மையும். பதில் சொல்லத்தான் முடியாமல் படாதபாடுபட்டாள்.
இதையெல்லாம் பார்த்தபடி ஆண்கள் ஒதுங்கி இருக்க விதுரன் அருகே வந்த கயல்விழி,
“இப்படி மாட்டி விட்டுட்ட அவளை. உனக்கு ரொம்ப விளையாட்டு விது. பாவம் திணறுறா பாரு…” என்று மருமகளுக்கு பாவம் பார்க்க,
“ரொம்ப ரொம்ப ஹேப்பிம்மா. இப்பதான் லைஃப் கம்ப்ளீட் ஆனா மாதிரி ஒரு பீல். இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…” என சொல்ல,
“கேள்வி கேட்டது நான். பதில் அங்க பார்த்துட்டா? போ போய் முதல்ல அவளை பாரு…” என்று சொல்லியவர் சொந்தங்களை பார்த்து,
“உங்க ட்ரெஸ் எல்லாம் ஸ்டிச் பண்ண குடுங்க. அங்க வெய்ட் பன்றாங்கள்ள…” என்று கயல்விழி சொல்லியதும் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து செல்ல அப்பாடா என்று நிம்மதியானாள் ரோஜா.
“இப்ப நான் பார்க்கட்டுமா?…” என விதுரன் சிரிப்பை அடக்கியபடி வர,
“பார்த்தவரைக்கும் போதும். எதுக்கு இத்தனை புடவை. எனக்கு கட்டவே வராது. எடுத்து வேஸ்ட் தான் ஆகும்…” என்று ரோஜா சலிக்க,
“நீ எடுக்கனும்னு அம்மா சொல்லியிருக்காங்க. நம்ம நேட்டிவ் போறப்போ அங்க நீ புடவை தான் கட்டனும்…” என அசராமல் குண்டை தூக்கி போட ஒரு கணம் பதறியவள்,
“எனக்கொன்னுமில்லை, என்னை தூக்கிட்டு நீங்கதான் சுத்தனும்…”
“வித் ப்ளஷர் லிட்டில் டெவில்…” என்றான் கண்கள் மின்ன.
“லாக் பண்ணுவேன்னு தெரியும் தானே? அப்ப லாக் ஆக ரெடியா இருங்க…” என்று கண்ணடித்து சொல்ல அவளை பார்த்து புன்னகைத்தான் விதுரன்.
ஒருவழியாக புடவையை எடுத்து முடித்து அளவுகளை கொடுத்துவிட்டு மற்றவர்களுடன் கலந்து கொண்டாள் பேச்சில்.
என்னதான் ரோஜா கயல்விழியுடன் இரண்டொரு வார்த்தை பேசினாலும் அவரோ பட்டென்று ஒற்றை வார்த்தை பதிலில் கத்தரிப்பதை போலவே பேசினார். அவரின் குணமோ, குணாதிசயமோ. ஆனால் ரோஜாவிற்கு அது சுவைக்கவில்லை. அதிலும் மற்றவர்கள் முன்னில் எனும் பொழுது இன்னுமே என்ன இது என்று நினைத்தாள்.
இரவு உணவு முடிந்து அனைவரும் அவரவர் அறைக்குள் செல்ல ஹர்ஷினியுடன் பேசிக்கொண்டிருந்த ரோஜாவை உறங்க அழைத்தான் விதுரன்.
“இப்போவேவா?…” என நேரத்தை பார்க்க அது ஒன்பதாக பத்துநிமிடம் இருப்பதாய் காண்பிக்க,
“பார்ரா தூக்கம் கூட இந்த வீட்ல உங்க பெரியம்மா பேச்சை கேட்கும் போல…” என்று கிண்டலுடன் ரோஜா சொல்ல அவளின் வாயை தான் கைகளால் பொத்திய விதுரன்,
“ஹர்ஷி நீ போ. நான் கூட்டிட்டு போறேன் இவளை…” என்று சொல்லி தங்கையை அனுப்ப சிரித்தபடி இருவரையும் பார்த்து தலையசைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
“யார்க்கிட்ட என்ன பேசனும்னே தெரியாதா ரோஜா?…” என விதுரன் பேச,
“ரூம் எங்க?…” என அவனின் கைகளை எடுத்துவிட்டு கேட்க,
“வா…” என்று கைபிடித்து அழைத்து சென்றவன் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியபடி,
“இதுவரைக்கும் இது என்னோட ரூம்…”என்றவனை இடையிட்டு,
“இனி இது என்னோட ரூம்…” என்று சொல்லிய ரோஜாவின் பேச்சில் சிரித்தவன் அவளை இழுத்து தன் கைவளைவிற்குள் வைத்துக்கொண்டான்.
“கோபமா லிட்டில் டெவில்க்கு? இன்னைக்கு அங்கிள் வரவே இல்லை….” என்றவனை விலக்கி படுக்கையில் தள்ளியவள் ஒரு சேரை இழுத்து போட்டு சுவற்றை பார்த்து அமர்ந்தாள்.
“இந்த வீட்டுல யாரோடையும் கிண்டலா பேச கூடாதாம். சோ இனி இப்படித்தான். இங்க தூக்கம் கூட என் மாமியார கேட்டு தான் வருமாம். ஆச்சர்யமா இருக்குல. இன்னைக்கு ஒன்பது மணிக்கு நானும் கண்ணை மூடறேன். வருதான்னு பார்ப்போம். இனிமே நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்….” என்று சுவற்றுக்கு ஹைபை தர,
“ரோஜா…” என்றவனின் அழுத்தமான அழைப்பில்,
“என்ன ரோஜா? இல்லை என்ன ரோஜான்றேன்? சும்மா ஒரு கிண்டலுக்கு கூட பேச கூடாதுன்னா? ப்ச்…” என்று சலித்து அமர்ந்திருக்க சற்று பொறுத்தவன் எழுந்து வரமாட்டாள் என எண்ணி எழுந்து சென்று அவளை அப்படியே கைகளில் அல்ல,
“டைம் பாருங்க ஒன்பது பத்து, தூக்கம் வருமான்னு கண்ணை மூடி தேடிட்டிருந்தா இப்படி டிஸ்டர்ப் பன்றீங்க. போச்சு உங்கம்மாவோட ரூல்ஸ் என்னாகறது? பெத்த மகனே மீறலாமா?…” என்று கேட்டவளை அணைத்தபடி கட்டிலில் விழுந்தவன்,
“போதும் எல்டி, ரொம்ப பேசற நீ…” என்றவனிடமிருந்து திரும்பி படுத்துக்கொள்ள அப்படியே பின்னிருந்து அணைத்துக்கொண்டவன் அவளின் காதோரமாய் பேசினான்.
“அம்மா நம்ம குடும்பத்தோட செல்வாக்கான பெண் குழந்தை. அவங்க பிறந்தப்ப தான் தொட்டது துலங்குச்சாம்…”
“எதுவுமே தொட்டா தான் துலங்கும். ஒரு பாத்திரம் கூட தொட்டா தான் பளிச்சுன்னு இருக்கும். தொடாம அப்படியே விட்டா அழுக்கு பிடிக்கத்தான் செய்யும். இதை எல்லாம் யோசிக்கமாட்டீங்களா?…” என்று கிண்டல் பேச,
“கொஞ்சம் நேரம் வாயை மூடு ரோஜா…”
“அது கஷ்டம்…” என்றவளின் இதழ்களை தன் கரங்களை கொண்டு அடைத்தவன்,
“அப்பாவோட சொந்த அத்தை பொண்ணுதான் அம்மா. சொந்தத்துக்குள்ள கல்யாணம். வளரும் போதே தொழில் தெரிஞ்சு ஒரு ஆளுமையோட தான் வளர்ந்தாங்க. வளர்த்தாங்கன்னு சொல்றதை விட வளர்ந்தாங்கன்னு தான் சொல்லனும். எதையும் கற்பூரமா பிடிச்சுப்பாங்க. தெரிஞ்சுப்பாங்க. அதனால அம்மா பேச்சு தான் இங்க எல்லாமே…” என பெருமையாய் அவன் சொல்ல,
“உங்க வீட்ல ராஜமாதா பேசறப்போ யாரும் பேசமாட்டாங்களா? மாமா கூட கப்சிப்?…” என்று சந்தேகம் கேட்க,
“பார்த்த தானே? எந்த முடிவும் அம்மாவை கேட்காம எடுக்க மாட்டாங்க. அதே மாதிரி அம்மா மறுத்தா அதை செய்யவும் மாட்டாங்க. அப்பா மட்டுமில்லை, நம்ம குடும்பத்துல எல்லாருமே தான். சித்தப்பா, சித்திங்க…” என்று சொல்லவும் வாய்பொத்தி அவள் சிரிக்க,
“ஹேய் நான் எவ்வளோ முக்கியமா பேசறேன். சிரிக்கிற?…” என அவளின் காதை கடித்துவைக்க,
“உண்மையா உலகத்தை நினைச்சேன், சிரிச்சேன்…” என்று பூடகமாய் பேசியவளை புரியாமல் பார்க்க இப்பொழுது அவனை பார்த்து திரும்பி படுத்தவள்,
“அதெல்லாம் இருக்கட்டும், இனிமே நீங்களும் கத்துக்கோங்க. நா பேசறப்ப மூச். எல்லாத்துக்கும் சரி தான். அதுக்கு மாமாக்கிட்ட ட்ரெயினிங் எடுத்துக்கோங்க…” என்று விரல் நீட்டி சொல்ல,
“அடிப்பாவி…” என்றான்.
“மரியாதை மரியாதை. கேரேக்டரோட ஒத்து போகனும். இல்லைனா சீன்ல வரமாட்டீங்க மிஸ்டர் மூஞ்சியில தொப்பை வச்ச ஹேண்ட்சம்…” என்று சொல்ல,
“இந்த நக்கல்ஸ சுக்கல்ஸாக்கிடுவேன், இனிமே இது ரிப்பீட் ஆக கூடாது…” என்றவளை
“கூடிப்போச்சு உனக்கு…” என அவளின் இடையில் கிச்சுகிச்சு மூட்டியவன் வயிற்றை பிடித்துக்கொண்டு அவள் துள்ள துள்ள சிரிப்பை மூட்டினான்.
“ஹைய்யோ அங்கிள் உங்கம்மா ராஜமாதா சிவகாமி தேவி ரூல்ஸ் மீறிட்டாங்கன்னு நாடு கடத்த போறாங்க நம்மளை. கட்டப்பாவை தான் காணோம். கண்டுபிடிக்கறேன்…” என அப்படியும் அவள் பேச,
“ப்ச் ரோஜா…” என்றவன் அவளின் சிரிப்பு ஓயும் வரை பார்த்தபடி ஒருபக்கமாய் தலைக்கு கையை கொடுத்து படுத்திருந்தான்.
“ஹைய்யோ முடியலை…” என்றபடி மூச்சு வாங்கியவள் தண்ணீரை குடிக்க அவனும் அவள் குடித்து முடிக்கவும் வாங்கி குடித்தான்.
“நினைச்சு பாருங்க செம காமெடி, மேற்கே ஏற்காதே, வீழும் சூரியனேன்னு நம்மை பார்த்து பாட சக்தி அண்ணா கூட வரமாட்டாங்க நம்மளை நாடு கடத்தும் போது…” என சொல்லி சொல்லி சிரிக்க,
“ஓகே ஜோக்ஸ் அபார்ட். கொஞ்சம் பேசுவோம் ரோஜா…” என அவளை எழுந்து அமர வைத்து பார்த்தவன் ரோஜா என்ன என்று கேட்பாள் என்று பார்க்க அவள் பேசு என கதை கேட்கும் பாவனையில் அமர்ந்திருந்தாள். இது வேலைக்காகாது என தானே பேச்சை துவங்கினான்.
“நீ ஏன் என் அம்மாவை அத்தைன்னு சொல்லாம உங்கம்மான்னும் ராஜமாதான்னும் ஐட்டென்டிபை பன்ற? அத்தைன்னே சொல்லலாமே?…”
“ஏன் சொல்லாம? சொன்னேனே? வெளில எல்லார்க்கிட்டையும் கூட அத்தைன்னு தான் சொன்னேன். என்னை உரிமையா அவங்க பார்க்காதப்போவே கூட…” என அவளும் அழுத்தமாய் சொல்ல விதுரனுக்கு சங்கடமாய் போனது.
“அவங்க என் அம்மா ரோஜா, உனக்கு அத்தை. உன் மாமியார்…” என சொல்ல,
“யார் இல்லைன்னா இப்போ? அவங்க என்னை மருமகளேன்னு கூப்பிடும் போது வாய் நிறைய நானும் அத்தைன்னு உங்கட்ட பேசுவேன். இன்னும் முழுமனசோட கூப்பிடுவேன்…”
“அவங்க நம்மை ஏத்துகிட்டதால தான் அழைச்சிட்டு வந்திருக்காங்க…”
“ஊருக்காக ஏத்துக்கறது வேற, அவங்க ஏத்துக்கிட்டே ஆகனும்ன்ற மாதிரி நீங்க பேசிருக்கலாம். அதுக்காக யாருக்காகவோ என்னை மருமகள்ன்னு ஐடெண்டிபை பண்ணி வைக்கும் போது நானும் அதே மாதிரி யாருக்காகவோ ஏத்துக்கிட்டு பேசனுமா என்ன? மத்தவங்கலை விடுங்க, பிரச்சனை இல்லை உங்கட்ட கூடவா நான் நானா இருக்க கூடாது? நான் பேசறது அதிகப்பிரசங்கித்தனமா இருக்கலாம்….”
“இல்லை அப்படி இல்லை ரோஜா…”
“இல்லை நான் முடிச்சுடறேன். இதுவே பெரியவங்க பேசி கல்யாணம் பண்ணி நான் வாழ வந்திருந்தா நீங்க எல்லாரும் சொல்லனும்னு கூட இல்லை. நானே அவங்களை அத்தைன்னு கூப்பிடுவேன். எனக்கான மரியாதை அவங்க தேடி தராமலே கிடைக்கும். ஆனா இப்போ?…”
“நம்ம கல்யாணம் நடந்த சூழ்நிலை. அதுவும் நீங்க எனக்கு வாழ்க்கை குடுத்ததை போலதான் எல்லாரும் பார்க்கறாங்க. அப்படித்தான் பார்வையும் எண்ணமும் போகும். அதை நான் தப்பு சொல்ல விரும்பலை. ஆனா அப்போ நான் அமைதியா இருந்தா எனக்கான செல்ப் ரெஸ்பெக்ட் அந்த இடத்துல நசுக்கப்படும்…”
“உனக்கு என் மகன் வாழ்க்கை குடுத்திருக்கான், அவனுக்காக இதை கூட நீ பண்ண மாட்டியான்னு எதோ ஒரு விதத்துல எனக்கு உணர்த்திட்டே இருக்கும் போது கண்டிப்பா நான் நானா இருக்கமுடியாது. எல்லோரோட பார்வையிலும் ஒரு பாவப்பட்ட மருமகளா தான் நான் இருப்பேன்…”
“இவளுக்கென்ன இந்த வாழ்க்கை கிடைச்சிருக்கு, அப்போ நாம பேசறதை தாங்கித்தான் ஆகனும்ன்ற மாதிரி மத்தவங்க ஒரு அலட்சியத்தோட தான் என்னை பார்ப்பாங்க. அதுக்கு நான் இடம் குடுக்கவே கூடாது. இதை நானா தான் பண்ண முடியும். கெட்டவ, திமிர் புடிச்சவ, மதிக்காதவன்னு எத்தனை பேர் வேணாலும் வாங்கலாம். ஆனா வாழ்க்கையை பிச்சையா வாங்கினான்ற பேர் எனக்கு வேண்டாம்…”
“உங்கம்மா இறங்கி வரனும்னு சொல்லலை. ஆனா அதே நேரம் என்னை குனிஞ்சு போன்னு சொல்லி தலையில தட்டாதீங்க…”
அவளின் கண்ணோட்டத்தின் தூரம் வேறு திசையில் பயணித்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான் விதுரன்.
அவன் அறியாத ரோஜா இது. அதிகம் அறிந்ததில்லை என்றாலும் ரோஜா என்றால் கலகலப்பு, சந்தோஷம், குறும்பு, உற்சாகம் இதுதான் அவளை முன்னெடுக்கும் விஷயங்கள்.
ஆனால் இத்தனை துல்லியமான உணர்வுகளையும், மனிதர்களின் மீதான் நுட்பமான பார்வைகளையும் அவளிடம் அவன் எதிர்பார்க்கவில்லை.